Advertisement
விலகல் 20
ஹரீஷ் சமையல் அறையில் வேலை செய்துக் கொண்டிருந்த போது,
“கிச்சனில் இருந்துட்டு ரூமில் இருக்கும் எனக்கு போனா! இது உனக்கே ஓவரா தெரியலை” என்றபடி சமையல் அறையினுள் நந்தகுமார் வந்தான்.
“என்னடா சொல்ற?” என்று சிறிது அலறிய ஹரீஷ் நந்தகுமாரின் கையில் இருந்து கைபேசியை பிடுங்கினான்.
நந்தகுமார் ‘இவனுக்கு என்னாச்சு!’ என்று பார்த்துக் கொண்டிருக்க,
ஹரீஷ் அழைப்பை எடுத்து, “ஹே! என் போனை எப்படி அன்-லாக் பண்ண?” என்றான்.
வாய்விட்டு சிரித்த திவ்யா, “என்ன பாஸ்! இப்படி சின்னப் புள்ளத் தனமா கேட்கிறீங்க!” என்றாள்.
“..”
“சொந்தமா பாஸ்வர்ட் ஹக்கிங் மிஷின் செஞ்சு வச்சிருக்கிறேன்.. என்னோட மினி ப்ராஜெக்ட் இது தான்”
“..”
“ஹா.. ஹா.. ஹா.. என்ன பாஸ் சத்தத்தையே காணும்?”
“என்ன சொல்லணும்?”
“எதுவும் சொல்ல வேணாம்.. ஒழுங்கா நாளைக்கு வரும் போது எனக்கு ஒரு புது மொபைல் வாங்கிட்டு வா” என்றவள் பின் காதலுடன், “ரிஷி கண்ணா.. ஐ லவ் யூ” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
சிலையாய் நின்றிருந்த நண்பனை உலுக்கிய நந்தகுமார், “என்னடா நடக்குது? உன் போன் யாரிடம் இருக்கிறது?” என்று கேட்டான்.
“திவ்யா கிட்ட இருக்குது”
“திவ்யா யாரு?”
ஹரீஷ் கொலைவெறியுடன் முறைக்க, ஒரு அடி பின்னால் நகர்ந்த நந்தகுமார், “சத்தியமா அது யாருனு எனக்கு தெரியாதுடா” என்றான்.
“சொர்ணாக்கா” என்று ஹரீஷ் பல்லை கடித்துக் கொண்டு கூற, நந்தகுமார் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஹரீஷ் நண்பனை அடிக்க பொருளை தேட, சமையலறையை விட்டு ஓடிய நந்தகுமார் சிரித்தபடி, “சேதாரம் தொடங்கிருச்சு போல!” என்றபடி தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
மணியை பார்த்த ஹரீஷ் திவ்யாவிற்கு கைபேசி வாங்க வெளியே சென்றான்.
சிறிது நேரம் ஹரீஷ் கைபேசியை நோண்டிய திவ்யா அதிலிருந்து ஹரீஷின் சில புகைப்படங்களை விஜய் கைபேசிக்கு அனுப்பினாள்.
அவளை அழைத்த விஜய், “என்ன மச்சி.. சார் மொபைலை அன்-லாக் பண்ணிட்ட போல!” என்றான்.
“இது என்ன ஜுஜுபி!!”
“அதானே! திவ்யாவா கொக்கா!”
“ஒரு நம்பரில் இருந்து செகண்ட் காள் வருது”
“நீ எந்த போனையும் அட்டென்ட் பண்ணாத”
“இல்லைடா.. இதே நம்பரில் இருந்து கொஞ்ச நேரத்திற்கு முன்னாடியும் ரெண்டு காள் வந்துது”
“இப்போ என்ன பண்ண?”
“நீ லைனில் இரு” என்றவள் அந்த அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றாள்.
“இது ஹரீஷ் சார் நம்பர் தானே?” என்று ஒரு பெண் குரல் சிறு சந்தேகத்துடன் ஒலித்தது.
“ஆமாம்.. நீங்க யாரு?”
“நான் அவர் கூட வேலை பார்க்கிறேன்.. ரமா மேம்னு சொல்லுங்க” என்றதும் திவ்யாவிற்கு கோபம் வந்தது.
அவள் கோபத்தை அடக்கியபடி, “என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“சார் இல்லையா?”
“ஆமாம், வெளியே போயிருக்கார்”
“எப்போ வருவார்?”
திவ்யா பல்லை கடித்துக் கொண்டு, “என்ன விஷயம்னு சொல்லுங்க.. நான் சொல்லிக்கிறேன்”
“நீங்க?”
“நீங்கனா?”
“நீங்க யாரு?”
“ஹ்ம்ம்.. அவர் மனைவி..”
“என்னது!!!”
“எதுக்கு இவ்ளோ ஷாக்?”
“இல்லை.. அது.. வந்து.. சாருக்கு கல்யாணம் ஆனது தெரியாது”
“அதான் இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களே.. என்ன விஷயம்னு சொல்லுங்க?”
“ஹன்.. ஒண்ணுமில்லை”
“அப்போ எதுக்கு போன் பண்ணுனீங்க?”
“அது..”
“அந்த அது தான் என்னன்னு கேட்கிறேன்”
“உங்களிடம் எப்படி சொல்றதுன்னு யோசித்தேன்”
“என்னிடமே என் கணவரிடம் கடலைப் போட போன் பண்ணேன்னு எப்படி சொல்லனு யோசிக்கிறீங்களா?” என்று இவள் பல்லை கடித்துக் கொண்டு வினவ,
“அப்படிலாம் இல்லை மேம்” என்று பதறினார்.
“கோபப்படாம நீ பதறியதில் இருந்தே அது தான் உண்மைனு தெரியுதே!”
திவ்யா அவர் எண்ணத்தை சரியாக கணித்துக் கூறவும், அந்த ஆசிரியருக்கு குளிமி(AC) அறையிலும் வேர்த்தது.
அவர் அவசரமாக, “இல்லை மேம்.. நாளைக்கு தர்ட் ஹவர் தர்ட் CSE சார் போக முடியுமானு கேட்க…….”
“இதை தான் காலேஜில் வைத்தே கேடுட்டீங்களே!”
“அது.. ஆ..மாம்.. ஆனா இப்போ வேணாம்னு சொல்ல தான் போன் பண்ணேன்.. அதை சாரிடம் சொல்லிடுங்க” என்றவர் இவள் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தார்.
அவர் துண்டித்ததும் விஜயின் அழைப்பை தொடர்ந்தாள்.
விஜய், “யாரு திவி?” என்று கேட்டதும்,
“அந்த முண்டக்கண்ணி தான்” என்று கடுப்புடன் கூறினாள்.
“நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற? சார் தான் அவளை கண்டுக்கிறதே இல்லையே”
“அதனால் தான் இன்று அவன் சேதாரம் இல்லாம தப்பித்தான்”
சிரித்த விஜய், “சரி முண்டக்கண்ணி என்ன சொல்றா?” என்று கேட்டான்.
திவ்யா அந்த ஆசிரியையுடன் பேசியதை கூறியதும், புன்னகையுடன், “செம போ” என்ற விஜய், “ஆனா அவ சாரிடம் உங்களுக்கு கல்யாணம் ஆனதை சொல்லலையேனு கேட்டால்?” என்று இழுத்தான்.
“நிச்சயம் கேட்பா”
“திவி!!!”
“இன்னைக்கு என்னிடமே இந்த முண்டக்கண்ணியுடன் பேசுவேன்னு சொன்னான்.. படட்டும்”
விஜய் சிறு புன்னகையுடன், “இருந்தாலும் ஹரி சார் பாவம் தான்” என்றான்.
“இரு நாளைக்கு சுனிதா கிட்ட உன்னை போட்டு கொடுத்து கோர்த்து விடுறேன்”
“நோ திவி.. நோ வயோலென்ஸ்.. மீ ஸ்மால் பாய்.. பாவம்”
அவன் சொன்ன விதத்தில் புன்னகைத்தவள், “பிழைத்து போ” என்றாள்.
“நன்றி மகாராணியாரே!”
“ஹ்ம்ம்” என்று சிரித்தவள், “ஓகே பை விஜி” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
அடுத்த நாள் காலையில் திவ்யா கல்லூரிக்கு சென்றபோது ஆசிரியர் அறையில் ஹரீஷும் அரவிந்தும் மட்டும் இருந்தனர்.
அவள் ஆரிசியர் அறை அருகே வந்ததும், ஹரீஷ் அவளை அழைக்க, அவள் வேண்டுமென்ற காது கேட்காதது போல் சென்றாள்.
ஹரீஷ் சிறு கோபத்துடன், “நீ கூப்பிடு” என்று அரவிந்திடம் கூறினான்.
அரவிந்த் அழைத்ததும், திரும்பி ஆசிரியர் அறைக்கு சென்றாள்.
ஹரீஷ் அவளை முறைக்க, அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் அரவிந்திடம், “எஸ் சார்” என்றாள்.
அரவிந்த் சிறு புன்னகையுடன், “நான் அம்பு தான்.. எய்தவன் அவன்” என்றபடி ஹரீஷ் பக்கம் கையை நீட்டினான்.
“அம்பு எய்யபட்டதின் காரணம் என்னவோ?”
“அதை அங்கே கேளு”
ஹரீஷ் பக்கம் திரும்பியவள் சிறு நக்கல் குரலில் புன்னகையுடன், “என்ன சார் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல!” என்றாள்.
“நான் எப்போ வந்தா உனக்கென்ன?”
“என்னக்கென்னனு சொல்லவா?” என்றவள் அரவிந்தை விழிகளால் சுட்டிக் காட்ட,
ஹரீஷ் புது கைபேசி அடங்கிய டப்பாவை அவள் முன் நீட்டினான்.
அவள் மகிழ்ச்சியுடன், “தன்க் யூ ரிஷி” என்றபடி அதை வாங்கினாள்.
அரவிந்த், “ரிஷி யா!”
அவள் நாக்கை கடித்தபடி ஹரீஷை பார்க்க, அவனோ அவளை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்களில் மன்னிப்பு வேண்ட, அவன் முறைப்பதை விட்டாலும் இறுக்கமான முகத்துடன் கையை நீட்டி, “என் மொபைல்” என்றான்.
அவள் அவனது கைபேசியை பையில் இருந்து எடுத்து கொடுத்தாள். பின் அவன் வாங்கிய கைபேசியை ஆர்வத்துடன் பிரித்து பார்த்து மகிழ்ச்சியுடன், “எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குது.. தேங்க்ஸ்” என்றாள்.
“உன் லெவலுக்கு என்னால் முடியாது.. என்னால் அதிகம் முடிந்தது ஸ்மார்ட் போன் தான்”
அவள் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்து, “நீ பேசிக் மாடல் 1100 வாங்கி தந்திருந்தாலும் நான் இப்படி தான் சந்தோஷப் பட்டிருப்பேன்” என்றாள்.
அவளது குரலிலும் அவள் சொன்ன வார்த்தைகளிலும் ஒரே ஒரு நொடி கட்டுண்டவன் அடுத்த நொடியே சுதாரித்து, “இந்த சினிமா வசனத்தை எல்லாம் விட்டுட்டு போய் படிக்கிற வேலையைப் பார்”
அவள் சிறிதும் முகம் வாடாமல் புன்னகையுடன், “ஓ! அப்போ தான் அரியர் எல்லாம் கிளியர் பண்ண முடியும்.. அப்போ தானே டாப்பரான உன் பக்கத்தில் வர முடியும்!” என்றாள்.
“திவ்யா” என்று அவன் கோபத்துடன் அழைக்க,
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “அரவிந்த் சாருக்கு எல்லாம் தெரியும்னு நீ அவர் முன்னாடி இதை கொடுத்ததில் இருந்தும், நான் உன்னை ஒருமையில் உரிமையுடன் பேசியதை பார்த்து அவர் ஷாக் ஆகாததில் இருந்தும் தெரியுது” என்றாள்.
அரவிந்த் வாய்விட்டு சிரிக்க, ஹரீஷ் அவனை முறைத்தான்.
அரவிந்த் புன்னகையுடன், “அன்னைக்கு நீ சொன்னது நினைவுக்கு வந்தது அதான்” என்றான்.
திவ்யா ஆர்வத்துடன், “என்ன சொன்னார் சார்?” என்று கேட்டாள்.
“என்னையும் உன்னையும் புத்திசாலியான இம்சைகள்னு சொன்னான்”
“ஓ!” என்றவள், “புத்திசாலியான இவருடன் இருப்பவங்க புத்திசாலியா தானே இருப்பாங்க! ஆனா அதில் ஒரு விதிவிலக்கு இருக்கிறது சார்” என்றாள்.
அரவிந்த் புரியாமல் பார்க்க, அவள், “இவருடன் தங்கியிருக்கும் ஒரு ஜந்துவை சொன்னேன்” என்றாள்.
“ஓ” என்று சிறு புன்னகையுடன் அரவிந்த் கூறினான்.
ஹரீஷ், “நீ கிளம்பு” என்றான்.
“ஏன்! உன்னிடம் பேசாமல் அரவிந்த் சாருடன் பேசுறேன்னு பொறாமையா?”
“நான் ஏன் பொறாமைப்படனும்?”
“அப்போ ஏன் என்னை கிளம்பச் சொன்ன?”
‘என்னமோ செய்’ என்பது போல் அவளை பார்த்தவன் தனது புத்தகத்தை எடுத்து அதில் பார்வையை பதித்தான்.
அவள் அவனை ஓரப்பார்வை பார்த்தபடி அரவிந்திடம், “என்னை பற்றி என்ன சொன்னார்?” என்று கேட்டாள்.
அரவிந்த் சிறு புன்னகையுடன், “ஒண்ணும் சொல்லலை” என்றான்.
அவளும் சிறு புன்னகையுடன், “ஜாடிக்கு ஏத்த மூடி” என்றாள்.
அரவிந்தின் புன்னகை விரிந்தது. ஹரீஷோ அவர்கள் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
அரவிந்திடம், “ஓகே சார் நான் கிளம்புறேன்” என்றவள் ஹரீஷிடம், “சொல்ல மறந்துட்டேன்.. நேத்து உன் ஆருயிர் தோழி போன் பண்ணா” என்றாள்.
ஹரீஷ் புருவம் உயர்த்தி அவளை பார்க்க, அவள் விஷம புன்னகையுடன், “நீ இன்னைக்கு தர்ட் ஹவர் தர்ட் CSE போக வேண்டாம்னு சொல்ல சொன்னா” என்றாள்.
“வாட்!!!!”
அவனது அதிர்வை அவள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ பதற்றத்தை மறைத்து, “நீ யாருன்னு அவங்களிடம் சொன்ன?” என்று வினவினான்.
அவளோ சிரிப்புடன், “அதை அவளே வந்து சொல்லுவா” என்றுவிட்டு சென்றாள்.
ஹரீஷ் தலையில் கை வைத்தபடி அமர, “இதுக்கே இப்படி உட்கார்ந்தா எப்படி பாஸ்!!” என்ற திவ்யாவின் குரலில் அவன் நிமிர, அவள் அவன் மேஜை மீது இருந்த புது கைப்சியின் டப்பாவை எடுத்துக் கொண்டு, “பை ரிஷி கண்ணா” என்றுவிட்டு சென்றாள்.
அரவிந்த், “நான் தான் அன்னைக்கே சொன்னேனே! நீயா ஒத்துகிட்டா சேதாரம் கம்மியா இருக்கும்னு” என்று சொல்ல,
கோபத்துடன் அவனை முறைத்த ஹரீஷ் சைகையால் ‘வாயை மூடு’ என்றான்.
ஒவ்வொரு ஆசிரியராக வரத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில் அங்கே வந்த ஆசிரியை ரமாலக்ஷ்மி (திவ்யாவினால் முண்டக்கண்ணி என்று அழைக்கப்படுபவர்) ஹரீஷிடம், “என்ன சார் உங்களுக்கு கல்யாணம் ஆனதை சொல்லவே இல்லை!!!” என்றார்.
ஹரீஷ் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே பெரிதாக காட்டிக் கொள்ளாமல், “என்ன?” என்று வினவினான்.
அரவிந்த் சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான்.
அந்த ஆசிரியை, “நேற்று உங்க மனைவியிடம் பேசினேன்.. சொன்னாங்களா?” என்று கேட்டார்.
பல்லை கடித்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த ஹரீஷ், “நேற்று உங்களிடம் பேசியது என் நண்பன்.. வாயிஸ் மாடுலேட்டர் மூலம் பேசியிருக்கான்.. என்ன பேசினான்னு தெரியாது பட் தர்ட் ஹவர் நான் தர்ட் CSE போக வேண்டாம்னு நீங்க சொன்னதை சொன்னான்” என்றான்.
அவனை சிறிது வாய் திறந்தபடி பார்த்த அந்த ஆசிரியை ஆச்சரியத்துடன், “நீங்க இவ்ளோ நீளமா பேசுவீங்களா?” என்று கேட்டார்.
அவன் அவரை முறைக்க, அவரோ, “ஆனாலும் உங்க பிரெண்ட் இப்படி பேசியிருக்க கூடாது சார்” என்றார்.
அவன் பதில் கூறாமல் பார்க்க, அவரோ விடாமல், “கொஞ்சம் அதிகமா பேசிட்டார்” என்றார்.
அப்பொழுதும் அவன் பதில் பேசவில்லை என்றதும் அவர் மனதினுள், ‘என்ன பேசினான் என்றோ அப்படியா அவனுக்காக நான் சாரி கேட்றேன் என்றோ சொல்றாரா?’ என்று மனதினுள் திட்டினார்.
பிறகு அவர் புன்னகையுடன், “அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகலை தானே!!!” என்றார்.
அவரது குரலில் இருந்த மகிழ்ச்சியை கண்டுக் கொண்டவன், “எனக்கு கல்யாணம் ஆகலை தான், ஆனா என் பர்சனல் விஷயத்தைப் பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்.
அவனது பதிலில் அவர் சற்று அவமானமாக உணர, “சாரி சார்” என்றுவிட்டு வெளியேறினார்.
ஒரு ஆசிரியர், “என்ன சார் இப்படி பேசிட்டீங்க?” என்று கேட்டார்.
ஹரீஷ், “ஏன்?”
“இப்படியா முகத்தில் அடித்தது போல் சொல்லுவீங்க?”
“பின்ன உங்களை போல் வழிய சொல்றீங்களா?”
“அது.. அப்படி இல்லை.. ஆனா இப்படி பேசியிருக்க வேணாம்” என்று சிறிது அசடு வழிந்தபடி அவர் கூற,
“நான் இப்படி தான் சார்” என்று ஹரீஷ் கோபத்துடனே கூற, அரவிந்த் அவன் கையை அழுத்தமாக பற்றினான்.
அதில் கோபம் சற்று குறைய, தனது கவனத்தை புத்தகத்தில் திருப்பினான். ஆனால் திவ்யா மீது எழுந்த கோபம் அடங்க மறுக்கவும் அவன் எரிச்சலுடன் புத்தகத்தை மூடினான்.
அரவிந்த், “ஒரு காபி குடிச்சிட்டு வருவோம் வா” என்றான்.
“நான் வரலை”
“நீ வர” என்று அழுத்தத்துடன் கூறிய அரவிந்த் அவனது கையை பிடித்து எழுப்பி வலுகட்டாயமாக அழைத்துச் சென்றான்.
கல்லூரி உணவகத்தில் தனக்கு ஒரு காபியை எடுத்துக் கொண்டு ஹரீஷிற்கு ஒன்றை கொடுத்தான் அரவிந்த்.
ஹரீஷ் கோபத்துடன், “எப்படி சொல்லியிருக்கா பார்! இவளுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று பொரிந்தான்.
“அவள் சொன்னது அதிகம் தான் ஆனால் சிலதை நீ யோசிக்கணும்”
“என்ன?” என்று கோபத்துடனே கேட்டான்.
“ரமா மேம் நம்பரை சேவ் பண்ணி இருக்கிறியா?”
“அவங்க நம்பர் என்னிடம் கிடையாது”
“ஸோ அது அவங்கனு தெரியாம அட்டென்ட் பண்ணியிருக்கா”
“இதில் யோசிக்க என்ன இருக்கிறது?”
“ரமா மேம்னு தெரிந்து இருந்தால், நிச்சயம் அட்டென்ட் பண்ணியிருக்க மாட்டா”
“யாரா இருந்தா என்ன? அவ ஏன் அட்டென்ட் பண்ணனும்?”
“ரமா மேம் நம்பரில் இருந்து இரண்டு மிஸ்டு காள் பார்த்தேன்.. ஸோ திரும்ப திரும்ப கூப்பிடவும் அட்டென்ட் பண்ணியிருப்பா”
“..”
“என்ன?”
“அதுக்காக.. இப்படியா சொல்லுவா?”
“வேற எப்படி சொல்லுவா?”
“டேய்” என்று அவன் பல்லை கடிக்க,
அரவிந்த், “நிதானமா யோசி.. காதலி என்று சொன்னால் உனக்கோ அவளுக்கோ அது கௌரவமா இருக்குமா? ஏன்னா ரமா மேம் கூப்பிட்டது நைட் ஒன்பது மணிக்கு” என்றான்.
“…”
“உன்னை காதலிப்பவள் தன்னை எப்படி உன் சகோதரினு சொல்ல முடியும்?”
“நான் எப்படி சமாளிப்பேன்னு கொஞ்சமாவது யோசித்தாளா?”
“அதை யோசித்து தான் மனைவினு சொல்லி இருக்கிறாள்.. திவ்யானு சொல்லி இருந்தால் உன் நிலை என்னவா இருந்திருக்கும்?”
சில நொடிகள் மௌனத்தில் கழிய,
ஹரீஷ், “நீ என்ன தான் சொன்னாலும், என்னால் இதை ஏற்க முடியலை” என்றான்.
“அவ மனதளவில் உன் மனைவியா மாறிட்டானு நினைக்கிறேன்.. நீ கொஞ்சம் யோசித்து………….”
“ஒரு இழவும் தேவை இல்லை..”
“ஏன்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற?”
“..”
“உனக்கும் அவளை பிடித்து தானே இருக்குது.. அப்புறம்………….”
“பிடித்தம் வேறு காதல் வேறு.. அவ…………..”
“சேர்மன் சார் ரிலேடிவ்னு சொல்லாதே.. எவ்ளோ நாள் இப்படியே உன்னை நீயே ஏமாத்திக்கப் போற?”
“நான் ஒன்றும் ஏமாத்திக்கலை.. நிஜமாவே என் மனதில் காதல் இல்லை”
அரவிந்த் தீர்க்கமாக பார்க்க, ஹரீஷ், “வா போகலாம்” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான்.