Advertisement

டுத்த நாள் ஹரீஷ் கூறியது போல் விஜய் கூறினான்.

காலை தேநீர் இடைவேளையில் வெளியே சென்று வந்த விஜய் திவ்யாவிடம், “மச்சி ஹரி சார் ஊருக்கு போய் இருக்காராம்.. அரவிந்த் சார் நொந்தக்குமாரிடம் சொன்னதை கேட்டேன்.. எந்த ஊருக்கு போயிருப்பார்?” என்று கேட்டான். 

அவனை முறைத்த திவ்யா பவித்ராவை ‘அப்படியா?’ என்பது போல் பார்த்தாள்.

பவித்ரா உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே, “எனக்கு தெரியாது திவி.. இன்னைக்கு நான் அவரை பார்க்கலை” என்றாள்.

விஜய், “இவளை போய் கேட்கிறியே! இவ இன்னைக்கு மட்டுமா பார்க்கலை! ரெண்டு மாசமா அவர் அங்கே இருப்பதே தெரியாமல் இருந்தவள் தானே!” என்றான். 

பவித்ரா அவனை முறைக்க, விஜய் எப்பொழுதும் போல் அதை கண்டுக் கொள்ளவில்லை.

‘எங்கே போயிருப்பான்!’ என்ற கேள்வி திவ்யா மனதை அரித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

 

திய உணவு இடைவேளையில் விஜயின் கண்ணசைவில் பவித்ரா, “திவி இன்னைக்கு என் வீட்டுக்கு வரியா? வீக்-எண்டு அங்கேயே இருக்கலாம்.. இன்னும் ரெண்டு வாரத்தில் வர கேம்பஸ் இண்டர்வியுவிற்கு சேர்ந்து ப்ரிபர் பண்ணலாம்” என்று முடித்தவள் மனதினுள் ‘அப்பா.. ஒழுங்கா பேசிட்டேன்’ என்று நினைத்தாள். 

“சுண்டைக்கா இன்னைக்கு தான் உருப்படியான ஒரு ஐடியா சொல்லி இருக்க..” என்ற விஜய் திவ்யாவிடம் உற்சாகத்துடன், “நானும் வரேன் திவி.. சேர்ந்து ப்ரிபர் பண்ணலாம்” என்றான்.

திவ்யா யோசிக்கவும், விஜய், “என்ன யோசிக்கிற திவி! சேர்மன் சார் பார்த்துப்பார்.. வார்டனிடம் பேசிப்பார்.. ஹரி சார் கூட இல்லையே! அப்புறம் என்ன?” 

திவ்யா முறைக்கவும், “என்ன முறைப்பு! ஹரி சார் இருந்தா வர மாட்ட தானே!” என்றான். 

“அப்படி நான் சொன்னேனா?” என்று திவ்யா வினவ,

“அப்போ இப்போ அவர் இல்லைன்னு தான் யோசிக்கிறியா?” என்றான். 

திவ்யா மீண்டும் முறைக்கவும், விஜய், “இப்பலாம் இந்த சுண்டைக்காயை விட நீ தான் அதிகமா முறைக்கிற” 

பவித்ரா, “டேய் நீ அடங்கவே மாட்டியா?” 

“யா” என்று விஜய் பெருமையுடன் கூற, பவித்ரா துப்புவது போல் செய்கை செய்ய, விஜய் தனது தோளை தூசி தட்டுவது போல் தட்டினான்.

திவ்யா புன்னகையுடன், “சரி நான் வரேன்” என்றாள்.

விஜய் உற்சாகத்துடன், “ஹே!!! ஒன்னா ப்ரிபர் பண்றோம்! ஒன்னா ஒரே கம்பெனியில் செலக்ட் ஆகுறோம்” என்று கூறி கையை நீட்ட, திவ்யா புன்னகையுடன் அவன் கை மீது கையை வைத்தாள்.

மனதினுள் ‘இந்த வீர வசனம் இப்போ ரொம்ப தேவை! உண்மை தெரிந்தால் இவ என்ன செய்வாளோ’ என்று புலம்பிய பவித்ரா வெளியே உதட்டை இழுத்து சிரித்தேன் என்று காட்டி கையை திவ்யா கை மேல் வைத்தாள்.

 

 

மாலை திவ்யா பவித்ராவின் வண்டியை எடுக்க சென்றிருக்க, அவளுக்கு முன் தனது வண்டியை எடுத்து வந்திருந்த விஜயிடம் பவித்ரா, “எனக்கு ரொம்ப பயமா இருக்குதுடா” என்றாள்.

விஜய், “இன்னும் கொஞ்ச நேரம் தான்.. காரியத்தை கெடுத்திறாத” 

“என் நெஞ்சு எப்படி வேகமா அடிச்சுக்குது தெரியுமா?” 

திவ்யா அவர்களை நெருங்கவும், “முகத்தை சாதாரணமா வை.. திவி வந்துட்டா” என்றான்.

ஒருவழியாக மூவரும் பவித்ரா விட்டிற்கு வந்தனர். பவித்ரா திவ்யாவின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து பயத்தை மறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவர்கள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் பவித்ராவின் அன்னை, “பவி.. நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.. அப்பா வர கொஞ்சம் லேட் ஆகும் சொன்னாங்க..” என்றுவிட்டு கிளம்பிச் சென்றார்.

வீட்டின் கூடத்தில் மூவரும் அமர்ந்திருந்தனர்.

திவ்யா, “ஆரம்பிக்கலாமா?” 

விஜய், “அதுக்குள்ளயா?” 

“இவ்வளவு நேரம் ரிலாக்ஸ் பண்ணது போதாதா?” 

“இன்னும் கொஞ்ச நேரம் கழித்து ஆரம்பிக்கலாமே” 

“நான் ஆரம்பிக்கப் போறேன்.. நீ வேணா கொஞ்ச நேரம் கழித்து வா” என்றவள் சில புத்தகங்களை எடுத்து வைத்தாள்.

அப்பொழுது பவித்ரா எழுந்து நிற்கவும், நிமிர்ந்து பார்த்த திவ்யா அங்கே ஹரீஷை பார்த்ததும் ஒரு நொடி மனதினுள் ‘இங்கே தான் இருக்கிறானா!’ என்று நிம்மதி கொண்டாலும், அடுத்த நொடியே தோழியின் முகத்தை ஆராய்ந்தாள்.

அப்பொழுது அவளும் திவ்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பவித்ரா முகத்தில் தெரிந்த கலவரத்தில் இருந்தே அவர்கள் ஒன்று சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை புரிந்துக் கொண்டவள் அமைதியாக ஹரீஷைப் பார்த்தாள்.

அவளது அமைதி எரிமலை சீற்றத்திற்கு முன் இருக்கும் அமைதி என்பதை உணர்ந்த ஹரீஷ், “அஞ்சு நிமிஷம் உன்னுடன் தனியா பேசணும்” என்றான்.

திவ்யா நன்றாக சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்ததின் மூலம் ‘நீ பேசுவதை கேட்க நான் தயார்’ என்பதை சொல்லாமல் சொன்னாள்.

ஹரீஷ், “நாம ரூமுக்கு போய் பேசலாம்” என்றான்.

அசையாமல் அமர்ந்திருந்த திவ்யாவின் பார்வையில் மட்டும் மாற்றம் இருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த சித்திரத்தில் பார்வையை பதித்து இருந்தாள்.

ஹரீஷ் பவித்ரா மற்றும் விஜயை நோக்கி, “நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்றான்.

பவித்ரா தயக்கத்துடன் திவ்யாவை பார்த்தாள். விஜயும் திவ்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் பார்ப்பது தெரிந்தும் திவ்யா தனது பார்வையை சிறிதும் அவர்கள் பக்கம் திருப்பவில்லை.

ஹரீஷ், “திவ்யா ஒண்ணும் சொல்ல மாட்டா.. கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்று பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு கூறினான்.

பவித்ரா, “அவ ஒண்ணும் சொல்லாதது தான் எனக்கு பயமா இருக்குது” என்றாள்.

விஜய்க்கும் அதே எண்ணம் தான் என்றாலும் தோழியின் நலனை கருதி, “திவி புரிஞ்சுப்பா வா” என்றபடி பவித்ராவை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

நீண்ட சோபாவில் திவ்யா அருகே ஹரீஷ் அமர்ந்ததும், விருட்டென்று எழுந்து அருகில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தாள்.

சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்ட ஹரீஷ், “தியா என் கண்ணை பார்த்து நீ என்னை காதலிக்கலை.. நான் உனக்கு வேண்டாம்னு சொல்லு, நான் உன் கண் காணாத இடத்திற்கு போய்டுறேன் ஆனா ஒன்றை நல்லா புரிஞ்சுக்கோ.. உன்னை விட்டு விலகி போனால் நான் பிணம் போல தான்…………….” 

அவள் சட்டென்று திரும்பி கடுமையாக முறைக்கவும்,

அவன், “நான் பேசுறது வசனம் மாதிரி இருக்கலாம், ஆனா அது தான் உண்மை.. உன்னைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் நான் என் காதலை சொல்லாதது தானே உன் சஞ்சலத்துக்கு காரணம்.. நீ என் மேல் கொண்ட காதல் மேல் சத்தியமா சொல்றேன்டி.. என்ன பார்க்கிற! நீ தான் என் காதல் பொய்னு நினைக்கிறியே!” என்று வலியுடன் கூறியவன்,

“அதான் உண்மையான உன் காதல் மேல் சத்தியமா சொல்றேன்.. உன் பிறந்த நாள் பரிசா நான் என் காதலை சொல்லணும் நினைத்தேன்.. அன்னைக்கு மட்டும் தங்ககுமார் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா, காலையிலேயே உனக்காக நான் ஆசையா வாங்கின புடவையை கொடுத்து என் காதலை சொல்லி இருப்பேன்” என்றவன் சிறு இடைவெளி விட்டான்.

அவளது விழிகள் தனி ஒளி பெற, அவனது வார்த்தைகள் அளித்த தித்திப்பு அவளது உயிர் நாடி வரை சென்றடைய ஜீவனில் புது உயிர் பிறந்தது போல் உணர்ந்தாள். இருந்தும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தவள் ஜாக்கிரதையாக பார்வையை மீண்டும் சித்திரத்தில் பதித்திருந்தாள்.

அவன், “உன் பிறந்த நாளை நீ கருப்பு நாள்னு சொல்லி அழுதுட்டு போனதும் நான் எப்படி துடித்தேன்னு எனக்கு மட்டும் தான்டி தெரியும்.. எப்போடா அந்த கிளாஸ் முடியும்னு நேரத்தை நகர்த்தி உன்னை தேடி காலேஜ் முழுவதும் கிட்டத்திட்ட பயித்தியக்காரனை போல் அலைந்தேன்..

உனக்கு ஆறுதல் சொல்ல முடியாம, நீ எங்க இருக்கனு கூட தெரியாம இருந்தது நரகம்டி..

வேறு வழியே இல்லாம தான் உன்னைப் பற்றி கேட்க சேர்மன் சாரை பார்க்க போனேன்.. நமக்குள் இருந்த ஸ்டேடஸ் வித்யாசமும் சேர்மன் சார் உன் ரிலேடிவ் என்பதும் தான் நான் என் மனதை மறைத்ததிற்கு காரணம்..

உன் காதல் என் காதலை வெளி கொண்டு வந்தது, இருந்தும் சேர்மன் சாரை நினைத்து சிறு தயக்கம் இருந்தது தான் ஆனா அது கூட உன் கண்ணீரை கண்டதும் காணாம போச்சு.. அப்போ என் கண்ணுக்கு தெரிந்தது, மனதில் மூளையில்னு மொத்தமா நிறைந்து இருந்தது நீ.. நீ மட்டும் தான்..

நீயே சொன்னது போல் என் கோபம் உன்னிடம் சூரியனை கண்ட பனித்துளியை போல் காணாம போய்டுது.. உன்னை பற்றி தெரிந்துக்க தான் சேர்மன் சாரிடம் அவர் நிம்மதி தான் முக்கியம்னு சொன்னேன்.. ஆனா அதை அவர் கூட நம்பலை..” என்றான்.

அவனது அன்றைய மனநிலையை நினைத்து அவள் உள்ளம் பதறினாலும் கஷ்டப்பட்டு பார்வையை அவனிடம் திருப்பாமல் அமர்ந்திருந்தாள்.

அவன், “உனக்காவது பதினைந்தாவது வயதில் தான் நீ தத்தெடுக்கப் பட்டவள்னு தெரியும்.. எனக்கு பிறந்ததில் இருந்தே எனக்கு யாரும் இல்லைனு தெரியும்..

உன் பிறப்பை நினைத்து நீ கலங்குவது எனக்கு தெரியும்.. என்னை நினைத்து பார்.. உனக்காவது உன் பிறப்பை பற்றியும் தெரியும், உன் பெற்றோர் யாருனும் தெரியும்.. ஆனா எனக்கு! என் பிறப்பைப் பற்றியும் தெரியாது, என் பெற்றோர் யாருனும் தெரியாது.. பிறந்த அன்றே ஆசிரமத்தில் சேர்க்கப் பட்ட என் பிறப்பு புனிதமானதவா இருக்கும்” என்று அவன் உணர்ச்சியற்ற குரலில் கூற, அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

அவன் வேதனையை கண்டு அவள் மனம் துடித்தது. அவனை மடி சாய்த்து தலை கோதிவிட அவள் உள்ளம் துடித்தது.

அவளது மனதை அவள் விழி வழியாக புரிந்துக் கொண்டவன் மறுப்பாக தலையை அசைத்து, “நிச்சயம் உன் மடியில் படுத்து யாரிடமும் திறக்காத என் மனதை திறந்து என் வேதனைகளை உன்னிடம் கொட்டுவேன் ஆனா அது இப்போ இல்லை.. இதை சொன்னது உன்னை என் பக்கம் இழுக்க இல்லை.. உன் பிறப்பை நினைத்து நீ கலங்கக் கூடாதுனு தான் சொன்னேன்” என்றான். 

அவள் மீண்டும் பார்வையை திருப்பி, மனதை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அவன், “அந்த ஆள் செய்த தப்பிற்கு நீ ஏன் சிலுவையை சுமக்கனும்! அதுவும் வெளியே தெரியாத உண்மையை நினைத்து ஏன் கலங்குற! எப்பொழுதும் போல் நிமிர்ந்து நில்.. என் உயிர் மூச்சு இருக்கும் வரை உனக்கு துணையாக நான் இருப்பேன்..” என்றவன் ஆழ்ந்த குரலில், “தியா” என்று அழைத்தான்.

மனதை அடக்க முடியாமல் அவள் அவன் கண்களை நோக்கினாள்.

அவன், “இப்போ கூட என்னை விட்டு நீ விலகி இருந்தாலும் நான் உன்னை விட்டு விலகினா உன்னால் அதை தாங்கிக்க முடியாதுனு எனக்கு தெரியும்.. நீயே என்னை விட்டாலும் நான் விலக மாட்டேன்..” என்று உறுதியுடன் கூறியவன், “என்னடா இப்படி சொல்றவன் ஆரம்பிக்கும் போது போறேன்னு சொன்னானேனு நினைக்கிறியா!” என்று வினவினான்.

பிறகு மென்னகையுடன், “என் தியா பற்றி எனக்கு தெரியும்.. என்னை போல் இல்லை.. என்ன தான் வெளியே ரௌடி பேபியா தெரிந்தாலும், என் செல்லமா ரொம்ப மென்மையானவ.. பொய்யாக கூட என்னை காதலிக்கலை என்றோ என்னை வேண்டாம் என்றோ சொல்ல மாட்டா” என்று கூறி கண் சிமிட்டினான்.

அவள் முறைக்கவும், அவன் உதட்டோர புன்னகையுடன் புருவம் உயர்த்தி பார்த்தான்.

திவ்யா மனதினுள், ‘மயக்க பார்க்கிறான்.. ஸ்டெடி திவ்யா ஸ்டெடி’ என்று சொல்லிக் கொண்டு பார்வையைத் திருப்பினாள்.

அதை புரிந்துக் கொண்டது போல் வாய் விட்டு சிரித்தான். அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவள் கண்கள் அவனது சிரிப்பை ரசித்து படம் பிடித்து மனதிற்கு அனுப்பியது.

அவன் சிரிப்பை நிறுத்தி மென்னகையுடன் மீண்டும் புருவம் உயர்த்த, அவள் உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இருக்கையை விட்டு எழுந்தவன், நான் என் தரப்பை சொல்லிட்டேன்.. நல்லா யோசிடா.. நான் காத்திருப்பேன்.. இப்போ நான் கிளம்புறேன்” என்றான்.

அவள் மனதை அடக்கியபடி அமைதியாக இருக்கவும்,

அவன், “உனக்கே தெரியும் எனக்கு பொறுமை கம்மினு.. ஸோ ரொம்ப காக்க வைக்காத” என்றான்.

அவள் அவனை பொய்யாக முறைக்கவும், அவன் மென்னகையுடன் கண்சிமிட்டினான்.

இப்பொழுது அவள் நிஜமாகவே முறைக்கவும், அவன், “அப்பறம் பேபி.. உன் பிரெண்ட்ஸ் உனக்காகத் தான் இப்படி பண்ணாங்க……………….” என்று கூற ஆரம்பிக்க, 

அவள் கோபத்துடன் கையை வெளியே போகுமாறு நீட்டி பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

“தியா பேபி ரௌடி பேபியா மாறிட்டா.. ஓடிரு ரிஷி” என்று அவளுக்கு கேட்கும்படி முணுமுணுத்தவன், சத்தமின்றி அவள் அருகே வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ டி என் செல்ல ரௌடி பேபி” என்றுவிட்டு வெளியே ஓடினான்.

இணைய காத்திருப்போம்….

Advertisement