Advertisement

     “ஐயா! ஐயா!
கார்மேகம் ஐயா!
கார்மேகம் ஐயா!”
     வாசலில் யாரோ கார்மேகத்தை கூப்பிடும் குரல் கேட்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தனர் கார்மேகம் அலமேலு தம்பதியினர். அது‌ கிராமம் ஆதலால் அதிகாலையில் எப்போதும் விரைவாகவே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் தான் அலமேலு மற்றும் கார்மேகம் இருவரும். இன்று ஏனோ வெகு நேரம் உறங்கி விட்டனர்.
     அதோடு எழுந்த நேரம், யாரோ நன்றாக போட்டு அடித்தது போல் உடல் வலி வேறு இருந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்த முதல் நாளே இப்படி ஆகியிருக்க கார்மேகத்திற்கு ‘இங்கு எதுவோ சரியில்லை’ என அவர் மனது கூறியது.
     ஆனால் அதை எல்லாம் ஆராய நேரம் இல்லா காரணத்தால் இருவரும் அவசர அவசரமாக எழுந்து தங்கள் வேலைகளை பார்க்க கிளம்பினர். கார்மேகம் வெளியே வந்து அந்த நபரிடம் என்னவென்று கேட்ட நேரத்தில் அலமேலு குளித்து தயாராகி ஹாலிற்கு வந்தார்.
     அங்கே இருந்த சோஃபாவில் சுருண்டு படுத்திருந்த அவர் மகன் மாதவனை கண்டு “இவன் என்ன ஹாலுல படுத்து தூங்கறான். எவ்ளோ பெரிய வீடு இருக்க இவனுக்கு தூங்க ஒரு ரூமா இல்லை. எந்திரிக்கிட்டும் பேசிக்கிறேன்” என்றவாறு சமயலறைக்கு சென்றார்.
     தான் சத்தம் செய்வது மாதவன் ஒருவனுக்கே கேட்கிறது என தனக்கு ஒரு அடிமை கிடைத்த குஷியில் மரப்பொம்மை இரவு முழுவதும் ‘டமால் டுமீல்’ என கதவில் இடித்து அவனை கலவரப்படுத்தி எண்டர்டெயின்மெண்ட் ஆகிக் கொண்டது. அதன் தொல்லை நீங்கி இப்போதுதான் கண் அயர்ந்தான் மாதவன். அது எங்கிருந்து அலமேலுவுக்கு தெரியப்போகிறது.
     அலமேலு சமையல் அறைக்குள் நுழைந்தவுடனே ஆவென வாயை பிளந்து விட்டார். காரணம் அவர் அண்ணன் மகன் அங்கு சமைத்து கொண்டிருந்ததே. அவன் லாவகமாக சட்னியை தாளிப்பதை பார்த்து வேகமாக அவனை நெருங்கினார்.
     “ஐயோ! சித்து ஏம்ப்பா இந்த வேலை எல்லாம் நீ செஞ்சிகிட்டு இருக்க. நான் சீக்கிரம் எந்திரிச்சிருவேன். இன்னைக்குதான் கொஞ்சம் தாமதமாகிருச்சு. அத்தை நான் வந்து இதையெல்லாம் செய்யமாட்டனா. ஆம்பள புள்ள உனக்கு எதுக்குப்பா இந்த வேலைலாம்”
     உரிமையாக கோபித்துக் கொண்டு அலமேலு கேட்க “வாங்க அத்தை. இந்தாங்க காபி எடுத்துக்கோங்க” என பிளாஸ்கை அவரிடம் நீட்டிவிட்டு
     “அத்தை சமைக்கிறதுல என்ன ஆம்பள புள்ளை பொம்பள புள்ளனு பிரிச்சு சொல்றது. எல்லாரும்தானே சாப்பிடுறோம் அப்ப சமைக்கிறதும் எல்லாருமே சமைக்கிலாம் அத்தை தப்பில்லை. அதுமட்டும் இல்லாம எனக்கு ஊர்ல தினமும் சமைச்சு பழக்கம் தான்”
     என்றுமில்லாமல் சித்து அன்று அறிவாய் பேசி வைக்க “பேசுடா மகனே பேசு! என் தங்கச்சியை இன்னும் இம்ப்ரஸ் பண்ண தானே இந்த டயலாக் எல்லாம்” கவுண்டரை வாயிலே வைத்தபடி அருகில் நின்று கேரட்டை கொறித்துக் கொண்டிருந்தார் அலமேலு உள்ளே நுழையும் போது தானும் உள்ளே நுழைந்திருந்த அவன் தந்தை.
     ஏற்கனவே காலையில் நடந்ததிலே அரவிந்தின் மேல் கொலை வெறியில் இருந்த சித்தார்த் அவரை சட்டையே செய்யாது அவன் அத்தையை பார்த்திருந்தான்.
     “என்னப்பா சொல்ற ஊருலையும் நீதான் சமைப்பியா? ஏன் உங்க அம்மா என்ன செய்வாங்க? நானும் கேக்க மறந்துட்டேன் பாரு. உங்க அம்மா எங்கப்பா?”
     “அம்மா என் சின்ன வயசுலையே இறந்துட்டாங்க அத்தை. அப்போல இருந்து அப்பாதான் எனக்கு எல்லாம். அவருதான் வீட்டில சமைக்கிறதும், அப்படியே அவருட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து ஒரு அஞ்சு ஆறு வருஷமா நான்தான் அத்தை சமைக்கிறேன். சோ எனக்கு பழக்கம் தான்”
     அலமேலு கேட்ட கேள்விக்கு பாவம் போல் பதில் தந்து முகத்தை சோகமாய் வைத்து நின்றான் சித்து.
     அவன் பர்பாமென்ஸில் விழுந்த அலமேலுவும் ‘பாவம் என் அண்ணனும் அவர் பையன் இவ்ளோ வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க போல. இனி இங்க இருக்க நாளுக்கு எல்லாம் நாமதான் அவனை நல்லா பாத்துக்கணும்’ என பீலாகிவிட்டார்.
     “ஆமாப்பா கால சாப்பாட்டுக்கு என்ன செஞ்ச?” ஆர்வத்துடன் அலமேலு கேட்க
     “சமைக்க என்ன இருக்குன்னு பாத்தேன் ரவைதான் இருந்தது. அதான் கிச்சடி செஞ்சு சட்னி வச்சுட்டேன் அத்தை” ஹோட்டல் சர்வர் போல் மெனுவை ஒப்பித்தான் சித்து. அதை கேட்டு அலமேலு முகம் பிரகாசம் ஆனதென்றால் அரவிந்தின் முகமோ பேயறைந்தார் போல் ஆனது.
     “என்னாது கிச்சடியா? கலர் கலரா கிச்சடினு பேரு வச்சாலும் அது உப்புமா தானேடா. கிரகம்புடிச்சவனே எனக்கு உப்மா புடிக்காதுன்னு தெரிஞ்சும் எதுக்குடா அதை பண்ணி தொலைச்ச? ஐயோ! உப்புமா தின்னா என் ஆத்மா எப்படிடா சாந்தி அடையும். பெத்த தகப்பனுக்கு உப்புமாவ போட்டு வயித்திலையே அடிக்கிறியே நல்லா இருப்பியாடா நீ எல்லாம்”
     ஹைபிச்சில் தன் உயிர் போவதைப் போல் அரவிந்த் கதறி தீர்க்க, சித்து கூலாக தன் காதுகளை குடைந்தபடி அவரை கவனிக்காமல் “அத்தை சமையல் வேலை அவ்ளோதான். இனி நமக்கு இங்க வேலை இல்லை, வாங்க நாம போலாம்” என அவன் தந்தையை சட்டை செய்யாது நக்கலாக சிரித்தபடி வெளியேறினான்.
     காலையில் நடந்த சம்பவத்திற்கு அரவிந்தை எப்படி‌ பழி தீர்ப்பது என வெறி பிடித்து மூளையை கசக்கி பிழிந்து யோசித்த சித்துவின் மண்டையில் நச்சென இந்த ஐடியா உதயமாக
     ‘மாட்டுனயா தகப்பா! இன்னைக்கு உன்னையும் எப்படி‌ கதற விடுறேனு பாரு நைநா. அப்படி கதற விடல நான் சித்தார்த் இல்லைடா’ என பாட்சா ஸ்டைலில் பஞ்ச் எல்லாம் பேசி சபதம் எடுத்தப் பின் இந்த உப்புமாவை கிளறி வைத்திருக்கிறான் மகன்.
     சென்னையில் என்றால் இன்னேரம் ஒரு பிரளயமே வெடித்திருக்கும். ஆனால் அவர்களுடன் இப்போது அத்தை குடும்பமும் இருக்க, அரவிந்த் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
     ‘சரி பிடிக்காத உணவு ஒரு வேலை பட்டினி கிடப்போம்’ என்ற வார்த்தைகள் எல்லாம் அரவிந்தின் அகராதியில் மிகப் பெரிய கெட்ட வார்த்தைகள். மூன்று வேளை உணவு ஆறு வேளை திண்பண்டங்கள் என சாப்பிட எதாவது இல்லை என்றால் அவர் ஜீவன் முக்தி அடையாதே. எனவே விதியை நொந்தபடி ஒரு ஒரு கவளம் உப்புமாவை விழுங்கும் போதும் விஷத்தை முழுங்குவதை போல் முழுங்கி வைத்தார்‌ மனிதர்.
     காலை நேரம் தந்தை மகன் இருவருக்கும் இப்படி ஏகபோகமாக கழிய, இடையில் மாட்டிக் கொண்டது என்னவோ மாதவன் தான். அலமேலு தன் அண்ணன் மகன் புகழ் பாடி பாடியே அவனை கழுவி‌ ஊற்றிக் கொண்டிருந்தார்.
     மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல் அந்த வீட்டின் அமானுஷ்யம் அவனோடு விளையாடுவது மட்டும் இன்றி அவன் தாயும் வெந்த புண்ணில் வேலை பாச்சினால் பாவம் அவனும்தான் என்ன செய்வான். ஆனால் அந்த வீட்டில் நடக்கும் எந்த விஷயத்திலும் பாதிக்கப்படாது சுற்றி திரிந்து கொண்டிருந்தனர் நம் அரவிந்த் அண்ட் கோ.
     உணவை உண்டு முடித்த மாதவன் விட்டால் போதுமென வீட்டை விட்டு ஓடிவிட்டான் அவன் நண்பனை காண. அந்த பெரிய அரச மரத்தடியில் விதியே என பாவமாய் அமர்ந்திருந்தான் மாதவன்.
     “என்ன மாதவா, எப்படி இருக்க? மெட்ராஸ்ல இருந்து உன் மாமா குடும்பம் வந்திருக்காமே. அவங்களோட நீ தலைவரு ஐயா உன் அம்மா எல்லாரும் பெரிய வீட்ல இருக்கீகலாம். நம்ம ஊரு பூரா இதான் இப்ப பேச்சு. என்னடா இவ்ளோ கேக்குறேன் அமைதியா இருக்க?”
     மாதவனின் நண்பன் ஷங்கர் ஆர்ப்பாட்டமாய் பேச மாதவன் ஒரு வார்த்தைக் கூட பதில் உரைக்கவில்லை.
     “எலேய்! எலேய் மாதவா!” மாதவனை பிடித்து அவன் நண்பன் உளுக்கி எடுத்த பின்னர், கனவில் இருந்து முழிப்பதைப் போல் எழுந்த மாதவன் “ஆன்.. நீ எப்படா வந்த ஷங்கரு?” என்றான் அப்பாவியாய்.
     “சரியாபோச்சு இவ்ளோ நேரம் நான் பேசுனது அப்ப உன் காதுல உழல அப்படித்தானே. அதவிடு ஊருல இருந்து உன்ற மாமன் மகன் வந்திருக்காப்ளல, பாக்க நல்ல வெள்ளையா அழகா இருக்காராமே. நம்ம முக்கு வீட்டு பெரிய கிழவி சொன்னுச்சு. அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வக்கிறது. நானும் தெரிஞ்சிப்பேன்ல”
     கிராமத்தில் புதிதாய் யார் வந்தாலும் அறிந்து வைத்து கொள்ளும் கிராம மக்களின் இயல்பில் ஷங்கர் கேட்டு வைக்க, மாதவனோ “ஏன்டா நானே நொந்து போயி வந்திருக்கேன்‌. நீ வேற கடுப்புகல கெளம்புற” நொந்து போன குரலில் கூறினான்.
     “ஏன்டா என்ன ஆச்சுது. இப்படி சொரத்தையே இல்லாம பேசற?”
     “அத ஏண்டா கேக்குற. நாங்க அந்த பெரிய வீட்டுக்கு போனதுல இருந்து அங்க நடக்கிறதே எனக்கு ஒன்னும் சரியாப்படலடா ஷங்கரு” மாதவன் அவன் அங்கு போனதில் இருந்து இப்போது நடந்த வரை அனைத்தையும் சோகமாக சொல்லி முடித்தான்.
     அதை கேட்ட அவன் நண்பனும் அதிர்ந்து போனான். “டேய் நீ சொல்லுறத வச்சு பாத்தா அந்த வீட்டுல கண்டிப்பா பேய் இருக்குனுதான் எனக்கு தோனுது. இப்ப என்னடா பண்ணுப் போற?” அரண்டுப் போய் கேட்டான் அவன்.
     “அதான்டா ஒரு முடிவு எடுத்திருக்கேன். இன்னைக்கு என்ன ஆனாலும் அந்த வீட்டு பக்கமே போவே கூடாதுன்னு” மாதவன் கூறியதை கேட்டு தானும் ஆமோதித்த ஷங்கரும் அவனை அன்று அவன் வீட்டிலே தங்கிக் கொள்ளும்படி கூறி அழைத்து சென்றான்.
     இரவு நேரம் சித்தார்த் வீட்டில் அனைவரும் உணவு உண்டுக் கொண்டிருந்தனர். அன்றைய நாள் முழுவதும் அந்த வீட்டை சாரி மினி சைஸ் அரண்மனையை சுற்றி பார்க்கவே நேரம் சரியாக இருக்க, அடுத்து வரும் நாட்களில் தோப்பு வயல் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தனர்.
     “என்ன அத்த மாதவனை காணோம்?” என சித்து தான் அவன் இல்லாததை கண்டு கேட்டான்.
     “அவன் பயலுவ கூட எங்கயும் ஊர சுத்திட்டு இருப்பையான் வந்திருவான். நீ சாப்பிடுயா” அலமேலு ஒரு காரணத்தை கூறி அவனை உண்ண செய்தார். ஆனால் அனைவரும் உண்டு பிறகு வெகு நேரம் ஆகியும் அவன் வராததால் அவர்கள் வீட்டிற்கு ஏதும் சென்றிருப்பான் என எண்ணிய அலமேலு கதவுகளை அடைத்துவிட்டு உறங்க சென்றார்.
     மாதவனும் அங்கே ஷங்கரின் வீட்டில் ஷங்கரோடு மொட்டை மாடியில் படுத்துவிட்டான். “ஷங்கரு என்னவோ பயமாவே இருக்குதுடா” வானத்தை பார்த்து படுத்தபடி மாதவன் கூற
     “ஏலேய்! ஏன்டா பயந்து சாவற. இப்ப நீ என் வீட்டில இருக்க அதனால பயப்படாம தூங்கு. அப்புடியும் பயமா இருந்தா இந்தா என் கைய புடிச்சிக்க” ஆறுதலாய் பேசிய ஷங்கரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு தூங்க சென்றான் மாதவன். அம்புட்டும் பயம் வேறென்ன செய்வான் பாவம் அவனும்.
     நடுநிசி நேரம் யாரோ மாதவனை பிடித்து இழுப்பதைப் போல் இருக்க, அவன் நண்பனின் கையை இறுக பிடித்துக் கொண்டான். ம்ஹீம் விடவேயில்லையே! சிறிது நேரத்தில் அவன் உடலே காற்றில் மிதப்பது போல் இருக்க மாதவன் அவன் பிடித்த நண்பன் கையை மட்டும் இன்னும் இறுக்கி கொண்டான்.
     “ஹாஹாஹா… ஹாஹாஹா… ஹாஹாஹா…” யாரோ சிரிக்கும் குரல் சத்தமாக கேட்க நல்ல உறக்கத்தில் இருந்த நண்பர்கள் இருவரும் அடித்துப் பிடித்து எழுந்தனர்‌.
     அவர்கள் இருவரின் உறக்கமும் நன்றாய் போய்விட அவர்கள் இருந்த இடத்தை அதிர்வாக சுற்றிப் பார்த்தார்கள். ஏனெனில் அவர்கள் தூங்கிய இடம் ஷங்கர் வீட்டு மொட்டை மாடியாய் இருக்க இப்போது ஒரு அறையில் மெத்தையில் இருவரும் இருந்தனர்‌. அப்போதுதான் புரிந்தது அவர்கள் இருப்பது பெரிய வீடென.
     “என்னடா இது மாதவா நாம எங்கூட்டு மொட்ட மாடில தானே தூங்குனோ. இப்ப என்னடா பெரிய வீட்டுல இருக்கோம்” துடிக்கும் இதயத்துடன் ஷங்கர் கேட்க
     “நான்தான் சொன்னேன்லடா இங்க எதுவும் சரியில்லனு. ஐயோ இப்ப பேச நேரம் இல்ல வா மொதல்ல இங்கருந்து வெளிய போவோம். அப்பொறம் பேசிக்கலாம்” அலறினான் மாதவனும்.
     இருவரும் அதன்படி வேகமாக அங்கிருந்து இறங்கி ஓட அந்த வீட்டின் கதவு நான் திறக்க மாட்டேன் என ஸ்ட்ராங்காக இருந்தது. எவ்வளவு நேரம் முயன்று பார்த்தும் திறப்பேனா என்றது.
     “ஐயோ இந்த கதவ தெறக்க முடியலையே. பாவிப் பயலே! உருப்புடுவியாடா நீயெல்லாம். உன்கூட பிரண்டா பழவுன பழக்கத்துக்கு என்ன காவு வாங்க பாக்குறியே. நீ இந்த வீட்டு பய அதனால கஷ்டப்படுற.
     என்ன எதுக்குலே இங்க வந்து சிக்கவச்ச. என் வூட்டுக்கு வந்து தூங்குனியே அதோட விட வேண்டியது தானே. என் கைய கம் போட்டு ஒட்டானாப்ல எதுக்குடா புடிச்சிட்டு தூங்குன வெளங்காதவனே. இப்ப பாரு அந்த பேயி கொத்தா சேத்து என்னையும் அலேக்கா தூக்கிட்டு வந்திருச்சு”
     பயத்தில் அழுதபடி ஷங்கர் புலம்ப “ஹாஹாஹா… நமக்கு இப்ப இன்னொரு அடிமை சிக்கிருச்சு” என மரபொம்மை ஷங்கரை கண்டு சிரிக்க, அதன் வெடிச்சிரிப்பில் நண்பர்கள் இருவரும் வெடவெடத்துப் போய் நின்றிருந்தனர்.
     அந்த நேரம் யாரோ மாதவன் தோளை தொட “ஐய்யய்யோ! என்ன விடு! என்னைய விடு! காப்பாத்துங்க!” என யாரோ அவனை கதற கதற கற்பழிப்பதைப் போல் கத்தியபடி ஓட அவன் கண்ணத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.
      அறை விழுந்த அதிர்வில் அவன் அப்படியே திரும்பி பார்க்க அங்கே அவன் தந்தை கார்மேகம் மாதவன் ஷங்கர் இருவரையும் கொடூரமாக முறைத்தபடி நின்றிருந்தார்.
-ரகசியம் தொடரும்

Advertisement