Advertisement

விலகல் 30

ராகவன் கோபத்துடன் மேடையை நோக்கிச் செல்லவும் ஹரீஷ் சென்று ஒலிவாங்கியை(மைக்) அனைத்திருந்தான். அதனால் ராகவன் பேசியதோ திவ்யா பேசியதோ ஜனனி மற்றும் ராஜாராமை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை.

திவ்யா ராஜாராமிடம், “இவரோட ரெண்டாவது மனைவி என் பிறப்பை பற்றி இகழ்வா சொல்றதை போல் எல்லோரும் பேசணும்னா உண்மையை சொல்லச் சொல்லுங்க.. என் மேல் உண்மையிலேயே கொஞ்சமாச்சும் பாசம் இருந்தால், என் நிம்மதியைக் கெடுக்காமல் இங்கிருந்து போகச் சொல்லுங்க” என்றாள்.

திவ்யா ராஜாராமை ‘அப்பா’ என்று அழைத்ததைக் கேட்டே செயலற்று நின்றிருந்த ராகவன் திவ்யா அடுத்து பேசியதை கேட்டு உயிருடன் மரித்தார் என்று தான் சொல்ல வேண்டும். மூளை மரத்துப் போய் கண்கள் மகளை பார்த்தபடி நிலைகொத்தி நின்றார்.

‘இதற்கு மேல் நான் உயிருடன் இருக்கனுமா!’ என்று அவரது மனம் கூக்குரலிட்டதை யாரும் அறியவில்லை. ஒருவேளை திவ்யா அவர் முகத்தை பார்த்திருந்தால் புரிந்துக் கொண்டிருப்பாளோ என்னவோ!

ராஜாராமின் கண்ணசைவில் இருவர் ராகவனை அழைத்துச் செல்ல, ஹரீஷ் ஒலிவாங்கியை இயக்கினான்.

ராஜாராம் திவ்யாவை அணைத்து புன்னகைத்தபடி, “திவ்யாவின் அப்பா நான்னு சொல்லிக்க நான் ரொம்ப பெருமைப் படுறேன்..” என்று பெருமையுடன் கூறினார்.

திவ்யா புன்னகைத்தாள்.

ராஜாராம், “மிஸ்டர் ராகவனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றதும் ஜனனி அவரை முறைத்தாள். சபை நாகரிகத்திற்காக அவர் அப்படி சொன்னார் என்பதை புரிந்துக் கொண்ட திவ்யா அமைதியாக இருந்தாள்.

“இனி ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கூறி ஒலிவாங்கியை விட்டு அகன்றவர் இரு மகள்களையும் பார்த்து, “நீங்க கீழே போய் உட்காருங்க.. நான் வரேன்” என்றார்.

பிறகு விருந்தினர் அருகே சென்று, “நாம கீழே உட்கார்ந்து ப்ரோக்ராம்ஸ் பார்க்கலாம் சார்” என்று அழைத்துச் சென்றார்.

மேடையில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட, மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கீழே தங்களுக்கென போடப் பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

 

மேடையை விட்டு இறங்கும் போதே ஜனனி திவ்யாவின் கையைப் பற்றி மகிழ்ச்சியுடன், “சூப்பர் கா.. தேங்க்ஸ் கா.. ஐ லவ் யூ கா” என்றாள்.

திவ்யா புன்னகையுடன், “எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

ஜனனி, “அப்போ ஏன் என்னை மாதிரி ஐ லவ் யூ சொல்லலை! ஓ! அது மாம்ஸ்க்கு மட்டுமா” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.

“ஏய் வாலு” 

“உன் தங்கை வாலா தானே இருப்பேன்” 

“அது சரி” என்று மெலிதாக சிரித்தபடி பார்வையைச் சுழற்றினாள். அவள் பார்வை ராகவனையும் ஹரீஷையும் தேடியது.

ஜனனி, “யாரை தேடுற? மாம்ஸ் ஆ?” 

“அவரை மட்டுமில்லை” 

“ஓ! அந்த ஆளை ஷ்.. சாரி க்கா.. அப்பா திட்டியும் என்னால் மாற்ற முடியலை” 

திவ்யா ஒட்டாத சிரிப்புடன், “விடு” என்றாள். 

“அவர் பாமிலியோட கிளம்பி போனதைப் பார்த்தேன்” 

“ஓ” என்று சுரத்தே இல்லாமல் கூறியவளின் பார்வையில் ஹரீஷ் தென்பட்டான். மனதை அரித்துக் கொண்டிருந்த அழுத்தத்தையும், சிறு கவலையையும் மீறி அவள் கண்கள் பிரகாசித்தன.

இவ்வளவு நேரமும் அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கைபேசியை சுட்டி காட்டவும், அவள் கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அதில் ஹரீஷிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

“மேடம் தங்கையைப் பார்த்ததும் என்னை மறந்துட்டீங்க” என்று அனுப்பி இருந்தான்.

சட்டென்று கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்க்க, அவன் உடனே கைபேசியில் அவளை அழைத்துவிட்டான். 

அவள் அழைப்பை எடுத்ததும், அவன், “ஹே லூசு.. நான் சும்மா தான் விளையாட்டுக்குச் சொன்னேன்” என்றான். 

“…” 

“இப்படி அனுப்பினா, கோபப்பட்டு என்னை திட்டுவ.. அப்புறம் சமாதானம் செய்யனு உன்னை டைவர்ட் பண்ண நினைத்தேன்டா.. உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா!” 

அவள் அமைதியாகவே இருக்கவும், அவன், “தியா பேசுடா” என்று பரிவுடன் கூறினான்.

அவள் அழுகையைக் கட்டு படுத்திக் கொண்டு, “எனக்கு உன் தோளில் சாய்ந்துக்கணும் போல் இருக்குது” என்றாள்.

“சரி நான் பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் மரத்துக்கிட்ட நிற்கிறேன்” 

“ஹ்ம்ம்” 

“சரி நான் அங்கே போறேன்.. போனை வைக்கட்டுமா?” 

“ஹ்ம்ஹும்” என்றபடி மறுப்பாக தலையை அசைத்தாள். 

“என்னடா!” 

“..” 

“என் தியா தைரியமானவ தானே!” 

“ஹ்ம்ம்” 

“நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் டா.. நீ எதுக்கும் கலங்கக் கூடாது” 

“ஹ்ம்ம்” 

“நான் இப்போ வைக்கிறேன்.. ரெண்டு நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

 

அவள் ஜனனியை தேட, அவளோ சற்று தள்ளி நின்று பவித்ரா மற்றும் விஜயுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் அருகே சென்றவள் அவர்கள் முகத்தை பார்க்காமல், “நான் ரிஷி கிட்ட பேசிட்டு வரேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.

விஜய் சற்று கவலையுடன் போகும் அவளையே நோக்க,

ஜனனி அவனிடம், “என்னாச்சு?” என்று கேட்டாள். 

“திவி டிஸ்டர்ப்ட்டா இருக்கா” என்ற பவித்ரா விஜயை பார்த்து, “ஹரி சார் அவளை மாத்திடுவார்டா.. கவலைப்படாதே” என்றாள். 

ஜனனி, “என்னிடம் சிரிச்சு தானே பேசினா!” 

“வெளியே சிரிச்சாலும் உள்ளுக்குள் உடைந்து போய் தான் இருக்கிறா” 

“ஏன்?” 

“என்ன தான் அவளோட அப்பாவை அவ வெறுத்தாலும் அவர் கஷ்டப்படும் போது அவளும் வருந்தத் தான் செய்வா” 

“அந்த ஆளுக்காக அக்கா ஏன் வருந்தணும்?” 

“அவளோட பதினைந்தாவது வயது வரை அன்பைக் கொட்டி வளர்த்து இருக்கிறார்.. அவளுக்கு அவ அப்பாவை ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சாரும்மா இறந்த பிறகு அப்பா கூட இன்னும் க்ளோஸ் ஆகிட்டா.. அவருக்கும் இவள் தான் எல்லாம்……….” 

“அப்போ எப்படி சூர்யா வந்தான்?” 

“ஜனனி சில விஷயங்களுக்கு நாம விளக்கம் சொல்ல முடியாது.. எது எப்படி இருந்தாலும் அவர் திவ்யா மேல் உயிரையே வைத்திருந்தார், இப்பவும் அப்படி தான்..” 

“நீங்க சொல்றதை என்னால் ஏத்துக்க முடியலை.. அவரால் தான் அக்கா கஷ்டப்படுறா” 

“இருக்கலாம் ஆனா பாசத்தைக் கொட்டி வளர்த்தாரே! அவர் தானே அவளை சந்தோஷமா வைத்திருந்ததும்.. ஒருவேளை உன் அம்மா……………….” 

“அக்காவுக்கும் அவங்க தான் அம்மா.. அப்பாவும் எங்களுக்கு ஒருவர் மட்டும் தான்” என்று முறைப்புடன் கூறினாள். 

பவித்ரா, “சாரி.. உங்களுடைய அம்மா உண்மையைச் சொல்லாமல் இருந்து இருந்தால், இன்னமும் அவரோட பாசத்தில் தானே வாழ்ந்துட்டு இருப்பா.. தான்  அனாதை என்று அவள் மருகியதை நிச்சயம் தன் அன்பால் போக்கி இருப்பார்.. அவர்…………………….” 

“அப்போ நாங்க தான் அக்காவின் சந்தோஷத்தை கெடுத்துட்டோம்னு சொல்றீங்களா?” என்று கோபத்துடன் வினவினாள்.

விஜய், “பவி இப்போ எதுக்கு இந்த பேச்சு! விடு” 

ஜனனி, “அது எப்படி! எப்படி நீங்க அப்படி சொல்லலாம்?” 

பவித்ரா, “நான் உங்களை எதுவும் தப்பா சொல்லலை.. அவர் பொசிஷனை சொன்னேன்.. அது கூட திவிக்கு அவர் மேல் இருக்கும் பாசத்தை புரிய வைக்க.. அவ்ளோ தான்.. நான் சொல்லியது உன்னை ஹர்ட் பண்ணியிருந்தால் ரொம்ப சாரி” 

“ஜனனி அம்மா கூட போய் உட்காரு” என்ற ராஜாராமின் குரலில் பவித்ராவும் விஜயும் சிறு பதற்றம் கொள்ள,

ஜனனி, “அப்பா இவங்க……………” என்று ஆரம்பிக்க,

அவர், “நானும் கேட்டேன்.. பவித்ரா சொன்னதில் தவறு எதுவும் இல்லை.. நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல் மற்றவர்கள் கோணத்தில் இருந்தும் நாம் யோசிக்கணும்” என்றார். 

ஜனனி அப்பொழுதும் கோபத்துடன், “அந்த ஆளுடன் போய் நாணயத்தை கம்பேர் பண்றீங்களே.. அவரிடம் நேர்மை இருக்கிறதா?” என்றாள். 

“முதலில் மரியாதையா பேசிப் பழகு.. இல்லை திவிமா வருத்தப் படுவா” 

“ஹ்ம்ம்.. அக்காவுக்காக முயற்சிக்கிறேன்” 

“சரி நீ அம்மா கிட்ட போ” என்றவர் அவள் சென்றதும், பவித்ரா மற்றும் விஜய் பக்கம் திரும்பி, “திவ்யா எங்கே?” என்று கேட்டார். 

பவித்ராவும் விஜயும் சிறிது தயங்க, அவர், “ஹரீஷை பார்க்க போயிருக்காளா?” என்று மென்னகையுடன் வினவினார்.

இருவரும் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தனர்.

“சரி நீங்க போய் ப்ரோக்ராம்ஸ் பாருங்க”

“சரி சார்” என்று கூறி இருவரும் சென்றனர்.

 

 

ரீஷை பார்த்த திவ்யா அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.

“என்னடா?” என்று ஹரீஷ் சிறிது பதறினான்.

அவள், “எனக்கு என்னவோ போல் இருக்குது.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுடா” என்றாள். 

அவள் கண்களைத் துடைத்து விட்டவன், “இப்போ நீ சந்தோஷமா இருக்கனும்டா.. சேர்மேன் சார் எவ்ளோ அழகா உன்னை அறிமுகப்படுத்திட்டார்” என்றான். 

“ஹ்ம்ம்.. இதை நான் எதிர் பார்க்கவே இல்லை.. யாருக்கும் சந்தேகம் வராதபடி எப்படி சொல்லிட்டார்! ஆனா..” என்று நிறுத்தியவளின் முகத்தில் மீண்டும் வருத்தம் எனும் மேகம் சூழ்ந்துக் கொண்டது.

“என் ரௌடி பேபிக்கு என்னாச்சு?” என்று அவன் பரிவுடன் கேட்டான். 

“அது.. எங்கே உணர்ச்சிவசப்பட்டு மைக் முன்னாடி அவர் உண்மையைச் சொல்லிடுவாரோனு பயந்தேன்.. கூடவே ராஜா அப்பாவும் இவரை எதுவும் சொல்லிட கூடாதேனும் பயந்தேன்.. அதனால்..” 

“அதனால்?” 

“அவர் முன்னாடியே ராஜா அப்பாவை அப்பானு கூப்பிட்டு அவரை கீழே போகச் சொன்னேன்.. அவர் துடிச்சிருப்பார் தானே!

என் பிறப்பை பற்றி தெரிந்ததில் இருந்து நான் அவரை அப்பானு கூப்பிடவே இல்லை.. அதுக்காக எவ்ளோ ஏங்கினார் தெரியுமா! எனக்கு தெரிந்தும் என்னால் அப்படி கூப்பிட முடியலை.. அதன் காரணத்தை சொன்னால் அவர் தாங்கிக்க மாட்டார்னு எனக்குள்ளேயே புதைத்து மறுகினேன்..

அன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் நான் கருவில் இருந்ததைப் பற்றி எப்படி பேசிகிட்டாங்க தெரியுமா? ரெண்டு பேருமே என்னை கருவில் அழிக்க நினைத்து இருக்காங்க..

அவங்க அதான் ஜனனி அம்மா, நான் பிறக்கும் போதே இறந்துட்டதா நினைத்ததாக சொன்னாங்க.. அதை கூட கஷ்டப்பட்டு டைஜெஸ்ட் பண்ண முயற்சித்தேன் ஆனா அவர் சொன்னதை இப்போ வரை என்னால் ஜீரணிக்க முடியலை.. நான் கருவில் கலைஞ்சுட்டதா  நினைத்து நிம்மதியா சாரும்மா கூட வாழ்ந்ததா சொன்னார்டா..” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் மீண்டும் வழிந்தது.

அவன் ஆதரவுடன் அவளை இறுக்கமாக அணைக்கவும், சில நொடிகளில் தன்னை மீட்டவள் அழுகையை நிறுத்தி அவனைப் பார்த்து, “அப்போ நான் அவர் பொண்ணுனு தெரிந்து இருந்தால் என்னை தத்தெடுத்திருக்கவே மாட்டார் தானே! அப்போ இந்த பாசமே பொ..ய்..னு தானே ஆகுது” என்று கரகரத்த குரலில் கூற,

அவளது முதல் பாதி உண்மை தான் என்றபோதிலும் அவள் மனதை தேற்றும் நோக்கத்துடன் அவன், “அப்படி இல்லைடா.. நீ அவரோட மகள்னு தெரிந்ததும் அவர் ரொம்ப சந்தோஷத் தானே பட்டார்” என்றான். 

அவள் மறுப்பாக தலையை அசைக்கவும்,

அவன், “இல்லைடா.. நிஜமாவே அவர் ரொம்ப சந்தோஷப் பட்டார்.. அப்புறம் நீ மயங்கி விழுந்ததும் அவர் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிந்து இருக்க.. அவ்ளோ நேரம் கோபத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர் உன் ராஜா அப்பாவும் சுபாமாவும் இருந்ததையே மறந்தவர் போல் நடந்திருக்கார்.. அப்போ அவர் கண்ணுக்கு நீ மட்டும் தான்டா தெரிந்து இருக்க.. சேர்மன் சார் தான் இதை எல்லாம் சொன்னார்..” 

“அப்போ நான் தப்பு பண்ணிட்டேனாடா?” என்று தவிப்புடன் கேட்டாள்.

அவன், “அப்படி சொல்ல முடியாதுடா.. அவர் செய்தது மன்னிக்க முடியாத தப்பு.. அதுக்கு நீ தண்டனை கொடுத்து இருக்க” என்றான். 

“ஹ்ம்ம்.. ஆனா இன்னைக்கு நான் கொடுத்தது அதிகபடியான தண்டனை..  எனக்கு அப்போ வேறு வழி தெரியலை.. ரெண்டு பேரையும் ஆஃப் பண்ணும்னு நினைத்தேன்.. அப்பா(ராகவனை பல மாதங்கள் கழித்து அப்பா என்று அழைக்கிறாள்) அதிர்ச்சியில் ஆஃப் ஆவார், ராஜா (அப்)பா சந்தோஷத்தில் ஆஃப் ஆவார்னு அப்படி கூப்பிட்டேன்..

அப்புறமும் இனி எப்போதுமே அவர் உண்மையை வெளியே சொல்லிட கூடாதுங்கிற பயத்தில் ‘இவரோட ரெண்டாவது மனைவி என் பிறப்பை பற்றி இகழ்வா சொல்றதை போல் எல்லோரும் பேசணும்னா உண்மையை சொல்லச் சொல்லுங்க.. என் மேல் உண்மையிலேயே கொஞ்சமாச்சும் பாசம் இருந்தால் என் நிம்மதியை கெடுக்காமல் இங்கிருந்து போகச் சொல்லுங்க’ னு சொல்லிட்டேன்.. சொன்ன பிறகு தான் நானே உணர்ந்தேன்.. அவர் ரொம்ப துடிச்சிருப்பார்” என்றவளின் கண்கள் கலங்கியது.

சில நொடிகள் மௌனத்தில் கழிய,

ஹரீஷ், “நான் அவரிடம் பேசட்டுமாடா?” என்று கேட்டான். 

மறுப்பாக தலை அசைத்தவள், “எனக்கு அவரை பார்க்கணும் ஆனா பார்க்க வேண்டாம்.. என்ன பண்ண?” என்று பாவம் போல் வினவினாள்.

அவளை மீண்டும் அணைத்துக் கொண்டவன் அவள் தலை மீது கன்னம் பதித்து, “எல்லாம் சரியாகிடும்டா.. கவலைப் படாதே” என்றான். 

“ஹ்ம்ம்” 

மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய, சட்டென்று நிமிர்ந்தவள், “ஒருவேளை ராஜா ப்பா சொன்னது போல், என்னை யாரும் கடத்தி.. அப்புறம் தான் ஆசிரமத்தில் சேர்ந்தேனோ! ஆனா நான் பிறக்கும் போதே இறந்துட்டதா நினைத்ததா தானே சொன்னாங்க” என்று சிறு யோசனையுடன் கூறினாள். 

“யாரு சொன்னாங்க? அவங்க யாரு உனக்கு?” 

“அது..” என்று சுபாஷினியை ‘அம்மா’ என்று சட்டென்று அழைக்க முடியாமல் திணறியவள் பின் மெல்லிய குரலில், “ஜனனி அம்மா” என்றாள்.

“சேர்மன் சாரை அப்பா-வா ஏத்துகிட்ட.. இவங்களை ஏன் முடியலை?” 

“அது என்னவோ ஒன்னு தடுக்குது.. அவங்க மேல தப்பு இல்லை தான் ஆனா என்னை ஆசிரமத்தில் விட்டது…………” 

“அவங்க உன்னை ஆசிரமத்தில் விடலை”

Advertisement