Advertisement

விலகல் 14

மதிய தேநீர் இடைவேளையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது இருசக்கர வண்டியின் மீது சைமன் கடும் கோபத்துடனும் எரிச்சலுடனும் அமர்ந்திருக்க, அவன் அருகே அவனது நண்பர்கள் இருவர் நின்றிருந்தனர்.

சட்டென்று எழுந்தவன் கோபத்துடன் வண்டியை மிதிக்க அது பெரும் சத்தத்துடன் அருகில் இருந்த வண்டிகளுடன் சேர்ந்து கீழே விழுந்தது.

நண்பர்கள், “டேய்!” என்று கத்தினர்.

சைமனின் கோபம் அடங்க மறுத்தது. அவனது கோபத்திற்கு காரணம் நம் திவ்யாவே தான். அவன் திவ்யா காலையில் அடி வாங்கியதையும், தன்னால் இரண்டு நாட்கள் தற்காலிகமாக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டாள் என்பதையும் கல்லூரி முழுவதும் பரப்ப நினைத்தான், ஆனால் நடந்ததோ வேறு.

திவ்யா கிளம்பிச் சென்ற அரை மணி நேரத்திற்குள் அவள் இரண்டு நாட்கள் தற்காலிகமாக நீக்கப் பட்ட செய்தி கல்லூரி முழுவதும் பரவி விட்டது தான் ஆனால் அது பரவிய விதம் தான் சைமன் நினைத்தது போல் அல்லாமல் அவனுக்கு எதிராக அமைந்து விட்டது.

திவ்யா கிளம்பிய அடுத்த நொடியில் இருந்தே (வகுப்பு நேரத்தில் தான்) விஜய் மற்றும் அவன் நண்பர்கள் புலனம் மற்றும் குறுஞ்செய்தி மூலம் விஷயத்தை கல்லூரி முழுவதும் பரப்பினர்.

அதன் விளைவு,

‘ஹே! திவ்யா டூ டேஸ் சஸ்பெண்டு ஆகிட்டாளாம்.. காரணம் தெரியுமா! சைமனை அடிச்சிட்டாளாம்”

“சைமனையே அடிச்சிருக்கா! செம்ம தைரியம் தான்”

“அவளது தைரியம் தான் காலேஜ் அறிந்த விஷயமாச்சே!” என்று முதலில் பரவிய விஷயம் சிறிது நேரத்தில்,

 

“ஹே! இப்போ தான் நியூஸ் வந்துது.. சைமன் திவ்யாவை தெரியாம இடிச்சிட்டான் போல! அதான் அடிச்சிட்டா” என்று ஆரம்பித்த விஷயம் அடுத்த நிமிஷமே,

“திவ்யா நெருப்பாச்சே!” என்று பேசப்பட்டு,

 

“நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ” என்ற கபாலி திரைப்பட பாடல் பின்னணியில் ஓட “திவ்யா-னா நெருப்பு!”, “சைமன்-னா மண்ணு” “திவ்யா கிட்ட வச்சிக்காத! மீறி வச்சுகிட்டா.. சைமன் நீ பன்னு” போன்ற வசாகத்துடன் ஒரு காணொளி பரப்பப் பட்டது.

 

இன்னும் சிறிது நேரத்தில்,
“ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me 

நான் யாரு நான் யாரு
I Am a ten not a zero
I Am the only one that
Fighting for a Fight
Tell me if you are ready or not
Lets start bcoz am about to take
It to the Top like what 

எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான் தான் 

தொட்டா தீப்பொறி தான்டா
சுட்டா எரிமலை தான்டா
நொடியில் இடி இடிப்பேன்டா
வாடா.. 

நான் யாரு நான் யாரு
கொய்யால நான் யாரு” என்ற சேதுபதி திரைப்படப் பாடல்(அவர்கள் செப்பனிடு செய்த பாடல்) பின்னணியில் ஓட,

“திவ்யா-னா சும்மாவா!” “திவ்யா-னா மாஸ்” “திவ்யா-னா கெத்து” “திவ்யா-னா தீப்பொறி” “தெரியாம இடிச்சதுக்கே அடினா! தெரிந்து இடித்து இருந்தால் இந்நேரம் சமாதி தான்” போன்ற வாசகத்துடன் ஒரு காணொளி பரவியது.

மொத்தத்தில் சைமனின் மரியாதை பாதாளத்திற்கு தள்ளப்பட்டு திவ்யாவின் மரியாதை வான் அளவிற்கு உயர்ந்தது.

 

 

சைமனின் நண்பர்கள் “டேய்!” என்று கத்தியதும் கோபத்துடன் அவர்களை பார்த்தான். அவர்களுக்கு அவன் நிலை புரிந்தாலும் அதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. மதியம் சைமன் பேசியது, அடிவாங்கியது என்று அனைத்துமே விஷயம் பரவிய பிறகே அவர்களுக்கு தெரிய வந்தது.

அவர்கள் எண்ணமோ ‘இவன் தேவை இல்லாமல் அவசரப் பட்டுட்டான்’ என்பது தான், ஆனால் அதை இப்பொழுது அவனிடம் சொல்ல முடியாது என்று அமைதியாக நின்றனர்.

திவ்யா பவித்ராவிடம் சொன்னது சரியே.. சைமன் இயல்பில் கெட்டவன் இல்லை.. அது என்னவோ முதல் வருடத்தில் இருந்தே திவ்யாவிற்கும் அவனுக்கும் ஆகாமல் போய் விட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுப்பார்கள். எப்பொழுதும் முதலில் பிரச்சனையை ஆரம்பிப்பது சைமனாக தான் இருக்கும். அதில் ஒன்று அல்லது இரண்டு முறை சைமன் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பாலும் வெற்றிப் பெறுவது திவ்யா தான்.

 

 

தே நேரத்தில் விஜயை அழைத்த திவ்யா அவன் அழைப்பை எடுத்ததும், “டேய் லூசு! அறிவிருக்காடா?” என்று திட்டினாள். 

“ஏன்டி!!” என்று அவன் பாவம் போல் வினவினான்.

“உன்னை மெசேஜ் மட்டும் தானே பரப்பச் சொன்னேன்.. இந்த மீம்ஸ்-லாம் எதுக்கு போட்ட?” 

“பின்ன நம்ம கெத்தை காட்ட வேணாமா? அது போக அவன் பேசிய பேச்சு” என்று அவன் பல்லை கடித்தான்.

“டேய்.. அவன் பவி பத்தி எதுவும் தப்பா பரப்பிடக் கூடாது.. அதான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்குது” 

“அவன் அப்படி மட்டும் செய்தான்! செத்தான்.. நிச்சயம் அவனுக்கு சங்கு தான்” 

“பரப்பின பிறகு நீ சங்கு ஊதி ஒண்ணும் ஆகப் போறதில்லை” என்றவள், “ஹ்ம்ம்.. ஒரு ஐடியா வந்துருச்சு.. இரு அவனிடம் பேசிட்டு உன்னை கூப்பிடுறேன்” என்று கூறி அவனது பதிலை எதிர் பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.

 

 

அப்பொழுது ஒரு மாணவன் வந்து, “விஜய் உன்னை ஹரீஷ் சார் உடனே லேப் த்ரீ-க்கு வர சொன்னார்” என்றான்.

விஜய், ‘இவர் எதுக்கு கூப்பிடுறார்? இவர் என்ன சொல்லப் போறாரோ!’ என்ற எண்ணத்துடன் ஹரீஷை பார்க்க சென்றான்.

 

 

சைமன், “நான் உண்மையை சொல்லிடட்டுமா?” என்று வினவ,

அவன் நண்பன், “என்னன்னு?” என்று கேள்வி கேட்டான். 

“அது.. இடித்ததிற்காக அவள் அடிக்கவில்லை நான்………….” 

“இன்னும் உன்னை தப்பா பேசுவாங்க” 

“ஏன்.. ஏன்?” 

“நீ பேசிய விஷயம் அப்படி” 

“அப்படி சொல்ல வேண்டாம்.. விஜயும் அவளும் நெருக்கமாக………………” 

“யாரும் நம்ப மாட்டாங்க” என்று ஒரு நண்பனும், “சேர்மன் சார் உன்னை காலேஜ் விட்டே தூக்கிடுவார்” என்று இன்னொரு நண்பனும் கூறினர்.

“ச்ச்” என்று கோபத்துடன் காலை உதைத்தவன், “விஜய் பவித்ரா பத்தி பரப்பினா?” என்று இழுத்து நிறுத்தினான். 

“லூசாடா நீ!” என்ற நண்பன், “நீ பவித்ராவை ஒரு வார்த்தை சொன்னனு தான் இப்போ இந்த நிலைமையில் இருக்கிற.. வேறு ஏதாவது பண்ண………..” 

“இதுக்கு மேல என்னை அவமானப் படுத்த என்ன இருக்குது!!” என்று அவன் கத்தினான்.

நண்பன், “உனக்கு இல்லை ஆனா ஷரோன்!!” என்றான். 

சைமன் சிறு அதிர்ச்சியுடன் பார்க்க, அவன் நண்பன், “நீ பவித்ராவை இழுத்தால் திவ்யா நிச்சயம் உன் தங்கையை இழுப்பாள்..” என்றவன், “நான் சொல்றதை கேளு.. இதை இத்துடன் விடு.. அவளை கவனிக்க வேறு விஷயம் கிடைக்கும்” என்று அறிவுரை கூறினான்.

 

அப்பொழுது சைமனின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது திவ்யா தான்.

சைமன் அழைப்பை எடுத்து, “ஏய்! நீ மட்டும் என் கையில் கிடைத்த!!!!” என்று கோபத்துடன் கத்தினான். 

வாய்விட்டு சிரித்த திவ்யா, “என்ன பாஸ்! பிளான் எல்லாம் புட்டுகிச்சா!” என்றாள். 

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படி” 

“பார்க்கலாம் டா” என்றவள், “இப்போ எதுக்கு கூப்பிட்டேன்னா……………….” 

“நான் எப்படி இருக்கிறேன்னு பார்த்து சந்தோஷப்பட தானே!” 

“அது உன் புத்தி.. நான் அதுக்கு கூப்பிடலை.. அடுத்து என்ன பண்ணனு தப்பா யோசித்து பவித்ரா பெயரை மட்டும் இழுத்து விடலாம்னு நினைக்காதே! அப்படி ஏதாவது செஞ்ச, அடுத்த நிமிஷம் நீ பேசியதை விட கேவலமா உன் தங்கையைப் பற்றி பரப்புவேன்” 

“பொண்ணாடி நீ?” என்று சைமன் இயலாமை தந்த கோபத்துடனும் எரிச்சலுடனும் கத்தினான். 

“இல்லை தான்.. நான் சாதாரண பொண்ணு இல்லைடா.. பாரதி கனவு கண்ட புதுமை பெண்.. உன்னை போன்ற ஆட்களை வதம் செய்யும் காளி!” என்று ஆக்ரோஷமாக கத்தியவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அழைப்பைத் துண்டித்தவள், “பண்றது எல்லாம் பொறுக்கித் தனம்.. இதில் இவனை எதிர்த்தால் நான் பொண்ணு இல்லையாமா!” என்று கோபத்துடன் பொருமினாள்.

அவளது ஆக்ரோஷத்தில் ஒரு நொடி சைமனே அதிர்ந்து பேச்சிழந்தான். அவளது குரல் ஒலிபெருக்கி இயக்காமலேயே வெளியே கேட்டதில் அவனது நண்பர்கள் சிறு பயத்துடன் அவனைப் பார்த்தனர்.

 

திவ்யா இவனுடன் பேசிய நேரத்தில்……………

தன் முன் நின்றிருந்த விஜயை ஹரீஷ் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

விஜய், “சார்” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

சேதுபதி திரைப்பட பாடல் கொண்ட காணொளியை தனது கைபேசியில் ஓட்டிய ஹரீஷ் சிறு கோபத்துடன், “இது யாரு பண்ணது? நீயா திவ்யாவா?” என்று கேட்டான்.

“நான் தான் சார்” 

“உன் தோழியை காப்பாத்துறியா?” 

“இல்லை சார்.. நிஜமா நான் தான் சார் பண்ணேன்” 

ஹரீஷ் அழுத்தத்துடன் பார்க்கவும், விஜய், “இப்போ தான் சார் அவ கிட்ட இதுக்கு திட்டு வாங்கிகிட்டு வரேன்” என்று நொந்து போன குரலில் கூறினான்.

ஹரீஷ், “நீ பண்ணதோட பின்விளைவு உனக்கு புரியலை.. நீ சைமனின் தன்மானத்தை சீண்டி இருக்க” என்றான். 

“சார் அவனை பற்றி உங்களுக்கு தெரியாது” என்று அவன் சிறிது கோபத்துடன் கூறினான்.

“தெரியும்”

“இல்லை சார்.. உங்களுக்கு தெரியாது” 

“தெரியும்” என்று அழுத்தத்துடன் கூறினான்.

விஜய் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க,

ஹரீஷ், “ஏதோ தப்பா பேசினான்னு தெரியும் ஆனா என்னனு தெரியாது.. நான் ரொம்ப கேட்டதால் திவ்யா சொன்னாள்.. என்னை மீறி விஷயம் வெளியே போகாது” என்றவன், “நீ பண்ண விஷயத்தால் திவ்யாவிற்கு தான் பிரச்சனை” என்றான். 

“இது நான் தான் பண்ணேன்னு எல்லோருக்கும் தெரியும் சார்” 

“நான் சைமன் பற்றி பேசுறேன்” 

விஜய் புரியாமல் பார்க்கவும், அவன், “சைமன் பதிலுக்கு நீ போட்டது போல் ஏதாவது மீம்ஸ் திவ்யா பற்றி போட்டால் என்ன பண்ணுவ?” என்று கேட்டான். 

“அப்படி பண்ணா அவனுக்கு சங்கு தான் சார்” என்று விஜய் கோபத்துடன் கூற,

ஹரீஷ் நிதானமான குரலில், “விஷயம் பரவின பிறகு நீ சங்கு ஊதி பிரயோஜனம் இல்லை” என்று திவ்யா கூறியது போல் கூறவும், அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

Advertisement