Advertisement

விட்டாலும் விலகாதே!

முன்னுரை:- 

பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும், சுட்டித் தனம் நிறைந்த திவ்யா நம் கதையின் நாயகி.. அவளைச் சுற்றியே கதை சுழலும்.. தனது பதினைந்தாவது வயதில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்துக் கொள்ளும் திவ்யா உறவுகளை விட்டு விலக, உறவுகள் அவளை விலக விடாமல் தடுக்க முயற்சிக்கிறது. இயல்பிலேயே சுட்டித்தனம் நிறைந்தவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காகவும் உறவுகளை விலக்குவதற்காகவும் மேலும் பல வம்புகளை செய்ததின் பலனாக  ஆசிரியர்கள் அவளை கண்டாலே அலறுகிறார்கள்.

இப்படிப் பட்ட திவ்யா மனதினுள் நுழைகிறான் ஹரீஷ்.. முதலில் அவளது காதலை மறுப்பவன் தன் காதலை அவளிடம் சொல்லும் போது அவள் இவனை விட்டு விலக நினைக்கிறாள்.. அதன் பிறகு ஹரீஷ் திவ்யாவை தன்னை மட்டுமன்றி உறவுகளிடம் இருந்தும் விலக விடாமல் எப்படி இணைக்கிறான் என்பதை பற்றிய கதை தான் “விட்டாலும் விலகாதே!!”

 

விலகல் 1

அந்த வகுப்பே அமைதியாக இருக்க, ஆசிரியரின் தாலாட்டு பாடல் (ஆசிரியரின் விரிவுரையை தாங்க அப்படி சொன்னேன்) மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் கரும்பலகை பக்கம் திரும்பி எழுத தொடங்கியதும் ஒரு சுண்ணத்துண்டு அவர் முதுகின் மீது பட்டு தெறித்தது.

கோபத்துடன் திரும்பிய ஆசிரியரின் பார்வை மாணவர்கள் பக்கம் சிறிதும் செல்லவில்லை. முறைப்புடன் ஒரு மாணவியை ஆள்காட்டி விரலை அசைத்து எழ கூறினார்.

பயபக்தியுடன் எழுந்த மாணவியைப் பார்த்து, “நீ தானே?” என்று வினவினார்.

அவள் அமைதியாக இருக்கவும், “எனக்கு தெரியும் நீ தான்னு.. சொல்லு” என்றார்.

அப்பாவியான முகபாவத்துடன் இருந்த அந்த மாணவி, “சாரி சார்.. உங்க தலையைத் தான் குறி வைத்தேன்.. குறி கொஞ்சம் தப்பி உங்க முதுகில் பட்டிருச்சு” என்றதும் அவர் பதில் சொல்வதறியாது அவளை முறைக்க,

“கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு
கண்ணுல கெத்து.. இவ கண்ணுல கெத்து
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து
வாயில குத்து வாயில குத்து
ஏய் வா மச்சானே மச்சானே……………………….”
என்ற பாடல்(‘இறுதி சுற்று’ திரைப்படம்) மாணவர்கள் பக்கத்தில் இருந்து கேட்டது.

அப்பொழுது வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும் அந்த ஆசிரியர், “திருந்தாத வானரக் கூட்டம்.. இதுங்கெல்லாம் எங்கே உருப்பட போகுது!!” என்ற முணுமுணுப்புடனும் முறைப்புடனும் வெளியேறினார்.

அவர் சென்றதும் “ஹே! சூப்பர் விஜி” என்ற கூச்சலுடன் அந்த மாணவி தனது தோழனுடன் கை தட்ட, அவனும், “நீயும் சூப்பரா கௌண்டர் கொடுத்த திவி” என்றபடி கை தட்டினான்.

அப்பொழுது உள்ளே வந்த மற்றொரு ஆசிரியர், “திவ்யா விஜய் இடத்தில் உட்காருங்க” என்று அதட்டினார்.

திவ்யா இடத்தில் அமர்ந்ததும் அவளது தோழி பவித்ரா, “எப்படி-டி நீங்க ரெண்டு பேர் மட்டும் டிஸைன் டிஸைன்னா யோசிக்கிறீங்க?” 

“ஏன்னா எங்களுக்கு மட்டும் தான் மூளை இருக்கிறது” 

பவித்ரா முறைக்கவும், திவ்யா புன்னகையுடன், “மூளை இருந்தால் டாப்பரான நீ என்னுடன் பிரெண்ட்டா இருப்பியா?” 

“நான் டாப்பரா?” 

“பின்ன இல்லையா!” 

“நிச்சயம் இல்லை.. நீ நினைத்தால் நீ தான் டாப்பர்.. நீ தான் நினைக்க மாட்டிக்கிறியே! ஏன்டி இப்படி பண்ற?” 

“…” 

“அதானே! இப்போ உனக்கு காது கேட்காதே!” 

“..” 

“லூசு.. ஏன்டி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிற! நான் சொல்றதை கேளுடி…………………” 

“மேம்” என்று கத்தினாள் திவ்யா.

அவளது கத்தலில் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, “எஸ்” என்றார்.

“உங்களுக்கு இந்த சரீ சூப்பரா இருக்குது.. உங்க அழகை செம்ம தூக்க்க்கலா காட்டுது” 

ஆசிரியர் முறைக்கவும், “அப்படின்னு பவித்ரா சொன்னா” என்றாள்.

ஆசிரியர், “பவித்ரா! உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை” என்றார். 

பதற்றத்துடன் எழுந்த பவித்திர, “சாரி மேம்” என்றாள்.

“ஓகே.. சிட் டோவ்ன்.. கிளாஸ் கவனி” 

“ஓகே மேம்” என்றபடி அமர்ந்தவள் திவ்யாவை முறைக்க, அவளோ அழகாக புன்னகைத்து கண் சிமிட்டினாள்.

பிறகு, “ஆனாலும் இந்த பெல்லுக்கு(மணிமேகலை என்ற அந்த ஆசிரியர் பெயரை பெல் என்று மாற்றிவிட்டாள்) காண்பிடென்ஸ் அதிகம் தான்.. அழகுனு சொன்னதை நம்பி உன்னை திட்டுது பாரு” 

பவித்ரா அமைதியாக முறைத்துவிட்டு வகுப்பை கவனிக்கவும், திவ்யா அவளது காதில், “ஹ்ம்ம்.. இது நல்ல பிள்ளைக்கு அழகு.. அட்வைஸ்கிற பெயரில் மொக்கை போடாம அமைதியா கிளாசை கவனி” என்றாள்.

 

 

தேநீர் இடைவேளையில் திவ்யா, “ஓவர் முறைப்பு உடம்புக்கு ஆகாதுடி” என்று கூற, 

பவித்ரா, “ஒரு வாரம் சஸ்பென்ஷன் முடிஞ்சு இன்னைக்கு தானே வந்த.. வந்த உடனே தேவையா?” என்றாள். 

“பின்ன! நான் வந்துட்டேன்னு தெரிய வேணாமா!” என்றவள் யோசனையில் அமைதியானாள்.

“என்னடி அமைதியா இருக்கிற? அது நல்லதுக்கு இல்லையே!” 

“அந்த H.O.Dயை இன்னைக்கே கவனிக்கவா இல்லை நாளைக்கு கவனிக்கவானு யோசிக்கிறேன்” 

“அடி பாவி……………..” என்று பவித்ரா அலற ஆரம்பிக்க திவ்யா, “அஞ்சு வருஷமா என்னை திருந்த சொல்லிட்டு இருக்கிறியே! நீ கொஞ்சம் திருந்தேன்..” 

“ச்ச்.. என்னடி பண்ணப் போற?” 

திவ்யா புன்னகைக்கவும், பவித்ரா, “உன் சிரிப்பே எனக்கு பீதியை கிளப்புதே!” என்றாள். 

அப்பொழுது அங்கே வந்த விஜய், “திவி என்ன பிளான்?” என்று கேட்டான். 

பவித்ரா, “எரும! நானே அவளை அடக்க முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன்……………..” 

வாய்விட்டு சிரித்த விஜய், “ஐயோ! ஐயோ! காமடி! நீ திவியை அடக்க போற! ஐயோ! என்னால முடியலை” என்று அவன் மேலும் சிரிக்கவும் பவித்ரா மேஜை மீது இருந்த கனமான புத்தகத்தை வைத்து அவனை அடித்தாள்.

தூசி தட்டுவது போல் அவள் அடித்த இடத்தை தட்டியவன், “நீ சொல்லு திவி” என்றான்.

“இன்னைக்கா நாளைக்கானு சின்ன யோசனை” 

“ஏன்?”   

 “நாளைக்கு அவன் பிறந்த நாளாம்.. அதான் பிறந்த நாள் பரிசா இருக்கட்டுமா இல்லை இன்னைக்கு பண்ணா தான் பவர்புல்லா இருக்குமானு யோசிக்கிறேன்”

பவித்ரா பயத்துடன், “என்னடி பண்ண போற?” என்று மீண்டும் கேட்டாள். 

“வெயிட் அண்ட் ஸீ” 

“இப்போ தான் சஸ்பென்ஷன் முடிந்தது…………….” 

திவ்யா முறைக்கவும் பவித்ரா கடுப்புடன், “நான் தான்டி முறைக்கணும்” என்றாள். 

விஜய், “இவ கிடக்கிற! நீ சொல்லு என்ன பிளான்?” 

திவ்யா முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்த பவித்ரா முறைப்பதை விட்டுவிட்டு, “ப்ளீஸ்டி நான் சொல்றதை கேளு” என்று கெஞ்ச ஆரம்பித்தாள் ஆனால் பலன் தான் எப்பொழுதும் போல் பூஜ்யம்.

விஜய் சிறு எரிச்சலுடன், “நீ ஏன் அந்த பிணம் திண்ணிக்கு சப்போர்ட் பண்ற?” 

பவித்ரா கோபமாக, “நீ சும்மா இருடா.. அவளை ஏத்தி விடுறதே நீ தான்டா” என்றாள். 

“நான் ஏத்தி விடுறேனா!” 

“பின்ன இல்லையா? எல்லாம் உன்னால் தான்” 

“நான் அமைதியா இருந்துட்டா திவி அமைதியா இருந்துருவாளா? சின்ன வயதில் இருந்து அவள் கூடவே இருக்கிறனு சொல்லிக்கிறியே! உன் மனசாட்சியை தொட்டு சொல்லு.. திவி ரொம்ப அமைதியான பொண்ணு.. நான் தான் அவளை கெடுக்கிறேனா?” 

“அவள் வாலு தான் ஆனா அவள் முன்னாடி இப்படி கிடையாது.. அதுவும் நீ அவளுடன் கூட்டு சேர்ந்த பிறகு தான் ரொம்ப பண்றா……………………………..” 

“நான் அவளுடன் சேர்ந்து அவளுடன் பனிஷ்மென்ட்டை ஷேர் பண்ணிக்கிறேன்.. அவ்ளோ தான்..” 

“ச்ச்.. உனக்கு சொன்னா புரியாது..” 

“என்ன புரியாது? சும்மா எப்போ பார்த்தாலும் இதையே சொல்லு.. முன்னாடி இப்படி கிடையாது.. எனக்கு புரியாதுனு.. என்ன எனக்கு புரியாது? எனக்கு இப்போ தெரிந்தே ஆகணும்.. சொல்லு” 

“..” 

“சொல்லு” என்று அவன் கேட்ட பொழுது வெடி வெடிக்கும் சத்தம் கேட்கவும் இருவரும் சிறு அதிர்ச்சியை வெளிபடுத்திவிட்டு வேகமாக வெளியே ஓடினர்.

பல மாணவர்களும் சில ஆசிரியர்களும் அவர்களின் துறை தலைமை ஆசிரியர் அறை முன் நின்றுக் கொண்டிருக்க, ஒரு ஆசிரியர் பூட்டி இருந்த அந்த அறையை திறந்துக் கொண்டிருந்தார். அவர் திறந்து ஒரு நிமிடம் கழித்து வெடி சத்தம் நின்ற பிறகு புகை மண்டலத்தின் நடுவே தலைமை ஆசிரியர் வெளியே வந்தார்.

ஒரு ஆசிரியர், “ஏய் ஒரு சர்(chair) எடுத்துட்டு வா” என்றும் மற்றொரு ஆசிரியர், “யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று கூறினார்.

சிறிது மிரண்ட முகத்துடன் வெளியே வந்த தலைமை ஆசிரியரின் தோள் பற்றிய ஒரு ஆசிரியர், “உட்காருங்க சார்” என்று கூறி இருக்கையில் அமர வைத்து பருக தண்ணீர் கொடுத்தார்.

தலைமை ஆசிரியரை பார்த்த விஜய், “ச.. சேதாரம் ஏதுமில்லாம வெளியே வந்துட்டானே!” 

பவித்ரா அவனை முறைக்க, அவர்கள் அருகே இருந்த திவ்யா, “அவன் முகத்தில் இருக்கும் பயத்தை நீ கவனிக்கலையா?” என்றாள்.

பவித்ரா, “இங்க தான் இருக்கிறியா! அவர் உன் முகத்தை பார்க்கவில்லை தானே!” 

திவ்யா சிரிக்கவும் பவித்ரா, “டென்ஷன் ஏத்தாம சொல்லுடி பிசாசு” 

திவ்யா புன்னகையுடன், “கதவை மூடுறதுக்கு முன்னாடி தலையை மட்டும் உள்ளே நீட்டி ‘அட்வான்ஸ் ஹாப்பி பர்த் டே சார்’ னு சொல்லிட்டு தான் மூடினேன்” 

பவித்ரா தலையில் அடித்துக்கொள்ள, விஜய், “இருந்தாலும் உனக்கு தில் ஜாஸ்த்தி தான்” என்று கூற, திவ்யா சிரித்தாள்.

பவித்ரா, “ஏன்டி இப்படி படுத்துற? நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது.. நடந்ததை உன்னால் மாற்ற முடியாது……………..” 

திவ்யா இறுகிய குரலில், “நான் இப்படி தான்.. பிடிக்கலைனா என்னை விட்டு விலகி போய்டு” என்று கூறிவிட்டு முன்னால் நகர்ந்தாள்.

‘விலகி போய்டு’ என்ற வார்த்தைகளில் அதிர்ந்து நின்ற பவித்ரா தன்னை சுதாரித்துக் கொண்ட பொழுது திவ்யா கைகளை கட்டிக் கொண்டு தலைமை ஆசிரியர் முன் நின்றுக் கொண்டிருந்தாள்.

பவித்ரா அவசரமாக முன்னால் விரைந்து சென்றாள். விஜய் அங்கே தான் நின்றுக் கொண்டிருந்தான்.

தண்ணீர் பருகிய பிறகு நிதானத்திற்கு வந்த தலைமை ஆசிரியர் தன் முன் நின்றுக் கொண்டிருந்த திவ்யாவை பார்த்து கடுமையாக முறைக்க, அவ்ளோ அசராமல் அவரது முறைப்பை எதிர் கொண்டாள்.

அவர் கோபத்துடன், “உடம்பு முழுவதும் திமிர்.. தெனாவெட்டு.. நீயெல்லாம் எங்கே உருப்பட போற! உன்னை காலேஜை விட்டு தூக்கிடலாம்னு சொன்னால் சேர்மன் கேட்கிறாரா! எல்லாம் அவர் இருக்கிற தைரியம்! இன்னைக்கு நானா நீயானு பார்கிறேன்…………….” 

அவளது இதழோரம் அரும்பிய புன்னகையில் மேலும் கோபமடைந்தவர், “எல்லாம் பண திமிர்.. இன்னைக்கு தான் இந்த காலேஜ் கடைசி நாள் உனக்கு..” 

அப்பொழுதும் அவள் இருந்த நிலையில் சிறிதும் மாற்றமில்லை என்றதும் அவர் கோபத்துடன், “கம் டு சேர்மன் ரூம்” என்று கத்திவிட்டு வேகமாக சென்றார்.

திவ்யா தோழியை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

விஜய் சிறு கலவரத்துடன், “இப்படி ஆகும்னு நான் நினைக்கலை பவி” என்றான்.

பவித்ரா முறைக்கவும் விஜய், “நிஜமா டி.சி கொடுக்கிற அளவிற்கு போவார்னு நான் நினைக்கலை” 

“பின்ன அவள் பண்ணும் அலம்பலுக்கு மெடலா கொடுப்பாங்க” 

“இப்போ என்ன பண்ண?” 

“ஒண்ணும் ஆகாது வா.. கிளாஸ் போகலாம்” 

விஜய் ஆச்சரியத்துடன் பார்க்க, பவித்ரா, “என்ன?” 

“எப்போதும் டென்ஷன் ஆற நீ இவ்வளவு பெரிய விஷயத்திற்கு………….” 

“டி.சி-லாம் கொடுக்க மாட்டாங்க.. நான் டென்ஷன் ஆனது ஆகுறது அவள் எதிர்காலத்தை நினைத்து தான்” 

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?” 

“அது அப்படி தான்” 

“சேர்மன் சார் திவிக்கு ரிலேடிவ் தான் என்றாலும்… இன்னைக்கு அந்த பிணம் திண்ணி ரொம்ப உறுதியா இருக்கிறானே!” 

“அவர் தலை கீழா நின்னாலும் திவிக்கு டி.சி கொடுக்க வைக்க முடியாது.. ஆனா நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு.. அவளுக்கு அடுத்து உன்னை தான் H.O.D கவனிப்பார்” 

“எவ்வளவோ பார்த்துட்டோம்! இத பார்க்க மாட்டேனா!” 

“என்னமும் பண்ணு” என்றவள் தன் இடத்தில அமர்ந்தாள். விஜயும் தன் இடத்தில் அமர்ந்தான். இருவரது மனமும் திவ்யா பற்றி தான் சிந்தித்தது.

 

சேர்மன் அறை:

தலைமை ஆசிரியர் திவ்யா பற்றிய புகார்களை கூறிக் கொண்டிருக்க, அவளோ அறையை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

தலைமை ஆசிரியர், “சார் உங்கள் ரிலேடிவ் என்பதற்காக தண்டிக்காமல் இருப்பது தவறில்லையா? இப்போ கூட பாருங்க எப்படி நிற்கிறாள்! ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிரும் தெனாவெட்டும் கூடாது.. சாரி சார்.. நீங்கள் கொடுக்கும் இடம் தான் இதற்கு காரணம்..” 

சேர்மன், “திவ்யா” என்று அழைக்கவும் அவள் அவர் புறம் திரும்பினாள்.

தலைமை ஆசிரியர், “ஒரு வாரம் சஸ்பென்ஷன் பத்தாது சார்.. அவள் செய்ததில் என் உயிருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால்? இந்த முறை நீங்க டி.சி கொடுத்தே ஆகணும் சார்” 

சேர்மன், “அவளுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூற,

தலைமை ஆசிரியர், “என்ன சார்! நீங்க போய் மன்னிப்பு கேட்டுட்டு” என்று பதற,

அதே நேரத்தில் திவ்யா சற்று இறுகிய குரலில், “எனக்காக நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க? முதல்ல நான் தப்பே செய்யலை………” 

“திவ்யா!” என்று சேர்மன் குரல் முதல் முறையாக சிறு கண்டிப்புடன் ஒலித்தது.

அதை கவனித்தாலும் அவள் தீர்க்கமான குரலில், “நிஜமா தான் சொல்றேன்.. அன்னைக்கு இவர் ரூமுக்குள் அந்த பிஜிலி வெடியை நான் போடலைன்னு எவ்வளவு சொன்னேன்! நம்பாம ஒரு வாரம் சஸ்பென்ஷன் கொடுத்தீங்களே! அதான் இப்படி செய்தேன்.. நான் போட்டால் சாதாரண ஜுஜுபி பிஜிலி வெடியெல்லாம் போட மாட்டேன்.. இது கூட ட்ரைலருக்கான டீசர் மாதிரி தான்.. ரொம்ப பண்ணாரு வீடு புகுந்து அவர் ரூமுக்குள்ளேயே 10,000 வாலா போட்டிருவேன்.. அப்பறம் ஏற்கனவே கொடுத்த தண்டனைக்கு தான் இந்த அதிரடி ஸோ இதற்கு தண்டை ஏற்றுக்கொள்ள முடியாது..” 

தலைமை ஆசிரியர் அவளது தைரியத்தை பார்த்து உள்ளுக்குள் சிறிது வியந்தாலும் வெளியே கடுமையாக முறைத்தார்.

சில நொடிகள் மௌனம் நிலவ, அவள், “நான் கிளாஸ் போகலாமா?” 

தலைமை ஆசிரியர், “சார் இப்படியே விட்டால் எனக்கு என்ன மரியாதை இருக்கும்?” 

திவ்யாவை பார்த்து பெருமூச்சொன்றை வெளியிட்ட சேர்மன், “சம்மளவு உயர்வுடன் இதே பதவியுடன் வேறு காலேஜ்ஜில் வேலைக்கு ஏற்பாடு செய்யட்டுமா?” 

தலைமை ஆசிரியர் பெரும் அதிர்ச்சியுடன், “சார்!” 

“சாரி.. என் மேலும் தவறு இருக்கிறது.. போன முறை நான் சரியாக விசாரித்து இருந்தால் இந்த தவறு நடந்திருக்காது” 

“சார்.. இவளுக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க? இதனால் உங்கள் பெயர் கூட கெடுகிறது.. சார்…………………” 

“இதை இத்துடன் விட்டுவிடலாம்.. உங்கள் முடிவை சொல்லுங்க? தொடர்ந்து இங்கே இருக்க போறீங்களா இல்லை?” 

“இனி இங்கே இருந்தால் எனக்கு நிச்சயம் மரியாதை இல்லை சார்” 

“நான் என் நண்பரிடம்……………………” 

“என் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார்.. கடைசியாக ஒன்னே ஒண்ணு சொல்கிறேன் சார்.. ஒரு முறை கடுமையாக நீங்கள் கண்டித்தால் இதற்கு தீர்வு காண முடியும்.. இதை மட்டும் சொல்லலை.. படிப்பு விஷயமும் சேர்த்து தான் சொல்கிறேன்.. இவள் படிக்காத பெண் இல்லை.. கஷ்டமான பேப்பரில் முதல் மதிப்பெண் எடுப்பவள் சில ஈசியான பேப்பரில் பெயில் ஆகிறாள் என்றால் அவள் வேண்டுமென்றே செய்கிறாள் என்று தான் அர்த்தம்..” 

சேர்மன் அமைதியாக இருக்கவும் அவர், “சாரி சார்.. கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் நினைக்கிறேன்……………” 

“நீங்கள் சொன்னதில் ஒண்ணு மட்டும் தவறு.. என் கண்டிப்பு எதையும் மாற்றி விடாது..” என்றவர் திவ்யாவை பார்த்தபடி, “ஆனால் அன்பு எதையும் மாற்றும்.. அதற்கு தான் முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்கிறேன்” 

திவ்யாவின் உடல் இறுகியதோடு கண்களை வெறுமை சூழ்ந்தது. அதை கவலையுடன் பார்த்த சேர்மன் பெருமூச்சொன்றை வெளியிட்டு, “உங்களை போன்ற திறமையானவரை இழக்க கஷ்டமாக தான் இருக்கிறது ஆனால் எனக்கு வேறு வழி இல்லை.. சாரி” என்றார். 

ஒரு நொடி அமைதியாக இருந்த தலைமை ஆசிரியர், “பரவாயில்லை சார்.. நான் பிறகு உங்களை பார்க்கிறேன்” என்று கூறி வெளியேறினார். திவ்யாவின் பேச்சில் கோபம் கொண்டவர் சேர்மன் அவரை கிளம்ப சொன்னதும் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு திவ்யா மேல் மேலும் கோபம் கொண்டார் தான் இருப்பினும் கிளம்பும் முன் நல்ல ஆசிரியராக திவ்யாவின் படிப்பு பற்றி பேசினார். ஆனால் சேர்மனின் கூற்றும் அதற்கு திவ்யாவிடம் வந்த இறுக்கமும் அவரை குழப்பியது. ‘அவர்களுக்குள் என்ன உறவு?’ என்ற கேள்வி அவருள் எழுந்தது ஆனால் தான் தற்போது இருக்கும் நிலையை கருதி அந்த கேள்வியை புறம் தள்ளி தன் வேலையை கவனிக்க தொடங்கினார்.

 

தலைமை ஆசிரியர் கிளம்பியதும் வெளியேற போனவளை, “திவ்யா” என்று அழைத்தார்.

அவள் நின்றாலும் அவரை பார்க்கவில்லை.

“உன் அளவில் உன் காரணங்கள் உனக்கு சரியாகப் படலாம் ஆனால் அடுத்தவர்களை கஷ்டபடுத்துவது தப்பு.. அவர் சொன்னது போல் அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால்?” 

“அதெல்லாம் நான் கவனமா தள்ளி போட்டு தான் கொளுத்தினேன்.. அது போக கதவை அடைக்கிறதுக்கு முன் அவரை வார்ன் பண்ற மாதிரி ‘அட்வான்ஸ் ஹாப்பி பர்த் டே’ னு சொல்லிட்டு தான் செய்தேன்” 

“என்னைக்கு அவர் பிறந்த நாள்?” 

“நாளைக்கு” 

“அப்போ கொடுமையான பரிசை என்னையும் கொடுக்க வச்சிட்ட!” 

“அவர் விரும்பிய இனிமையான பரிசா எனக்கு டி.சி கொடுத்திருக்க வேண்டியது தானே!” 

“அதற்காக தான் இவ்வளவும் செய்றியா?” 

“என்னிடமிருந்து விலகி இருக்கவில்லை என்றால் நீங்கள் எல்லோரும் சங்கடங்களை அவமானங்களை சந்திக்க நேரும் என்பதை உணர்த்தத் தான் இவையெல்லாம்” 

“இதனால் உன் எதிர்காலம்……………….” 

“எதிர்காலம்!” என்று விரக்தியாக சிரித்தவள் இறுகிய குரலில், “என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்” என்றாள். 

“இன்னும் எத்தனை காலம் விலகியே இருக்க போற?” 

“என் உயிர் உள்ள வரை” 

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற? எங்கள் பக்கம் இருக்கும் விளக்கத்தை கேட்க கூட மாட்டேன் என்றால்…………………” 

“எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை.. எந்த உறவும் தேவை இல்லை..” என்று கிட்டதிட்ட கத்தியவள் அவரது பதிலை எதிர்பாராமல் வெளியேறி இருந்தாள்.   

இணைய காத்திருப்போம்…

Advertisement