Advertisement

விலகல் 2

“நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே! ஓ.. தொல்லை..
லைக்-அ லைக் மை லைலா.. லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயின்-ஆ

மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்..
டக டக டக கொட்டும் இசையில்…………….”
என்ற பாடல் (“OK கண்மணி” திரைப்படம்) அதிகபட்ச டெசிபெல்லில் ஒலித்துக் கொண்டிருக்க, மூடிய கல்லூரி விடுதி அறையினுள்ளே தாளத்திற்கு ஏற்ப தலையை ஆட்டி ஆடிக் கொண்டிருந்தாள் திவ்யா.

 

அதே நேரத்தில் அவளை மனதினுள் திட்டியபடி சிறு பயத்துடன் சேர்மன் முன் நின்றுக் கொண்டிருந்தார் திவ்யாவின் வகுப்பு ஆசிரியர் மணிமேகலை.

அதற்கு என்ன காரணமென்று அறிய சில மணி நேரம் பின்னோக்கி செல்வோம் வாங்க………………………

 

 

சேர்மன் அறையை விட்டு வெளியே வந்த திவ்யா மனதின் இறுக்கம் காரணமாக வகுப்பிற்கு செல்ல மனமின்றி கல்லூரி உணவகத்திற்கு(Canteen) சென்றாள். தலைமை ஆசிரியர் கல்லூரியை விட்டு செல்வது அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது ஆனால் மனதின் ரணம் அதை பின்னுக்கு தள்ளியது. ‘முன்பு ஆசிரியர்களை மதிக்கும் தான்.. எப்படி இருந்த தான்! இப்படி மாறிவிட்டேன்’ என்ற எண்ணமும் பழைய நினைப்பில் தான் வந்து நின்றது. மேலும் சேர்மனின் பேச்சு அவளது மனதின் ரணத்தை கிளறி விட்டது போல் ஆகிவிட, கோபமும் எரிச்சலும் சிறு விரக்த்தியுமாக அமர்ந்திருந்தவள் ஒரு நிலைக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் தனது கல்லூரி விடுதிக்கு செல்லும் முடிவை எடுத்தாள்.

அவள் தனது வகுப்பிற்கு சென்ற நேரம் மதிய இடைவேளை தொடங்கவும் சரியாக இருந்தது. அவள் சென்றதும் பரபரப்புடன் விஜய் அவள் அருகே வந்து, “என்னாச்சு திவி?” என்று வினவினான்.

அவள் முகத்தில் இருந்த இறுக்கத்தை கவனித்த பவித்ரா யோசனையுடன் அவளை நோக்கினாள்.

திவ்யா வரவழைத்த சிறு புன்னகையுடன், “HOD காலேஜ் விட்டு போறாராம்” என்றபடி தனது உடைமைகளை பையினுள் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹே!” என்று கையை ஓங்கி மகிழ்ச்சியுடன் கத்திய விஜய், “சூப்பர் மச்சி.. உன்னை வெளியே அனுப்புறேன்னு சொன்னவரை நீ வெளியே அனுப்பிட்ட!” என்று கூற,

வெறுமையுடன் அவனை பார்த்தவள், “நான் ஹாஸ்டல் போறேன்” என்றபடி பையை எடுத்தபடி பவித்ராவிடம் சிறு தலை அசைப்புடன் கிளம்ப,

அவளது கையை பற்றி ஒரு அழுத்தம் கொடுத்த பவித்ரா, “எதையும் பற்றி யோசிக்காத.. எல்லாம் சரி……………………” 

மெல்லிய புன்னகையுடன் தோழியின் கன்னத்தை தடியவள், “நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி கிளம்பினாள்.

திவ்யா சென்றதும் பெருமூச்சொன்றை வெளியிட்டபடி திரும்பிய பவித்ரா தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விஜயை பார்த்து, “என்ன?” என்றாள். 

“சில நேரங்களில் புரியாத புதிர் தான்!” 

பவித்ரா ‘என்ன’ என்று கேட்கவில்லை. அவள் அமைதியாக இருக்கவும் அவன், “என்ன தான்டி அவள் பிரச்சனை?” என்று கேட்டான். 

“..” 

“ச்ச்.. அவளுக்கும் சேர்மனுக்கும் என்ன உறவு? அவ்வளவு பெரிய வீடு இருந்தும் பரென்ட்ஸ் விட்டுட்டு ஏன் ஹாஸ்டலில் இருக்கிறாள்? இப்படி சில கேள்விகள் என் மனதை குடையுது.. மண்டையே வெடிச்சிரும் போல.. நீயாவது சொல்லித் தொலையேன் பக்கி” 

அமைதியாக அவனை பார்த்தவள், “அவளிடம் கேள்” என்றாள். 

“சொல்லிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்” என்று அவன் கடுப்புடனும் சிறு கோபத்துடனும் கூறினான்.

“உன் தவிப்பும் கோபமும் எனக்கும் புரியுது தான்.. ஆனால்……………..” 

“புரிந்து என்ன! வாயை திறக்க மாட்டியே!” 

“நீ கேட்பது என்னை பற்றிய விஷயம் இல்லை” 

“நான் யாரு உங்களுக்கு?” 

“அது அவளுக்கும் தெரியும் தானே!” 

“ச்ச்” 

“அவள் மறக்க நினைக்கும் விஷயத்தை நாம் ஞாபகபடுத்த கூடாதுடா” 

“போடி” என்றவன் வகுப்பை விட்டு வெளியேறினான்.

 

வகுப்பறையை விட்டு வெளியே சென்ற திவ்யா முதலில் சென்றது ஆசிரியர் அறைக்கு. அவள் விடுதிக்கு செல்ல அனுமதி பெற வகுப்பு ஆசிரியர் மணிமேகலையை பார்க்க அங்கே சென்றாள்.

மணிமேகலை முன் நின்றவள், “எனக்கு ஹாஸ்டல் போக பெர்மிஷன் வேணும்” என்றாள். 

தலைமை ஆசிரியர் விஷயம் பற்றி அறிந்து இவள் மேல் கோபத்தில் இருந்த மணிமேகலை அவள் கேட்ட விதத்தில் மேலும் கோபம் வர அவளை முறைத்தபடி, “நல்லா தானே இருக்கிற! அதெல்லாம் பெர்மிஷன் தர முடியாது” என்றார்.

ஒரு நொடி அவரை அமைதியாக பார்த்தவள் அவர் மேஜை மேல் இருந்த பென்சிலை எடுத்து அதன் கூர்முனையால் இடது கை மணிக்கட்டருகே ஒரு கோடு போல் கீறினாள். அவள் கொடுத்த அழுத்தத்தில் உடனே ரத்தம் மெலிதாக வரத் தொடங்கியது.

மணிமேகலை கோபம் மறந்து, “ஏய்! என்ன பண்ற?” என்று பதற,

அவளோ அமைதியாக, “இப்போ பெர்மிஷன் தருவீங்க தானே!” என்றாள்.

தலையில் அடித்தபடி, “அறிவில்லை! அதுக்காக இப்படியா பண்ணுவ” என்று திட்டயவர் அவர்கள் அறையில் இருந்த முதலுதவி பெட்டியை எடுக்க,

அவளோ, “பெருசா ஒண்ணுமில்லை.. நான் ரூம் போய் பார்த்துக்கிறேன்.. நீங்க பெர்மிஷன் தாங்க” என்றாள். 

அவர் கோபத்துடன், “பெர்மிஷன் தரேன்.. முதலில் கையை காட்டு” என்றார். 

கையை விலக்கியவள் வலது கையில் இருந்த அனுமதி கடிதத்தை நீட்டினாள்.

ஒரு சில ஆசிரியர்கள், “சைனை முதலில் போடுங்க மேம்” என்று கூற,

அவள் கையில் இருந்து அனுமதி கடிதத்தை பிடுங்கியவர் கையெழுத்தை போட்டு கடிதத்தை அவள் கையில் திணித்தபடி, “இப்பவாது கையை காட்டு” என்று சிறு பதற்றத்துடனும் கோபத்துடனும் கூறினார்.

லேசாக ரத்தம் கசிந்த கையை பொருட் படுத்தாமல் மென்னகையுடன், “ஒண்ணுமில்லை.. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியேற தொடங்கியவள் வாயிலை அடைந்த பொழுது நின்று திரும்பினாள்.

‘திமிர் பிடிச்சவ’, ‘உடம்பு முழுதும் திமிர்’, ‘நீங்க ஏன் மேகலை இவளுடன் வச்சுக்கிறீங்க?’ என்ற பல குரல்களை பொருட் படுத்தாமல் மணிமேகலையை பார்த்து மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றவள் அனுமதி கடிதத்தை ஆட்டி, “இதற்கு இல்லை.. நீங்க என் மேல் காட்டிய அக்கறைக்கு” என்றவள் அவர் பதில் கூறும் முன் வெளியே விரைந்திருந்தாள்.

அவளை புரிந்துக்கொள்ள முடியாமல் குழப்பத்துடன் மணிமேகலை தன் இடத்தில் அமர்ந்தார்.

 

கல்லூரி வளாகத்தில் இருந்த முதலுதவி மையத்திற்கு சென்று காயத்திற்கு மருந்திட்டவள் அடுத்து தன் அறைக்கு சென்று அந்த பாடலை ஒலிக்க விட்டு கொண்டிருந்தாள். அதுவும் அவளுக்கு பிடித்த அந்த வரிகளை மீண்டும் மீண்டும் ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தாள். இசைமழையின் உதவியுடன் மனதின் புழுக்கத்தை விரட்ட முயற்சித்து ஓரளவிற்கு வெற்றியும் பெற்றாள்.

ஆனால் அந்த இசைமழையின் ஒலியில் தலைவலியை பெற்றுக் கொண்ட விடுதி காப்பாளர் அவளை திட்டியபடி காபி குடிக்க கல்லூரி உணவகத்திற்கு சென்றார்.

 

 

திவ்யா கையை கிழித்துக் கொண்ட விஷயம் சேர்மேனை எட்டியதின் பலனாக தான் மணிமேகலை தற்போது திவ்யாவை திட்டியபடி அவர் முன் நின்றுக் கொண்டிருக்கிறார்.

‘அந்த குட்டி சாத்தான் சிரிச்சுட்டு போன போதே நான் உஷார் ஆகி இருக்கணும்! இப்படி மாட்டி விட்டுட்டாளே!’ என்று மனதினுள் திவ்யாவை திட்டிக் கொண்டிருந்த மணிமேகலையை பார்த்த சேர்மன் ராஜாராம், “திட்டி முடிச்சுட்டீங்களா?” என்றார். 

“சார்” என்று அவர் சிறு அதிர்ச்சியுடன் வினவ,

“திவ்யாவை திட்டி முடிச்சிடீங்களா?” 

“சார்” 

“அவள் உங்களை மாட்டிவிடவோ உங்களுக்கு தொல்லை கொடுக்கவோ நினைக்கவில்லை.. அப்படி நினைத்து இருந்தால் காயத்திற்கு மருந்து போடாமல் இந்நேரம் ஹாஸ்பிடலில் இருந்து இருப்பாள்” 

அவர் கூறியதை கேட்ட மணிமேகலைக்கு பேச்சே வரவில்லை.

சேர்மன் தொடர்ந்தார், “திவ்யா பற்றிய விஷயம் எப்படியும் என்னை எட்டிவிடும்.. உங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்பதும் எனக்கு தெரியும்.. நான் உங்களை அழைத்தது அவளது காயத்தை பற்றி தெரிந்துக்கொள்ள தான்” 

“அது.. காயம் சின்னது தான் சார்.. லேசா தான் ரத்தம் வந்தது” 

“எதை வைத்து கீறினாள்?” 

“பென்சில்” 

“ரொம்ப ஷார்ப்பா இருந்ததா?” 

“அது.. ஷார்ப்பா தான் சார் இருந்தது ஆனால் காயம் சின்னது தான்.. கவலை படும்படி பெரிதாக இல்லை” 

“சரி.. நீங்க போகலாம்” என்றதும் வெளியே வந்த மணிமேகலை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டார். 

 

 

டுத்த நாள் காலையில் திவ்யா வந்ததும் அவள் கையை இழுத்து பார்த்த பவித்ரா சிறிது கலங்கிய விழிகளுடன் தோழியை முறைத்தாள்.

திவ்யா புன்னகைத்து கண்சிமிட்டவும் பவித்ரா இறுகிய குரலில், “இனி எக்காரணம் கொண்டும் உன்னை காய படுத்திக்க மாட்டனு சத்தியம் பண்ணு” என்றபடி கையை நீட்டினாள்.

“பவி செல்லம் வொய் எமோஷன்? பெல்லுக்கு பயம் காட்ட லேசா தான் கீறினேன்..” 

பவித்ரா கையை நீட்டியபடி தீர்க்கமாக பார்க்கவும், திவ்யா, “சத்யம் எல்லாம் வேணாம்.. இனி இப்படி பண்ண மாட்டேன்” என்றாள். 

தன் கையை மடித்துக் கொண்ட பவித்ரா மீண்டும் முறைக்கத் தொடங்கினாள்.

“அதான் சொல்லிட்டேன்னே! இன்னும் என்ன முறைப்பு? இப்பலாம் ரொம்ப தான்டி முறைக்கிற!” 

“நேத்து என்னடி சொன்ன?” 

“ஓராயிரம் சொல்லியிருப்பேன்.. எதை கேட்கிற?” 

“விளையாடாம பதில் சொல்லு” 

“நிஜமாவே எதை சொல்றனு தெரியலைடி” 

“HOD முன் போய் நிற்கிறதுக்கு முன்னாடி” 

சிறிது யோசித்தவள் உதட்டை பிதுக்கி, “தெரியலை.. நீயே சொல்லு” 

“என்னை உன்னை விட்டு விலகிகோனு சொன்ன!” 

“ஓ! நான் சொன்னா மேடம் விலகி போயிடுவீங்களோ! கொண்ணுடுவேன்” என்றதும் பவித்ரா புன்னகைத்தாள்.

மீண்டும் யோசித்த திவ்யா, “எனக்கு என்ன சொன்னேன்னு ஞாபகம் இல்லை.. கோபத்தில் சொல்லியிருப்பேன்.. அதற்காக சாரிலாம் கேட்க முடியாது…………..” 

“நான் சாரி கேட்க சொல்லலையே!” 

“அப்பறம் என்ன டஷ்க்கு முறைச்ச?” 

“அது சும்மா” 

“சரி விடு நேத்து நான் போன பிறகு என்ன நடந்தது?” 

“பெருசா ஒண்ணுமில்லை.. இந்த விஜி தான் ‘சொல்லுங்க.. நீங்க யாரு? பாம்பே-ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. சொல்லுங்க’ னு உன்னை பத்தி கேட்டுட்டு இருந்தான்” 

“அவன் கிடக்கிறான் டம்மி பீஸ்” என்றதும் பவித்ரா கண்ணசைவில் திரும்ப சொல்ல, திரும்பி பார்த்தாள்.

விஜய் திவ்யாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். 

திவ்யா சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “உண்மையை தானே சொன்னேன்.. இதுவரை நீ சிறப்பான தரமான சம்பவம் எதுவும் செய்யலையே! ஸ்வீட் மட்டும் தானே சாப்டுட்டு இருக்க!” 

அவன் கடுப்புடன், “என்ன நேத்து ரூமுக்கு போய் ‘பேட்ட’ படம் பார்த்தியா?” 

“ச.. தலைவர் படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்..” என்றவள் கண்கள் மின்ன, “இன்னைக்கு மதியம் போகலாமா? டிக்கெட் இருக்குதா பாரு” 

பவித்ரா, “ஏன்டி படுத்துற! முன்னலாம் வாரத்துக்கு ஒரு வினையை தானே கூட்டுவ! நேத்து மட்டுமே மூணு முறை வம்பை இழுத்து விட்டுருக்க! HOD விஷயத்திற்கு நீ இன்னும் ஒரு மாசத்திற்கு அடக்கி தான் வாசிக்கணும்” 

தோழியை திரும்பி பார்த்தவள் பின் விஜயிடம், “ரொம்ப பேசுறாடா.. இவளுக்கும் சேர்த்து டிக்கெட் போடு” 

பவித்ரா நெஞ்சில் கை வைத்தபடி, “ஆத்தி! மிஸ்டர் சந்திரன் என்னை கொண்ணுடுவார்” என்றாள். 

திவ்யா குறுநகையுடன், “விஜி தியேட்டரில் இருந்து போன் பண்ணி மிஸ்டர் சந்திரமௌளியை காபி சாப்பிட கூப்பிடுவோமா!” 

பவித்ரா, “எங்க அப்பாவை காபி சாப்பிட கூப்பிட நீ மௌன ராகம் கார்த்திக்கும் இல்லை நான் ரேவதியும் இல்லை” 

“பார்டா! அப்பறம்” 

“ஹ்ம்ம்.. விழுப்புரம்” 

விஜய், “மதியம் ரெண்டு மணிக்கு மூணு டிக்கெட் புக் பண்ணிட்டேன்” 

திவ்யா புன்னகையுடன் விஜய் தோளில் கைபோட்டு, “நண்பேன்டா” என்று கூற அவனும், “நண்பிடி” என்று கூறி கை தட்டினான்.

பவித்ரா இருவரையும் முறைக்க, இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

பவித்ரா, “நான் வர மாட்டேன்” 

“ஸோ சிம்பிள் உன்னை கடத்திட்டு போய்டுவோம்” என்றவள் மீண்டும் நண்பனுடன் கை தட்டினாள்.

பவித்ரா நெஞ்சுக்குள் ரயில் இஞ்சின் ஓடத் தொடங்கியது. 

ஆசிரியர் வரவும் விஜய் தன் இடத்திற்கு செல்ல, அவர்கள் பேச்சு தடைப்பட்டது.

அதன் பிறகு பவித்ராவின் கெஞ்சல்கள் பலிக்காமல் போக மதியம் 12.45க்கு பீதியுடன் திவ்யா மற்றும் விஜயுடன் வாகனகள் நிற்கும் இடத்திற்கு சென்றாள்.

கடைசி முயற்சியாக பவித்ரா, “ப்ளீஸ்டி என்னை விட்டிரு” என்று கெஞ்ச, அதை சிறிதும் கண்டுக்கொள்ளாத திவ்யா, “விஜி நீ முதலில் ஏறி குதி.. அப்பறம் இவளை அனுப்புறேன்.. அப்பறம் நான் வரேன்” என்றாள்.

பவித்ரா, “என்னது இந்த சுவரை ஏறி குதிக்கணுமா?” என்று மீண்டும் நெஞ்சை பிடிக்க,

திவ்யா, “இவ ஒருத்தி.. சும்மா சும்மா நெஞ்சை பிடித்து ஸீன் போட்டுட்டு” 

பவித்ரா தோழியின் முதுகில் அடித்தபடி, “நான் ஸீன் போடுறேனா!” என்று கேட்டுக் கொண்டிருக்க, விஜய் சுவர் ஏறி வெளியே குதித்திருந்தான்.

திவ்யா, “எனக்கு அப்பறம் மசாஜ் பண்ணு.. இப்போ யாரும் வரதுக்கு முன் போகணும்.. சீக்கிரம்.. நான் உன்னை தூக்குறேன் ஒழுங்கா சுவரை ஏறி குதி.. விஜி உன்னை பிடிச்சுப்பான்” 

பவித்ரா பரிதாபமாக அவளை பார்க்க, அப்பொழுது ஒரு ஆசிரியர்(திவ்யா சுண்ணத்துண்டு எறிந்தவர்) வரவும் திவ்யா, “பவி ஜூட்.. சொக்கத் தங்கம்(அவர் பெயர் தங்ககுமார்) வருது” என்றவள் அடுத்த நொடி ஓடி ஒளிந்திருந்தாள்.

இதுவரை தப்பு செய்து பழக்கமில்லாத பவித்ரா திருதிருவென்று முழித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.

ஆசிரியர், “நீ இங்கே என்ன பண்ற?” 

“அது.. சார்” 

“என்ன?” 

‘முன்ன பின்ன செத்தா தானே சுடுகாட்டிற்கு வழி தெரியும்! உங்களுடன் கூட்டு சேர்த்து என் உசுரை வாங்குறேயே பிசாசு’ என்று மனதினுள் திவ்யாவை திட்டியவள் பதில் சொல்வதறியாது திணற,

சட்டென்று அவர்கள் முன் வந்து நின்ற திவ்யா, “உங்க பைக் டயரை பஞ்சர் பண்ண வந்தேன்.. நீங்க வந்ததும் ஒளிய சொன்னேன்.. இந்த லூசு முழிச்சிட்டு நிக்குது” என்றாள். 

பவித்ரா பாசத்துடன் திவ்யாவை பார்க்க அவளோ முறைத்துவிட்டு ஆசிரியர் பக்கம் திரும்பினாள்.

அவர் இருவரையும் முறைத்துவிட்டு அங்கே நின்றுக் கொண்டிருந்த தனது வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றார்.

பவித்ரா, “அப்படா.. தப்பிச்சோம்” 

திவ்யா முறைத்தபடி, “சீக்கிரம் வா”

பவித்ரா, “கண்டிப்பா நான் வரணுமா?” 

“வரியா இல்லை ஏதாவது வம்பில் உன்னை மாட்டி விடவா?” 

“இது மட்டும் வம்பு இல்லையா?” 

“ஓ! சரி நான் போய் சீனியர் ரவி கிட்ட நீ அவனை லவ் பண்றதா சொல்றேன்” 

“பிசாசு.. வந்து தொலையுறேன்.. தூக்கு” 

“அது” என்றவள் தோழியை தூக்க, கஷ்டப்பட்டு சுவர் ஏறிய பவித்ரா, “ரொம்ப உயரமா இருக்குது திவி” 

“இப்போ நீ குதிக்கலை நானே தள்ளி விட்டிருவேன்.. குதிடி” 

“முருகா காப்பாத்து” என்றபடி குதித்தவளை கீழே விழாமல் விஜய் பிடித்துக் கொண்டான்.

அடுத்து திவ்யா குதித்ததும் பவித்ரா, “ஏதோ சத்தம் கேட்டுதே! என்ன?” 

விஜய், “ரொம்ப முக்கியம்.. சீக்கிரம் வா” 

திவ்யா, “ஒரு பைக் மேல ஏறி சுவர் ஏறினேன்.. அப்போ அதை தட்டி விட்டேன்.. வரிசையா எல்லா பைக்கும் விழுந்துருச்சு” 

“தெரியாம தட்டி விட்டியா?” 

“நீயே சொல்லேன்”  என்று புன்னகையுடன் கண்சிமிட்டவும் பவித்ரா, “அடி பாவி” என்றாள்.

விஜய் நடந்தபடியே, “எங்க கிட்ட மட்டும் வாய் கிழிய பேசு.. அந்த நொந்த குமார் கிட்ட மட்டும் முழிச்சுட்டு நில்லு” 

“நான் முழிச்சிட்டு நின்னதை நீ பார்த்தியா!” 

“அதெல்லாம் என் ஞான கண்ணில் தெரிந்தது” 

“இங்கே ஞானமே இல்லையாம் இதுல ஞான கண்” 

“வேணாம்டி என்னை சீண்டாத” 

“போடா டம்மி பீஸ்” 

நடையை நிறுத்திய விஜய் திவ்யாவை முறைக்கவும், “அட விடுங்க பாஸ்.. வாழ்க்கையில் சில அடிகள் விழ தான் செய்யும்”

“நீ சொன்னா கூட பரவா இல்லை.. இந்த சுண்டைக்காய் சொல்றதை தான் ஏத்துக முடியலை” 

“நானாடா சுண்டைக்காய்” என்று பவித்ரா அடுத்த சண்டையை ஆரம்பித்தாள்.

ஒருவழியாக சண்டையிட்டபடியே திரை அரங்கத்திற்கு வந்து சேர்ந்தனர்.   

இணைய காத்திருப்போம்…

Advertisement