Advertisement

அரவிந்த் அழைப்பை எடுத்து, “சொல்லு நந்து” 

“நீ காலேஜ்ஜில் இருந்து கிளம்பிட்டியா?” 

“இல்லை.. லேபில் இருக்கிறேன்.. சின்ன வேலை.. ஏன் கேட்கிற?” 

“ஹரி இப்போ தான் பேசினான்.. மனசு சரி இல்லை வண்டி ஓட்ட முடியாது நீ வந்து கூட்டிட்டு போறியானு கேட்டான்” 

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவன் போறதை பார்த்தேனே! நல்லா தானே இருந்தான்! சரி நான் போய் பார்க்கிறேன்” 

“நான் பேசியதா காட்டிக்காதே.. நான் அரை மணி நேரத்தில் அங்கே வரேன்” 

“நானே அவனை கூட்டிட்டு வரேன்” 

“இல்லை நான் கிளம்புறேன்.. அவனே கிளம்பினாலோ உன்னுடன் வந்தாலோ எனக்கு போன் பண்ணு” 

“சரி..” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் செய்த வேலையை சேமித்துவிட்டு கணினியை அனைத்து ஆசிரியர் அறை நோக்கி சென்றான்.

 

ஆசிரியர் அறைக்கு சென்ற அரவிந்த், “நீ இன்னும் கிளம்பலையா?” என்றான் அறியாதவன் போல்.

கைபேசியில் இருந்த திவ்யாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷ் சட்டென்று அதை அனைத்து, “ஹன்.. என்ன கேட்ட?” என்று கேட்டான். 

“கிளம்பலையானு கேட்டேன்” 

“நீ இன்னும் கிளம்பலையா?” 

“என் பேக் இங்கே தானே இருக்குது! பார்க்கலையா?” 

“ஓ! நான் கவனிக்கலை” 

“ஹரி என்னாச்சு?” 

“ஏன்?” 

“நீ கவனிக்காமல் இருக்கும் அளவுக்கு என்ன நடந்தது? திவ்யா எதுவும் சொன்னாளா?” 

“..” 

“ஹரி” 

“..” 

“யார் கிட்டயாவது மனசு விட்டு பேசுடா.. என்ன தான் உன் பிரச்சனை? நீ சொன்னால் தானே தெரியும்” 

“என்னால் அவளை நெருங்கவும் முடியலை விலகவும் முடியலை” 

“ஏன் விலகனும்?” 

“ச்ச்” 

“நீயா போட்டு குழப்பிக்கிறடா..” 

“..” 

“சரி இப்படி யோசித்துப் பார்.. நீ ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இருக்கிற.. அதை போல் திவ்யாவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இருக்கிறா.. ரெண்டு பேரும் விரும்புறீங்க..

அப்போ மட்டும் பிரச்சனை வராதா? உங்க ரெண்டு பேர் பரென்ட்ஸ் காதலை சந்தோஷமா ஏத்துப்பாங்கனு உன்னால் நூறு சதவிதம் உறுதியா சொல்ல முடியுமா?

காதல் என்றால் எதிர்ப்புகள் வருவது சகஜம் தான் ஆனால் காதலுக்கு காதலனே எதிரா இருப்பது உன் விஷயத்தில் தான்டா” 

“..” 

“இப்போ என்ன திடீர்னு இவ்ளோ அப்சட்?” 

ஹரீஷ் நடந்ததை சுருக்கமாக கூறவும், அரவிந்த் சிறு கோபத்துடன், “உள்ளுக்குள் உருகி உருகி லவ் பண்ணிட்டு வெளியே ஏன்டா அந்த பெண்ணை படுத்தி உன்னையும் வருத்திக்கிற?” 

ஹரீஷ் கண்ணில் வலியுடன் பார்க்கவும்,

அரவிந்த், “இந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.. எல்லாம் நீயா இழுத்து விட்டுக்கிறது தான்.. முதலில் உன் லவ்வை சொல்லு.. அப்புறம் அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சி அவளுக்கு துணையா நில்லு.. அப்புறம் எல்லாம் சரியாகும்” என்று கூறிய அறிவுரையை ஒழுங்காக கேட்டு அப்படியே அச்சு பிசங்காமல் செய்து இருந்தால், பின்னாளில் அவன் வருந்தும்படி நேர்ந்திருக்காது.

ஹரீஷ் அமைதியாக இருக்கவும், அரவிந்த், “என்னடா?” 

“கொஞ்சம் யோசிக்கணும்” 

அரவிந்த் முறைக்கவும்,

“ரெண்டு நாள் டைம் கொடுடா” என்றான். 

“இவ்ளோ நாள் யோசித்தது போல் இல்லாம உருப்படியா யோசித்து நல்ல பதிலை சொல்லு” 

“எல்லாம் என் நேரம்!” 

“ஏன்?” 

“நீ மிரட்டுறியே!” 

“இப்படியே இருந்த, நந்துவே மிரட்டுவான்” 

ஹரீஷ் மெலிதாக புன்னகைக்கவும், அரவிந்த், “சரி வா கிளம்பலாம்” என்றான்.

“ஹ்ம்ம்” என்று கிளம்பியவன் வண்டியை கிளப்பும் போது தான் நந்தகுமாரின் நினைவு வந்து அவனை அழைத்தான்.

அழைப்பை எடுத்த நந்தகுமார், “இன்னும் பிப்டீன் மினிட்ஸ் தான்டா” என்றான். 

“இல்லைடா.. நானே வந்திருவேன்.. நீ வீட்டுக்கே வந்திரு” 

அரவிந்த் பேசியிருப்பது புரிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வரவழைத்த கோபத்துடன், “என்னை பார்த்தால் எப்படி தெரியுது?” என்றான். 

“அதில் என்னடா சந்தேகம்! நீ ஒரு காமடி பீஸ் தான்” 

“டேய்” 

“சும்மா சொன்னேன்டா மச்சி, சொல்வேன்னு நினைச்சியா!” 

“ரொம்ப தெளிவா தான்டா இருக்கிற.. வீடு வந்து சேரு” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். 

ஹரீஷ் புன்னகையுடன் வண்டியைக் கிளப்பினான்.

அரவிந்தும் புன்னகையுடன் கிளம்பினான்.

 

 

அன்று இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திவ்யாவிற்கு பல முறை அழைத்த ஹரீஷ் அழைப்பு போகும் முன் அழைப்பைத் துண்டித்தான். அவள் எப்படி இருக்கிறாள் என்பதை அறிய துடித்தான் தான் ஆனால் அதே நேரத்தில் தன் மனம் தெளியாத நிலையில் தனது அழைப்பு அவளிற்கு பொய்யான நம்பிக்கையை கொடுத்துவிடக் கூடாதே என்று நினைத்தான்.

ஒரு முறை அழைப்பு சென்றுவிட பதற்றத்துடன் அழைப்பைத் துண்டித்தான்.

அவன் துண்டித்த மறு நொடி அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பு நிற்கும் தருவாயில் எடுத்தவன், “ஹலோ” என்றான்.

“என்ன தெரியாம காள் வந்திருச்சா!!!” என்றவளின் குரலே உன்னை நான் அறிவேன் என்று சொல்லாமல் சொன்னது.

பாடல்களின் உதவியுடன் தன்னை தேற்ற முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தவளின் மனம் ஹரீஷின் ஒற்றை அழைப்பில் சட்டென்று அமைதி கொண்டது. 

“ஆ..மா” 

“ஆனா நான் தெரிந்தே தான் காள் பண்ணேன்” 

“..” 

“என்ன பதிலை காணும்?” 

“என்ன சொல்லணும்?” 

“கெத்துடா! இருந்தாலும் இந்த கெத்து தான் எனக்கு ரொம்ப பிடிச்சும் இருக்குது.. சில நேரம் இம்சையாகவும் இருக்குது” 

அவனது உதட்டோரம் புன்னகை அரும்பியது.

அதை உணர்ந்தது போல் அவள், “உன்னோட இந்த உதட்டோர புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள். 

“..” 

“உடனே ஆப் ஆகிடுவியே” என்றவள், “நான் உனக்கு தேங்க்ஸ் அண்ட் சாரி ரெண்டும் சொல்ல மாட்டேன்” என்றாள். 

அவன் மெல்லிய புன்னகையுடன், “நான் கேட்கலையே!” 

“நீ கேட்டாலும் கிடையாதுனு தான் சொல்றேன்” 

“சரி”

 “என்ன சரி?” 

“நீ சொன்னதிற்கு சரினு சொன்னேன்” 

“ஏன்னு கேட்க மாட்டியா?” 

“கேட்கலைனா சொல்லாமல் விட போறியா!” 

“இல்லை தான்” 

“அதான் கேட்கலை” 

“ரொம்ப தான்.. என்னை ரிலாக்ஸ் பண்ணதுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டேன் ஏன்னா அது உன் கடமை.. அப்புறம் சாரி சொல்ல மாட்டேன்.. ஏன்னா நான் உன்னை திட்டியது தப்பே இல்லை, அதுவும் நான் கொஞ்சமா தான் திட்டினேன்” 

‘பிற்காலத்தில் உன் நிலைமை திண்டாட்டம் தான்டா’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவன் புன்னகைத்தான்.

ஹரீஷ், “சரி நான் வைக்கிறேன்” 

“அதுக்குள்ளேயா!!!” 

“பை.. டேக் கேர்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

இருவரும் ஒருவித நிம்மதியுடன் உறங்கினாலும் அடுத்து வந்த இரண்டு நாட்கள் திவ்யா ஏதோ யோசனையில் அமைதியாவே இருந்தாள்.

பவித்ராவும் விஜயும் மாற்றி மாற்றி காரணம் கேட்டும் திவ்யா அமைதியாக தான் இருந்தாள். ஹரீஷ் வகுப்பில் அவளை கூர்ந்து கவனித்தாலும் எதுவும் கேட்கவில்லை.

பொறுமை இழந்த பவித்ரா அன்று மாலை திவ்யா கிளம்பும் முன், “உன் அப்பா பிரெண்ட் அப்படி என்ன தான் சொன்னார்?” என்று கேட்டாள். 

திவ்யாவின் முறைப்பில், “சாரி சாரி.. அவரை பற்றி என்ன சொன்னார்?” என்று திருத்திக் கேட்டாள். 

“அந்த ஆளை பற்றி பேசாதே.. நான் யோசிக்கிறது வேற” 

“என்ன?” 

“ஜனனி அம்மா மேல் முழுவதும் தப்பு இல்லைனு தெரியுது, இருந்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியலை” 

“புரியுற மாதிரி சொல்லு” 

“தப்பெல்லாம் அந்த ஆள் மேல் தான் இருக்குது.. ஆனா அவங்க ஏன் என்னை அழிக்காமல் அழித்ததா பொய் சொல்லி பெத்துக்கிட்டாங்க? அப்படி பெத்துக்கிட்டவங்க என்னை ஏன் அனாதை ஆசிரமத்தில் விட்டாங்க? பதினைந்து வருஷம் கழித்து ஏன் திடீர்னு வந்து நிற்கிறாங்க?” 

“அவங்களிடம் பேசிப்பாரேன்” 

திவ்யா முறைக்கவும், பவித்ரா, “நீ தானே இப்போ சொன்ன.. தப்பு அவங்க மேல இல்லைனு… அதை போல் மற்றதிற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் தானே!” என்றாள். 

“என்ன பெரிய காரணம் இருக்க போகுது? என்னை அழிக்க அவங்க நினைத்த போது காலம் கடந்து இருக்கலாம்.. வேண்டா வெறுப்பா பெற்று என்னை தூக்கி எறிந்து இருப்பாங்க” என்று வெறுப்புடனும் கோபத்துடன் கூறினாள்.

“அப்படியே இருந்தாலும் பதினைந்து வருஷம் கழித்து ஏன் அவங்களா வரணும்?” 

“என்ன இழவுக்கு வந்தாங்களோ! அப்படி வராமல் இருந்து இருந்தால் இவ்வளவு வேதனையை நான் அடைந்து இருக்க மாட்டேன்” 

“எனக்கு என்னவோ நீ சேர்மன் சாரிடம் பேசினால்………” 

“இதுக்கு தான் நான் உன்னிடம் இதைப் பற்றி பேசலை.. நான் கிளம்புறேன்” என்றவள் பவித்ரா அழைப்பதை பொருட் படுத்தாமல் கிளம்பினாள்.

Advertisement