Advertisement

விலகல் 12

       திவ்யா கல்லூரி உணவகதில் அமர்ந்து தன் மனதை சுய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.

‘அவன் மேல் கோபம் இருக்கும் பட்சத்தில் அவன் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்து அவன் தண்டனை பெறுவதை பார்த்து என் மனம் ரசிக்கத் தானே செய்யணும்! ஆனா ஏன் அவன் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்க என் மனம் விரும்பலை?

அவன் மேல் கோபம் கொள்ளும் மனம் அதே நேரத்தில் அவனை அவனது ஒவ்வொரு செய்கையும் ரசிக்குதே!

கிட்டத் திட்ட ஆறு மாசத்துக்கு முன்னாடி, ஒரே ஒரு முறை பார்த்த அவனை நான் மறக்காமல் இருக்கிறேனே!!! சரி அது கூட அவனோட பேச்சினால் மறக்காம இருக்கிறேன்னு வைத்துக் கொண்டாலும்…

பவி சொன்னது போல் மத்தவங்களின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கிட்டது இல்லையே! அந்த சூம்பிப் போன சிக்கன் நேரிடையாவே நான் பொண்ணே இல்லைனு சொன்னதை கூட நான் பெரிதாக எடுத்துக்கலை ஆனா இவன் வார்த்தை ஏன் என்னை இவ்வளவு பாதிக்குது!!!’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

“கிளாஸ்க்கு போகாமல் இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற?” என்ற ஹரீஷின் குரலில் அவனைப் பார்த்தவள் அடுத்த நொடியே சிறு கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

தனது குழப்பத்திற்கு தீர்வு கிடைக்காத சிறு எரிச்சலிலும், தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்ற தவிப்பிலும் இருந்தவள் தனது இந்த நிலைக்கு அவன் தான் காரணம் என்று எண்ணியே முகத்தை திருப்பினாள்.

அவள் மனதினுள் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்! எல்லாம் இவனால் தான்.. காலையில் இருந்து என்னை ரொம்ப படுத்துறான்’ என்று கூறிக் கொண்டாள்.

ராஜாராமிடம் பேசிவிட்டு தேநீர் அருந்த இங்கே வந்தவன் திவ்யா அமர்ந்திருப்பதை பார்த்து அவளிடம் வினவினான்.

அவள் முகத்தை திருப்பவும் அவன், “திவ்யா” என்று அழுத்தத்துடன் அழைத்தான்.

அவள் ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்க்க மட்டுமே செய்தாள்.

அவன் சிறு கோபத்துடன், “ஒரு சார் கிட்ட இப்படி தான் பிஹேவ் பண்ணுவியா?” என்று கேட்டான். 

‘சாரா! உன்னை பார்த்தால், ஏதோ நெருக்கமானவன் போல் தானே தோணுது’ என்று மனதினுள் நினைத்தவள் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.

அவளது அதிர்ச்சியை முகத்தில் கண்டவன் ‘அப்படி என்ன கேட்டுட்டோம்! எதுக்கு ஷாக் ஆகுறா!!!’ என்ற யோசனையுடன் அவளை பார்க்க,

அவளோ ‘உறவுகளை விலக்கி வைக்கும் என் மனம் இவனை ஏன் நெருக்கமானவனா யோசிக்குது!!’ என்று மேலும் குழம்பினாள்.

‘என்னாச்சு இவளுக்கு!’ என்ற எண்ணத்துடன் அவன், “திவ்யா” என்று மறுபடியும் அழைக்கவும், அவள் அவனை அமைதியாக பார்த்தாள்.

அவன், “என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான். 

“புரியலை” 

“ஏன் இப்படி இருக்கிறனு கேட்டேன்” 

“எப்படி இருக்கிறேன்?” 

அவன் அவளை முறைக்கவும், அவள், “நிஜமாவே நீங்க கேட்கிறது புரியலை” என்றாள். 

“முதலில் அலட்சியமா பார்த்த.. அதிர்ச்சியுடன் எழுந்த.. அதிர்ச்சி குழப்பமா மாறிச்சு.. அப்புறம் அமைதியா பார்க்கிற.. அதான் கேட்டேன்” 

‘எனக்கே என் மனம் புரியலை, இதில் உனக்கு என்னத்தை சொல்வேன்’ என்று மனதினுள் நினைத்தவள் அவனிடம் இயல்பான குரலில், “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்றாள்.

அவன் அவளை தீர்க்கமாக பார்த்தான். அவள் அப்பொழுதும் அமைதியாகவே நின்றாள். 

“கிளாஸ்க்கு போகாமல் இங்கே என்ன பண்ற?” 

“போகணும்” 

“அதை தான் நானும் சொல்றேன்.. கிளாஸ்க்கு போ” 

அவள் அவனை அமைதியாக பார்க்கவும், அவன், “என்ன?” என்று கேட்டான். 

“தனியா யோசிக்கணும்னு இங்கே வந்தேன்.. என்னை யோசிக்க விடாமல் வந்து நிற்குறீங்க..” என்று முடித்த போது அவள் குரலில் சிறு எரிச்சல் கலந்திருந்தது.

அப்பொழுது ஒரு ஆசிரியர் வருவதை பார்த்தவன், தனியாக அவளிடம் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்தில் சிறு தோள் குலுக்கலுடன் அகன்றான்.

 

அவன் அகன்றதும் தான் ‘தியேட்டரில் ஏன் அப்படி பேசினான்னு கேட்கேவே இல்லையே!’ என்று நினைத்தவள் அடுத்த நொடியே ‘பயபுள்ள எங்கே போய்ட போகுது! முதலில் நாம தெளிவோம், அப்புறம் அவனிடம் கேட்டுக்கலாம்’ என்று கூறிக் கொண்டு அமர்ந்தாள்.

சிறிது நேரம் யோசித்தவள், மனம் அதிர ‘இது தான் காதலா! அப்போ நான் அவனைக் காதலிக்கிறேனா!’ என்று தன்னைத் தானே சிறு அதிர்வுடன் வினவியபடி நிமிர்ந்து அமர்ந்தாள்.

அவள் அவனைத் தேட அவன் அங்கே இல்லை.

 

 

தேநீர் அருந்திவிட்டு ஹரீஷ் ஆசிரியர் அறைக்கு சென்றபோது அங்கே இருந்தது அரவிந்த் மட்டும் தான்.

அரவிந்த், “சேர்மன் சார் என்ன சொன்னார்?” என்று கேட்டார். 

“என்ன நடந்ததுன்னு விசாரித்தார்.. திவ்யா கம்ப்ளைன்ட் கொடுத்தால் அக்சன் எடுப்பேன்னு சொன்னார், ஆனா அவ கம்ப்ளைன்ட் கொடுக்கலை” 

“ஆச்சரியம் தான்” 

“திவ்யா கம்ப்ளைன்ட் கொடுக்காததா?” 

“ஹ்ம்ம்” 

“சேர்மன் சாரும் அப்படி தான் சொன்னார்” 

“ஒருவேளை பெருசா எதுவும் யோசிக்கிறாளோ?” 

“எனக்கு அப்படி தெரியலை” என்றான் யோசனையுடன். 

“எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க” 

யோசனையில் இருந்து கலைந்தவன் சிறு கிண்டலான புன்னகையுடன், “ஒரு ஸ்டுடென்ட் கிட்ட சார் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்றதை இங்கே தான் கேட்கிறேன்” என்றான். 

அரவிந்த் புன்னகையுடன், “என்ன பண்றது! நிலைமை அப்படி” 

“திவ்யா அப்பாவிற்கு தெரிந்தால் சும்மா விட மாட்டார்னு சேர்மன் சார் சொன்னார்.. அவளை பற்றி உங்களுக்கு தெரியுமா? ஐ மீன் ஃபமிலி பற்றி!” 

“திவ்யா பெரிய இடம் தான்” 

அவன், ‘அப்படியா!’ என்பது போல் பார்த்தான். 

“சொர்ணம் கோல்ட் ஷாப் அண்ட் RR டிரெஸ் ஷாப் ஓனர் பொண்ணு..” 

“கேள்வி பட்டிருக்கிறேன் ஆனா பெருசா தெரியாது.. நிறைய இடத்தில் கிளைகள் இருப்பது தெரியும்” 

“எங்க வீட்டில் அங்க தான் கோல்ட் வாங்குவாங்க அதனால் தெரியும்.. கோல்ட் ஷாப் என் தாத்தா காலத்தில் இருந்தே இருக்குது.. ரொம்ப நாணயமான நம்பிக்கையான பேமஸ்ஸான கடைனு வீட்டில் சொல்லி கேட்டிருக்கிறேன்.. டிரெஸ் ஷாப் என் அப்பா காலத்தில் ஆரம்பித்தது.. அதுவும் பேமஸ் தான்” 

“ஓ” 

“பெரிய இடம்.. கோடீஸ்வரி தான்.. ஆனா என்ன பிரச்சனைனு தெரியலை, ஆரம்பத்தில் இருந்தே ஹாஸ்டலில் தான் இருக்கிறா.. சேர்மன் சார் அவளுக்கு ரிலேடிவ்னு தெரியும் ஆனா என்ன உறவுனு யாருக்கும் தெரியாது..

இதில் வேடிக்கை என்னனா அவளை கேட்டால், சேர்மன் சார் ரிலேடிவ் இல்லைனு சொல்லுவா.. ஒரு முறை அவளோட அப்பாவை கூட யாரோ போல் பேசி கேட்டிருக்கிறேன்.. அவள் ஒரு புரியாத புதிர் தான்..” 

ஹரீஷ் அமைதியாக இருக்கவும், அரவிந்த், “ஹரீஷ்” 

இரண்டு முறை அழைத்த பிறகே, “ஹ்ம்ம்.. என்ன?” என்றான்.

“என்ன யோசனை?” 

“அது.. சேர்மன் சார் பற்றி யோசித்தேன்” 

“என்ன?” 

“திவ்யா அவருக்கு என்ன உறவுனு அவரிடம் கேட்டேன்”

“என்ன!!!” 

“ஏன் இவ்ளோ ஷாக்?” 

“எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி தான், ஆனா யாரும் இதுவரை அவரிடம் கேட்டது இல்லை.. ஆனா யாரும் தப்பா பேசியது இல்லை.. நீங்க கேட்டதுக்கு அவர் என்ன சொன்னார்?” 

“அவர் பதில் சொல்றதுக்கு முன்னாடி திவ்யா வந்து, ஸ்டுடென்ட் சேர்மன் உறவுனு சொன்னா.. அப்புறம் பேச்சு மாறிடுச்சு” 

“சரி உங்களை பற்றி சொல்லுங்க” 

“என்னைப் பற்றி சொல்லிக்கிறதுக்கு பெருசா ஒன்றுமில்லை” 

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க!” 

“ஹரீஷ்-னே கூப்பிடுங்க” 

“ஓகே..” என்றவன், “உங்களை பற்றி சும்மா சொல்லுங்க பாஸ்” என்றான் புன்னகையுடன். 

ஹரீஷ் அமைதியான குரலில், “நான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.. சேர்மன் சார் நடத்தும் டிரஸ்ட் மூலம் தான் பி.இ படித்தேன்.. அப்புறம் வேலை பார்த்துட்டே எம்.இ படித்தேன்.. ரெண்டு வருஷம் XXX காலேஜில் வேலை பார்த்தேன்.. இப்போ இங்கே.. எனக்குனு சொல்லிக்க என் பிரெண்ட் நந்தகுமார் மட்டும் தான்” 

“அப்போ நான் யாரு?” 

தன்னை பற்றி சொன்னதும் ‘ஆசிரமம்மா’ என்பது போல் பார்வையில் கூட விகல்பம் காட்டாமல் உரிமையுடன் பேசிய அரவிந்தை அவனுக்கு பிடித்தது.

ஹரீஷ் புன்னகையுடன், “நீங்களும் என் தோழன் தான்” என்றான். 

“அது! நான் இங்கே வந்து ஒன் இயர் ஆகுது.. இதுக்கு முன்னாடி ரெண்டு வருஷம் YYY காலேஜ்ஜில் வேலை பார்த்தேன்.. ஒரே பையன்.. அப்பா அட்வோகேட்.. அம்மா ஹோம் மேக்கர்.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்காங்க.. இங்கே என் வேவ் லென்த்க்கு செட் ஆகுறது போல் க்ளோஸ்னு யாரும் இல்லை.. எல்லோருடனும் ஜஸ்ட் ஹாய்-பை ரிலேஷன் தான்.. பட் உங்களுடன் வேவ் லென்த் செட் ஆகும்னு தோணுது” என்றவன் கையை நீட்டியபடி, “பிரெண்ட்ஸ்” என்றான்.

ஹரீஷ் புன்னகையுடன் கை குலுக்கி, “பிரெண்ட்ஸ்” என்றான்.

“அப்போ ஒருமையிலேயே பேசலாமா!” 

“பேசலாமே” 

“நீ ஏன் சேர்மன் சார் கிட்ட அந்த கேள்வியை கேட்ட?” 

“ஏன்?” 

“வந்த அன்னைக்கே கேட்டு இருக்க! அதுவும் என்குவெரிக்கு போன போது.. ஆக்சுவலி நான் கிண்டல் பண்ண போது சேர்மன் பொண்ணா இருந்தாலும் அடித்து இருப்பேன்னு நீ சொன்னியே! அந்த தைரியம் தான் என்னை இம்ப்ரெஸ் பண்ணிச்சு.. இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்..” 

ஹரீஷ் புன்னகைக்கவும், அரவிந்த், “முதலில் நீ அமைதின்னு நினைத்தேன்” என்றான். 

“ஏன்?” 

“காலையில் இருந்து நீ எவ்ளோ பேசிட்ட சொல்லு!” 

புன்னகையுடன், “தேவைனா மட்டும் தான் பேசுவேன், ஆனா பிரெண்ட் கிட்ட அப்படி இல்லை” என்றான். 

புன்னகையுடன், “நான் அமைதிலாம் இல்லை, ஜாலி டைப்.. ஆனா வம்பு பேசுறவங்க கிட்ட அளவோட பேசுவேன்..” என்ற அரவிந்த், “நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே” என்றான். 

“கேட்கணும் தோனுச்சு கேட்டேன்” என்றான் சிறு தோள் குலுக்கலுடன். 

“சரி காலையில் என்ன நடந்தது?” 

ஹரீஷ் நடந்ததை கூறியதும், அரவிந்த், “இருந்தாலும் நீ கை நீட்டியது கொஞ்சம் அதிகம் தான்.. உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ” என்றான். 

“ட்ரை பண்றேன்” என்றவன், “மதியம் முதல் பிரியட் கிளாஸ் இருக்குது.. அதுக்கு கொஞ்சம் பிரிப்பர் பண்ணணும்” என்றான். 

“என்னை வாயை மூடுனு சொல்ற” என்று அரவிந்த் புன்னகையுடன் கூற,

ஹரீஷும் புன்னகையுடன், “தெரிந்தால் சரி” என்றான்.

இருவருக்கும் நடுவே அழகான நம்பிக்கையான நட்பு உருவானது. இருவரும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

 

இங்கே இவர்களுக்குள் நட்பு உருவான நேரத்தில் நம்ம திவி என்ன செய்தாள் என்று பார்ப்போம் வாங்க…

Advertisement