Advertisement

     அன்று காலையிலே வானம் தூரல் வீசி மக்களை குளிர்வித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடி தன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அந்த குளிரை போக்கும் விதமாக தன் கையில் இருந்த காபியை உறிஞ்சி கொண்டிருந்தான் சித்து.
     “காலைல இப்படி மழைச்சாரல்ல உக்காந்து காபி குடிக்கிறதும் ஒருமாதிரி நல்லா சுகமா தான்யா இருக்கு” என்றபடி அந்த காபியின் வாசனையை மூக்கின்வழி நன்கு இழுத்து வெளியே விட்டவன் “ம்ம்ம் ஆஹா… என்ன சுகம் என்ன சுகம்” என மீண்டும் காபியை குடித்தான்.
     தன் பிள்ளை சுகமாக அமர்ந்திருப்பதை கண்டு வயிறு எறிந்து போய் பார்த்த அரவிந்த்
     “வேலைக்கு போவாம தண்டச்சோறு தின்னாலும் அதை இப்படி பகிரங்கமாலாம் பண்ணக்கூடாதுடா மவனே”
     என்றவாறு சித்துவின் இனிமையான நேரத்தை கெடுக்கவென வந்து குதித்தார் அவனின் தந்தை. அவர் பேசியதற்கு பதில் பேசாது தன்போக்கில் காபியை அவன் குடித்துக் கொண்டிருக்க
     “என்னடா காது செவுடா எதுவும் போச்சா. உன் நைனா இங்க கத்திட்டு இருக்கேனே” மீண்டும் கத்தினார் அரவிந்த்.
     “எல்லாம் கேக்குதுது கேக்குதுது. என்ன சொல்லனுமோ சொல்லிட்டு போ” காதை குடைந்தவாறு தன் பங்கிற்கு தானும் வெறுப்பேற்றினான் சித்து.
     “என்னடா கொழுப்பு ஏறிப்போச்சா, வேலை போய் ஒரு மாசம் ஆகுதே இந்த ஒரு மாசத்துல வேற வேலை தேடுவோம் அப்புடின்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. என்னமோ மாமியார் வீட்டுக்கு வந்தமாதிரி ஜாலிய இருக்க”
     அரவிந்த் மூச்சு விடாமல் பேசி நிறுத்த “இப்ப என்ன உனக்கும் ஒரு காபி வேணும். அதுக்குதானே இவ்ளோ பேசுற” என அரவிந்த் பேசியதற்கு பதிலாக ஒரு வரியில் சித்து கேட்டு வைக்க
     “நீதான்டா இந்த அப்பன புரிஞ்ச நல்ல மகன். போடா கண்ணா போ அப்பாவுக்கு ஒரு நல்ல காபியா போட்டு எடுத்துட்டு வாடா” வெட்கமே இல்லாமல் அரவிந்தும் பல்லை இழித்தபடி கேட்டு நின்றார்.
     அரவிந்தை கேவலமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவருக்கு காபி போட சென்றான் சித்து. சித்து வேலைக்கு செல்லவில்லை என்றாலும் செலவுக்கு அவனிடம் தாரளமாகவே பணம் இருந்தது‌.
     அதுவும் அரவிந்த் இத்தனை வருடங்கள் சம்பாதித்தித்தே சித்துவின் வாழ்நாளுக்கு தேவையானதாக இருந்தது. அதில் எல்லாம் அரவிந்த் கில்லிதான். பின்னே சென்னையிலே அவ்வளவு பெரிய ஒரு வீட்டை கட்டிவிட்டு மேலும் இரண்டு இடங்களையும் வாங்கி போட்டு வைத்துள்ளார்‌. அதுபோக பேங்கிலும் சொல்லும்படியாக சில லட்சங்களை சேர்த்து வைத்திருக்கிறார் மனிதர்.
     சித்து வேலைக்கு சென்ற இந்த ஐந்து வருடத்தில் அவனும் நன்றாகவே சம்பாதித்தான் அப்படி இருக்க பணத்திற்காக அவன் யோசிக்கவில்லை. எனவே தான் அவன் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளான். ‘இனி வேலைக்கே போகமாட்டேன்’ என்று சித்து சபதமே எடுத்துவிட
     அதை கேட்ட அரவிந்தோ “சபாஷ்டா மகனே! இனி நீ வேலைக்கு எல்லாம் போகவேண்டாம். அதுக்கு பதிலா வீர்ம்மா கூட போ. நீ கண்டிப்பா உருப்புடுவ” என ஐடியா வேறு குடுக்க கடுப்பாகிவிட்டான்.
     “யோவ் அப்பனாயா நீ. திருட ஐடியா குடுக்குற. என்ன ஒரேயடியா என்னைய ஜெயில்ல வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டியா. அதெல்லாம் முடியாது நான் சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்கபோறேன்”
     சித்து பிசினஸ் செய்யபோவதாய் அறிவிக்க ஆடிப்போனார்‌ மனிதர். “ஐயோ பாவி பயலே நான் இத்தனை வருஷம் சேர்த்த சொத்து எல்லாத்தையும் மொத்தமா அழிக்க பிளான் போட்டுட்டியா. அதான் பிசினஸ் பண்ணப்போறேன்னு கிளம்புறியா”
     அரவிந்த் அதை சண்டையாகவே இழுக்க அவர் கத்திலை காதிலே வாங்காத சித்து “என்ன பொல்லாத சொத்து. எல்லாம் நீ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்த உன் புள்ள எனக்குதானே. அதான் என் புராப்பர்ட்டிய அடமானம் வச்சு நான் பிசினஸ் தொடங்க போறேன் போவியா.
     என்னமோ இவரு உசுரோட இருக்கும் போதே இவரை கோவில் குளம் ஆசிரமம்னு அனுப்பிவிட்டு சொத்த அபகரிச்சாப்புல பேசறத பாரு” என தன் பங்கிற்கு தானும் எகிறியபடி சென்றான்.
     இந்த ஒரு மாதமாக இருவருக்கும் இதே பஞ்சாயத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது‌. ஆனால் இப்போது போல் சோறு என்று வந்துவிட்டால் தந்தை மகன் இருவரும் “நோ சூடு! நோ சுரனை!” என களத்தில் இறங்கிவிடுவர். அதில் மட்டும் இருவரும் தந்தை மகன் என்பதை நிரூபித்தனர்.
     இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது கதிர் சித்துவின் குடும்பத்தோடு நன்கு ஒன்றியதுதான். தினமும் மாலையானால் விளையாட செல்லாமல் வீராவை படுத்தி எடுத்து சித்துவின் இல்லம் வந்துவிடுவான் கதிர்.
     அங்கே வந்தால் வீராவிற்கும் அரவிந்தோடு பொழுது நன்றாக போய்விடுவதால் அவளும் மகிழ்வுடன் கதிரை அழைத்து வந்துவிடுவாள். சித்து கதிருடன் படிப்பு முதல் உலக நடப்புகள் என அனைத்தையும் பேசுவான். சித்து பேசுவது மிகவும் பொதுவான விஷயம் தான் ஆனால் அதில் மிகவும் கவரப்பட்டான் கதிர்.
     அவன் தெரு பள்ளி என செல்லும் இடமெல்லாம் “எங்க சித்து மாமா அப்படி இருப்பார் தெரியுமா! எவ்ளோ பெரிய அறிவாளி தெரியுமா!” என அவன் புகழை பரப்பிக் கொண்டிருந்தான்.
     இதை மட்டும் அரவிந்த் கேட்டிருந்தால் ‘என்றா சொன்ன என் மகன் அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டானா?’ என அதிர்ச்சியில் மயங்கியே விழுந்திருப்பார்.
     என்றும் போல் அன்றும் கலவரமாக தந்தை மகனுக்கும் செல்ல இன்றென பார்த்து சித்துவின் சமையலுக்கு பாய் சொல்லிவிட்டு கடையில் ஆர்ட்ர் போடலாம் என்ற முடிவை அரவிந்த் அதிரடியாய் எடுக்க
     ‘அப்பாடா இன்னைக்கு நமக்கு ரெஸ்ட்பா’ என்று சித்துவும் ஆர்டர் போட ஒத்துக் கொண்டான். சாப்பாடு வெளியே வாங்கலாம் என முடிவை எடுத்தவுடன் இருவருக்கும் அக்கா தங்கை இருவரை பற்றிய நினைவே முதலில் வந்தது.
     அப்போது மணியை பார்த்த சித்துவிற்கு மனது நெருடியது‌. ஏனெனில் எப்போதும் டான் என மாலை ஆறுக்குள் வந்துவிடும் இருவரையும் இன்று ஏழு மணி ஆகியும் காணவில்லை.
     அதே யோசைனையோடு “அப்பா” என அமைதியாக அழைக்க அரவிந்தோ எப்போதும் போல் “ன்னா?” என்றார்.
     எப்போதும் வாய்க்கு வாய் பேசும் சித்துவோ அவரிடம் வம்பு எதுவும் பேசாமல் “மணி ஏழு ஆச்சு. இன்னும் கதிரும் அவன் அக்காவும் வரலை. ஏதோ தப்பா இருக்கே ப்பா” என்றான்.
     அதன்பின்னரே அதை கவனித்த அரவிந்திற்கும் அப்போதுதான் அது உரைத்தது‌.
     “ஆமாண்டா எப்பவும் ஆறு மணிக்குள்ள புள்ளைங்க வந்திருவாங்கல. ஆனா இன்னைக்கு என்ன இன்னும் காணோம். சித்து கண்ணா வீராம்மாக்கு ஒரு போன போடுடா. அவ குரலை கேட்டாதான் எனக்கு நிம்மதி” என்றார் அரவிந்தும்.
     உடனே சித்துவும் வீரசுந்தரிக்கு அழைத்து விட்டான். “ஹலோ வீரசுந்தரி? நான் சித்தார்த்” மெதுவாக அவன் ஆரம்பிக்க
     “சொல்லுங்க நான்தான் பேசறேன்” என்ற அவள் குரலே ஏதேபோல் இருந்தது‌.
     “வீரா அழுறியா?” அதிர்ந்து போய் கேட்டான் சித்து. ஏனெனில் அடாவடி பெண்ணாக எல்லார் மனதிலும் இருக்கும் வீரா அழுகிறாள் என்றால் பயம் வரத்தானே செய்யும்.
     “அது வந்து…”
     “இப்ப நீ எங்க இருக்க? கதிர் எங்க இருக்கான்?”
     சித்து கேட்டு நிறுத்திய அடுத்த நிமிடம் கதறிவிட்டாள் வீரா. அவள் தேம்பி தேம்பி அழுவதை இங்கிருந்து கேட்ட அரவிந்தும் சித்துவும் பயந்துவிட்டனர்.
     “வீரா… வீரா.. அழாம என்ன ஆச்சு இப்ப நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”
     “இங்க.. எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்க ஆஸ்பிட்டல்ல” சித்து கேட்டதற்கு தாங்கள் எங்கிருக்கிறோம் என கூறி வைத்தாள் வீரா. இருவரில் யாருக்கு என்ன ஆனதோ என பதறி அடடித்து தந்தையும் மகனும் கிளம்பி சென்றனர்.
     அது பெரியதும் அல்லாத சிறியதும் இல்லாத ஒரு தனியார் மருத்துவமனையே. அந்த இடத்தில் வீராவை தேடுவது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. போனதும் கண்டுக் கொண்டனர்‌. அங்கே ஒரு அறையின் முன்னால் இருந்த சேரில் அழுதபடி அமர்ந்திருந்தாள் வீரா.
     அவள் அருகில் சென்று சித்து “வீரா” என்றிட அவனையும் அவன் அருகில் நின்றிருந்த அரவிந்தையும் கண்டு மேலும் கதறி அழுதாள் வீரா.
     அவள் அழுவது சித்துவின் மனதின் உள்ளே ஏதோ செய்திட அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவள் கையை பிடித்து, அவள் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.
     “என்னம்மா யாருக்கு என்ன ஆச்சு? கதிர் எங்க? நீ எதுக்கு இங்க உக்கார்ந்து அழுதுட்டு இருக்க?”
     சித்துவின் கேள்விக்கு அவள் பதில் சொல்லும்முன் அவர்களின் முன்னே வந்து நின்றார் ஒரு மருத்துவர். அவரை பார்த்து வீரா உடனே எழுந்து நிற்க சித்துவும் உடன் எழுந்தான்.
     “டாக்டர் என் தம்பிக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கான்?” வீரா கேட்டதில் கதிருக்குதான் எதோ ஆகியிருக்கிறது என்று புரிந்துபோக
     “என் ரூம்க்கு வாங்க. கொஞ்சம் டீட்டெய்லா பேசனும்” என்றார் மருத்துவர். எனவே அவரை தொடர்ந்து வீராவும் சித்துவும் அவரின் அறைக்குள் நுழைந்தனர். மருத்துவரோ ஒரு பைலை கையில் எடுத்து அதில் பார்த்தவர் சித்துவை நோக்கி
     “நீங்க?” என்றிட “இவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க டாக்டர். அவங்க நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு. நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க” என்றான். அவன் கூறியதை கேட்டு வீரா அந்த நிமிடத்திலும் ஏதோ ஒன்று தன் மனதில் சுரப்பதை உணர்ந்தாள்.
     “அப்போ சரி சார் இந்த பொண்ணு வேற அழுதுட்டே இருந்தது. அதான் கொஞ்சம் தயங்கினேன். அந்த பையன் கதிருக்கு பிரைன் கிட்ட சின்னதா ஒரு கட்டி இருக்கு‌” என்று கூறி முடிக்கும் முன்
      “டாக்டர் என்ன சொல்றீங்க?” என அதிர்வுடன் கேட்டான் சித்து.
     “பயப்படாதீங்க சார். இதுல பயப்பட ஒன்னும் இல்ல. கட்டி ரொம்ப சின்னது தான். ஒரு சின்ன ஆப்பரேஷன் செஞ்சு அந்த கட்டிய ரிமூவ் பண்ணிட்டா எந்த புராப்லமும் இல்ல. பையன் பழையபடி நல்லா ஆகிருவான்” என்று முடித்தார்.
     “என்ன டாக்டர் ஆப்பரேஷன் அது இதுன்னு சொல்றீங்க. ஆனா நேத்து வரைக்கும் கதிர் நல்லாத்தானே இருந்தான். தலைவலி அந்தமாதிரி கூட அவன் சொன்னது இல்லையே” என தன் சந்தேகத்தை கேட்டான் சித்து‌.
     “அவன் சின்ன பையன் தானே சார். அதுனால அவனுக்கு அவ்வளவா எந்த சிம்ப்டம்ஸும் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன். இப்ப சிட்டுவேஷன் என்னன்னு நான் தெளிவா சொல்லிட்டேன். அன்ட் இதுக்கு மேல என்ன செய்யனும்னு நீங்கதான் சொல்லனும்” என்றிட்டார் அந்த மருத்துவர்.
     சித்துவோ வீராவை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க அவளோ நடுக்காட்டில் மாட்டிக் கொண்ட குழந்தை போல் முழித்தபடி அவள் இருக்க அதன்பின் அவளிடம் எதுவும் அவன் கேட்கவில்லை. அவனே அந்த மருத்துவரிடம் மேலே என்ன செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டான்.
-ரகசியம் தொடரும்

Advertisement