Advertisement

விலகல் 6

விடுதி வெளியே நின்றவரை கண்டதும் திவ்யாவின் அகமும் முகமும் இறுகியது. அவரை கண்டுக் கொள்ளாமல் அவள் கிளம்ப தயாராக பவித்ரா தயக்கத்துடன் நின்றாள்.

தன்னை தொடர்ந்து வராத தோழியை பார்த்து திவ்யா முறைக்க, அவளோ செய்வதறியாது திணறினாள்.

அப்பொழுது, “குட்டிமா.. இந்த அப்பாவை மன்னிக்கவே மாட்டியா?” என்று பாசமும் ஏக்கமும் தவிப்பும் நிறைந்த குரலில் அவர் கேட்டார்.

‘குட்டிமா’ என்ற அழைப்பிலும் அவரது குரலில் இருந்த உணர்வுகளிலும் ஒரு நொடி திவ்யாவின் மனமும் கண்களும் கலங்கத் தான் செய்தது ஆனால் அடுத்த நொடியே அவளது மனமும் உடலும் இறுகியது.

திவ்யா அவரை திரும்பிப் பார்க்காமல் இறுகிய குரலில், “பவி கிளம்பலாம்” என்றாள். 

பவித்ராவின் பார்வையோ அவரை சுட்டிக்காட்டி கெஞ்சியது. திவ்யாவிடம் சிறிதும் மாற்றம் இல்லை.

திவ்யாவின் கூற்றில் அவர் பதறியவராக, “குட்டிமா வீட்டுக்கு வாடா.. இந்த விடுமுறை நாட்களை எதிர் நோக்கித் தான் உன் பிரிவை கஷ்டப்பட்டு தாங்கிட்டு இருக்கிறேன்” 

“..” 

“என் முகத்தை கூட பார்க்க பிடிக்கலையாடா?” 

“என்னோட இந்த நிலைமைக்கு காரணமான இவரை நான் முற்றிலும் வெறுக்கிறேன்னு சொல்லு பவி” என்று திவ்யா வெடித்தாள்.

“நான் அப்போ தெரியாம………….” திவ்யாவின் தீ பார்வையில் அவர் தடுமாறி, “இல்..லை.. தெரிந்து தான் தப்பு செய்தேன்.. ஆனா அப்போ இருந்த ராகவன் வேறுடா.. அப்போ இளமையின் வேகத்திலும் பண திமிரிலும் தப்பு பண்ணிட்டேன்.. ஆனா உன் சாருமா வந்து என்னை மனிதனா மாத்திட்டா.. என்னை மன்னிக்க கூடாதாடா?” 

‘சாருமா’ என்ற வார்த்தையில் இளகிய திவ்யாவின் மனம் அவரது கடைசி வாக்கியத்தில் மீண்டும் இறுகியது.

சில விஷயங்களை நினைத்து பார்த்தவள் தோழியிடம், “இவர் வாழ்க்கையில் வந்த மூன்று பெண்களிடமும் இவர் உண்மையா இல்லைனு சொல்லு” என்றாள். 

ராகவன் சட்டென்று, “சாருவிடம் நான் உண்மையா தான் இருந்தேன்” என்றார்.

திவ்யா இகழ்ச்சியான பார்வையுடன் அவரை பார்த்தபடி, “அப்படி இவர் உண்மையா இருந்து இருந்தால் இவர் வாழ்க்கையில் மூன்றாவது பெண் நுழைந்து இருக்க முடியாதுனு சொல்லு பவி” என்றாள். 

“அது.. அது வந்து….” என்று சிறு குற்ற உணர்ச்சியுடன் அவர் திணறினார். 

திவ்யா நக்கலும் கோபமும் நிறைந்த குரலில், “இவரால் பதில் சொல்ல முடியாது” என்றாள். 

“இல்லை.. அது நான் உனக்காக தான்………………………..” 

“எனக்காக!!!” என்று கோபமும் இகழ்ச்சியுமாக கூறியவள், “எனக்காக என்றால் சூர்யா எப்படி வந்தான்னு கேளு பவி” என்றாள். 

பவித்ரா இருவரின் உரையாடலையும் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று தள்ளி நிற்கலாம் என்று நினைத்தால் தோழி அடுத்த நொடியே கிளம்பிவிடுவாள் என்பதால் வேறு வழி இன்றி நின்றுக் கொண்டிருந்தாள்.

ராகவன், “ஆனால் உனக்கு நல்ல அப்பாவா தானேடா இருந்தேன்.. இப்பவும் அப்படி இருக்க தான் விரும்புறேன்.. என்னோட உயிர்டா நீ.. ப்ளீஸ்டா.. அப்பா கூட வாடா” 

திவ்யாவின் மனதினுள் பெரும் வலி எழுந்தது. அவள் மனதில் இருப்பதை அவரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை. என்ன தான் அவரை வெறுத்து அவரை விலக்கி வைத்து, அவரை வருத்தப்பட வைப்பதற்காகவே சில காரியங்களை செய்தாலும் தனது இந்த வலியை, அவரை வெறுப்பதற்கு காரணமான விஷயத்தைச் சொல்லி அவரை கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

திவ்யா வேதனையுடனும் இயலாமையுடனும் சிறிது கலங்கிய விழிகளுடன் அவரை பார்த்து மறுப்பாக தலையை அசைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் கிளம்பினாள்.

பவித்ரா கிளம்பும் போது, “இப்போ உங்க வீட்டுக்கு தான் போறீங்களா? குட்டிமாவை நல்ல பார்த்துக்கோ” என்ற ராகவனின் பேச்சு பவித்ராவிடம் இருந்தாலும், பார்வையோ செல்லும் மகளிடம் இருந்தது.

“எங்க வீட்டுக்கு தான் போறோம் அங்கிள்.. திவியை நான் நல்லா பார்த்துக்கிறேன்.. நீங்க கவலைப்படாதீங்க.. நிச்சயம் ஒரு நாள் அவ உங்களிடம் வருவாள்” 

வெறுமையாக புன்னகைத்தவர், “சரி நீ கிளம்பு” என்றார்.

பவித்ரா அவசரமாக தோழியை நாடி ஓடினாள்.

மூச்சு வாங்க வந்தவளை பார்த்து திவ்யா, “என்ன சொன்னார்?” 

“உன்னை நல்ல பார்த்துக்க சொன்னார்.. இருந்தாலும் நீ ரொம்ப தான்டி பண்ற.. அவர் பாவம்” 

வெறுமையாக பார்த்தவள், “உனக்கு சொன்னால் புரியாது” என்றாள். 

“என்ன புரியாது?” 

“அவருக்கு மட்டுமில்லை.. எனக்கும் அவர் உயிராய் தான் இருந்தார்.. ஆனா.. ப்ச்.. விடு” என்று வேதனையுடனும் சலிப்புடனும் முடித்தாள்.

“மனசில் இருப்பதை என்னிடமாவது சொல்லேன்” 

“சொல்லி?” 

“உன் பாரம் குறையுமே!” 

திவ்யா விரக்தியாக புன்னகைத்தாள்.

“நீ ஒரு இம்சைடி”

“தேங்க்ஸ்” என்று திவ்யா புன்னகைக்கவும் பவித்ரா முறைத்தாள்.

“நான் தான் வண்டி ஓட்ட போறேன்” என்ற திவ்யாவின் அறிவிப்பில் நெஞ்சை பிடித்த பவித்ரா, “வேணாம்டி எனக்கு ரொம்ப நாள் உயிர் வாழும் ஆசை இருக்குது” என்றாள். 

“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா?” 

“நீ இருப்ப.. நான் இருப்பேனா!” என்று பரிதாபமாக கேட்ட பவித்ராவை கண்டு தன் கவலை மறந்து சிரித்தாள் திவ்யா. அதை ரசித்து பார்த்தது மூன்று ஜீவன்கள். ராஜாராம், சுபாஷினி மற்றும் ராகவன் தான் அந்த மூன்று ஜீவன்கள்.

பவித்ரா கெஞ்சல்களை பொருட் படுத்தாமல் வண்டியை கிளப்பிய திவ்யாவின் கையில் பவித்ராவின் வண்டி பறந்தது. அவளது வேகத்தில், மழையில் நனைந்த கோழிக் குஞ்சை போல் பயந்துடன் பின்னால் அமர்ந்திருந்தாள் பவித்ரா.

“இந்த ஆளுக்கு இங்கே என்ன வேலை?” என்ற ஜனனியின் கோபக் குரலில் ராஜாராமும் சுபாஷினியும் ஜனனியின் பார்வை இருந்த திசையை பார்த்தனர்.

கிளம்பிச் சென்ற திவ்யாவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராகவனை கண்டதும் சுபாஷினியிடம் இறுக்கமும் கோபமும் வந்தது. மனைவியின் கையை ஆதரவாக பிடித்த ராஜாராம் அமைதியாக இருந்தார்.

எதேர்ச்சையாக இவர்களை பார்த்த ராகவன் சுபாஷினியை முறைத்துவிட்டு வேகமாக கிளம்பினார்.

ஜனனி கோபத்துடன், “நாம தான் முறைக்கணும் ஆனா உங்களை முறைச்சிட்டு போறார்.. எனக்கு வர கோபத்திற்கு அந்த ஆளை!” 

“ஜனனி” என்று ராஜாராமின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.

“அட போங்க டாடி.. நீங்க ஒரு அஹிம்ஸைவாதி” 

“அவரை பற்றிய பேச்சு நமக்கெதற்கு?” 

“அந்த ஆள்……………” என்று ஏதோ சொல்ல வந்த ஜனனி தந்தையின் கண்டிப்பு பார்வையிலும் அன்னையின் இறுக்கத்தையும் கண்டு, “சரி விடுங்க” என்றாள்.

ராஜாராம், “ஒன்றை நல்ல புரிந்துக்கொள் ஜனா.. அன்பு மட்டுமே ஒருவரின் மனதை வெல்லும்” என்றார். 

“எப்படி! நீங்க அம்மாவின் இதயத்தை வென்றது போலா!” என்று குறும்புடன் கேட்டு கண்ணடித்தாள்.

சுபாஷினி அழகாக வெட்கபட்டபடி மகளை செல்லமாக அடித்தார்.

மனைவியின் வெட்கத்தை புன்னகையுடன் ராஜாராம் ரசித்தார்.

ஜனனி, “சும்மாவே நீங்க அழகு.. இப்படி வெக்கப் பட்டால் டாடி நிலைமை அவ்ளோ தான்” என்றாள். 

சுபாஷினி கணவரைப் பார்க்க அவரோ புன்னகையுடன் மகள் அறியாமல் கண்சிமிட்ட, மேலும் வெட்கப்பட்ட சுபாஷினி செல்லமாக கணவரை முறைத்து மகளிடம், “வாய் பேசியது போதும்.. கிளம்பு” என்றார்.

மூவரும் கிளம்பிச் சென்றனர்.

 

 

வீட்டிற்கு வந்த திவ்யாவை பவித்ராவின் அன்னை வைஷ்ணவி இன்முகத்துடன் வரவேற்றார். உணவை முடித்துக் கொண்ட திவ்யா அமைதியாக பவித்ராவின் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள். அவளுக்கு பிடித்த பாடல்களை கணினியில் ஒலிக்கவிட்ட பவித்ரா அவள் தலையை வருடிக் கொடுத்தாள். முன்தினம் உறக்கமின்றி படித்ததாலோ, இசை மற்றும் தோழியின் வருடல் தந்த இதத்திலோ திவ்யா மெல்ல கண் அயர்ந்தாள்.

அவள் உறங்கியதும் வெளியே வந்த பவித்ரா அன்னையிடம் நடந்தவற்றை கூறி, “தயங்கி தயங்கி வரட்டுமானு கேட்டப்போ என்னால் மறுக்க முடியலை மா.. அதான் உங்களிடம் கேட்காமல் சரி சொல்லிட்டேன்.. சாரி மா.. அப்பா கிட்ட நீங்களே சொல்லிடுங்க மா..” என்றவள், அன்னை புன்னகைக்கவும், “வெளியே சிரித்து சேட்டை செய்தாலும் அவ உள்ளுக்குள் உடைந்து போய் இருக்கிறா மா.. ப்ளீஸ் மா அவ என்ன சேட்டை செய்தாலும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. அப்பாவையும் பொறுத்துக்க சொல்லுங்க மா ப்ளீஸ்.. முதல் முறை நம்ம வீட்டிற்கு வந்திருக்கா! நாம அவளை நல்லா பார்த்துக்கணும் மா ப்ளீஸ்” 

“நல்லா பார்த்துக்கலாம்.. கவலைப் படாதே.. அப்பாவை நான் சமாளிக்கிறேன்.. இருந்தாலும் பெரிதாக எந்த வம்பிலும் மாட்டாமல் பார்த்துக்கோ” 

‘நான் சொன்னா கேட்கவா போறா!’ என்று மனதினுள் நினைத்தவள் அன்னையிடம், “சரி மா நான் பார்த்துக்கிறேன்.. தேங்க்ஸ் மா” என்று கூறினாள்.

அவர் புன்னகைக்கவும் தன் அறைக்கு சென்று தோழி பக்கத்தில் படுத்து உறங்கினாள்.

 

நல்ல உறக்கத்தில் இருந்து அடித்துபிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த பவித்ரா தன் முன் சிரித்துக் கொண்டிருந்த தோழியை பார்த்து முறைத்தபடி, “ஏன்டி பிசாசு என் முகத்தில் தண்ணியை ஊத்தின! இப்போ தான் தூங்கவே ஆரம்பித்தேன்..” என்றாள். 

“இப்போ தான் தூங்க ஆரம்பிச்சியா! மணி என்ன தெரியுமா? ஆறு.. நீ நாலு மணிக்கே வந்து படுத்ததா ஆன்ட்டி சொன்னாங்க” 

“வந்து படுத்தா, உடனே தூங்கியிருக்கனுமா! நான் அஞ்சு மணிக்கு மேல தான் தூங்கவே ஆரம்பித்தேன்” 

“போதும் போதும் எழுந்து வா” 

“வந்து என்ன பண்ண?” 

“வெளியே பசங்க கிரிகெட் விளையாடிட்டு இருக்காங்க.. நாமும் போய் விளையாடலாம்” 

“அடி பாவி அவன்க சின்ன பசங்க.. தெருவில் விளையாடுறாங்க.. அப்படி நாம போய் விளையாட முடியுமா?” 

“ஏன் முடியாது?” 

“லூசு” 

“உன் பெயரை ஏன் நீயே சொல்லிக்கிற!” 

பவித்ரா முறைத்தபடி, “வைஷு மாதாவை கூட சமாளிச்சிரலாம் ஆனா……” 

“மிஸ்டர் சந்திரமௌளி வரதுக்கு முன் நல்ல பிள்ளையா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துக்கலாம்” 

“பக்கத்து வீட்டு அங்கிள் யாராவது சொல்லி விஷயம் எப்படியும் தெரிஞ்சிரும்” 

“அப்போ நான் சமாளிக்கிறேன்” என்றவள் “ஸ்ப்பா.. உனக்கு விளக்கம் சொல்றதுக்கே நான் தனியா சாப்பிடனும் போல!” 

“நான் வரலை” 

“சரி சும்மா வந்து எனக்கு இன்ட்ரோ கொடுத்துட்டு விளையாடுறதை பாரு” 

“நீ கிளம்பும் போது, என்னையும் பெட்டி படுக்கையை கட்டி ஹாஸ்டல் கூட்டிட்டு போற முடிவில் தான்டி இருக்க” 

“ஏய்! இது கூட நல்ல ஐடியாவா இருக்குதே!” 

“இருக்கும்.. இருக்கும்” 

“ஸ்வீட் பவி.. நான் இப்பவே போய் ஆன்ட்டி கிட்ட இதை பற்றி பேசுறேன்” என்றபடி அவள் வெளியே செல்ல, “ஏய் பிசாசு” என்று அலறியபடி இவளும் அவள் பின் ஓடினாள்.

Advertisement