Advertisement
மணமகள் வீட்டில்…
அங்கும் இங்கும் ஓடி வேலைகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா…மணமகள் ப்ரியம்வதாவின் முதல் தங்கை… தங்களின் அறைக்குள் நுழைந்ததும் திடுக்கிட்டு அப்படியே நின்றாள்.
அந்த 700 சதுர அடி கொண்ட இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய சிறிய வீட்டில்… தங்களுக்கான படுக்கை அறையில்… தரையில் விரிக்கப்பட்ட பாயில்… தனது வரவேற்புக்கான உடைகள் மற்றும் நகைகள் கடைபரப்பப்பட்டிருக்க, கொஞ்சமும் தெளிவில்லாத முகத்துடன் அமர்ந்திருந்த ப்ரியம்வதாவின் அருகில் வந்தாள் மதுமிதா.
“என்னக்கா! நீ இன்னும் தயார் ஆகல?”
“ம்ம்ம்…ஆகணும்”
“என்னக்கா! அலுப்பாப் பேசுறே!”
“அலுப்புன்னு இல்ல மது…கொஞ்சம் பயம்மா இருக்கு”
தன்னை விட இரண்டே வயது இளையவளான மதுவிடம் எப்போதுமே தன் உணர்வுகளை எளிதாகப் பகிர்ந்து கொள்வாள் ப்ரியம்வதா.
ப்ரியம்வதா…ரவிச்சந்திரன்…மீனலோசினியின் மூத்த மகள்…அவளுக்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மதுமிதா… மதுவுக்குப் பின் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் தீக்ஷிதா.
தீக்ஷிதா சிறு பெண் என்பதால் ப்ரியம்வதாவும் மதுமிதாவும் அவளுக்குப் பார்த்துப் பார்த்து செய்வார்கள்…ஆனால் பேச்சு என்று வந்தால் “நீ சிறு பெண் உனக்கு எதுவும் தெரியாது” என அவளை ஓரம் கட்டி விட்டு இவர்கள் இருவரும் சேர்ந்து கொள்வார்கள்.
கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தது அவர்கள் குடும்பம். லோயர் மிடில் க்ளாஸ் என்று சொல்வார்களே…அந்தப் பிரிவு…
ரவிச்சந்திரன் பெரிய குடும்பத்தில் மூன்று பெண்களுக்கு மூத்தவராகப் பிறந்தவர். அதனால் சிறு வயதிலேயே கூடுதல் பொறுப்புக்களைச் சுமக்க நேரிட்டதில் அவரால் படிக்க இயலாமல் போனதில்… இப்போது ஒரு சிறிய பள்ளி உபயோக பொருட்கள் விற்கும் கடை வைக்கும் அளவிற்கே முன்னேறி இருந்தார்.
பிறந்ததும் மூன்றும் பெண் பிள்ளைகள் என்பதால் சேமிப்பு என்பது அவர்களிடம் அதிகம் கிடையாது. கிடைத்த வேலைகளைப் பார்த்து மெய்வருத்தம் பாராமல் உழைத்ததில் மூன்று பெண்களையும் நன்றாகப் படிக்க வைப்பது ஒன்றுதான் அவரால் செய்ய முடிந்திருந்தது.
ப்ரியம்வதா நன்றாகப் படித்துப் பட்டப்படிப்பு முடிந்ததும் வங்கிக்கான தேர்வு எழுதிப் பணியில் அமர்ந்த பிறகுதான் அவர்கள் குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்தது.
செக்ரெடேரியேட் கோர்ஸ் தேர்ந்தெடுத்துப் படித்த மதுமிதாவும் இப்போது ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் பணிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள்.
தீக்ஷிதா கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள்.
ப்ரியம்வதாவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்த மது அவள் கைகளைப் பற்றிக் கொண்டு… “இப்போ என்ன பயம் உனக்கு?”
“இந்த உடைகளையும் நகைகளையும் பாரேன் மது…இதோட விலையை உன்னால் கணக்குப் போட முடியுதா?”
“ஏன் கணக்குப் போடணும்? அதுதான் எல்லாத்துலயும் ப்ரைஸ் டேக் இருக்குதே? கூட்டிப் பார்த்தா தெரியப் போகுது”
“ச்சு…நான் சொல்றது உனக்குப் புரியல மது”
“புரியுதுக்கா…ரொம்பப் பணக்காரங்கன்னு நினைச்சு பயப்படுறே! அதுதானே!”
“ம்ம்ம்…தெரியாம சம்மதம் சொல்லிட்டேனோன்னு ஒரே தவிப்பா இருக்குது மது”
அவள் கண்களை நேராகப் பார்த்தாள் மதுமிதா… “வேற வாய்ப்பு இருந்ததா நீ நினைக்கிறியா?”
“ம்ம்ம்…இல்லைதான்…இருந்தாலும்…”
“அதெல்லாம் இழுக்காதே! உனக்கு அத்தானைப் பிடிச்சுருக்கா இல்லையா?”
“பிடிச்சுருக்கு மது…ஆனா…அவருக்கு? நிச்சயத்துக்கு முன்னால பேசினதுதான்…இது வரை ஒரு ஃபோன் கூடப் பண்ணல…”
“அவருக்கு வேலை அதிகம் அக்கா! அவரே சொன்னார்னு நீதானே சொன்னே!”
“சொன்னேன்…ஆனாலும்”
“நீ விட்டா இப்படியேதான் பேசிக்கிட்டு இருப்பே!முதல்ல எழுந்திரு…இன்னும் கொஞ்ச நேரத்துல பியூட்டி பார்லர்ல இருந்து ஆட்கள் வந்துருவாங்க…நீ தேவையானது எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பி” என அவளை எழுப்பி விட்டதும் அல்லாமல் அவளை நிற்க விடாமல் வேலை வாங்கித் திருமண மண்டபத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தாள்.
………………………………………….
நகரின் மிகப் பெரிய திருமண மண்டபம்…பின், இருபத்தி ஏழு வயதில்… இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பிசினெஸ் மேக்னேட் விஜய் ஆதித்யாவின் திருமணம் என்றால் சும்மாவா!
அரசியலில் முக்கியமான புள்ளிகள், திரை உலகப் ப்ரமுகர்கள், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் எனக் கல்யாண மண்டபமே கலகலத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் அதிகாலை முகூர்த்தம் என்பதால் பெரும்பாலானோர் மாலை வரவேற்பிற்கே வருகை புரிந்திருந்தனர்.
சாம்பல் நிற ப்ளேசர்…அதே நிற கால் சராய்…வெள்ளை வெளேரென்ற மாசுமருவற்ற வெண்மை நிறத்தில் சட்டை… அணிந்து கம்பீரமாக மேடைக்கு வந்தவன்…அப்போதுதான் மேடையின் அடுத்த பக்கத்தின் படிகள் வழியாக மேடை ஏறிய ப்ரியம்வதாவைப் பார்த்தான்.
மின்னல் வானை விட்டுக் கீழிறங்கி வந்து விட்டதோ என்னும் படியாகக் கண்ணைப் பறிக்கும்படி இருந்தது அவள் தோற்றம்.
முழு நிலவையொத்த வட்ட முகம்…பிறை நிலவென நெற்றி…வில்லாய் வளைந்த புருவங்கள்…வெண்ணிற ஐஸ்க்ரீமில் கிடக்கும் கருந்திராட்சையை ஒத்த கண்கள்…பன்னீர் பூவைக் கவிழ்த்து வைத்தது போல் நாசி…மாம்பழத்தை இரண்டாக வெட்டி வைத்தது போன்ற அழகான பொன்னிறக் கன்னங்கள்… கன்னங்களை இணைக்கும் பாலம் போல… லிப்ஸ்டிக்க்கின் உபயத்தால் அடர் சிவப்பு நிறத்தில் ரோஜா மலர் போன்றே காட்சியளித்த அதரங்கள்… அழகான மோவாய்… கடைந்தெடுத்த சிற்பம் போன்ற உடல் அமைப்பு…
காப்பர் சல்ஃபேட் நிறத்தில் தங்க ஜரிகைப் பொட்டுக்கள் வைத்த பாவாடை,தங்க ஜரிகை துணியில் ரவிக்கை… பாவாடையின் அதே நிறத்தில் மெல்லிய துணியில் தாவணி… கை… காது… கழுத்து… ஏன்… தலையின் பூவிலும் கூட காப்பர் சல்ஃபேட் நிறம் கொண்ட நூல் அலங்காரம் என கடல்கன்னி போல் எழிலுற நின்றவளைக் கண்டதும் அருகில் சென்று அவள் கைகளைப் பற்றினான்.
கண்கள் கனிவுற “யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் ட்ரெஸ்” எனவும் அன்று காலை முதல் அவள் கொண்டிருந்த சஞ்சலங்கள் அனைத்தும் துணி கொண்டு துடைத்தது போல் மறைய…அவள் முகம் அந்தி வானம் போல் சிவக்க அதை சுற்றிலும் இருந்த அத்தனை கோணங்களிலும் கேமராக்கள் விடாது சிறைப்பிடித்தன.
இது விருந்தினர்களுக்காக வைக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சி என்பதால் சடங்கு சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை…வருகை புரிந்தவர்கள் அனைவரும் மேடை ஏறித் தங்கள் பரிசை அளித்து விட்டு வாழ்த்துக் கூறிச் சென்றனர்…ஒரு சில முக்கியஸ்தர்கள் மட்டும் ஒலிப்பெருக்கியில் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
பெரும்பாலும் தன்னை வாழ்த்த வந்த பெண்களின் கண்களில் பொறாமையைக் கண்ட ப்ரியம்வதா கொஞ்சம் கர்வத்துடன் தன்னவனை நோக்கினாள்…அதே நேரம் அவனும் அவள்புறம் திரும்பவும் இருவர் கண்களும் சந்தித்தன…
என்ன என ஒற்றைப் புருவம் தூக்கி அவன் வினவிய அழகில் இன்னும் மயங்கியவள் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டி விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்… அவனும் மென்மையாகச் சிரித்து விட்டு அடுத்து மேடையில் ஏறியவர்களை வரவேற்கத் தயாரானான்.
வரவேற்பு நிகழ்ச்சி இனிதாக நிறைவுற்றது…காலை நாலரை மணிக்கு முகூர்த்தம்…இப்போதே நேரம் ஆகி விட்டது.
ப்ரியம்வதாவின் அருகில் வந்த அவள் தாய் மீனலோசினி… “ப்ரியாம்மா…எல்லோரும் வந்துட்டுப் போய்ட்டாங்களா… இனி ரூமுக்குப் போகலாமான்னு மாப்பிள்ளைகிட்ட கேளு…அப்போதான் ஒரு ரெண்டு மணி நேரமாவது தூங்க முடியும்”
யாரோ தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தவனை ஏறிட்டுப் பார்த்தாள்…அவள் பார்ப்பதை ஒருவர் பார்த்து விட்டு விஜய்யிடம் கூற அவள் அருகே வந்தான்.
“அவ்வளவுதானா! இனி ரூமுக்குப் போகலாமா?”
சுற்றிலும் ஒரு முறை பார்த்தவன்… “அப்படித்தான் நினைக்கிறேன்… எதற்கும் ஒரு நிமிடம்” என்றவன் தன் கைபேசியில் அவன் பெரியப்பாவை அழைத்து விவரங்கள் கேட்டான்…பின் அவளிடம் திரும்பி… “அவ்வளவுதான்…இனி நீ போய் ஓய்வெடுத்துக்கோ…காலையில் பார்க்கலாம்” என்று விட்டு மீண்டும் அவர்களிடம் சென்று விட்டான்.
அதிகாலை… சுபவேளை…
மாப்பிள்ளை மணவறையில் கம்பீரமாகக் காத்திருக்க… தங்க நிறப் பட்டில்… தாழம்பூ நிற மேனியாள்… தாள் பார்த்து நடந்து வந்து… தலை குனிந்தமர… கண்ணபிரானின் ஏற்பாட்டின் படி தேவாரமும் திருவாசகமும் பாடி இறுதியில் மாங்கல்ய தாரணத்தின் போது,
“மாது நல்லாளும் மணாளனும் இருந்திட
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளைத் துணை பெய்ய வல்லீரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடையாமே”
என்ற திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஓதுவார்கள் பாட கெட்டி மேளம் கொட்ட… நாதஸ்வரம் இசைக்க… பெரியவர்கள் ஆசி வழங்க…
“செங்கமலத் திறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்டு
மங்கல நாணினை மணிகளம் ஆர்த்து
நங்கை முடிகொர் நறுந்தொடை சூழ்ந்தான்”
என்ற பாடலைப் பாடியபடி சைவசமயப் பெரியவர் மங்கல நாணை விஜயாதித்தன் கையில் கொடுக்க அவன் அதை ப்ரியம்வதாவின் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சுக்களை இட “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என மணமகளின் பெற்றோர் தாரை வார்த்துக் கொடுக்க… தமிழ் முறைப்படி இருமனம் இணையும் திருமணம் இனிதே நிறைவேறியது…
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க
கொட்டியது மேளம்
குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்
மனை வாழ்க! துணை வாழ்க! குலம் வாழ்க!
தொடரும்