Advertisement

கைபேசியின் ஒலியில் ஒருவாறு சுயஉணர்வை பெற்றவள் அழைப்பை எடுத்து, “ரிஷி.. ரிஷி..” என்று வார்த்தை வராமல் திணறினாள்.

“என்னாச்சுடா? யாரு போன் பண்ணா? என்ன சொன்னாங்க?” 

“அப்பா.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக்.. என்னால் தான்.. நான் பேசியது தான் காரணம்” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

“அபப்டி எல்லாம் இல்லைடா.. நீயா மனசை குழப்பிக்காத.. அவருக்கு ஒன்னும் ஆகாது” 

“ஒன்னும் ஆகாது தானே ரிஷி!!”

“ஒன்னும் ஆகாதுடா.. உன் நல்ல மனசுக்கு அவர் நல்லா தான் இருப்பார்.. நாம போய் பார்க்கலாம்.. எந்த ஹாஸ்பிடல்?” 

“அது.. அது.. தெரியலையே! நான் அதிர்ச்சியில் கவனிக்கலை” 

“உனக்கு யாரு போன் பண்ணா?” 

“அப்பா பிரெண்ட் சுரேஷ் அங்கிள்” 

“சரி அவர் நம்பரை எனக்கு அனுப்பு.. நான் அவரிடம் பேசுறேன்.. நீ விஜய் கூட பார்கிங் ஏரியா போ” 

“ஹ்ம்ம்” என்று அழைப்பைத் துண்டித்தவள் சுரேஷின் எண்னை அனுப்பினாள்.

விஜயும் பவித்ராவும், “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுடா.. கவலைப் படாத” என்றனர்.

“ஹ்ம்ம்” என்றவளின் மனம் பெரிதும் தவித்துக் கொண்டிருந்தது. தவிப்புடன் குற்ற உணர்ச்சி வேறு அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

நண்பர்களுடன் வண்டி நிறுத்துமிடத்திற்கு சென்றாள்.

அவள் சென்ற இரண்டு நிமிடத்தில் ஹரீஷ் ராஜாராமுடன் வந்தான்.

ராஜாராம் திவ்யாவின் கையைப் பற்றி, “ராகவனுக்கு ஒன்னும் ஆகாதுடா” என்றார்.

ஹரீஷ், “நாங்க பார்த்துக்கிறோம் சார்.. மேடமும் ஜனனியும் வேற இருக்காங்க” என்றான்.

ராஜாராம் தயங்கவும், ஹரீஷ், “நான் பார்த்துக்கிறேன் சார்” என்றான்.

ராஜாராம், “சரி அங்கே போயிட்டு போன் பண்ணி நிலைமையைச் சொல்லுங்க” என்றார். 

“சரி சார்” என்றவன், பவித்ராவை பார்த்து, “நீ இங்கேயே இரு..” என்றான். 

“இல்லை சார்.. திவி” 

“நான் பார்த்துக்கிறேன்.. நிலைமை எப்படினு தெரியாது.. உன்னை வேற வீட்டில் விடனும்னா கஷ்டம்..” என்றதும்,

அரை மனதுடன், “சரி சார்” என்றவள் திவ்யாவின் கையை ஆறுதலாக பற்றி, “ஒன்னும் ஆகாது.. தைரியமா இரு” என்றாள்.

அதன் பிறகு ஹரீஷும் திவ்யாவும் ஹரீஷின் இரு சக்கர வண்டியிலும், விஜய் அவனது இரு சக்கர வண்டியிலும் கிளம்பினர்.

பயணத்தின் போது ஹரீஷ் கூறிய ஒன்றிரண்டு ஆறுதல் வாக்கியங்கள் அவள் காதில் விழுந்தாலும் மூளையை எட்டவில்லை.

மருத்துவமனை வந்ததும் வேகமாக இறங்கி ஓடினாள் திவ்யா.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த ராகவனை கண்ணாடி தடுப்பு வழியே பார்த்தவள் கண்ணீர் சிந்தினாள்.

சூர்யா ஓடி வந்து அவள் இடையை கட்டிக் கொண்டு, “அக்கா.. அப்பா” என்று அழுதான். தம்பியை ஆதரவாக பற்றினாலும் அவளது பார்வை ராகவனிடமே இருந்தது.

அப்பொழுது, “உன்னை யாருடி இங்கே வர சொன்னது?” என்று கோபத்துடன் கத்திய பார்வதி சுரேஷை நோக்கி, “இந்த ஆள் வேலையா?” என்றுவிட்டு மீண்டும் திவ்யா பக்கம் திரும்பி, “உன் நடிப்பை நம்ப இங்கே யாருமில்லை.. முதல்ல இங்கிருந்து கிளம்பு.. உன்னால் தான் அந்த மனுஷன் இப்படி இருக்கிறார்.. நீ தான் அவருக்கு……………….” ‘எமன்’ என்று சொல்லும் முன்,

ஹரீஷ், “ஹே நிறுத்து.. அவருக்கு இந்த நிலைமை உன்னால் தான்.. உன் பேச்சை கேட்டு கேட்டு தான் இப்படி இருக்கிறார்.. இந்த பிரச்சனை ஆரம்பித்ததே உன்னால் தான்.. பழியை திவ்யா மேல் போட்டு தப்பிக்கலாம்னு பார்க்காதே” என்றவன் அவரை நெருங்கி ஆள்காட்டி விரலை நீட்டி,

“மூச்.. இனி ஒரு முறை என் திவ்யாவை பற்றி தப்பா ஒரு வார்த்தை பேசின! சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. பக்கத்து பெட்டில் உன்னை படுக்க வச்சிருவேன்.. ஜாக்கிரதை” என்று கண்கள் சிவக்க கூறியவனின் கோபத்தில் பார்வதி ஆடித் தான் போனார்.

சுரேஷும், “ராகவனோட மருந்தே திவ்யா தான்.. நீங்க கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தால் நல்லது.. முடியலையா தயவு செய்து இங்கிருந்து கிளம்புங்க” என்று கூற,

சூர்யாவும் தன் பங்கிற்கு அழுகையுடன், “எனக்கு அப்பா வேணும்.. நீ கிளம்பு மா” என்றான்.

அதன் பிறகு அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

 

 

ராகவனை பரிசோதித்துவிட்டு வெளியே வந்த மருத்துவர், “நவ் ஹீ இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. மைல்ட் அட்டாக் தான்.. மன அழுத்தத்தினால் வந்தது போல் தான் தெரியுது.. அதை குறைக்க பாருங்க.. அதிக அதிர்ச்சியோ சந்தோஷமோ தர விஷயம் எதுவும் சொல்ல வேணாம்.. அவர் ஹெல்த் கண்டிஷன் பார்த்துட்டு நாளைக்கே கூட ரூமுக்கு ஸிப்ட் செஞ்சிரலாம்” என்றார். 

திவ்யா, “உள்ளே போய் பார்க்கலாமா டாக்டர்?” 

“ஒருத்தர் மட்டும் போங்க.. அவரை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வாங்க” என்று கூறி சென்றார்.

திவ்யா மெல்ல உள்ளே சென்று அவர் அருகில் நின்று அவர் கையை மென்மையாக பற்றினாள். மருந்தின் வேகத்தில் மயக்கத்தில் இருந்த அந்த நிலையிலும் அவளது தொடுகையை உணர்ந்தார் போல் அவருள் சிறு அதிர்வலை ஓடியது.

அமைதியாக அவரை பார்த்தவள் மனதினுள், ‘சாரி பா.. எனக்கு உங்க மேல் கோபம் தான் ஆனா நான் கோபப் படவாவது நீங்க எனக்கு வேணும்’ என்று கூறியவள் அழுகையை கட்டுப் படுத்த முடியாதது போல் தோன்றவும் வேகமாக வெளியே சென்றாள்.

வெளியே வந்தவள் ஹரீஷின் தோளில் சாய்ந்து, “என்னால் முடியலை ரிஷி” என்று அழுதாள்.

அவளது முதுகை வருடியவன், “ஒன்றுமில்லைடா.. அதான் டாக்டரே சொல்லிட்டாரே! அப்புறமென்ன! நாளைக்கே நல்லா பேசுவார் பார்” என்று அவளை தேற்றினான்.

மெல்ல அவளது அழுகை நின்றதும், அவன், “சரி நீயும் விஜயும் கிளம்புங்க.. நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

அவள் மறுப்பாக தலையை அசைக்கவும், அவன், “தியா சொன்னா கேட்கணும்.. இன்னைக்கு எப்படியும் கண் முழிக்க மாட்டார்.. ஸோ நீ போயிட்டு நாளைக்கு காலையில் வா” என்றான். 

“நான் உன் கூடவே இருக்கிறேனே.. ப்ளீஸ் டா” 

“இங்கே எப்படி டா!” 

“ரிசெப்ஷனில் சேரில் உட்கார்ந்துக்கலாம்.. ப்ளீஸ் டா..” 

“சரி” என்றவன் விஜய் பக்கம் திரும்பி, “ரொம்ப தேங்க்ஸ் விஜய்……….” என்று ஆரம்பிக்க,

அவன், “என்ன சார் தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு..” என்றான்.

ஹரீஷ், “சரி.. நீ கிளம்பு..” 

“சரி சார்.. எதுவும் ஹெல்ப் வேணும்னா எந்த நேரம்னாலும் போன் பண்ணுங்க சார்” என்றவன், “நான் நாளைக்கு வரேன் திவி” என்றான்.

திவ்யா, “பவிக்கு போன் பண்ணி சொல்லிடு” 

“சரி டா.. டேக் கேர்” என்று கூறி கிளம்பினான்.

திவ்யா சுரேஷிடம் சென்று, “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்றவள், “நீங்களும் வேணா கிளம்புங்க அங்கிள்..” என்றாள். 

அவர் சிறிது தயங்க, அவள், “அப்பா கண் முழிச்சதும் போன் பண்றேன் அங்கிள்” என்றாள். 

“சரி மா.. பார்த்துக்கோ.. என்னிடம் சொன்ன அப்பா-ன்ற வார்த்தையை அவனிடம் நீ சொன்னாலே அவன் எழுந்து உட்கார்ந்திருவான்” 

திவ்யா அமைதியாக சரி என்பது போல் தலையை ஆட்டினாள். அவரும் கிளம்பி சென்றார். இதற்குள் ஹரீஷ் ராஜாராமிற்கு அழைத்து நிலவரத்தை கூறி இருந்தான்.

அதன் பிறகு திவ்யா ஹரீஷ் தோளில் சாய்ந்து அமர்ந்திருக்க சூர்யா அவள் மடியில் தலை வைத்தபடி அமர்ந்திருந்தான். பார்வதி தனியாக அமர்ந்திருந்தார். அவரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

 

 

டுத்த நாள் காலையில் ராகவன் கண் விழித்ததாக செவிலி வந்து கூறவும் திவ்யா வேகமாக உள்ளே சென்றாள்.

அவளைப் பார்த்ததுமே ராகவன் கண்களில் தனி ஒளி வந்தது. அவர் கைகளை பற்றியவள் கலங்கிய கண்களுடன், “அப்பா.. சாரி ப்பா” என்றாள்.

அவளது கையை இறுக்கமாக பற்றிய ராகவன், “நீ எதுக்குடா சாரி சொல்ற? நான் தான் சொல்லணும்.. அப்பாவுக்கு ஒன்றுமில்லைடா.. நீ மனசைப் போட்டு குழப்பிக்காத.. உன்னால் எதுவும் இல்லை.. நான் செய்த பாவம் தான் காரணம்.. என் குட்டிமா எப்பவும் ஹப்பியா இருக்கணும் சரியா” என்றார். 

அவள் சரி என்பது போல் தலையை அசைத்தாள்.

அவர், “நீ சொன்னது தான் சரி டா.. நான் தான் உன் அப்பானு உரக்க சொல்லணும்னு ஆசையா தான் இருக்குது.. ஆனா அதை சொன்னால் உனக்கு தான் களங்கம்..  சாரிடா.. அப்பாவை மன்னிச்சிடு” என்று சற்று கரகரத்த குரலில் கூறவும்,

அவர் இந்த நிலைமையில் உணர்ச்சிவசப் படுவது நல்லதில்லை என்று அவள், “இப்போ எதுக்கு ப்பா அதை பத்தி பேசிட்டு.. விடுங்க” என்றாள்.

“அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுடா.. அதான் நீ அப்பானு கூப்பிட்டுட்டியே! இன்னைக்கே அப்பா எழுந்து உட்கார்ந்திடுவேன்” என்றவர், “தனியா வா இருக்க?” என்று கேட்டார். 

“ரிஷி இங்கே தான் ப்பா இருக்கிறான்.. சித்தியும் சூர்யாவும் கூட இருக்காங்க” 

“சூர்யா ரொம்ப பயந்துட்டானா?” 

“ஹ்ம்ம்.. இப்போ கொஞ்சம் பரவா இல்லை.. தூங்குறான்” 

“சரி மாப்பிள்ளையைக் கூடிட்டு வா” 

செவிலி, “சார் நீங்க அதிகம் பேசக் கூடாது” 

“எனக்கு ஒன்றுமில்லை.. நீ போய் கூட்டிட்டு வா” 

திவ்யா, “கஷ்டப்பட்டு தானே ப்பா பேசுறீங்க.. ரெஸ்ட் எடுங்க” 

“ஒரே ஒரு நிமிஷம் டா ப்ளீஸ்..” 

“ஒரு நிமிஷம் தான்” என்று கூறி வெளியேறி ஹரீஷை அழைத்து வந்தாள்.

ஹரீஷின் கையை பற்றியவர், “திவ்யாவை நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை.. அன்னைக்கு நான் பேசினதை மனசில் வச்சிக்காதீங்க.. என்னை மன்னிச்சிருங்க” 

“பெரிய வார்த்தை எல்லாம் வேணாம் சார்………” 

“மாமா சொல்லாமே” 

அவன் திவ்யாவை பார்க்க, ராகவன், “அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் இருக்கிறது தான்.. என் உயிரை காப்பாத்த தான் அப்பானு கூப்பிட்டு பேசுறா..” என்றார். 

“அப்பா” என்று திவ்யா தயங்க,

அவர், “என் மகளை எனக்கு தெரியாதா!” என்றார். 

திவ்யா, “எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க பா.. பழையபடி மாற” 

“நீ இவ்ளோ பேசுறதே எனக்கு ரொம்ப சந்தோசம்டா.. நான் மன்னிக்கிற தப்பை செய்யலை.. பழைய ராகவன் செத்துட்டான்.. நீ இப்போ அப்பானு கூப்பிட்டதில் புதுசா பிறந்துட்டேன்டா..

உன் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லு.. உடம்பு சரியானதும் நேரில் போய் நானே மன்னிப்பு கேட்கிறேன்” என்றபோது சிறிது சிரமப்பட்டு தான் பேசினார்.

“சார் அதிகம் பேசாதீங்கனு சொல்றேனே!” என்று கண்டிப்புடன் கூறிய செவிலி திவ்யா மற்றும் ஹரீஷை பார்த்து, “இது ICU சார்.. கிளம்புங்க” என்று கறார் குரலில் கூறினார்.

இருவரும் சிறு தலையசைப்புடன் வெளியேறினர்.

 

அதன் பிறகு ராகவனின் உடல் நிலை வேகமாக முன்னேறியது. அவர் சொன்னது போல் வீட்டிற்கு வந்து உடல் நிலை நன்றானதும் ராஜாராம் வீட்டிற்கே சென்று ராஜாராம் மற்றும் சுபாஷினியிடம் மனதார மன்னிப்பு கேட்டார். அன்று ஹரீஷும் அங்கே தான் இருந்தான்.

தன் மனதை மாற்றும் முயற்சியுடன் ராகவனுடன் அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பேசிக் கொண்டிருந்த திவ்யா பொதுவாக அனைவரையும் பார்த்து, “யாரையும் கஷ்டபடுத்த நான் விரும்பலை.. நான் ஹாஸ்டலிலேயே இருக்கிறேன்.. எய்த்(8th) செம் ஸ்டடி ஹாலிடேஸ்ஸில் எங்க கல்யாணத்தை வைங்க.. நான் நேரா எங்க வீட்டிற்கே போகிறேன்” என்றதை கேட்டு ராகவன், ராஜாராம், சுபாஷினி மற்றும் ஜனனி வருந்த, ஹரீஷோ மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தன்னவளை நோக்கினான்.

 

பிறகு தனிமையில் அவளை கையணைப்பில் வைத்தபடி, “ஸ்டடி ஹாலிடேஸ்ஸில் கல்யாணம்னு ஏன்டி சொன்ன?” என்று கேட்டான். 

“ஹாஸ்டல் காலி பண்ணி நேரா நம்ம வீட்டுக்கு வர தான்” 

அவள் நெற்றியில் முட்டி, “கல்யாணம் பண்ணியும் சில நாட்கள் நான் பிரம்மச்சாரியா இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட!” என்றான். 

“ஏன்?” 

“அப்புறம் எப்படி எக்ஸாம்க்கு படிப்ப?” 

“அதெல்லாம் ரெண்டையும் டீல் பண்ணுவா இந்த தியா” 

“என்னால் முடியாதே” என்றவனது கை அவளது இடையை வளைத்து அவளை தன்னுடன் இறுக்கவும்,

அவள் அவன் கையை பிரிக்க முயற்சித்தபடி, “டேய்.. பேச்சு பேச்சா இருக்கணும்” என்றாள்.

“ஏன் நான் வேற என்ன செய்தேன்?” என்று விஷம சிரிப்புடன் வினவ,

“டேய் கேடி கையை எடுடா” என்றாள்.

“கையை மட்டும் எடுத்தா போதுமா?” 

“போதும்” என்றவள் பின், “டேய் உன் பார்வையே சரி இல்லை” என்று முடிக்கும் முன் அவளது செவ்விதழ்களை அவனது இதழ்கள் மூடியது.

சில நொடிகள் கழித்து இதழை பிரித்தவன், “லவ் யூ ஸோ மச் தியா பேபி” என்றான். 

“மீ டு லவ் யூ ஸோ மச் டா” 

“லவ்வை இப்படியா சொல்வாங்க? இந்த சப்ஜெக்டில் வீக்டி நீ” 

“அதான் ஈஸியான சப்ஜெக்டில் அரியர் வைப்பேன்னு நீயே சொன்னியே” என்று அவள் தலை சரித்து புன்னகையுடன் கண்ணடிக்கவும்,

“அப்போ ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துட்டா போச்சு” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் மீண்டும் அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடினான்.

Advertisement