Advertisement
விலகல் 8
சந்திரன் விக்னேஷை பார்த்து, “நீ வீட்டுக்கு போகலை?” என்றதும் “இதோ அங்கிள்” என்றவன் திவ்யாவிடமிருந்து கையை உருவிக் கொண்டு பறந்திருந்தான்.
திவ்யா, “அது வந்து அங்கிள்..” என்று ஆரம்பிக்க,
“உள்ளே போய் பேசலாம்” என்று கூறி அவர் சென்றுவிட,
திவ்யா, ‘எவ்வளவோ பார்த்துட்டோம்’ என்று கூறிக் கொண்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சந்திரன் சோபாவில் அமர்ந்திருக்க, வைஷ்ணவி அவருக்கு காபி கொடுத்தார்.
சந்திரன் வாய் திறக்கும் முன் வைஷணவி, “கை கால் கழுவிட்டு வா திவ்யா” என்றதும் அவள் நன்றி கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு சென்றாள்.
திவ்யா முகம் கை கால்களை அலம்பிவிட்டு வரவும் துண்டை நீட்டிய பவித்ராவை கண்டு அவள் முறைக்க, பவித்ரா, “சாரிடி.. நான் உன்னை கூப்பிட்டேன் நீ கவனிக்கலை”
“நீ என்னை கூப்பிட்ட!”
“ஆமா”
“மிஸ்டர் சந்திரமௌலியை பார்த்ததும் உனக்கு என் ஞாபகமே வந்திருக்காது.. இதில் நீ ஆற அமர என்னை கூப்பிட்டு பார்த்துட்டு உள்ளே போன!”
“ஹீ.. ஹீ.. ஹீ”
“போதும் போய் பஞ்சை எடுத்துட்டு வா”
“வேணாம்டி” என்று கெஞ்ச,
“சரி வா.. உனக்காக சுப்ரபாதத்தை கேட்டு தொலைக்கிறேன்” என்று கூறி வெளியே சென்றாள்.
சந்திரன் அமைதியாக, “உட்காரு” என்றார்.
“நீ அந்த பையனிடம் பேசியது சரி தான் ஆனால் சில நேரம் தைரியம் அளவிற்கு அதிகமா இருந்தாலும் ஆபத்து தான்”
“நான் ஒரு பெண் என்பதால் இப்படி சொல்றீங்களா அங்கிள்?”
“உன் இளம் ரத்தம் இப்படி தான் துடிக்கும்.. நான் அனுபவசாலி.. பவித்ரா எப்படியோ அப்படி தான் நீயும் எனக்கு.. அதனால் தான் உன்னிடம் பேசிட்டு இருக்கிறேன்”
“புரியுது அங்கிள்.. எனக்கு தற்காப்பு கலைகள் தெரியும்”
“நீ சுதாரிக்கும் முன் மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றால் என்ன செய்வ?”
“அப்…………..”
“அப்படி நடக்காதுனு சொல்லாத!” என்றவர் ஏதோ சொல்ல வந்து நிறுத்தினார்.
“சரி அங்கிள் பார்த்து நடந்துக்கிறேன்” என்று அவருக்காக கூறினாள்.
“இப்போ உன் பெர்சனல் விஷயம் கொஞ்சம் பேசலாமா?”
“அவர் உங்களிடம் பேசினாரா?”
“எவர்?”
“நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கு தெரியும்”
“அவர் உனக்கு யார்?”
“..”
“நீ மெளனமாக இருப்பதாலோ விலகி இருப்பதாலோ அவர் உன் அப்பா இல்லைன்னு ஆகிடுமா?”
“அங்கிள் ப்ளீஸ்.. நான் இங்கே இருப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லைனா சொல்லிடுங்க நான் கிளம்புறேன்”
“கிளம்பி எங்கே போறதா இருக்கிற?”
“நிச்சயம் அந்த வீட்டிற்கு போக மாட்டேன்”
“நீ ஏன் உன் உரிமையை விட்டுக் கொடுக்கிற?”
“எனக்கு எதுவும் தேவை இல்லை”
“உன் அப்பாவிற்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து நீ உன் உரிமையை, உன் அடையாளத்தை விட்டுக் கொடுக்கிற”
“அடையாளம்!!! அந்த அடையாளம் வேண்டாம்னு தானே விலகுறேன்”
“அஞ்சு வருஷத்திற்கு முன்பு வரை ராகவன் மகள் என்ற அடையாளத்தை தானே நீ விரும்பின.. கர்வமாக நினைத்த!”
“அப்போ எனக்கு உண்மை தெரியாதே அங்கிள்” என்று அவள் வேதனையுடன் கூற,
பவித்ரா அவள் கையை ஆதரவாக பற்றி தந்தையிடம், “அப்பா ப்ளீஸ்” என்றாள்.
சந்திரன், “வலியில்லாமல் காயத்திற்கு மருந்து போட முடியாது.. உன் தோழி கடைசி வரை இப்படி தனியா இருக்க தான் விரும்புறியா?” என்று கேட்டார்.
பவித்ரா வருத்தத்துடன் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்ட,
“அப்போ இதில் தலையிடாத” என்று கண்டிப்புடன் கூறியவர் திவ்யாவை பார்த்து, “எது எப்படியோ! பார்வதி தன் திட்டத்தில் ஜெயிச்சிட்டாங்க” என்றார்.
“..”
“உன்னை துரத்த நினைத்தாங்க.. உரிமை இருந்தும் நீ அவங்களை ஜெயிக்க விட்டுட்ட.. இப்போ கூட…………….”
“எனக்கு அந்த உரிமையும் வேண்டாம், சொத்தும் வேண்டாம்” என்றவள், “சித்தி ஒரு வகையில் பாவம் தான்” என்றாள்.
பவித்ரா அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் தோழியை பார்க்க, பெரியவர்கள் கூட ஆச்சரியத்துடன் திவ்யாவை பார்த்தனர்.
பவித்ரா, “என்னடி சொல்ற? அவங்களா பாவம்? சின்ன வயசில் இருந்து உன்னை……………”
“எனக்கு டார்ச்சர் கொடுக்க நினைக்க மட்டுமே அவங்களால் முடிந்தது.. ஆனால் உண்மையா டார்ச்சர் கொடுத்தது நான் தானே!” என்று கூறி சிறு புன்னகையுடன் கண்சிமிட்டினாள்.
“இருந்தாலும்.. இப்போ உன்னோட இந்த நிலைக்கு காரணம் அவங்க தானே!”
“நிச்சயம் என்னோட நிலைமைக்கு காரணம் அவங்க இல்லை.. என்றாவது ஒரு நாள் உண்மை தெரிந்து தானே ஆகணும்! அது அவங்க மூலமா தெரிந்தது..” என்றவள் சிறு புன்னகையுடன், “ஆனால் அவங்களே நினைத்து பார்க்காத ஒரு டிவிஸ்ட் கிடைத்தது பார்!” என்றவள், “இந்த மூன்று வருட தனிமையில் யோசித்த போது அவங்க பாவம்னு தான் தோனுச்சு” என்றாள்.
“போடி லூசு”
“அவங்க நிலையில் இருந்து யோசித்து பார்! கணவனின் முதல் மனைவியோட குழந்தையை ஏற்பதே கஷ்டம்.. அதுவும் அந்த குழந்தை ஒரு அனாதை என்று தெரிந்தால்……………….”
பவித்ரா கோபத்துடன், “நீ அனாதை இல்லை!” என்றாள்.
“சாருமா என்னை தத்தெடுக்காம இருந்து இருந்தால்!!!”
சந்திரன், “அவங்க உன்னை தத்தெடுக்காம இருந்து இருக்கலாம்” என்று மனதினுள் எதையோ நினைத்துக் கொண்டு கூறினார்.
திவ்யா சிறு கோபத்துடன், “அங்கிள் ப்ளீஸ்.. அப்படி சொல்லாதீங்க.. இந்த உண்மை இல்லா உலகத்தில் என் சாருமா அன்பு மட்டுமே உண்மை” என்றாள்.
“உன் அம்மாவின் அன்பும், உன் அப்பாவின் அன்பும் உண்மை தான்”
“என்றைக்கும் சாருமா மட்டுமே என் அம்மா” என்ற திவ்யா யோசனையுடன் சந்திரனை பார்த்து, “என்ன அங்கிள்! சேர்மன் சாரும் உங்களிடம் பேசினாரா!” என்று கேட்டாள்.
சந்திரன் மெளனமாக இருக்க திவ்யா, “என்ன அங்கிள் சரி தானே!” என்றாள்.
“ஹ்ம்ம்.. நீ இவ்வளவு புத்திசாலியா இல்லாமல் இருந்து இருந்தால் அதிகமா யோசித்து உன் வாழ்க்கையை சிக்கல் ஆக்காமல் இருந்திருப்ப!”
“நான் சிக்கல் ஆக்கலை அங்கிள்.. என்னை பெற்றவர்கள் ஆக்கி வச்சிருக்காங்க”
“இருக்கலாம்.. ஆனால் அவர்கள் விளக்கத்தை கேட்டு அந்த சிக்கலை சரி செய்வதை விட்டுட்டு நீ அதிகமாக்குறியே!”
“அவர்களிடம் ஆயிரம் விளக்கங்கள் இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்டது நான் மட்டும் தானே! அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமா தானே இருக்கிறாங்க”
“நிச்சயம் இல்லை”
“இதை என்னால் ஏற்கமுடியலை அங்கிள்” என்றவள், “ப்ளீஸ் அங்கிள்.. இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம்” என்றாள்.
ஒரே நாளில் அவளது மனதை மாற்ற முடியாது என்பதை அறிந்தவர், “சரி.. நான் முதலில் சொன்னதையும் நினைவில் வைத்துக்கொள்” என்றார்.
“அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்றேன் அங்கிள்” என்று கூறி பவித்ராவுடன் அறைக்கு சென்றாள்.
வைஷ்ணவி, “என்னங்க! திவ்யா அப்பா என்ன சொன்னார்?” என்று கேட்டார்.
“நீ யாரை கேட்கிற? ரகாவனையா ராஜாராம் சாரையா?”
ஒரு நொடி மெலிதாக அதிர்ந்த வைஷ்ணவி, “ரெண்டு பேரும் தான்” என்றார்.
“ராகவன் எப்பொழுதும் போல் தான் புலம்பினார்.. கூடவே நல்ல பார்த்துக்க சொல்லி சொன்னார்”
“சேர்மன் சார் என்ன சொன்னார்?”
“அவர் நிறைய பேசினார்.. அவர் சொன்னதை கேட்டதும் எனக்கே ராகவன் மேல் தான் கோபம் வந்தது”
“என்னங்க சொல்றீங்க?”
“ராஜாராம் சார் சொன்ன விஷயம் திவ்யாவிற்கு தெரியாது.. தெரிந்தால் ராகவன் நிலை! ஜென்மத்திற்கும் அவரை மன்னிக்க மாட்டாள்” என்றவர் ராஜாராம் சொன்னதை கூறினார்.
வைஷ்ணவி கோபத்துடன், “இதை கேட்ட பிறகும் நீங்க ராகவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுனீங்க?” என்றார்.
“ராகவன் தப்பு செய்திருக்கலாம் ஆனால் திவ்யாவிடம் அவருக்கு அன்பு அதிகம்.. அவளின் விலகல் அவரை பெரிதும் பாதித்து இருக்கிறது.. அது போக அவளுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கணும் தானே!”
“சேர்மன் சார் சொன்னதை சொல்லி இருக்கலாமே!”
“இப்போ அதிக கோபத்தில் இருக்கும் போது அவர் சொன்னதை உண்மைன்னு அவ நம்பணுமே!”
அப்பொழுது சந்திரனின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது ராகவன்.
சந்திரன் அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றார்.
“திவ்யா எப்படி இருக்கிறா?”
“நல்ல இருக்கிறா”
“சூர்யா அவளிடம் பேசனும்னு ஒரே அழுகை.. அவ போனை எடுக்கலை.. அதான் உங்களை தொந்தரவு செய்துட்டேன்.. சாரி”
“தொந்தரவுலாம் இல்லை.. இருங்க திவ்யா கிட்ட கொடுக்கிறேன்” என்றவர் வைஷ்ணவியிடம் கைபேசியை நீட்டி, “திவ்யா தம்பி அவளிடம் பேசணுமாம்” என்றார்.
வைஷ்ணவி கைபேசியை வாங்கி சென்றார்.
பவித்ரா அறைக்கு சென்றவர் கைபேசியை கையால் மூடியபடி, “திவ்யா சூர்யா உன்னிடம் பேசணுமாம்” என்றார்.
“நான் வீட்டில் இல்லைனு சொல்லிடுங்க ஆன்ட்டி”
“சூர்யா என்ன பண்ணான்? பேசலாமே!”
“வேணாம் ஆன்ட்டி”
அவர் கைபேசியில், “ஹலோ” என்றதும் எட்டு வயது சூர்யா, “அக்கா எப்படி இருக்க (அக்)கா? நீ எப்போ வீட்டுக்கு வருவ? எனக்கு உன்னை தேடுது.. அம்மா கூட இப்பலாம் உன்னை திட்டுறது இல்லை தெரியுமா! உன்னை பார்க்க காலேஜ் வரணும் சொன்னேன், ஆனா அப்பா அங்கேலாம் போகக் கூடாதுனு சொல்லிட்டாங்க.. நீ இன்னைக்கு வருவனு சொல்லி தான் சமாதானம் சொன்னாங்க, ஆனா இன்னைக்கு கேட்டா நீ ஏதோ ப்ராஜெக்ட் செய்ய ஊருக்கு போயிருக்கனு சொல்றாங்க.. எப்போ வருவ (அக்)கா? உனக்கு என்னை தேடவே இல்லையா?” என்று மூச்சு விடாமல் பேசினான்.
அவனது தவிப்பில் திவ்யா இறுகி போய் அமர்ந்திருந்தாள்.