Advertisement

விலகல் 27

அடுத்த நாள் மாலையில் ஹரீஷ் அரவிந்துடன் வண்டி நிறுத்துமிடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது அவர்கள் முன் இடுப்பில் கைவைத்தபடி முறைப்புடன் ஜனனி வந்து நின்றாள்.

ஹரீஷ் ‘யாரிது!’ என்ற யோசனையுடன் பார்க்க,

அவளோ ஹரீஷை முறைத்தபடியே, “அரவிந்த் சார் நீங்க கிளம்புங்க” என்றாள்.

அருகில் இருந்த மரத்தின் அருகே திவ்யாவும் பவித்ராவும் நின்றுக் கொண்டிருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை.

‘என் பெயர் இவங்களுக்கு எப்படி தெரியும்!’ என்று மனதினுள் யோசித்த அரவிந்த் ‘ஒருவேளை ஹரி நண்பன்னு என் பெயரை தெரிந்து வச்சிருக்காங்களோ!’ என்று கூறிக் கொண்டு கிளம்பினான்.

ஹரீஷும் அவனுடன் கிளம்ப பார்த்தான்.

ஜனனி, “ஹலோ பாஸ் எங்க போறீங்க! நான் உங்களிடம் பேச தான் வந்தேன்” என்றாள். 

ஹரீஷோ அவளை அலட்சியமாக பார்த்து முறைத்துவிட்டு கிளம்ப,

ஜனனி நக்கல் குரலில், “பார் டா! திவ்யா தவிர வேற பொண்ணுடன் சார் நின்னு பேச மாட்டார் போல!” என்றதும் அவனது நடை நின்றது.

திரும்பியவன் இப்பொழுதும் பேசவில்லை ஆனால் அவனது கண்கள் அவளை ஆராய்ச்சியுடன் நோக்கியது.

மனதினுள், ‘என்ன ஒரு லேசர் பார்வை! நம்ம ராஜுப்பா(ராஜாராம்) கூட தோற்றுவிடுவார் போல! அக்கா எப்படி இவரை சமாளித்து தண்ணி காட்டுறா!’ என்று நினைத்த ஜனனி வெளியே கெத்தாகவே பார்த்தாள்.

அவன், “யார் நீ? உனக்கு எப்படி திவ்யாவை தெரியும்?” என்று கேட்டான். 

“யாருன்னு தெரிந்தா தான் பேசுவீங்களா?” என்றவள் கோபக் குரலில், “தெரியாமல் தான் கேட்கிறேன், உங்களுக்கு என்ன பெரிய ஹீரோனு நினைப்பா?” என்றாள். 

ஹரீஷும் கோபத்துடன், “ஏய் என் நினைப்பை பற்றி உனக்கென்ன! தேவை இல்லாததை பேசாத.. நீ யாருனு சொல்லு” என்றான்.

“உங்க மேல் செம்ம கோபத்தில் இருக்கிறேன்.. ஏதோ அக்காவுக்கு உங்களை பிடித்ததால் பொறுத்துப் போறேன்” 

அவன் புருவம் உயர்த்தி பார்க்கவும், அவள், “என்ன?” என்று சிடுசிடுத்தாள்.

“யாரு உன் அக்கா?” 

பெருமையுடன், “திவ்யா” என்றவள் பின் கோபத்துடன் முறைத்தாள்.

ஜனனியின் முகத்தில் தோன்றிய பெருமையையும் கோபத்தையும் பார்த்த திவ்யா கனிவுடனும் ரசனையுடனும் தங்கையைப் பார்த்தாள்.

ஹரீஷ் கோபம் விலகிட சிறு புன்னகையுடன், “நீங்க ஜனனி யா?” என்றான். 

“ஒருமையிலேயே பேசலாம்” என்று முறைப்புடனே கூறினாள்.

அவன் மென்னகையுடன், “என் மேல் என்ன கோபம்?” 

“என் அக்கா எவ்ளோ ஸ்டராங் பெர்சன் தெரியுமா? அவளோட இடத்தில் நான் இருந்து இருந்தால் என்னவாகி இருப்பேனோ! ஆனா அவ எவ்ளோ ஸ்டராங் மைன்டட்டா பிரச்சனைகளை பேஸ் பண்ணி கம்பீரமா நிமிர்ந்து நிற்கிறாள்! அவளை போய் அழ வச்சிட்டீங்களே! அவ அழுது நான் பார்த்ததே இல்லை.. ஐ ஹேட் யூ” 

பவித்ரா பிரம்மிப்புடன் ஜனனியை பார்க்க, திவ்யா நெகிழ்ச்சியுடன் பார்த்தாள்.

ஜனனி பேசப் பேச பெருமையுடனும் காதலுடனும் தன்னவளை நினைத்தபடி கேட்டுக் கொண்டிருந்த ஹரீஷின் முகம் அவள் அழுதாள் என்றதும் சுருங்கியது.

அவன் சிறு பதற்றத்துடன், “என்ன சொல்றீங்க?” என்றான். 

“என்னை ஒருமையில் பேச சொன்னேன்” 

“இப்போ அது ரொம்ப முக்கியம்!” என்று சிறு எரிச்சலுடன் கூறியவன், “திவ்யா எப்போ எதுக்கு அழுதா?” என்று கேட்டான். 

“உங்களை யாரு இங்கே வந்து சேரச் சொன்னது? அக்கா பிரச்சனைகளின் நடுவே இருந்தாலும் சின்ன நிம்மதியுடன் சந்தோஷமா தான் இருந்தா..

நீங்க இங்கே வந்து, அவள் மனதை கலைத்து, அவ லவ்வை சொன்னதும் ஏத்துக்காம சுத்த விட்டுருக்கீங்க.. நீங்க என்ன பெரிய பருப்பா! என் அக்காவின் அன்பு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. அவ அன்போட வேல்யுவும் அருமையும் உங்களுக்கு தெரியலை………………..” 

ஹரீஷின் முகத்தில் தோன்றிய வேதனையை பொறுக்க முடியாமல் அவர்கள் முன் வந்த திவ்யா, “இங்கே என்ன பண்ற? என்னைப் பார்க்க தானே வந்த! இவருடன் என்ன பேச்சு?” என்றாள்.

திவ்யா உரிமையுடன் பேசியதும் பிரகாசித்த ஜனனியின் முகம் அடுத்த நொடியே முறைப்புடன் ஹரீஷ் பக்கம் திரும்பியது.

ஜனனி ஹரீஷிடம், “நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலை ஆனா உங்க முகம் சுருங்கியதை பார்க்க முடியாம வந்து தடுக்கிறா.. இவ அன்பை புரிஞ்சுக்காம…………..” 

ஹரீஷ் சிறு வலியுடன் தன்னவளை பார்த்தபடி, “புரிந்துக் கொண்டதால் தான், இவளுக்கு நான் தகுதியானவன் இல்லைனு நினைத்து முதலில் விலகினேன்.. பிறகு என்னிடம் தான் இவளோட நிம்மதி சந்தோசம் எல்லாம் இருக்குதுனு புரிந்து நான் நெருங்கினா, இவ விலகுறா” என்றவன் திவ்யாவின் முகத்தில் தோன்றிய வேதனையின் சாயலில் தன் குரலை மாற்றி சிறு உற்சாகத்துடன், “ஆனா என் செல்ல ரௌடி பேபியே என்னை விட்டாலும் நான் அவளை விட மாட்டேன்.. அது அவளுக்கும் தெரியும்” என்றான்.

திவ்யாவின் விழிகள் கட்டுப்பாட்டையும் மீறி அவனை நோக்கியது. அவன் கண்ணில் ஒளியுடன் உதட்டோர புன்னகையுடன் புருவம் உயர்த்தினான். 

அவன் குரலில் தெரிந்த காதலிலும், என்னுடன் சேர்ந்து சிரி என்று அழைத்த அவனது விழி மொழியிலும், அவளை எப்பொழுதும் மயக்கும் உதட்டோர புன்னகையிலும், அவன் புருவம் ஏற்றிய விதத்திலும் அவளது மனம் மொத்தமாக அவனிடம் சாயத் துடித்தது.

சில நொடிகளில் சுதாரித்தவள் பார்வையை தாழ்த்தி, “நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு வேகமாக விடுதி நோக்கி சென்றாள்.

அவள் மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பின் ஜனனி பக்கம் திரும்பி, “தேங்க்ஸ்” என்றான் மென்னகையுடன்.

“எதுக்கு? ஐ ஹேட் யூ சொன்னதுக்கா?” 

“கூடிய சீக்கிரம் என் தியா என்னிடம் வந்ததும் நீங்களே மாத்தி சொல்லுவீங்க”

“ஓவர் காண்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ்” 

“ஓவர் காண்பிடன்ஸ் தானே!” 

லேசாக உதட்டை சுழித்த ஜனனி, “என்னை ஒருமையில் பேச சொன்னேன்” என்று நினைவூட்டினாள். 

“இப்போ நீங்க சேர்மன் சார் மகள்.. என் தியாவின் தங்கையா மாறின பிறகு, எனக்கும் குட்டி தங்கை தானே! அப்போ ஒருமையில் பேசுறேன்” 

“ஹலோ நான் ஒண்ணும் குட்டி பொண்ணு இல்லை.. மெடிக்கல் பஸ்ட் இயர் படிக்கிறேன்” 

“இருக்கலாம்.. எங்களுக்கு பாசக்கார குட்டி தங்கையா தானே தெரியிறீங்க” 

கையை தேய்த்தவள், “ஸ்ப்பா முடியலை” என்றாள். பின் வாயடைத்துப் போய் நின்றிருந்த பவித்ராவை உலுக்கி, “பவி கா என்னாச்சு?” என்றாள். 

ஹரீஷை அரை நொடி பார்த்த பவித்ரா பின் பார்வையை தாழ்த்தி ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

ஹரீஷை மேலும் கீழும் பார்த்த ஜனனி சிறு நக்கலுடன், “ரொம்ப ஸீன் போட்டிருப்பீங்க போலவே!” என்றாள். 

“அதை விடுங்க.. திவ்யா எதுக்கு அழுதா?” 

அதை கேட்டதும் ஜனனி கோபத்துடன் பொறியத் தொடங்கினாள்.

“உங்க லவ்வை முதல்லையே சொல்லி தொலைக்கிறதுக்கு என்ன! எதுக்கும் கலங்காதவ உங்களை விலக்கவும் முடியாம, நெருங்கவும் முடியாம தவிக்கிறா.. உங்க அன்பை புரிந்து கொண்டாலும், கொஞ்சமே கொஞ்சம் அப்பாவுக்காக தான் உங்கள் விருப்பத்தை சொன்னீங்களோனு நினைத்து தவிக்கிறா.. அது மட்டுமில்லை பெர்சனல்லாவே எனக்கு உங்க மேல் கோபம் தான்..” என்றவள் அவனது பார்வையை பார்த்து, “என்ன பார்க்கிறீங்க!” என்று மிரட்டினாள்.

பிறகு, “எங்களை கிட்ட திட்ட ஏத்துக்கிற மனநிலைக்கு வந்துட்டா.. ஆனா நீங்க சொதப்பி வச்சதில் திரும்ப ஆரம்ப கட்டத்துக்கே வந்து நிற்கிறா.. அம்மாவை இன்னும் ஏத்துக்கலை என்றாலும் என்னையும் அப்பாவையும் இப்ப விலக்கி வச்சிருக்கிறதுக்கு காரணம் நீங்க தான்.. எங்கே எங்களை ஏத்துகிட்டா நீங்க விலகிடுவீங்களோனு பயப்படுறானு நினைக்கிறேன்” 

“என்ன சொல்றீங்க?” 

“அப்பா கிட்ட ‘இதற்கு மேல் என்னால் முடியலை.. இன்னொரு அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லை.. நான் மொத்தமா விலகி போய்டுறேன்’ னு சொல்லி கண் கலங்கி இருக்கா..

இன்னொரு அதிர்ச்சினு அவ சொன்னதுக்கு நான் சொன்னது தான் அர்த்தம்.. ஒருவேளை அப்பாவுக்காக நீங்க அவளை நெருங்கி, அவ அப்பாவுடன் சேர்ந்ததும், அவளை விட்டு விலகிடுவீங்களோனு யோசிக்கிறா” 

சில நொடிகள் மௌனத்தில் கழிய ஜனனி, “எப்பொழுதும் தெளிவா யோசிக்கிறவ உங்க விஷயத்தில் மட்டும் ஏனோ குழப்பிக்கிறா” என்றாள்.

ஹரீஷ் பவித்ராவிடம், “நாளைக்கு அவளை உன் வீட்டிற்கு கூட்டிட்டு வா.. நான் நாளைக்கு காலேஜ் வர மாட்டேன்.. நான் ஊருக்கு போய் இருக்கிறதா விஜய் அவளிடம் சொல்லுவான்.. அரவிந்த் மூலமா தெரிந்ததா சொல்லுவான்.. நாளைக்கு கண்டிப்பா அவளுடன் நான் பேசணும்” என்றான். 

பவித்ரா மானசீகமாக நெஞ்சில் கை வைத்து திகிலுடன் அவனைப் பார்க்க,

அவன், “பயப்படாத.. உங்க அப்பாவிடம் சேர்மன் சார் பேசுவார்” என்றான். 

ஜனனி, “நல்ல திட்டம் போடுறீங்க.. ஆக, யாம் பெற்ற துன்பம் பெருக வையகமும்னு, அக்கா கிட்ட எல்லோரையும் மாட்டி விடுறீங்க..” என்றாள். 

ஹரீஷ் முறைப்புடன், “இவளே பயந்து போய் இருக்கா.. நீங்க வேற ஏத்தி விடாதீங்க” என்றான். 

“உண்மையை தானே சொல்றேன்.. நாளைக்கு நீங்க அக்கா மனசை கரைக்கலை…………” 

“அதை நாளைக்கு பார்த்துக்கலாம்” 

“இவ்ளோ தானா உங்க காண்பிடன்ஸ்?” 

“காண்பிடன்ஸ் வேறு, உண்மை நிலவரத்தை புரிந்து கொள்வது வேறு.. இப்பவும் என் தியா மனசை மாத்துவேன்னு எனக்கு காண்பிடன்ஸ் இருக்குது ஆனா அது நாளைக்கே நடக்கும்னு உறுதியா சொல்ல முடியாது..

ஆனா நிச்சயம் கூடிய சீக்கிரம் நடக்கும்.. நாளைக்கே அவ மனசு மாறுதோ இல்லையோ, நிச்சயம் அவளை என் பக்கம் யோசிக்க வைப்பேன்” என்று உறுதியுடன் கூறியவன் பின் பவித்ராவிடம், “உன் பிரெண்ட் நல்லா இருக்கணும்னு நினைத்தால் இதை செய்” என்றான்.

பவித்ரா, “சரி சார்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

அதன் பிறகு மூவரும் கிளம்பினர்.

 

 

ஜனனி நடந்தவற்றை ராஜாராமிடம் கூறியதும், அவர் மென்னகையுடன், “நல்லதே நினைப்போம்” என்றார்.

“உங்களுக்கு அவர் மேல் கோபம் வரலையா ப்பா?” 

“அவர் நிலையில் இருந்து யோசித்து பார்க்கணும் டா” 

“அப்படி என்ன அவர் நிலைமை?” 

“அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்.. திவிமா கோடீஸ்வரி.. ஸ்டேடஸ் முதல் விஷயம்.. அப்பறம் இரண்டாவது நான்” 

“நீங்களா?” 

“முதல் நாளே என்னிடம் நன்றிக் கடன் பட்டதா சொன்னார்.. எனக்கும் திவிமாவிற்கும் என்ன உறவுனு தெரியலை என்றாலும் அவரால் நம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து என் நிம்மதி கெட்டிரக் கூடாதுன்னு யோசித்து இருப்பார்..

அப்புறம் திவிமா சந்தோசம் தான் முக்கியம்னு அவர் வெளியே வந்த போது, திவிமா அவரை தப்பா புரிஞ்சிட்டு விலகி நிற்கிறா.. அவரும் பாவம் தான்டா” 

“ஆனாலும் மாம்ஸ் இவ்ளோ நல்லவரா இருக்கக் கூடாது” 

“ஹ்ம்ம்.. கொஞ்சம் கோபக்காரர் என்றாலும் ரொம்ப நல்லவர்.. உன் அக்காவை சந்தோஷமா வச்சுப்பார்” 

“ஹ்ம்ம்.. அக்காவை பார்த்ததும் அவர் கண்ணில் தனி ஒளி வந்தது.. அக்காவை தவிர வேறு எந்த பெண்ணையும் நெருங்க விட மாட்டார் போல.. முதலில் நான் யாருனு தெரிவதற்கு முன்னாடி அவர் நின்ற பாவனையே ‘எட்டி நில் எச்சரிக்கிறேன்’ னு தான் இருந்தது” 

“ஹ்ம்ம்.. சரி தான்.. நான் விசாரித்ததில் அப்படி தான் கேள்விப் பட்டேன்” 

“நான் மாம்ஸ் கிட்ட பேசியதை சொன்னப்ப அம்மா இங்கே இருந்திருந்தால் என் வாயிலேயே அடி போட்டாலும் போட்டிருப்பாங்க” 

“அம்மா உன்னை அடிப்பாள்!” 

“அது.. ஆனா கண்டிப்பா திட்டுவாங்க தானே!” 

“வீட்டு மாப்பிள்ளையை இப்படி பேசினால் கொஞ்சுவாங்களா?” 

“அப்போ நீங்க ஏன் திட்டலை?” என்று தலை சரித்து கேட்டாள்.

“நீ பேசிய விஷயம் சரி ஆனால் பேசிய விதம் சரியில்லை.. இருந்தாலும் அவரே உன்னை குட்டி தங்கைனு சொன்ன பிறகு நான் உங்களுக்கு நடுவில் வர விரும்பலை” 

“ஆனாலும் மாம்ஸ் என்னை குட்டி பொண்ணுனு சொல்லிட்டார் ப்பா” என்று சிணுங்கினாள்.

அவர் புன்னகையுடன், “எப்பவுமே எனக்கு நீ குட்டி தேவதை தானேடா.. அது போல் சொல்லி இருப்பார்” என்றார். 

அதன் பிறகு இருவரும் கிளம்பினர்.

Advertisement