Advertisement

இந்த டீல் முடிந்து விடும் என உறுதியாக நினைத்து அவன் எத்தனை திட்டமிட்டான் என்பது மெலிசாவுக்குத் தெரியும். அதனால் கொஞ்சம் இடைவெளி விடும் பொருட்டு “காஃபி கொண்டு வரவா பாஸ்?” எனக் கேட்டார்.

“ம்ம்ம்…”  என்றவன்,   “அப்படியே நம்ம ஜெனெரல் மேனேஜர் சந்தீப்பையும் வரச் சொல்லுங்க.  அவர்கிட்டக் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு”

தன் அலைபேசியை எடுத்து ப்ரியம்வதாவை அழைத்தான். ஏனோ அவள் குரலைக் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் முழுதாக இரண்டு முறை மணி ஒலித்து ஓய்ந்தும் அவள் எடுக்கவில்லை. இறுதியில் வீட்டு எண்ணிற்கு அழைத்தான்.

“ஹல்லோ!”

“யாரு கந்தனா?”

“ஆமாங்கையா”

“அம்மாவைக் கூப்பிடு”

“அவங்க வீட்டுல இல்லைங்கையா… கார் எடுத்துட்டு வடபழனி கோயிலுக்குப் போய் இருக்காங்க”

“பெரியப்பா?”

“அவர் உள்ளே படுத்திருக்காருங்கையா”

“சரி” 

வைத்து விட்டவனுக்கு சுறுசுறுவெனக் கோபம் வந்தது. 

‘கோவில்… சாமி… பஜனை… இருபத்தி நாலு வயதில் சாமியாராகப் போகிறாளா? எதற்கு இப்படி செய்கிறாள்?’ 

கணவனைச் சுற்ற வேண்டிய வயதில் கடவுளைச் சுற்றும் நிலைக்குத் தள்ளியதே அவன்தான் என்பது சற்றும் உறைக்கவில்லை அவனுக்கு. என்னவோ கணவனாக அவன் அவளிடம் உருகுவது போலவும் அவள் அவனைத் தவிர்த்து பக்தியில் ஈடுபடுவது போலவும் கற்பனை செய்து கொண்டான்.

அதற்குள் காஃபி வரவும் குடித்ததும் தலைவலி கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.

மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினான். 

இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பிய ப்ரியம்வதா கணவன் அலைபேசியில் அழைத்திருப்பதைப் பார்த்தாள். அலைபேசியை வீட்டில் மறந்து வைத்து விட்டுப் போன தன் மடத்தனத்தை எண்ணிக் கொண்டே கணவனை அழைத்தால் அவன் எடுக்கவில்லை. 

மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவும் மெலிசா எடுத்து “பாஸ் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கார் மேம்” என்று தெரிவித்தார்.

சரி வேலை முடிந்து அவனே அழைப்பான்… பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டாள். ஆனால் மாலை வரை விஜய்  அழைக்கவேயில்லை. 

மாலை அவன் கிளம்பவே நேரம் ஆகி விட்டது.போக்குவரத்து நெரிசலில் வேறு சிக்கி வீட்டுக்கு வந்து சேரும் போது  வழக்கத்தை விட அதிக நேரம் ஆகி விட்டிருந்தது.

உண்டு முடித்து அறைக்கு வந்து சேர்ந்தான். உடம்பு கழுவி உடை மாற்றி அவன் குளியறையை விட்டு வெளியே வந்த போது தொலைக்காட்சியில் ஏதோ பக்தி பாடல் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் கொஞ்சம் குறைந்திருந்த எரிச்சல் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.

ரிமோட்டை எடுத்து அலைவரிசையை மாற்றினான்.

அதுவரை ஒரு நாளும் அவன் அவ்விதம் செய்து பார்த்தறியாத ப்ரியம்வதா ஆச்சர்யப்பட்டாலும் ‘ஏதோ டிவி பார்க்கத் தோன்றி இருக்கிறது போல’ என நல்ல விதமாகவே நினைத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள். 

அவள் வெளியே வந்த போது ஏதோ ஒரு காதல் பாடல் அதுவும் கதாநாயகனும் கதாநாயகியும் மிக நெருக்கமாக இருக்கும் காட்சி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டாள்.

அவளது அன்றைய உடை வேறு அவளுக்குக் கொஞ்சம் சங்கடம் தருவதாக இருந்தது. 

காலையில் தினமும் கோவிலுக்குச் செல்வதால் குளித்த பின் அழுக்குத் துணிகளைத் தொட மனம் இல்லாமல் காலை குளிக்கும் முன் அழுக்குக் கூடையில் போட மறந்தும் விட்டதனால் அவளது துணிகள் நிறையவே சேர்ந்து விட்டன. அன்று காலையில்தான் குளிக்கப் போகும் முன் எல்லாவற்றையும் எடுத்துத் துவைக்கப் போட்டாள்.

எப்போதும் அணியும் இரவு உடைகள் அழுக்கில் இருக்க காஷ்மீர் சென்ற போது அவன் வாங்கிக் கொடுத்த பனியன் துணியினால் ஆன  மேல் மற்றும் கீழ் உடைகளை அணிந்து கொண்டு வெளியே வரத் தயக்கமாக இருந்தது அவளுக்கு. 

எப்போதும் போல் அவன் அவள் புறம் பார்க்கப் போவது இல்லை பின் எதற்குத் தயக்கம் என நினைத்து அந்த உடையை அணிந்து கொண்டு மேலே ஒரு துவாலையைப் போர்த்திய வண்ணம் வந்தாள். 

அந்த உடை கொஞ்சம் உடலோடு ஒட்டிக் கொண்டு உடற்கட்டைக் கவர்ச்சியாகக் காட்டுவதாக அமைந்திருந்தது. கணவனே ஆனாலும் இயல்பாகக் குடும்பம் நடத்தாத போது கண்ணியக் குறைவான உடை அவளுக்கு மனச்சங்கடத்தைக் கொடுத்திருந்தது.  அதனாலேயே இயல்பாகப் போடுவதைப் போல் அந்த துவாலையைப் போர்த்தி இருந்தாள். ஆனால் அப்படிப் போர்த்தி இருந்ததே அவனுடைய ஆர்வத்தைத் தூண்டி இருந்ததை அவள் அறியாள். 

உடைமாற்றும் மேஜை முன் அமர்ந்தவள் கொண்டை இட்டு இருந்தாலும் குளித்ததால் ஈரமாக இருந்த பின்னந்தலை முடிகளைத் துடைப்பதற்காகத் தலையை விரித்து விட்டாள். துடைத்த பின் மீண்டும் கூந்தலைக் கொண்டையிட்ட பின் அதைச் சுற்றிப் போடுவதற்காகத் தனது ஹேர்பேண்டைத் தேடியவள் அது கீழே விழுந்திருப்பது கண்டு அதை எடுக்கக் குனிந்தாள். 

பின்னந்தலையைத் துடைப்பதற்காக இழுத்ததால் ஒரு பக்கம் சிறிய அளவிலேயே இருந்த அந்தத் துண்டு அவள் குனிந்ததும் அவள் தோளில் இருந்து விழுந்தது. ஈரத்தினாலும் அந்தத் கெட்டியான டர்க்கி துணியின் கனத்தினாலும் அடுத்த தோளில் இருந்த பகுதியும் விழுந்தது. 

அவசரமாகக் குனிந்து எடுத்தவளின் பார்வை முதலில் கண்ணாடி வழியாகக் கணவனைச் சென்றடைந்தது. அவன் பார்த்து விட்டானா அல்லது அவன் கவனம் தொலைக்காட்சியில் இருக்கிறதா எனப் பார்க்கத்தான் அவள் அவனைப் பார்த்தது. 

அவனோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு உள்ளுக்குள் உதறலெடுத்தது. 

தான் வேண்டுமென்றே அவனைக் கவர்வதற்காகச் செய்ததாக நினைத்துக் கொள்வானோ என நினைத்தவளுக்கு அந்தத் துண்டை மீண்டும் மேலே போட வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. 

கணவனின் கண்கள் அவளை அப்படிக் கட்டிப் போட்டிருந்தன. 

அவள் மீதிருந்து பார்வையை எடுக்காமலே கையிலிருந்த ரிமோட்டைப் பயன்படுத்தி தொலைக்காட்சியை அணைத்தவன் எழுந்து அவள் பின் வந்து நின்றான்.

கண்ணாடியின் வழியாகவே அவள் மீதிருந்த பார்வையை விலக்காமல் அவளது தோளில் கை வைத்தவன் தோள்களை கெட்டியாகப் பற்றி எழுப்பி நிற்க வைத்தான்.மெல்ல அவள் இடையைச் சுற்றிக் கையைப் படர விட்டவன் காலால் அவள் அமர்ந்திருந்த ஸ்டூலை நகர்த்தி விட்டு அவளோடு நெருங்கி உடல் உரச நின்றான். 

அவளுக்கு உடலெங்கும் நடுக்கமெடுக்க ஆரம்பித்திருந்தது. முதல் இரவு முடிந்திருந்தாலும் கணவனைப் பெரிதாக அறியாத நிலையில் அந்த நிகழ்ச்சி ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே அவளுக்கு இருந்தது.

இப்போது திருமணமாகி மூன்று மாதங்கள் கழிந்து விட்ட நிலையில் கணவன் மேல் காதலும் அன்பும் பெருக்கெடுத்தோடி அதைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் அவனைத் தவிர்க்க நினைத்து அவள் கடவுளைச் சரணடைந்தால்… அந்தக் கணவனே மீண்டும் வந்தவளை அணைத்ததில் அவள் நிலைகுலைந்து போயிருந்தாள்.

கண்ணாடியில் அவர்களின் இணைந்திருந்த பிம்பத்தைக் காணக் கண்கள் கூசின அவளுக்கு. 

கண்களை இறுக மூடிக் கொண்டாள். 

அவனது சூடான சுவாசம் அவள் பிடரிப் பகுதியில் சாமரம் வீசியது. இதழ்கள் அவளது கழுத்து வளைவில் புதைந்தன. அவனது கைகளோ அவள் இடையில் இன்னிசை மீட்ட ஆரம்பித்தன. இது நேரம் வரை சுய பலத்தில் நின்றிருந்தவள் இப்போது கால்கள் தொய்ய அவன் மீது முழுதுமாகச் சாய்ந்தாள்.

சாய்ந்தவளை அப்படியே அள்ளித் தூக்கியவன் படுக்கையில் சென்று படுக்க வைத்து அருகிலேயே அமர்ந்து அவள் முகம் பார்க்கக் கண்களை இறுக மூடி இருந்தவள் மெல்லக் கண்களைத் திறந்த போது அவன் முகம் அவள் முகத்தை நெருங்கி இருந்தது.

மீண்டும் கண்களை மூடியவளின் ரோஜா வண்ண இதழ்களை அவனது வலிய உதடுகள் ஸ்பரிசித்தன. இரண்டு ஜோடி இதழ்களும் தங்கள் இணையைக் கண்டு விட்ட இன்பத்தில் இழைந்து கொண்டிருக்க அவன் கரங்களோ அவள் கன்னத்தையும் கழுத்தையும் வருடிக் கொடுக்க ஆரம்பித்தன. 

அந்த இன்ப அவஸ்தை தாளாமல் அவளிடமிருந்து மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவளது அந்த முனகல் அவன் மோகத் தீயை மேலும் விசிறி விட அதற்குத் தகுந்தாற் போல் அவன் இதழ்களின் அழுத்தம் கூடியது.

இதழ்களின் இடையில் இடைவெளியை அனுமதிக்காமல் அவனும்… இடைவேளை கேட்க இஷ்டப்படாமல் அவளும் முத்த யுத்தத்தில் மொத்தமாய்த் தங்களை இழந்திருக்கக் காளையவன் கைகள் கட்டுப்பாட்டை மீறி மங்கையவள் மேனியில் சுதந்திரமாக அலைய ஆரம்பித்தன.

அவள் மேனியின் மென்மையில் தன்னைத் தொலைத்திருந்த நேரத்தில் அவனது கைபேசியில் அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்து அவனை சுய உணர்வுக்கு மீட்டது. 

ஒரு திடுக்கிடலுடன் தன் முகத்தை மனைவியிடம் இருந்து நிமிர்த்தியவன் தான் சொன்னதற்கும் தன் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாது இருப்பது கண்டு தன்னைத்தானே நொந்து கொண்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு விரைந்து சென்று அலுவலக அறைக்குள் புகுந்தான்.

அங்கிருந்த ஜன்னலுக்கு அருகில் சென்று அதன் கம்பிகளை இறுக்கமாகப் பற்றியவன் பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்துத் தன்னைச் சமனப்படுத்த முயற்சி செய்தான்.

ஆனால் என்ன முயன்றும் மனையாளால் முடுக்கி விடப்பட்டிருந்த உணர்வுகளால் முறுக்கேறி இருந்த நாடி நரம்புகள் பேயாட்டம் ஆடிக் கொண்டு அவன் வசம் திரும்ப மறுத்தன. 

மீண்டும் படுக்கையறை நோக்கிச் செல்லத் துடித்த கால்களைக் கடிவாளமிட்டு அடக்கியவன் தன் வலது கையால் சுவற்றில் ஓங்கிக் குத்தினான். அந்த வலியினாலும் அவன் உணர்வுகள் வசப்பட மறுத்தன.

காலையில் முக்கியமான ஒப்பந்தம் கைமீறிப் போன ஆத்திரம்…பின் மனைவி அழைப்பை ஏற்கவில்லை என்பதால் ஏற்பட்ட ஏமாற்றம்…அலுவலகக் குளறுபடிகளால் ஏற்பட்ட மனச்சோர்வு…வீடு திரும்ப வழக்கத்துக்கு மேல் அதிக தாமதம் ஆனதால் ஏற்பட்ட கோபம்…போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட எரிச்சல் என அன்று முழுவதுமே அவனது உணர்ச்சிகள் வடிகால் இல்லாமல்  அலறிக் கொண்டிருந்தன. 

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் அழகு தேவதையான மனைவியிடம் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டை மீற முடியாமலும் அதே சமயம் உணர்வுகளின் தாக்கத்தையும் தாள முடியாமலும் ஒரு கட்டத்தில் தலைக்குள் ஏதோ பொங்கிப் பெருகும் உணர்வில் தன்னிலை மறந்து மயங்கிச் சாய்ந்தான்.

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலைத் தீட்டுவான்
காரணம் ஏதுமின்றிக் காட்சியை மாற்றுவான்

Advertisement