Advertisement

விலகல் 10

அந்த வெள்ளை சட்டைக்காரன் அகன்றதும்,

“அவனை சும்மா விடக் கூடாது மச்சி”, 

“என்ன தைரியம்! சீனியரை அடிச்சு இருக்கிறான்! கண்டிப்பா சும்மா விடக் கூடாது” 

“அதானே! அவனை சஸ்பெண்டு பண்ண வைக்கணும்” என்று மற்ற மாணவர்கள் கூற,

கோபத்தை கட்டு படுத்திக் கொண்டு நின்ற திவ்யாவிடம் விஜய், “என்ன பண்ணலாம் திவி?” என்று வினவினான்.

பவித்ரா, “ஒண்ணும் பண்ண வேண்டாம்” என்று கூற,

மற்ற மாணவர்கள், “நீ சும்மா இரு” என்று கோபத்துடன் கூறினார்.

பவித்ராவும் கோபத்துடன், “நீங்க சும்மா இருங்க டா” என்றவள் விஜய் பக்கம் திரும்பி, “இவளுக்கு இருக்கும் பிரச்சனைகள் போதாதா?” என்றாள். 

திவ்யா தோழியை முறைக்க அவளோ, “என்ன முறைப்பு! நீ தான் ஆரம்பிச்ச” என்றாள். 

“என்னடி ஆரம்பிச்சேன்? பெயரை தானே கேட்டேன்!” 

“பேச்சு பேச்சா இருந்திருக்கணும்! நீ கையை நீட்டின அவரும் நீட்டினார்” 

“அப்போ என்னை அடிச்சது சரினு சொல்றியா?” 

“இல்லை.. ஆனா முதல் தப்பு உன்னிடமிருந்து ஆரம்பிச்சுதுனு சொல்றேன்” 

“அப்போ அன்னைக்கு அவன் பேசியதிற்கு நான் அடிச்சு இருக்கணும்” 

“முடிந்ததை பற்றி பேசாதே.. இப்போ கிளாஸ் போகலாம் வா” 

அப்பொழுது ஒருவன், “இதை சும்மா விட்டால் திவி கெத்து என்னாகுறது!” என்றான். 

அவனை கடுமையாக முறைத்த பவித்ரா, “அந்த கெத்தை வைத்து ஒண்ணும் பண்ண முடியாது.. படிப்பு தான் சோறு போடும்.. இது வரைக்கும் காமிச்ச கெத்தே போதும்..” என்றவள், “திவி நீ இப்போ கிளாஸ்க்கு வர” என்றாள்.

திவ்யா யோசனையுடன் கிளம்ப, விஜய் மெல்லிய குரலில், “என்ன திவி?” என்றான்.

அவளும் மெல்லிய குரலில், “முதலில் அவனை பற்றி விசாரி.. பெயர் என்ன? எந்த டிபார்ட்மென்ட்னு கண்டு பிடிச்சு சொல்லு.. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றாள்.

“சரி” என்றதும் அவள் முன்னால் தோழியுடன் இணைந்து நடக்க, பின்னால் மாணவர்கள் வந்தனர்.

ஒருவன் விஜயிடம், “பவிக்கு இவ்ளோ கோபம் வருமா?” என்று கேட்டான். 

“திவி விஷயத்தில் மட்டும் வரும்” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

“என்னடா! அதை ரசனையுடன் சொல்றது போல் இருக்குது!” 

“ஒரு டஷும் இல்லை.. அவ எனக்கு நல்ல தோழி மட்டும் தான்.. நீ மூடிட்டு வா” 

“பார்க்கலாம்.. பார்க்கலாம்” என்று மெல்ல முணுமுணுக்க, விஜய் முறைக்கவும் பல்லைக் காட்டி சிரித்தான்.

விஜய் ‘நீ என்னமும் சொல்லிக்கோ!’ என்பது போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

அனைவரும் வகுப்பிற்கு வந்தனர்.

திவ்யாவின் அமைதியில் கலவரமடைந்த பவித்ரா, “திவி” என்று அழைத்தாள்.

அவள் யோசனையில் இருக்கவும், அவள் கையை சிறிது உலுக்கினாள்.

திவ்யா, “என்னடி?” 

“என்ன ரொம்ப தீவிரமா யோசிக்கிற?” 

“எல்லாம் அந்த விருமாண்டியை பத்தி தான்” 

“விருமாண்டியா!” 

“ஹ்ம்ம்.. அவன் கேரக்டரை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கிறேன்.. அவனை சரியா புரிஞ்சுக்க முடியலை.. நீ சொன்னது போல் இன்னைக்கு நான் தான் ஆரம்பிச்சேன் ஆனா அன்னைக்கு நான் தெரியாம இடிச்சதுக்கு அவனது ரியாக்சன்! ஏதோ பொண்ணுகளை வெறுப்பவன் போல் முகத்தை கடுமையா, கோபமா, வெறுப்பா வைச்சிட்டு நான் வேணும்னு இடிச்ச மாதிரி திட்டினான்.. ஆனா நான் அந்த மாமியோட ஆளிடம் பேசியதையும், பாப்கார்ன் கொட்டியதையும் பார்த்து சிரித்தான்..

இன்னைக்கு நாம கூப்பிட்டதும் அவன் வந்து நின்ன விதம், செம மாஸ்ஸா இருந்துது.. அப்புறம்.. பெயரை கேட்டதுக்கு முறுக்கிக்கிட்டான்.. அலட்டிக்காம அலட்சியத்துடன் பேசினான்.. நான் டீயை ஊத்தியதும் கோபத்துடன் என்னை அடிச்சான்…..” என்று பேசிக் கொண்டே போனவள் பவித்ரா வாயை திறந்தபடி தன்னை பார்த்துக் கொண்டிருக்கவும், “என்னடி?” என்றாள். 

“இப்போ உன்னை தான்டி என்னால் புரிஞ்சுக்க முடியலை” 

“ஏன்?” 

“அவர் மேல் செம்ம கோபத்தில் இருப்பன்னு நினைத்தேன்.. ஆனா நீ!” 

“அது என்ன அவர்னு மரியாதையா சொல்ற?” 

“அதுவா வருது” 

திவ்யா முறைக்கவும், பவித்ரா, “இப்போ இதுவா முக்கியம்! கேட்டதுக்கு பதிலை சொல்லுடி” என்றாள். 

“அவன் மேல் கோபம் இல்லைனு யாரு சொன்னா?” 

“அப்புறம்!!!” 

“அவன் மேல் கோபம் இருந்தாலும் அதையும் மீறி என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறான்!!!” 

பவித்ரா அமைதியாக பார்க்கவும், அவள் மீண்டும், “என்னடி?” என்றாள். 

“இன்னைக்கும் இந்த ரணகளத்திலும் சைட் அடிச்சு இருக்க!” 

“அது முதல்ல தான் அப்புறம் தான் அவன் என்னை டென்ஷன் படுத்த ஆரம்பிச்சுட்டானே!” 

“அதில் உனக்கு ரொம்ப வருத்தம் போல!” 

“அப்படியெல்லாம் இல்லை” 

“எனக்கு ஒரு டவுட்” 

“என்ன?” 

“பெயரை சொல்லாமல் உன் பெயரை கேட்டதுக்கு ஏன் டென்ஷன் ஆன?” 

“தெரியலை.. அன்னைக்கு அவன் பேசியது.. பெயரை கேட்டதுக்கு அலட்சியத்துடன் முறுக்கிக் கிட்டதா இருக்கலாம்” 

“ஒருவேளை பெயரை தெரிந்துக்க முடியலைனு டென்ஷனோனு நினைத்தேன்!” 

ஒரு நொடி யோசித்தவள், “இருக்கலாம்” என்று தோளைக் குலுக்கினாள். 

அவளது பதிலில் ஒரு நொடி மௌனமான பவித்ரா பின், “எதுக்குடி விருமாண்டினு பெயர் வச்ச?” 

“அவன் வெறப்பா நின்னு பேசியதை பார்த்து அப்படி தான் தோணுச்சு” என்றவள், “ஏன் பவி! நான் பொண்ணு மாதிரி நடந்துக்கிறது இல்லையா? அவன் ஏன் அப்படி சொன்னான்?” என்று வினவிய போது அவள் குரலில் சிறு வருத்தமும் கலக்கமும் இருந்தது.

“அப்படியெல்லாம் இல்லைடி.. அது சும்மா கோபத்தில் சொல்றது.. நீ அவரை அடிக்க கை ஓங்கிய கோபத்தில் சொல்லியிருப்பார்” 

“நிஜமா!!!” 

“என் திவி தைரியமான பொண்ணுடா” 

“ஹ்ம்ம்.. நானாவா அடிக்க கை ஓங்கினேன்! அவன் அடிச்சதும் தானே! சில திமிர் பிடித்த பெண்கள் இருக்காங்க தான், ஆனா ஒரு பொண்ணு ஆணை எதிர்த்து சண்டை போட்டாலோ அவனை அடிச்சாலோ யோசிக்காம அவ பொண்ணு இல்லை.. ராங்கி! அடங்கா பிடரி.. பஜாரி.. எக்ஸட்ரா எக்ஸட்ரானு சொல்லிடுறாங்க! ஏன் பாரதி கண்ட புதுமை பெண் என்று யோசிக்கிறது இல்லை! என்ன சமுதாயமோ!” என்றவள் ஒரு நொடி இடைவெளி விட்டு “ஆனாலும் அவன் கோபத்தில் கொஞ்சம் வார்த்தையை விட தான் செய்றான்.. கொஞ்சம் முன் கோபக்காரனா இருப்பான் போல” என்றாள்.

பவித்ரா பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி, “இன்னைக்கு நீ கொஞ்சம் வித்யாசமா தான்டி தெரியுற!” என்றாள். 

“ஏன்?” 

“கோபத்தை மீறி அவர் குணத்தை ரொம்பவே ஆராய்ச்சி பண்ற! கடந்த அஞ்சு வருஷமா மத்தவங்க உன்னை பற்றி சொல்றதுக்கு நீ மதிப்பு கொடுத்ததே இல்லை ஆனா இன்னைக்கு பீல் பண்ற! சமுக கருத்து வேற சொல்ற!” 

திவ்யா சிறு தோள் குலுக்கலை அதற்கு பதிலாக கொடுத்தாள்.

அப்பொழுது தங்ககுமார் உள்ளே வந்தார்.

பவித்ரா, “இன்னைக்கும் க்ரிப்டோக்ராபி(CRYPTOGRAPHY) கிளாஸ் இல்லையா!” என்றாள். 

“இது க்ரிப்டோக்ராபி ஹவரா!” 

“ஆமா.. முதல் நாள் இவர் அந்த ஹவரில் வந்த போது இவர் தான் எடுக்க போறாருன்னு நினைத்தேன்” 

“நீ இன்னுமா இந்த நொந்த குமாரை நம்புற!” 

“ஏன்டி?” 

“பின்ன! ஈஸியான பேப்பரையே பாதி செமினார் கொடுத்து போர்ஷனை முடிக்கிற ஆளை பார்த்து கஷ்டமான பேப்பரை எடுக்க சொல்ற!” 

“க்ரிப்டோக்ராபி கஷ்டமான பேப்பரா!” 

“இந்த ஆளுக்கு கஷ்டம் தான்.. அதுலயும் லேப் வேற இருக்குதே!” 

அப்பொழுது தங்ககுமார், “அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது என்ன பேச்சு!” என்று திவ்யாவை பார்த்து கேட்டார்.

அவள் அறியா பிள்ளையை போல் முகத்தை வைத்துக் கொண்டு, “அப்போ கிளாஸ் நடத்துரப்ப பேசலாமா சார்?” என்று கேட்டாள். 

அவர் முறைத்துவிட்டு வருகை கணக்கெடுப்பை தொடர்ந்தார்.

வருகை கணக்கெடுப்பை முடித்ததும், ஒரு மாணவன், “நெக்ஸ்ட் ஹவரும் நீங்க தானா சார்?” என்று கேட்டான். 

“ஏன் கேட்கிற!” 

“நல்ல தூங்கலாமே அதான்” 

அவர் முறைத்துவிட்டு, “நெக்ஸ்ட் ஹவர் க்ரிப்டோக்ராபி” என்றுவிட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்தார். 

“கண்ணகி கசின் பிரதர்னு நினைப்பு” என்று விஜய் அருகில் இருந்தவன் கூற,

விஜய், “விடு மச்சி.. நம்மை ஒன்னும் செய்ய முடியாததை இப்படி முறைத்து சமாளிக்கிறார்” என்றான். 

 

அந்த வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்தது. இவர் வெளியே சென்றதும் உள்ளே தகவல்மறைப்பியல்(CRYPTOGRAPHY) ஆசிரியர் உள்ளே வந்தார்.

பவித்ரா நெஞ்சை பிடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். அவளது பதற்றத்தை கண்ட திவ்யா தண்ணீரை பருக கொடுத்தபடி, “என்னாச்சு பவி? முதல்ல தண்ணியைக் குடி” என்றாள்.

விஜயுடன் பேசியபடி எழுந்த திவ்யாவின் கவனம் பவித்ரா இருக்கையில் விழுந்த சத்தத்தில் அவளிடம் திரும்பியதில் உள்ளே வந்த ஆசிரியரை கவனிக்கவில்லை.

தண்ணீர் அருந்திய பின்னரும் பேய் அறைந்தது போல் இருந்த பவித்ராவை உலுக்கிய திவ்யா, “குட் மார்னிங் பிரெண்ட்ஸ்” என்ற குரலில் சட்டென்று திரும்பி பார்த்தாள். ஆசிரியரை பார்த்ததும் சிறிது அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இடத்தில் அமர்ந்தாள்.

ஆம் வந்திருந்தது அந்த வெள்ளை சட்டைக்காரன் தான்.

திவ்யாவின் முகபாவனையை ஓரப்பார்வையில் பார்த்தவன் பார்வையை திருப்பிக் கொண்டு, “அம் ஹரீஷ்.. உங்களுக்கு க்ரிப்டோக்ராபி அண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி பேப்பரும் செக்யூரிட்டி லேப்பும் எடுக்கப் போறேன்” என்றான்.

விஜய் மனதினுள், ‘நல்ல வேளை ‘டா’ சொல்லலை’ என்று நினைத்துக் கொண்டான்.

அவன் அருகில் இருந்த மாணவன், “இப்போ என்ன பண்றது மச்சி?” 

“எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா!” 

“திவி கூட சேர்ந்து நீ தான் டா நிறைய பார்த்த! இப்படி ஒரு வாரம் வராமல் இருந்து, ஐடி கார்டையும் போடாமல் வந்து நம்மளை வம்பில் மாட்டி விட்டுட்டாரே!” என்று பயத்துடன் புலம்ப,

இன்னொருவன், “இந்த ஹவர் முடிஞ்சதும் பிரேக்கில் நேரா போய் அவர் காலில் விழுந்திர வேண்டியது தான்” என்றான். 

விஜய், “ஏன்டா இப்படி பயப்படுறீங்க!” 

“நீ ஏன்டா சொல்ல மாட்ட! உன்னை காப்பாத்த திவி இருக்கா” 

“உங்களுக்கும் பிரச்சனை வர விடமாட்டா.. அது போக நாம எதுவும் பண்ணலை.. அவர் சார்னு தெரிந்து பண்ணலை, ஸோ சாரி கேட்டா விட்டிருவார்” 

“திவியை அடித்ததை பார்த்துமா இப்படி சொல்ற!” 

“அதை நினைத்தால் தான்டா கவலையா இருக்குது! அவ வேற இவரை அடிக்க கை ஓங்கிட்டா! இதுக்கு முன்னாடி வேற…………………..” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அவனை சுட்டுவிரலால் எழும்ப சொன்ன ஹரீஷ், “இங்கே ஸ்டேஜில் வந்து பேசினால் எல்லோரும் கேட்கலாம்” என்றான்.

அவன் அமைதியாக இருக்கவும், ஹரீஷ் ‘என்ன?’ என்பது போல் பார்த்தான். 

‘மனுஷன் பார்வையிலேயே மிரட்டுறாரே!’ என்று மனதினுள் கூறியவன் வெளியே, “சாரி சார்” என்றான்.

அவனை அமருமாறு செய்கையில் சொன்னவன் வருகை கணக்கெடுப்பை ஆரம்பித்தான். மாணவர்கள் வரிசை-எண் சொல்லி அழைக்காமல் பெயரை சொல்லி அழைத்தான்.

பிறகு, “பொதுவா நான் முதல் நாளில் வகுப்பை ஆரம்பிக்க மாட்டேன், ஆனா ஏற்கனவே ஒரு வாரம் நாம பின்தங்கி இருப்பதால் இன்றே வகுப்பை தொடங்கலாம்” என்றான். 

ஒரு மாணவன், “இன்ட்ரோ கூட வேணாமா சார்?” என்றான். 

ஹரீஷ், “உன் பெயர் தினேஷ் தானே!” என்றான்.

அந்த மாணவன் ஆச்சரியத்துடன் பார்க்கவும் ஹரீஷ், “அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது உங்க பெயரை தெரிந்துகிட்டேன்.. இப்போ வகுப்பை ஆரம்பிக்கலாம்” என்று கூறிவிட்டு வகுப்பை தொடர்ந்தான்.

அவன் திவ்யா குழுவினரை தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை. அவன் சுவாரசியமாக பாடம் எடுத்த விதத்தில் வகுப்பில் இருந்த அனைவருமே பாடத்தை கவனித்தனர்.

பவித்ரா ஒருவாறு சுதாரித்து பாடத்தில் கவனத்தை செலுத்த, அவன் குணத்தை பற்றிய ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கியிருந்த திவ்யாவும் பாடத்தில் மூழ்கினாள்.

அவன் வகுப்பு முடிந்ததும் வெளியே சென்றுவிட்டான். விஜயும் காலையில் அவனுடன் இருந்த மாணவர்களும் திவ்யாவின் இடத்திற்கு வந்தனர்.

ஒருவன், “திவி வா.. சார் கிட்ட சாரி கேட்டுட்டு வரலாம்” என்றான். 

திவ்யா, “நீங்க போயிட்டு வாங்க” 

விஜய், “திவி நீயும் வா” 

“நீங்க போயிட்டு வாங்க” என்று அவள் அழுத்தத்துடன் கூற, விஜய் பவித்ராவிடம் கண் ஜாடை காட்டினான்.

‘ஆமா நான் சொன்னா மட்டும் மறுபேச்சின்றி கேட்டிடுவா!’ என்று மனதினுள் நினைத்த பவித்ரா, “திவி.. ப்ளீஸ்டி.. எனக்காக வா” என்று கெஞ்சினாள்.

திவ்யா அமைதியாக இருக்கவும், “நீ சும்மா வந்து நின்னா போதும்.. நாங்க சாரி கேட்கிறோம்..” என்றாள்.

மற்றவர்களும், “ஆமா திவி.. நீ சும்மா வந்து நின்னா போதும்” என்று கூறினர்.

பவித்ரா மீண்டும், “ப்ளீஸ்டி.. வா” என்று கெஞ்சினாள்.

ஒருவாறு கெஞ்சி திவ்யாவை அழைத்துக் கொண்டு ஆசிரியர் அறையை நோக்கி சென்றனர்.

 

 

குப்பை முடித்துவிட்டு ஆசிரியர் அறைக்கு சென்ற ஹரிஷுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர் மற்ற ஆசிரியர்கள்.

அவன் புரியாமல் பார்க்கவும், தங்ககுமார், “இப்போ தான் சார் விஷயம் தெரிந்தது..” என்றார். 

ஹரீஷ் ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.

ஒருவர், “நீங்க சான்சே இல்லை சார்” என்று கூற,

தங்ககுமார், “காலையில் சட்டையில் தண்ணி கொட்டிருச்சுனு சொல்லி என்னை கிளாஸ் போக சொன்ன போது கூட எப்படி தண்ணியாச்சுனு சொல்லலையே சார்!” 

ஹரீஷ், “இதெல்லாம் வெளியே சொல்ற விஷயமா சார்!” 

தங்ககுமார், “என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க! ரெண்டு பிளஸ் பாயிண்ட் இருக்குது.. ஒண்ணு, உங்களை பார்த்து ஸ்டுடென்ட்னு நினைத்து இருக்காங்க.. அது உங்களுக்கு காம்ப்ளிமென்ட் தானே! அதை விட பெரிய விஷயம் அந்த ராணி மங்கம்மாவை அடித்து இருக்கீங்க!” 

“அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா?” 

“இன்னைக்கு தானே வந்திருக்கீங்க! அதான் அவளை பற்றி உங்களுக்கு தெரியலை.. அவ சேர்மன் ரிலேடிவ்..” என்று ஆரம்பித்து திவ்யாவின் அருமை பெருமைகளை பற்றி சுருக்கமாக கூறியவர், “HOD சாரையே வெளியே அனுப்பிட்டா” என்று கூறி அதற்கு காரணமான சம்பவத்தை பற்றி சொன்னார்.

ஒரு ஆசிரியர், “திமிர் பிடித்தவள் சார்” 

“எனக்கு அப்படி தெரியலை” என்ற ஹரிஷின் மனம் அவளை பார்த்த மற்ற சம்பவங்களை அசை போட்டது.

இன்னொரு ஆசிரியர் சிறு நக்கல் குரலில், “சேர்மன் ரிலேடிவ்னு சொன்னதும் சப்போர்ட் பண்றீங்களா சார்! அவ சேர்மன் ரிலேடிவ்னு தெரிந்திருந்தால் அடிச்சிருக்க மாட்டீங்க தானே!” என்றார்.

ஹரீஷ் தீர்க்கமான குரலில், “சேர்மன் மகளாவே இருந்தாலும் அடிச்சிருப்பேன்” என்றபோது திவ்யா குழுவினர், “எக்ஸ்கியுஸ் மீ சார்” என்றனர்.

தங்ககுமார், “என்ன?” 

விஜய், “ஹரீஷ் சாரை பார்க்க வந்தோம்” 

தங்ககுமார் நக்கலாக சிரிக்க, அவரை மனதினுள் திட்டுக் கொண்டே ஹரீஷ் அருகே சென்றனர்.

அவன் ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.

திவ்யாவை தவிர மற்றவர்கள், “சாரி சார்.. நீங்க சார்னு தெரியாமல் அப்படி பண்ணிட்டோம்.. சாரி சார்” என்றனர்.

“ஸ்டுடென்ட்ஸ் லைஃப்-பில் ராகிங் சகஜம் தான்.. சும்மா ஜாலிக்காக பண்ணீங்க.. அதை விடுங்க.. ஆனா மன்னிப்பு கேட்க வேண்டிய ஆள் வாயை திறக்கவே இல்லையே!” என்றவனின் பார்வை திவ்யாவிடம்.

அவளும் நேர்பார்வையுடன் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பவித்ரா தோழியின் கையை பற்றி, “சொல்லுடி” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

சில நொடிகள் இருவரும் சளைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிறகு திவ்யா தீர்க்கமான குரலில், “உங்க மீது டீயை ஊத்தியதிற்கு மட்டும் சாரி கேட்டுக்கிறேன்” என்றாள்.

ஹரீஷ் அவள் சொல்ல வருவது புரியாமல் புருவம் உயர்த்த, அவள் தோளை குலுக்கினாள்.

அடுத்த நொடியே அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் ஒரு நொடி ஹரீஷ் இதழோரம் சின்ன புன்னகை தோன்றி மறைந்தது. அவனது புன்னகையை கண்ட திவ்யாவின் கண்களின் ஒரு நொடி ஆச்சரியம் வந்து போனது. அதை ஹரீஷ் கவனிக்க தவறவில்லை.

இருவரின் முகபாவனையை மற்றவர்கள் அறியவில்லை.

ஹரீஷ் சிறு தலை அசைப்புடன் கையை வெளியே காண்பிக்கவும் திவ்யா குழுவினர் கிளம்பினர்.

இணைய காத்திருப்போம்…

Advertisement