Advertisement

விலகல் 15

“ஏய் சண்டகாரா! குண்டு முழியிலே
ரெண்டு உயிரதேடி பாயுதே..
குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை தொரத்த அழையுறேன் நானும்
மனச திறந்தே என்ன காப்பாத்து 

தேடி கட்டிக்க போறன்.. தாவி ஒட்டிக்க போறன்..
தாலி கட்டிக்க போறன் – ஆமா
மோதி மொச்சிக்க போறன்.. பாதி பிச்சிக்க போறன்..
பாவி வச்சிக்க போறன் – ஆமா 

எதிரான என் அழகாலனே!
உன்ன வந்து உரசாம ஒதுங்கி நடந்தேன்
எது மோதி நா இடம் மாறினேன்!
தடுமாறி முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன்..” என்ற ‘இறுதிச் சுற்று’ திரைப்பட பாடலை செவிப்பொறியின் உதவியுடன் கண்களை மூடியபடி தனது விடுதி அறையின் கட்டிலில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவின் மனம் மகிழ்ச்சிக்கும் தவிப்பிற்கும் நடுவில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

விஜய் கூறியதை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளியவளின் மனம் அதே நேரத்தில் உறவுகளை வெறுத்து விலகி இருக்கும் தன்னை தனிமையில் இருந்து காப்பாற்றி அன்பால் சிறையெடுக்க ஹரீஷ் வரமாட்டானா என்று தவித்தது.

அப்பொழுது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறந்தவள் அங்கே ஹரீஷை கண்டதும் இன்ப அதிர்ச்சியுடன் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தாள்.

திவ்யாவை பார்த்ததும் நிம்மதி அடைந்தவன், காதில் செவிப்பொறியை மாட்டியபடி கையில் கைபேசியை பிடித்தபடி நின்றவளைக் கண்டு கோபத்துடன் முறைத்துவிட்டு அருகில் இருந்த விடுதி காப்பாளரிடம், “நீங்க போங்க மேம்.. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

அவர் சிறிது தயங்க, அவன், “சேர்மன் சார் சொல்லி தான் மேம் இங்கே வந்தேன்.. அவரிடம் பேசுறீங்களா?” என்றதும்,

அவர், “இல்லை.. நான் போறேன்” என்று கூறி சென்றார்.

ஹரீஷ் திவ்யாவைப் பார்த்து சிறு கோபத்துடன், “சேர்மன் போன் பண்ணப்ப ஏன் எடுக்கலை?” என்று வினவினான்.

இனிய கனவில் இருக்கும் போது தண்ணீர் தெளித்து எழுப்பினால் ஒரு கோபம் வருமே! அதே கோபத்துடன் அவனை முறைத்தாள்.

அவனும் கோபத்துடன் முறைத்தபடி, “பதில் சொல்லு” என்றான்.

“அதை தெரிந்து என்ன பண்ணப் போற?” 

“ஒருமையில் பேசாதே!” 

“பேசினா என்ன பண்ணுவ? திரும்ப அடிப்பியா?” என்று இடுப்பில் கைவைத்தபடி நிமிர்வுடன் நின்றவளின் விழிகள் ‘அடிடா பார்ப்போம்!’ என்று சொல்வது போல் அவனுக்கு தோன்றியது.

அவன் அவளை முறைத்தபடி தனது கைபேசியில் ராஜாராமை அழைத்து, “சார்.. திவ்யா ஸேஃப்.. மொபைல் சைலென்ட்டில் இருந்ததால் நீங்க கூப்பிட்ட போது எடுக்கலை” என்றான்.

“தன்க் காட்” என்று நிம்மதிமூச்சை வெளியிட்ட ராஜாராம், அவளிடம் போனைக் கொடுங்க” என்றார்.

அவன் கைபேசியை அவளிடம் நீட்டவும், அவள் புருவம் உயர்த்தி ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

அவன் முறைப்புடன், “சேர்மன் சார் பேசணுமாம்” என்றான். 

“பேசு” 

பல்லை கடித்துக் கொண்டு, “நான் பொறுமையாக போறவன் இல்லை.. சார் கிட்ட பேசு” என்றவன் அவள் கையில் தனது கைபேசியை திணித்தான்.

“உன் பொறுமை பத்தி தான் எனக்கு தெரியுமே!” என்றவளின் முகம் கைபேசியை காதிற்கு கொண்டு சென்றபோது இறுகியது.

அவள் இறுகிய குரலில், “என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா? மொபைல் சைலென்ட்டில் இல்லை.. வேணும்னு தான் நீங்க கூப்பிட்ட போது எடுக்கலை..” என்று எரிச்சலுடன் கூறியவள், கோபத்துடன், “உங்க போனை நான் எடுக்காதது என்ன புதுசா? எதுக்கு இவனை அனுப்பினீங்க?” என்று கேட்டாள். 

மதியம் தன்னிடம் விடை பெரும் போது புன்னகையுடன் வெளியேறியவள் இப்பொழுது கோபத்துடனும் எரிச்சலுடனும் காய்வதற்கான காரணம் புரியாமல் ராஜாராம் குழம்பினார்.

மனித மனம் குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும்.. விடுதிக்கு வந்ததும் முதலில் சைமனின் பேச்சில் சுழன்ற அவள் மனம் விஜய் செய்த வேலையில் பவித்ரா பற்றி மட்டுமே சிந்தித்தது. சைமனை மிரட்டி தோழியின் பெயரை காத்த பின் மீண்டும் அவளது மனம் சைமனின் பேச்சிற்கு தாவியது.

சைமன் பேசியதில் ஒரு வார்த்தை அவளை மிகவும் அலைகழித்து மனதின் ரணத்தை கிளறியது. அவள் அந்த கோபத்தில் இருந்த போது தான் விஜய் அவளை அழைத்தது. முதலில் அவனிடம் கோபத்துடன் பேசியவள் நண்பனின் குரலில் தெரிந்த கவலையில் மனதை மறைத்து இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள் ஆனால் ஹரீஷ் பெயரை கேட்டதும் அவளையும் அறியாமல் அவளது மனம் மெல்ல அமைதியடைந்ததோடு அவளுள் ஒரு இதம் பரவியது.

அதன் பின் அவளது சிந்தனை முழுவதையும் ஹரீஷ் தான் ஆக்கிரமித்தான். அப்பொழுது தான் ராஜாராம் அழைத்தார். மீண்டும் மனநிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் தான், அவரது அழைப்பை தவிர்த்தாள்.

ராஜாராம் குழப்பத்திலும், “ஹரீஷை மரியாதையுடன் பேசு” என்று அவளை கண்டிக்க தவறவில்லை.

ஹரீஷை முறைத்தவள், “இப்போ எதுக்கு திருவாளர் ஹரீஷ் அவர்களை அனுப்புனீங்கனு தெரிந்துக்கலாமா?” என்றாள்.

அவளது போலித்தனமான மரியாதையில் ராஜாராமிற்கு சிரிப்பு வந்தது.

‘இவளுக்கு இருக்கிற கொழுப்பிற்கு!’ என்று நினைத்த ஹரீஷிற்கும் அவளது குரல் மற்றும் முக பாவனையைக் கண்டு லேசாக சிரிப்பு வந்தது தான், ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை முறைத்தான்.

ராஜாராம், “இதுக்கு முன்னாடி நீ போன் எடுக்காதது வேறு.. இன்னைக்கு கொஞ்சம் பயம் வந்திருச்சு.. அதான் ஹரீஷை அனுப்பினேன்” என்றார். 

அவள் புருவச் சுளிப்புடன், “ஏன் இன்னைக்கு என்ன?” என்றாள். 

“சைமன்” 

“அவனும் அவன் பிரெண்ட் ரியாஸும் அப்போவே காலேஜ் விட்டு வெளியே போயிட்டான்க” 

“உனக்கு எப்படி தெரியும்?” 

“உங்களுக்கு மட்டும் தான் ஸ்பை வைக்க தெரியுமா?” 

“எப்போ போனாங்க?” 

“எப்போ எப்படினு சொல்லி அவன்களை போட்டு கொடுக்க சொல்றீங்களா? அவனுக்கும் எனக்கும் ஆகாது தான், ஆனா நாங்க ஸ்டுடென்ட்ஸ்.. மானேஜ்மென்ட் கிட்ட போட்டு கொடுக்க முடியாது” 

ஹரீஷ் அவளை ஆச்சரியத்துடனும் சிறு பிரம்மிப்புடனும் பார்க்க,

ராஜாராம் புன்னகையுடன், “இந்த காலேஜை பொறுத்தவரை மானேஜ்மென்ட்டே நீ தானே!என்றார். 

“ஓ! அப்போ இப்பவே சார்ஜ் எடுத்துகவா?” 

“உன் படிப்பு முடிந்ததும் தாராளமா சார்ஜ் எடுத்துக்கோ” 

“ஆனா எனக்கு உங்க உறவும் தேவை இல்லை, உங்க சொத்தும் தேவை இல்லை” என்றவள் அழைப்பைத் துண்டித்து கைபேசியை ஹரீஷிடம் கொடுத்தாள்.

அவளது பேச்சை கேட்டு ‘இவள் சேர்மேன் சாருக்கு என்ன உறவு?’ என்ற யோசனையில் இருந்தவன் கைபேசியின் அழைப்பில் அதை எடுத்து, “சொல்லுங்க சார்” என்றான். 

ராஜாராம், “உங்க பக்கத்தில் வார்டன் இருக்காங்களா?” என்று கேட்டார். 

“இல்லை சார்” 

“அப்போ ஸ்பீக்கரில் போடுங்க” 

அவன் ஒலிபெருக்கியை இயக்கி, “ஸ்பீக்கர் ஆன் பண்ணிட்டேன் சார்” என்றான். 

“சைமன் என்ன பண்ணான்? நீ எதுக்கு அவனை அடித்த?” என்று அவர் கேட்டார். 

அவள் அமைதியாக இருக்கவும்,

“திவ்யா நான் சைமன் அப்பா கிட்ட பேசப் போறேன்.. எனக்கு உண்மை தெரிந்தாகனும்” என்றவரின் குரலில் ‘இப்போ நீ சொல்லியே ஆகணும்’ என்ற கட்டளை இருந்தது.

ஹரீஷ் கையிலிருந்து கைபேசியை பிடுங்கியவள், “அவன் தப்பா பேசினான்” என்றாள் இறுகிய குரலில்.

“என்ன பேசினான்?” என்று கேட்டார். 

“தப்பா பேசினான் அவ்ளோ தான்.. திரும்ப கூப்பிட்டீங்க, போனை தூக்கி போட்டு உடைச்சிருவேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்து ஹரீஷிடம் கொடுத்தாள்.

பின் கோபத்துடன், “இன்னொரு முறை அவருக்கு எடுபடி வேலை பார்த்துட்டு என் முன்னாடி வந்து நின்ன, நான் மனிஷியா இருக்க மாட்டேன்” என்று கத்தினாள்.

மனதின் அழுத்தத்தில் இருந்தவளால் தன் மனம் கவர்ந்தவன் ராஜாராமிற்கு சாதகமாக செயல்படுவதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளது பேச்சைக் கேட்டு ஹரீஷிற்கு கோபம் வந்தது ஆனால் அவளது முகத்தில் தெரிந்த இறுக்கத்தை கண்டவன் கோபத்தை மறந்தவனாக, “என்ன பாட்டு கேட்டுட்டு இருந்த?” என்றான்.

‘நீ என்ன லூஸா!’ என்பது போல் அவள் பார்க்க,

அவன் உதட்டோர புன்னகையுடன், “சும்மா கேட்கணும் தோனுச்சு” என்று கூறி தோளை குலுக்கினான்.

அவன் நினைத்தது போல் அவள் முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து, அவனை சிறு யோசனையுடன் பார்த்தாள்.

அவன் ‘என்ன?’ என்பது போல் புருவன் உயர்த்த,

அவள், “என் இறுக்கத்தை மாற்ற தான் இந்த கேள்வி என்றால் நான் ஒன்று கேட்கட்டுமா?” என்று வினவினாள். 

அவள் தன்னை கண்டுக் கொண்டதில் சிறிது அதிர்ந்தாலும் அவன் அதை காட்டிக் கொள்ளாமல், “என் கேள்விக்கு பின் எந்த நோக்கமும் இல்லை.. கேட்கணும் தோனுச்சு கேட்டேன்.. அவ்ளோ தான்” என்றான். 

அவள் அழுத்தத்துடன் பார்க்கவும், அவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “கேளு” என்றான்.

“ஸோ என் இறுக்கத்தை மாற்ற தான் அந்த கேள்வி!” 

“நான் சாதாரணமா தான் கேட்டேன்” 

“நான் என்ன சொன்னேன்! ‘என் இறுக்கத்தை மாற்ற தான் இந்த கேள்வி என்றால் நான் ஒன்று கேட்கட்டுமா?’ னு கேட்டேன்.. நீ ‘கேளு’ னு சொன்னதில் நான் சொன்னதை ஒத்துக்க்கிறனு தானே அர்த்தம்!” என்று புருவம் உயர்த்தினாள். 

“ஒருமையில் பேசாதேனு சொன்னேன்” என்றவனின் குரலில் மீண்டும் கோபம் எட்டிப் பார்த்தது.

இப்பொழுது அவள் உதட்டோர புன்னகையுடன், “இந்த கோபம் நான் ஒருமையில் பேசியதிற்காக இல்லை.. உன் மனதை நான் கண்டு கொண்டதிற்காகவும், அதை இல்லைனு சொல்ல வலுவான காரணம் கிடைக்காத இயலாமையிலும் வந்த கோபம் தான்” என்றாள். 

அவன் முறைப்புடன், “உன் தவறான எண்ணத்திற்கு நான் பொறுப்பில்லை” என்றுவிட்டு கிளம்ப,

அவள் புன்னகையுடன், “ஓய்” என்று அழைத்தாள்.

இரண்டடி எடுத்து வைத்தவன் அவளது குரலில் நின்றாலும் திரும்பவில்லை.

அவள் விரிந்த புன்னகையுடன், “உன் எண்ணம் வெற்றி தான்.. தேங்க்ஸ்.. இப்போ என் மனம் லேசா இருக்குது.. நான் கேட்க நினைத்த கேள்வியை அப்புறம் கேட்கிறேன்.. இப்போ உனக்கு ஒரு கோட்(CODE) தரேன்.. அதை டிகிரிப்ட் பண்ணி சொல்லு” என்றாள்.

அவன் அவள் கூறியதை கண்டுக் கொள்ளாதது போல் நகரவும்,

அவனை சீண்டும் குரலில், “என்ன க்ரிப்டோக்ராபி சார்! டிகிரிப்ட் பண்ண சொன்னா இப்படி ஓடுறீங்க! உங்க திறமை மேல் அவ்ளோ தானா நம்பிக்கை!” என்றாள். 

அவன் திரும்பி நின்று அவளை முறைக்கவும், அவள் புன்னகையுடன் புருவம் உயர்த்தினாள்.

அவன் கிளம்பாமல் தேங்கியதை அவனது சம்மதமாக கருதி, “போட்டிக்கு ரெடி ஆகிட்ட! குட்.. நான் இப்போ சில நம்பர்ஸ் டேட் பார்மட்டில்(Format) சொல்றேன்.. அதை டிகோட் பண்ணி அதனுள் மறைந்திருப்பதை கண்டு பிடித்து சொல்லு.. நீ டிகோட் பண்ண வேண்டியது 24.10.56

ஒரே ஒரு க்ளு தரேன்.. நம்பர்ஸ் எதுவும் சரியான இடத்தில் இல்லை.. நம்பர்ஸ் மாத்தி போட்ட பிறகு டிகோட் பண்ணு.. ஆல் தி பெஸ்ட்.. பை” என்று கூறி கை அசைத்தாள்.

ஹரீஷ் பதில் எதுவும் கூறாமல் வெளியேறினான்.

Advertisement