Advertisement
விடிந்தும் விடியாமலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தங்கள் வீட்டுக்கு வருகை புரிந்து இருக்கும் அர்ஜுனையும், அவனின் தாயையும் கண்ட யாழினிக்குக் கண்களே தெறித்து விடும் நிலை!!
வீட்டை சுற்றி போடப்பட்டு இருக்கும் ஜாகிங் ட்ராக்கில் ஓடிக் கொண்டு இருந்தவள், அர்ஜுனின் கார் உள்ளே வருவதைக் கண்டு, காரை விட்டு இறங்குபவர்களை நோக்கி ஓடி வந்தவள், மூச்சு வாங்க, “வாங்க ஆன்ட்டி! வா அர்ஜுன்!” என்று சந்தோஷத்துடன் வரவேற்றாள்.
வந்தவர்களை ஹாலில் அமர வைத்தவள், பெற்றோருக்கு இண்டர்காம் மூலம் விஷயத்தைச் சொல்லி விட்டு, வேர்வையில் குளித்து இருக்கும் தன் உடையை மாற்ற நினைத்து, “கிவ் மீ டூ மினிட்ஸ், நான் இப்போ வந்திடுறேன்” என்று சொல்லி வீட்டுப் பணியாளை அழைத்து வந்தவர்களை உபசரிக்கச் சொல்லி விட்டு, தன்னறை நோக்கிச் சென்றாள்.
மகளின் அறிவிப்பில், “இவங்க எதுக்கு இப்ப இங்கே வந்து இருக்காங்க??” என்று வேறு வேறு விதத்தில் கணவனைக் குடைந்து கொண்டு இருந்தார் சுபத்ரா.
“என்னைக் கேட்டா, எனக்கு மட்டும் என்ன தெரியும்? கீழே போய் அவுங்ககிட்டயே கேட்கலாம் வா!” என்று மனைவியை அழைத்துக் கொண்டு கீழே சென்றார் ராகவன்.
“வா வா அர்ஜுன்!” என்று பின்னிருந்து கேட்ட குரலில் எழுந்த நின்ற அர்ஜுன் ராகவனை அணைத்து, “எப்படி இருக்கீங்க அங்கிள்?” என்றான்.
“யா! ஐ அம் குட்!” என்று அவனிடம் சொன்னவர், “சிட்! சிட்!” என்று சொல்லி விட்டு, “நீங்க எப்படி இருக்கீங்க?” என்று வசுந்தராவிடம் கேட்டார்.
அவ்வளவு நேரமும், அந்த இடத்தைச் சுற்றிலும் தன் பார்வையை ஓட்டிக் கொண்டு இருந்தவரோ, ராகவனின் வார்த்தைகளில் தன்னிச்சையாக அவர் புறம் திரும்பி, “நான் நல்லா இருக்கேன்” என்று சொல்லி விட்டு, “உங்க மகன் எங்கே? வீட்டில் இல்லையா?” என்று கேட்டார்.
‘அவனை எதுக்கு இவுங்க கேட்கிறாங்க?’ என்று எண்ணிய போதும், “அவன் ஆபீஸ்க்குக் கிளம்பிக்கிட்டு இருக்கான்” என்ற தகவலைக் கொடுத்தார் சுபத்ரா.
“அப்போ அவன் வீட்ல தான் இருக்கானா?” என்று எண்ணிக் கொண்ட வசுந்தரா, உடனே தன் கைப்பேசியில் இருந்து ஒரு குறுஞ்செய்தியை யாருக்கோ அனுப்பினார்.
“டீ, காபி ஏதாவது சாப்டுறீங்களா?” என்ற சுபத்ரா கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதே, அங்கே ஜூஸ் கப்புகளுடன் வந்து சேர்ந்தார் பணியாள் ஒருவர்.
அவரைக் கண்ட சுபத்ராவுக்குப் புரிந்து போனது, பொண்ணோட வேலை இது என்று! ஆனால் அவரால் ஏனோ பொண்ணின் பொறுப்பை எண்ணிச் சந்தோஷம் தான் பட முடியவில்லை.
“எடுத்துக்கோங்க!” என்று ராகவனின் உபசரிப்புக்காக அதை வேறு வழியின்றி எடுத்துப் பருகினார் வசுந்தரா.
“இவ்ளோ மார்னிங் வந்து இருக்கீங்கன்னா கண்டிப்பா ஏதாவது முக்கியமான விஷயமாத்தான் இருக்கும். என்ன விஷயம் அர்ஜுன்???” என்றவரின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு, அதற்கான பதில் தெரிந்தால் தானே சொல்வான்??
காலையில் அவன் எழுந்ததுமே வசுந்தரா, “ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும். என்னுடன் வா!” என்று இங்கே அழைத்து வந்து இருந்தார்.
“இவ்ளோ காலையில் அவுங்க வீட்டுக்கு எதுக்கு மாம்?” என்று வரும் வழியில் ஆயிரம் முறையாவது கேட்டு இருப்பான் அர்ஜுன். ஆனால் அதற்கு அவர் சொன்ன ஒரே பதில், “அங்கே போன பிறகு உனக்கே அது தெரியும்!” என்பது மட்டுமே.
ராகவனிடம் என்ன சொல்வது என்று புரியாது தன் தாயை அர்ஜுன் திரும்பிப் பார்த்த நொடி, அதைச் சரியாக உள்வாங்கியவரோ, “உங்க மகனைக் கொஞ்சம் கீழே வரச் சொல்றீங்களா?” என்றார்.
அதைக் கேட்ட ராகவனின் பார்வை இப்பொழுது வசுந்தராவைக் கூர்மையாகப் பார்த்து, “எதுக்கு??” என்று கேள்வி கேட்க வைத்திருந்தது.
“அவரை வரச் சொல்லுங்க.. உங்களுக்கே அதுக்கான காரணம் தெரிய வரும்” என்றார் வசுந்தரா ஒருவித அழுத்தத்துடன்.
அதன் காரணம் அறிய விரும்பியவரும் மறுக்காது மனைவியின் புறம் திரும்பி, “ஹர்ஷாவை வரச் சொல்!” என்றார்.
‘என்ன நடக்குது இங்கே?’ என்று புரியாத போதும், கணவனின் பேச்சு கேட்டு மகனுக்கு அழைத்து, அவனை உடனே கீழே வரும்படி சொன்னார் சுபத்ரா.
ஹர்ஷாவுக்கு முன் அங்கே துள்ளலுடன் காசுவல் ஜீன்ஸ் அண்ட் டீஷர்டுக்கு மாறி ஹாலுக்கு வந்த யாழினிக்கு, அங்கே நிலவிய பேரமைதி எதையோ அறிவுறுத்த, தாயின் அருகில் சென்று அமர்ந்தவள், “வாட் ஹாப்பெண்ட் மாம்?” என்று அவரின் காதைக் கடித்தாள்.
அர்ஜுனைப் பிடிக்காது, தாய் ஏதாவது அவனைச் சொல்லி விட்டாரோ என்ற எண்ணம் அவளுக்கு!
ஆனால் அவரோ, ‘யாருக்குத் தெரியும்?’ என்ற ரீதியில், சற்று முன் அங்கே நடந்தை அவளிடம் கூற, அவளுக்கு ஒன்றுமே புரியாத நிலை! இருந்தும் வசுந்தரா ஒன்று சொன்னால் அதற்குப் பின் ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று நம்பியவள், மற்றவர்களைப் போல அமைதியாகத் தன் அண்ணனின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
லிப்ட் கதவு திறக்கத் தாயை நோக்கி வந்த ஹர்ஷா, அங்கே அமர்ந்து இருப்பவர்களைக் கண்டு ஒரு நிமிடம் ஜெர்க்காகி, பின் தன்னைத்தானே சுதாரித்துக் கொண்டு, கேசுவலாக அங்கே தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்.
ஆனால் அவன் அறியாதது, அவனின் அந்தச் சின்ன ஜெர்க்கை கூட வசுந்தராவின் கழுகு பார்வை கவனித்து விட்டது என்று..
“என்ன மாம் எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்றவன், அப்பொழுது தான் அர்ஜுனைப் பார்ப்பவன் போல, “ஹாய் அர்ஜுன்!” என்றான். அதற்கு அர்ஜுன், “ஹாய் ஹர்ஷா!” என்றதும், அவனுக்கு அடுத்து அமர்ந்திருந்த வசுந்தராவைப் பார்த்து, “ஹவ் ஆர் யூ ஆன்ட்டி?” என்று கேட்டான்.
“ம்ம்ம்.. குட்!” என்றவர் அவனையே உற்றுப் பார்த்தவாறு, “ரீசென்ட்டா உன்னுடைய கார் ஆக்சிடென்ட் ஏதாவது ஆச்சா?” என்று நேரடியாக அவனிடம் கேள்வி கேட்க,
அதற்கு அவன் பதில் சொல்லும் முன், “எப்போ? எங்கே? உனக்கு ஏதும் அடிபட்டுச்சா ஹர்ஷா?” என்று மகனைத் தடவி ஆராய்ந்து கேட்டார் சுபத்ரா.
“நோ மாம்!” என்றவன் அதையே வசுந்தராவுக்கும் பதிலாகக் கொடுத்தான்.
“ஒஹ்ஹ! ஐ சீ..” என்று தலையாட்டிச் சொன்னவர்,
“அப்புறம் எப்படி உன் தங்கச்சி நிச்சயதார்த்தத்திற்கு முந்தின நாள், காந்தி நகர்ல இருக்கிற மெக்கானிக் ஷாப்புக்கு, உன் கார் ரிப்பேர்க்குப் போச்சு??” என்று வலை விரித்துப் பார்த்தார்.
‘இந்த வலைக்குள் எல்லாம் சிக்குறவன் நானில்லை!’ என்று தெனாவெட்டாக வசுந்தராவைப் பார்த்தவன், “அங்கே நான் எதுவும் ரிப்பேர்க்கு விடலை” என்றான்.
“விட்டது நீன்னு நான் சொல்லவே இல்லையே ஹர்ஷா??” என்றவரின் வார்த்தை ஜாலத்தில் லேசாகத் திணறியவன், முயன்று அதை வெளிப்படுத்தாது, “ஐ மீன்.. என் கார் இல்லைன்னு.. அங்கே போகலைன்னு சொல்ல வந்தேன்” என்றான்.
“ஆர் யூ சூயர்?” என்றவரின் கூர் தீட்டிய பார்வையை ஏற்க முடியாதவனோ, வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டு “எஸ்!” என்றான்.
“இங்கே என்ன நடக்குது ஹர்ஷா?” என்று அங்கு நடக்கும் விவாதம் புரியாது ராகவன் மகனிடம் கேள்வி கேட்க,
“அதை ஏன் என்னிடம் கேட்குறீங்க டாட்? என்னை இப்படி நிற்க வைத்து குறுக்கு விசாரணை செய்ற அவுங்ககிட்ட கேளுங்க!” என்றான், சற்றுக் காட்டமாகவே ஹர்ஷா.
அதிலிருந்தே மகனின் கோபம் அறிந்தவரும், வசுந்தராவிடம் அதைக் கேட்கத் திரும்பிய நேரம், “எனக்கு ஆபீஸுக்கு டைம் ஆச்சு! நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து நகர முயன்றான் ஹர்ஷா.
“என் கேள்விக்குப் பதில் கிடைக்காமல், நீ இங்கேயிருந்து எங்கேயும் நகர முடியாது ஹர்ஷா!” என்று ஆணையிட்டுச் சொன்னார் வசுந்தரா.
அதில் அவரை உறுத்து விழித்தவன், “நீங்க யாரு என்னைக் கேள்வி கேட்க?” என்றான் அதிகார தோரணையில். அதற்கு அவரிடமிருந்து அசால்ட்டான பார்வையே பதிலாக வரவும், கடுப்பானவன், “டாட்! வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்..?? நம்ம வீட்டுக்கே வந்து என்னை இப்படி ட்ரீட் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?” என்று தந்தையிடம் எகிற ஆரம்பித்தான்.
மகனின் நிலை புரிந்த ராகவனும், அவனைத் தோள் தட்டி சமாதானப்படுத்தி அமர வைத்து, “உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு என் மகனை அக்யூஸ்ட் மாதிரி இப்படி கிராஸ் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?” என்று வசுந்தராவிடம் கேட்டார்.
“ஒரு அக்யூஸ்ட்டை அக்யூஸ்ட் மாதிரி கேள்வி கேட்காம வேற எப்படிக் கேட்க முடியும் மிஸ்டர்.ராகவன்?” என்றவரின் வார்த்தைகளில் ஹர்ஷாவின் மொத்த குடும்பமும் அதிர்ந்தது!
“மாம்! என்ன சொல்றீங்க?” என்ற அர்ஜுன் ஒருபுறமும்,
“ஆன்ட்டி! என்ன சொல்றீங்க? என் அண்ணன் அப்படி எதுவும் செய்து இருக்க மாட்டான்!” என்று யாழினி மறுபுறமும் கேட்ட போதும், அவர்களுக்குப் பதிலளிக்காத வசுந்தராவின் பார்வை ஹர்ஷாவிடமே நிலைத்து இருந்தது.
மகனின் மீது சுமத்தப்பட்ட குற்றம் தாங்காது, “ஹர்ஷா!” என்று அலறிய தாயின் குரல் நடுக்கத்தில், அவரைத் திரும்பிப் பார்த்த ஹர்ஷாவுக்கு அவரின் கலக்கம் கோபத்தை உண்டாக்கியதில், அவரை விடுத்து வசுந்தராவை நேருக்கு நேராகப் பார்த்தவன், “நான் குற்றம் செய்ததை நீங்க பார்த்தீங்களா? எந்த ஆதாரத்தில் என்னைக் குற்றவாளின்னு சொல்றீங்க?” என்று எகத்தாளமாகக் கேட்டவன்,
“ஒருவேளை உங்க மகனைக் காப்பாற்ற, ஏற்கனவே ரெண்டு பேரை பலி கொடுத்தது போல (அருணாச்சலம்,விஷ்வா) இப்போ என்னை இதில் பலிகடா ஆக்கப் பார்க்கிறீங்களா?” என்றான் நக்கலாக.
அதைக் கேட்டு ஆத்திரம் அடங்காது, “ஹர்ஷா! மைன்ட் யுவர் வேர்ட்ஸ்!” என்று எச்சரித்தான் அர்ஜுன்.
“அதை முதலில் உன் அம்மாகிட்ட சொல்லு! எந்த தைரியத்தில் என் வீட்டுக்கு வந்து என் மீது குற்றம் சுமத்திக்கிட்டு இருக்காங்க?” என்றவனின் கேள்விக்குத் தாயைத் திரும்பிப் பார்த்தவனோ, “என்ன மாம் இது?” என்று கேட்டான்.
மகனைக் கண் அசைவில் ‘பொறுமையா இரு!’ என்று செய்கை செய்து அடக்கியவரோ, ஹர்ஷாவின் புறம் திரும்பி, “உன் தங்கையோட நிச்சயதார்த்தத்திற்கு முந்தின நாள் நைட் நீ எங்கே போயிருந்த?” என்று கேட்டார்.
“அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!” என்று திமிராகவே பதிலளித்தான் ஹர்ஷா.
ஆனால் ராகவன், “அன்னைக்கு அவன் அவனுடைய ப்ரெண்டோட பார்ட்டிக்குப் போயிருந்தான்” என்று பதில் தந்தார்.
அதைக் கேட்ட ஹர்ஷா, “டாட்! இவுங்களுக்கு எல்லாம் நீங்க எதுக்குப் பதில் சொல்றீங்க?” என்று அவரிடம் எகிறினான்.
“ரிலாக்ஸ் ஹர்ஷா! ஐ தின்க் இது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ன்னு நினைக்கிறேன். நாம அவுங்களுக்கு கிளாரிபை பண்ணிட்டா, இதுக்கு இங்கேயே ஒரு புல் ஸ்டாப் வச்சுடலாம்ல??” என்று அவனைச் சாந்தப்படுத்த முயன்றார் ராகவன்.
“சாரி டூ சே திஸ் மிஸ்டர்.ராகவன்.. இதுல எந்த ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் இல்லை! உங்க மகன் அன்னைக்கு நைட் டிரிங் அண்ட் டிரைவ் பண்ணி, ஒரு ஆளை கார் ஏத்தி கொன்னு இருக்கார்” என்ற வசுந்தராவின் தகவலில் ஆடிப் போன ராகவன், “என்ன சொல்றீங்க?” என்று கேட்ட நேரம், “என் மகன் அப்படிப்பட்டவன் இல்லை” என்று வாதாடிய சுபத்ரா, தன் கலக்கம் தாங்காது தன்னருகில் இருந்த மகனின் சட்டையைப் பற்றி, “அப்படி எதுவும் நடக்கலை தானே ஹர்ஷா?” என்று நா தழுதழுக்க அவனை உலுக்கி, ‘இல்லை என்று சொல்! இல்லை என்று சொல்!’ என்று பரிதவித்தார்.
தாயின் இறைஞ்சலில் இறுகி போனவனோ, தன்னைத்தானே விரைப்பாக்கிக் கொண்டு, “மாம்! அவுங்க பொய் சொல்றாங்க” என்றான்.
அதைக் கேட்டு புத்துயிர் பெற்ற சுபத்ரா, கண்களைத் துடைத்துக் கொண்டு, “எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்! என் மகன் அப்படி எல்லாம் செய்கிறவன் இல்லைன்னு..” என்று மகனிடம் சொன்னாரா?? இல்லை அவருக்கு அவரே சொல்லிக் கொண்டாரா?? என்று தெரியாத நிலையில், கண்களில் தீப்பொறி பறக்க வசுந்தராவைப் பார்த்தவர், “எவ்வளவு தைரியமிருந்தா யாரோ செய்த தப்பை என் மகன் மீது சுமத்த பார்ப்பீங்க? எழுந்து முதல்ல வெளியே போங்க!” என்று கத்தினார்.
அவரைச் சமாதானப்படுத்த ராகவனும், யாழினியும் முயன்றும் அடங்காதவர், “என் மகன் மீது வீண் பழி போடுறாங்க, அதைப் பார்த்துக்கிட்டு என்னைச் சும்மா இருக்கச் சொல்றீங்களா?” என்று அவர்களின் மீதும் பாய்ந்தார் சுபத்ரா.
ஒரு தாயாக, அவரின் நிலையை வசுந்தராவால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால், இந்த உலகத்தில் இரண்டே தாய்மார்கள் தான் உண்டு!
ஒன்று, தப்பு செய்தது தன் பிள்ளை என்றாலும் அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது!
இரண்டாவது, தப்பு செய்தது தன் பிள்ளையே என்றாலும் அவனாக இருக்க மாட்டான் என்று நம்புவது!
இதில் வசுந்தரா முதல் ரகமென்றால், சுபத்ரா இரண்டாம் ரகமாக இருந்ததால் தானோ என்னவோ, வசுந்தராவால் அவர் மீது கோபப்பட முடியவில்லை.
அதன்பொருட்டு குரலை தாழ்த்தி, “இங்கே பாருங்க சுபத்ரா.. உங்க மகன் மீது நான் வீண் பழி போடலை. அவன் செய்த பாவத்தைத்தான் சொல்றேன்” என்றார்.
“இல்ல இல்ல, என் மகன் அப்படி எதுவும் செய்யலை. நீங்க பொய் சொல்றீங்க” என்றவரின் கைகளோ மகனின் கைகளை அணைத்து இறுக்கிக் கொண்டு இருந்தது.
தாயின் இறுக்கத்தில் இருந்தே அவரின் அச்சம் உணர்ந்த ஹர்ஷாவுக்கு, வெளியே சொல்ல முடியாத வலி ஒன்று உள்ளத்தைத் தைத்தது. அதில் அவரின் கைகளை விடுவித்துக் கொண்டு அவரை ஒருபக்கமாக அணைத்தவன், “மாம்! ரிலாக்ஸ் ரிலாக்ஸ்!” என்று அவரை ஆசுவாசப்படுத்த முயன்றான்.
அந்நேரம் வசுந்தராவின் போனில் ஒரு செய்தி வந்து மின்னவும், அதைப் படித்து உடனே அதற்கு ரிப்ளை செய்தவர், சுபத்ராவை நிமிர்ந்து பார்த்து, “உங்க மகன் தான் தப்பு செய்தான்றதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு!” என்று உரக்கச் சொன்னார்.
அதைக் கேட்டு ஹர்ஷா முதற்கொண்டு அங்கிருந்த அனைவரின் பார்வையும் வசுந்தராவில் நிலைகுத்தி நின்றது.
அதைக்கேட்ட சுபத்ராவின் மனமோ, இன்னும் அதிகமாக மத்தளம் கொட்ட ஆரம்பித்து விட்டது.
“ஆதாரம் இருக்கா? எங்கே?” என்று கேட்ட ராகவனின் குரலில் அதிக தடுமாற்றமே நிறைந்து இருந்தது.
“உங்க வீட்டுக்கு வெளியே இருக்கிறவர்களை உள்ளே விடச் சொல்லுங்க! அவுங்க கொடுப்பாங்க, உங்களுக்குத் தேவையான அந்த ஆதாரத்தை” என்றார் வசுந்தரா.
அவரின் சொல்படியே உடனே இண்டர்காமை எடுத்து கேட் செக்யூரிட்டியிடம் பேசினார் ராகவன். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த நால்வரில் ஒருவனாக இருந்த மெக்கானிக்கைக் காணவுமே, ஹர்ஷாவுக்கு லேசாக முகம் கறுத்துப் போனது.
அதைக் கண்டும் காணாதவரைப் போல, “அன்னைக்கு என்ன நடந்ததுன்னு இவுங்ககிட்ட சொல்லு!” என்றார் வசுந்தரா.
அதற்குத் தலையாட்டியவனும் அன்றைய சம்பவத்தை அங்கே இருந்தவர்களுக்கு ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.
அதைக் கேட்டு மற்றவர்கள் ஹர்ஷாவைக் கேள்வி கேட்கும் முன், “இது எல்லாம் பொய்! இந்த ஆளு இவுங்க செட் செய்த ஆள். டாட் என்னை இதுல மாட்டி விட ட்ரை பண்ணுறாங்க” என்று மறுப்பு தெரிவித்தான் அவன். அதைக் கேட்டு ராகவன் லேசாக குழம்புவதைக் கண்டுகொண்டவன், அதைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்ள எண்ணி, “சரி, அவுங்க சொல்றபடியே நான் தான் அந்த ஆக்சிடென்ட் செய்தேன்றதுக்கு இவனைத் தவிர வேற ஏதாவது சாலிட் எவிடென்ஸ் இருக்கா??” என்று கேட்டவன்,
“இந்த மாதிரி நூறு பேரை என்னாலும் இவுங்களுக்கு எதிராவே பொய் சாட்சியாக கொண்டு வந்து நிறுத்த முடியும்!” என்றான் சற்று எகத்தாளமாகவே. அதைக் கேட்ட போலீசார் அனைவருமே ஒருசேர வசுந்தராவைத்தான் வியந்து பார்த்தார்கள்.
பின்னே? நேற்று அவர் சொன்னது போலவே தானே இன்று இந்த ஹர்ஷாவும் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று அவர்கள் எண்ணி முடிக்கும் முன், “அப்போ நீ அந்த ஆக்சிடென்ட்டை பண்ணலை, அப்படித்தானே ஹர்ஷா??” என்று கேட்டார் வசுந்தரா.
“அதைத்தான் நான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கேன்” என்றான் ஹர்ஷா.
“ஒஹ்ஹ! ஐ சீ!” என்றவர் போலீசுடன் வந்திருந்த அருணுக்கு கண்ஜாடை காட்டினார்.
உடனே அவனும், தன் போனில் இருந்த ஒரு வீடியோவை ஹர்ஷா குடும்பத்தினருக்கு ஆன் செய்து காட்டினான்.
அதில் ஹர்ஷா சம்பவம் நடந்த அன்று, பின்னிரவில், வீட்டுக்கு டாக்சியில் வந்து இறங்குவது மிகத் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
“இதில் இருப்பது நீயா?? இல்லை இதுவும் நீ இல்லைன்னு சொல்ல போறியா??” என்று ஹர்ஷா கண்கள் தெறிக்க அந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, அவனிடம் கேட்டார் வசுந்தரா.
அவனின் மௌனமே அவருக்கான பதிலைக் கொடுக்கவும், “ஓகே, இப்போ சொல்லு! ஒன்பது சொகுசு கார் வைத்து இருக்கிற நீ ஏன் அன்னைக்கு நைட் வாடகை காரில் வீட்டுக்கு வந்த? உன்னுடைய கார் எங்கே?” என்ற வசுந்தராவின் கிடுக்குப்பிடியில் மாட்டிக் கொண்ட போதும், குற்றத்தை ஒத்துக் கொள்ள நினைக்காதவன், லேசான தடுமாற்றத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, “அது.. அது.. பார்ட்டி முடிச்சு என் ப்ரென்ட் அவனோட கார் ரிப்பேர் ஆனதால், ஒரு எமர்ஜென்சின்னு சொல்லி என்கிட்டே கார் கேட்டான். அதான் என் காரை அவனுக்குக் கொடுத்துட்டு நான் வாடகை காரில் வீட்டுக்கு வந்தேன்” என்றான்.
“வாவ்! வாட் ட ஸ்டேட்மென்ட்?!!” என்று கைத் தட்டிச் சொன்ன வசுந்தரா,
ஹர்ஷாவை கூர் தீட்டிய விழிகளால் நேருக்கு நேராகக் குத்திக் கிழித்தபடி, “இவ்ளோ தூரம் உன்னை நெருங்கி வந்த எனக்கு, நீ எப்படியெல்லாம் தப்பிக்க முயலுவேன்னு தெரியாமலா இருக்கும்??” என்று நக்கலாகக் கேட்டு விட்டு, “நீ சொன்னது எல்லாம் பொய்ன்னு நான் சொல்றேன்” என்றார் ஆணித்தரமாக.
“இல்லை இல்லை.. நான் சொல்றது தான் உண்மை!” என்று பதட்டம் நிறைந்த குரலில் பதறிக் கொண்டு சொன்னான் ஹர்ஷா.
அவனின் அந்த மாற்றங்கள் அவனின் குடும்பத்தாருக்கு வித்தியாசமாக இருந்தது.
ஏனென்றால், எதற்கும் அவ்வளவு சீக்கிரம் ரியாக்ட் பண்ணுபவன் ஹர்ஷா இல்லை. எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும், ரொம்பக் கூலாக அதை ஹாண்டில் செய்பவன் தான் அவன்! ஆனால் இன்று அவன் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் மாறுதலாக இருந்த போதும், ‘அவன் இந்தத் தப்பை செய்து இருக்க மாட்டான்!’ என்றே நம்பினர், அவனின் குடும்பத்தினர்.
“ஒஹ்ஹ அப்படியா?? அப்போ இதில் இருப்பது யார்?” என்று வசுந்தரா இன்னொரு வீடியோவை ஹர்ஷாவிடம் காட்டினார். அதைப் பார்க்கவுமே அவன் அரண்டு போனான்.
அதைக் கவனித்த அவனின் குடும்பத்தினர், ‘அப்படி என்ன இருக்கு அதில்?’ என்று நினைத்து, அவனிடமிருந்து அதை வாங்கிப் பார்த்து அதிர்ந்து போயினர்.
ஏனென்றால், அதில் தெளிவாக ஹர்ஷா எந்த காரை நண்பனுக்கு கொடுத்தேன் என்றானோ, அதே காருக்கு இரவில் பெட்ரோல் போட்டுக் கொண்டு இருந்தான், அதுவும் எங்கே.. சரியாக வசுந்தரா ஆக்சிடென்ட் நடந்தாகச் சொன்னாரோ அந்த இடத்துக்கு அருகில்.
“இப்போ இதுக்கு நீங்க என்ன விளக்கம் கொடுக்கப் போறீங்க மிஸ்டர்.ஹர்ஷா? அந்த காரில் இருப்பது நானே இல்லைன்னா?? இல்லை அது என்னுடைய காரே இல்லைன்னா?” என்று ஊடுருவி கேட்ட வசுந்தராவுக்கு ஹர்ஷா பதிலளிக்கவில்லை.
ஆனால் வசுந்தராவுக்கு அவனிடம் சொல்ல வார்த்தைகள் இருந்ததே! அதன்பொருட்டு, “சோ நீ அன்னைக்கு உன் பிரென்ட்கிட்ட வண்டியை கொடுத்தேன்னு சொன்னதும் பொய்! அந்த ஆக்சிடென்ட்டை நீ செய்யலைன்னு சொன்னதும் பொய்!
இப்போ உண்மையை நான் சொல்றேன். அந்த ஆக்சிடென்ட் பண்ணது நீ! அதை மறைக்க அந்த மெக்கானிக்குப் பணம் கொடுத்தது நீ! அந்த இடத்தைச் சுற்றி இருந்த இருந்த புட்டேஜை எல்லாம் ஹாக் பண்ணி அழித்தது நீ!
இதுக்கு எல்லாம் மேல, அந்த அப்பாவி பொண்ணு துளசியை கொன்னதும் நீ தான்!!!” என்று அங்கிருந்த அனைவரின் தலையிலும் இடியை இறக்கினார் வசுந்தரா.
அதில் ஸ்தம்பித்துப் போனது ஹர்ஷா மட்டுமில்ல அங்கிருந்த அனைவருமே தான்..!!
வசுந்தராவின் கடைசி குற்றச்சாட்டை ஏற்க முடியாது, தன் மொத்த குடும்பமும் “அவர் சொல்வது உண்மையா?” என்று உணர்வுகள் தொலைத்த முகத்துடன் தன்னைப் பார்க்கவுமே, ஹர்ஷா உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப் போனான்.
தன் உள்ளத்து வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், தனக்கு முன் இருந்த டேபிளின் பூச்சாடியைத் தூக்கி ஏறிந்து உடைத்தவன், எழுந்து சென்று அங்கே இருந்த அனைத்துப் பொருட்களையும் ஆத்திரம் தாங்காது துவம்சம் செய்தான்.
அவனின் செயலில், “ஹர்ஷா! ஹர்ஷா!” என்று அவனை அடக்கப் போராடிய தவித்த குடும்பத்தினரிடம், “என்னை விடுங்க! என்னை விடுங்க! இப்படி ஒரு பார்வையை இந்த உலகம் என்னைப் பார்த்திட கூடாதுன்னு தான் அந்தக் கொலையே செய்தேன்.
ஆனா.. ஆனா.. இப்போ நீங்களே என்னை அப்படிப் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களே?? இப்போ.. இப்போ நான் நான் யாரை சாகடிச்சு என்னைக் காப்பாத்திக்கட்டும்?? நீங்களே சொல்லுங்க… சொல்லுங்க???” என்று அந்த அறையே அதிரும்படி நரம்புகள் புடைக்கத் தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான் ஹர்ஷா.
அவனை அர்ஜுனும், அருணும் சேர்ந்து தான் பெரும்பாடுபட்டு அடக்க முயன்றனர். ஆனால் அவர்களிடமும் அடங்காது திமிறியவனிடம், “ஹர்ஷா! ஹர்ஷா! ஏன்டா.. ஏன்டா இப்படிச் செய்த??” என்று மகனை நாலு அடி அடித்து விட்டு, அவனின் காலையே கட்டிக் கொண்டு, சரிந்து கதறிய சுபத்ராவைக் கண்ட யாரும் நெஞ்சுருகிப் போவர்.
தலையில் அடித்துக் கொண்டு புலம்பிய தாயின் துயரம் தாங்காது, அவரின் கரத்தைப் பற்றி நிறுத்திய ஹர்ஷா, துக்கம் தொண்டையை அடைக்க, “மாம்! மாம்! ப்ளீஸ் பீலீவ் மீ! நான்.. நான் வேணும்ன்னு யாரையும் கொலை செய்யலை மாம்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவன், அவரின் கைகளில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு அழுதான்.
அவனின் விளக்கத்தில் அவனைப் புரியாது நிமிர்ந்து பார்த்தது, சுபத்ரா மட்டுமில்லை அங்கிருந்த மற்றவர்களும் தான்!
அதற்கான விடையை ஹர்ஷா கொடுத்த போது யாரைக் குற்றம் சொல்வது?? விதியையா?? இல்லை அதற்கு இரையாகிப் போன இவனின் மதியையா?? என்றே எண்ணினர் அனைவரும்.
Advertisement