Advertisement

தே நேரத்தில் மருத்துவ கல்லூரியில் தன் அறையில் இருந்த ராஜாராம் சைமனின் தந்தையை அழைத்தார்.

அவர் அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றதும்,

“மே ஐ ஸ்பிக் டு மிஸ்டர் ஸ்டான்லி?” என்றார். 

“எஸ் ஸ்பீகிங்” 

“நான் சைமன் படிக்கிற காலேஜ் சேர்மன் பேசுறேன்” 

“சொல்லுங்க சார்” என்றபோது அவர் மனதினுள் ‘என்ன பண்ணானோ!” என்று கூறிக் கொண்டார்.

மதியம் சைமன் அவரை சந்தித்ததில் இருந்து அவன் நண்பனுடன் கல்லூரி விட்டு சென்றது வரை சொன்னவர், “இப்போ தான் விஷயம் தெரிந்தது, அவன் தெரியாமல் இடித்ததாக சொன்னது பொய்.. அவன் தப்பா பேசியதால் தான் திவ்யா அவனை அடித்து இருக்கிறாள்.. இது முதலில் தெரிந்து இருந்தால் நான் உங்க பையனை தான் சஸ்பெண்டு செய்திருப்பேன்” என்று சிறு கோபத்துடன் கூறினார்.

சைமனின் தந்தை, “என் பையன் சொன்னது பொய்னு எப்படி சொல்றீங்க?” என்று கேள்வி கேட்டார்.

 “அவன் தப்பா பேசியதிற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.. இப்போ கூப்பிட்டது உங்க பையனால் திவ்யாவிற்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று சொல்லத் தான்.. திவ்யா எனக்கு நெருங்கிய சொந்தம்.. இருந்தும் உங்க மகன் சொன்னதை நம்பி திவ்யாவைத் தான் நான் சஸ்பெண்டு செய்தேன்.. ஆனா உங்க மகன்……………………” 

“சாரி சார்.. நான் அவனை கண்டிக்கிறேன்.. அவனால் அந்த பெண்ணிற்கு இனி பிரச்சனை வராது” 

“ஹ்ம்ம்..” என்றவர், “மிஸ்டர் ஸ்டான்லி நீங்களும் உங்க மகனும் எப்படி பழகுவீங்க?” என்று கேட்டார். 

“ஏன் சார்?” 

“பிரெண்ட்லியா பழகுவீங்களா இல்லை ஒரு டிஸ்டன்ஸ் கீப்-அப் பண்ணுவீங்களா?” 

அவர் யோசனையுடன், “முன்னாடி பிரெண்ட்லியா தான் பழகினேன்.. ஆனா காலேஜ் வந்த பிறகு எப்படியோ சிறு இடைவெளி வந்திருச்சு” என்றார். 

“ஹ்ம்ம்.. உங்களை போல் சில பரென்ட்ஸ் அந்த சிறு இடைவெளியை குறைக்காமல் விடுவதால் தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறது.. நீங்க பிரெண்ட் போல் பழகினால், அன்றாடம் நடப்பதை உங்களிடம் சொல்வார்கள்.. அப்போ அவர்களின் சிறு தவறைக் கூட நீங்க அன்பா எடுத்து சொன்னால் மாத்திப்பாங்க.. நீங்க நினைத்தால் இப்போ கூட உங்க மகனை சரி செய்ய முடியும்” 

“புரியுது சார்” என்று அவர் வருந்திய குரலில் கூறினார்.

“சைமன் இப்போ கோபத்தில் இருப்பான்.. நீங்க கோபப்படாமல் அமைதியா அவனுடன் உட்கார்ந்து பேசுங்க..” 

“தேங்க்ஸ் சார்” 

“சைமன் தெளிந்தால் சந்தோஷம்” என்று புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தார்.

 

 

“என்ன அப்பா யாருக்கு இந்த அட்வைஸ் மழை?” என்ற ஜனனியின் குரலில் நிமிர்ந்தவர்,

புன்னகையுடன் மகளை பார்த்து, “அக்காவும் தங்கையும் ஒரே மாதிரி இருக்கிறீங்க.. என் ரூமிற்குள் நுழையும் போது பெர்மிஷன் கேட்பதே இல்லை” என்றார். 

“சேர்மேனைப் பார்க்க தான் பெர்மிஷன் வேணும், எங்க அப்பாவை பார்க்க நாங்க ஏன் பெர்மிஷன் கேட்கணும்!” என்று எகிறியவள், “கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க.. யாருக்கு அந்த அட்வைஸ் மழை?” என்று மீண்டும் வினவினாள்.

(ஜனனி ராஜாராமின் மருத்துவ கல்லூரியின் தான் படித்துக் கொண்டு இருக்கிறாள்) 

“உன் அக்காவோட எதிரியின் அப்பாவுக்கு” 

ஜனனி முறைக்கவும், அவர், “அவனால் உன் அக்காவிற்கு பிரச்சனை வந்திர கூடாதே! அதான்” என்றார். 

“உங்கள் கவலை தேவை இல்லாதது.. அவளிடம் யாரும் வாலாட்ட முடியாது” 

“இன்னொரு ராகவன் உருவானால் அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை” 

“அப்பா!!!!” 

பெருமூச்சை வெளியிட்டவர், “என் மகளை காப்பது என் கடமை.. அதைத் தான் நான் இப்போ செய்தேன்” என்றார். 

“என்ன பிரச்சனை? யாரு அந்த பையன்?” 

ராஜாராம் நடந்ததை சொன்னதும், ஜனனி, “அவன் தப்பா பேசிய போது அக்கா கூட யாராவது இருந்தாங்களா?” என்று கேட்டாள். 

“ஹ்ம்ம் விசாரிச்சேன்.. பவித்ராவும் விஜயும் இருந்து இருக்காங்க” 

“சைமன் அவங்க நட்பை கொச்சைப் படுத்தி ஏதோ ரொம்ப கேவலமா பேசி இருக்கணும்” 

“எப்படி சொல்ற?” 

“இதுவரை அவனும் அக்காவும் சண்டை போடாமலா இருந்து இருப்பாங்க! அப்போலாம் அடிக்காதவள் இப்போ அடிச்சு இருக்கிறா என்றால், அவன் அதிகமா பேசியிருக்கனும்.. அவன் அக்காவை சீண்டி, அக்கா பதிலடி கொடுத்து, அவளுக்கு திரும்ப பதிலடி கொடுக்க முடியாத இயலாமையில் அவன் அவங்க நட்பை கேவலமா பேசி இருக்கலாம்.. கேவலம் என்பதை விட ஏதோ கொச்சையா அசிங்கமா பேசியிருக்கனும்.. அதான் அக்கா அடித்து இருக்கிறாள்” 

“இருக்கலாம்” 

“நீங்க அவனை தான் தண்டித்து இருக்கணும்” 

“என்ன பண்றது உன் அக்கா ‘நம்பிக்கை’ என்ற வார்த்தையை சொல்லி என்னை லாக் பண்ணி அவள் சொன்னதை செய்ய வச்சிட்டா” 

வாய்விட்டு சிரித்த ஜனனி, “உங்க பனிஷ்மென்ட்டை விட அக்கா கொடுத்த பனிஷ்மென்ட் செம.. அதுவும் அந்த ரெண்டு மீம்ஸ் சான்ஸ்சே இல்லை” என்றாள். 

“நீங்க விளையாட்டா பண்றது தான் வினையா போய் முடியும்” 

ஜனனி தீர்க்கமான குரலில், “இது விளையாட்டு இல்லை ப்பா.. அவன் பண்ணதுக்கு அக்கா கொடுத்த பதிலடி” என்றாள். 

“மீம்ஸ் போட்டது விஜய்.. உன் அக்காவே விஜயை திட்டி தான் இருக்கா” 

“மீம்ஸ் போட்டது விஜய்-னா! அவனும் சைமன் மேல் செம கோபத்தில் இருக்கிறான்.. ஸோ நான் சொன்னது போல் சைமன் அவங்க நட்பை பத்தி தான் ஏதோ பேசி இருக்கிறான்.. ஆனா அக்கா விஜயை திட்டியது தான் இடிக்குது” என்று யோசித்தவள் சில நொடிகளில், “அப்போ சைமன் பவி (அக்)கா பற்றியும் ஏதோ தப்பா பேசியிருக்கனும்.. அதான் பவி அக்காவுக்காக அக்கா அடக்கி வாசிக்க நினைக்கிறாளா இருக்கும்” என்று சரியாகவே கணித்து கூறினாள். 

“ஹ்ம்ம்.. இருக்கலாம்.. இப்பலாம் திவ்யாவை நீ சரியா புரிஞ்சுக்கிற” 

புன்னகையுடன், “உங்க பொண்ணாச்சே” என்றாள். 

“இதை தான் அவளும் சொன்னா” என்றபோது ராஜாராமின் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.

ஜனனி மறையாத புன்னகையுடன், “அதுக்கு நீங்க சந்தோஷப்படணும்” என்றாள். 

“நீ என் மகள் என்றதில் எப்பொழுதும் சந்தோசம் தான்டா, ஆனா திவி அதை சொன்ன விதம்!” 

“அதை தான் சொல்றேன்.. நான் தான் உங்க பொண்ணு, அவள் இல்லைனு விரக்தியுடன் சொல்றனா என்ன அர்த்தம்! உங்க பொண்ணாவே இருந்திருக்க கூடாதானு பீல் பண்றானு தானே அர்த்தம்!” 

“ஜனனி!!” என்று மகிழ்ச்சியுடன் அவர் அழைக்க, அவள் புன்னகையுடன் கட்டைவிரலை காட்டி கண்சிமிட்டினாள். 

சில நொடிகளிலேயே ராஜாராம் மகிழ்ச்சி குறைந்து யோசனையில் இறங்கவும்,

அவள், “என்ன ப்பா?” என்றாள். 

“மதியம் சிரிச்சிட்டு தான் போனா.. நான் கூட அவ எனக்காக பேசியதையும், சிரித்ததையும் வச்சு சீக்கிரம் மனசு மாறிடுவானு சந்தோஷப்பட்டேன்.. ஆனா போனில் பேசியனப்ப பழையபடி அதே வெறுப்புடனும் கோபத்துடனும் தான் பேசினா!” 

சிறிது யோசித்த ஜனனி, “ஹாஸ்டல் போய் தனியா இருந்தப்ப ஏதோ ஒரு விஷயம் அவளுக்கு பழசை எல்லாம் ஞாபகப்படுத்தி இருக்கணும்” என்றவள் கோபத்துடன், “எல்லாம் அந்த ஆளால் வந்தது.. இன்னொரு முறை அவனை பார்த்தேன், அவனை குத்திட்டு ஜெயிலுக்கு போய்டுவேன்” என்றாள். 

“ஜனனி! என்ன பேச்சு இது?” 

“பின் என்னபா! எல்லாம் அந்த ஆளால் வந்தது..” 

“உன்னை விட எனக்கு அவன் மேல் அதிக கோபம் இருக்குது.. கொலை வெறியே இருக்குது தான்.. திவ்யாக்கு அவன் மேல் வெறுப்பு வந்த பிறகும் அவனை நான் விட்டு வச்சிருக்கிறதுக்கு காரணம் திவ்யா தான்” 

ஜனனி புரியாமல் பார்க்கவும், ராஜாராம், “அவன் உயிருக்கு நம்மால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் திவ்யா கடைசி வரை நம்மை விலக்கி தான் வைப்பா.. என்ன தான் ராகவனை அவள் வெறுத்தாலும் அவன் மேல் அதிக பாசம் உண்டு.. அவளது அதிகபடியான கோபதிற்கு காரணமே பாசத்திற்கும் வெறுப்பிற்கும் நடுவில் அல்லாடுவதால் தான்” என்றார். 

“நாம என்னப்பா செய்தோம்?” 

“நம் பக்கம் இருக்கும் நியாயம் அவளுக்கு தெரியாதே!” 

“என்னை மட்டுமாவது அக்கா ஏற்கலாமே ப்பா!” என்றபோது அவள் கண்கள் சிறிது கலங்கியது.

“பிறந்ததில் இருந்து அவ கூடவே இருந்த, அவ பாசத்தை பொழிந்த தம்பியான எட்டு வயது சின்ன பையன் சூர்யாவையே விலக்கி தான் வைத்திருக்கிறாள்” 

“நீங்க ஏன்பா அக்காவை அவனுடன் அனுப்பினீங்க!? நீங்க அப்போ விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால், அக்காவும் நானும் சின்ன வயதிலிருந்து ஒன்னா சந்தோஷமா இருந்து இருப்போம்” 

“என்ன பண்றது! எல்லாம் விதி” 

“சும்மா விதி மேல் பழியை போடாதீங்க” 

“உன் அம்மா திவ்யாவிற்காகவும் சாருலதாவிற்காகவும் பார்த்தாள்..” என்று பெருமூச்சை விட்டார். 

“ச்ச்.. போங்க பா” 

“சரி வா.. கிளம்பலாம்.. அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பா” என்றவர் அவளை கிளப்பி, “இன்னைக்கு கிளாஸ்ஸில் நீயும் உன் பிரெண்ட்ஸ்-ஸும் என்னென்ன பண்ணீங்க?” என்று பேச்சை மாற்றி அழைத்துச் சென்றார்.

இணைய காத்திருப்போம்…

அன்புத் தோழமைகளே!!!
திவ்யா ஹரீஷிற்கு கொடுத்த CODE-ஐ சரியாக விளக்கத்துடன் கண்டு பிடித்து சொல்லும் முதல் நபர் எனது அடுத்த கதையின் ஹீரோ ஹீரோயின் பெயரை தேர்ந்தெடுக்கலாம் 🙂 🙂 🙂

Advertisement