யுகம் சுகம் தானே 9 1 16688 யுகம் சுகம் தானே 9 “அப்படி எல்லாம் இல்லை அண்ணி.. உங்களுக்கு சொல்லாம செய்வோமா..?” கண்ணம்மா போனில் பேசி கொண்டிருக்க, மறுபக்கம் கணபதியும் அவரின் போனில் பேசி கொண்டிருந்தார். இருவருக்கும் காலையில் இருந்து இது தான் வேலையாகவே இருந்தது. இருவரின் மொபைல், லேண்ட்லைன், உதய் மொபைல் என்று எல்லாம் விடமால் அடித்து கொண்டிருக்க, உதய் அவனின் மொபைலை சைலண்டில் போட்டுவிட்டு, முக்கியமான அழைப்புகளை மட்டும் எடுத்து பேசி கொண்டிருந்தான். கண்ணம்மா போன் பேசி வைத்தவர், “எல்லாம் இவனால் தான், அப்படியென்ன இவனுக்கு அவசரம்..?” கணவரிடம் கோபத்துடன் பொரிந்தார். நேற்றிரவு மினிஸ்டர் பார்ட்டியில் வைத்து அவனுக்கும், ஷாராவிற்குமான திருமணத்தை அறிவித்ததில் இருந்து தான் ஆரம்பித்தது தொல்லை. மீடியா இரவோடு இரவாக இவர்களின் திருமண விஷயத்தை உலகிற்கு அறிவித்துவிட, உறவினர்கள், தொழில் முறை நண்பர்கள், தெரிந்தவர், அறிந்தவர் என்று எல்லாம் போன் செய்து உண்மையா என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் உறவினர்கள் பலவகை பேச்சு தான் கண்ணம்மாவின் கோவத்தை தூண்டி விட்டு கொண்டே இருந்தது. அதிலும் இப்போது பேசி வைத்த அவரின் அண்ணி பேச்சு கண்ணம்மாவின் பிபி எகிறிவே வைத்துவிட்டது. “என்னவெல்லாம் பேசுறாங்க ச்சே..” வெறுத்து போனார். “என்ன ஆச்சு கண்ணு..? ஏன் இவ்வளவு கோவம்..?” கணபதி கேட்க, “என்ன சொல்ல போங்க, அண்ணி சொல்றாங்க, அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை இருக்க போகுது, அதனால தானா என்னவோ அவங்களை விட வசதியில குறைஞ்ச உதய்க்கு கொடுக்க பார்க்கிறாங்க, எதுக்கும் நல்லா விசாரிச்சுக்கோ, பெரிய ஆளுங்க சம்மந்தம்ன்னு ஏமாந்துடாதன்னு..” “அவங்க இப்படி பேச பேச பத்திகிட்டு வந்துச்சு, நாம கோவத்துல ஏதாவது சொன்னோம் அப்பறம் அதுக்கு வேற பேசுவாங்க, அதான் பல்லை கடிச்சு பேசி வச்சுட்டேன்..” இன்னும் ஆறாமல் தண்ணீர் எடுத்து குடித்தார். “ம்ப்ச்.. விடு கண்ணு, இத்தனை வருஷத்துல நாம இதை எல்லாம் பார்க்கலையா..? சொந்தகாரங்க பேச்சு நமக்கு என்ன புதுசா..?” “அதுக்கு இல்லைங்க, முன்னபின்ன தெரியாத ஒரு பொண்ணை பத்தி இப்படி பேசுறோமேன்னு உடம்பு கூசாதா இவங்களுக்கு..?” “அப்படி எல்லாம் இருந்தா அவங்க ஏன் இப்படி பேசிட்டு இருக்க போறாங்க, விட்டுட்டு வேலையை பாரு கண்ணு..” “என்னமோ போங்க, இவன் அவசரபடாம இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது..” “ம்ப்ச் கண்ணு.. அவன்தான் நேத்து என்ன நடந்தது, எதனால பார்ட்டில இப்படி சொன்னேன்னு நைட்டே உன்கிட்ட சொல்லிட்டான் தானே, திரும்ப எதுக்கு அவன் மேல கோவம்..?” “இல்லைங்க, என்னால ஏத்துக்க முடியல, கஷ்டமாவும் இருக்கு, கோவமாவும் இருக்கு.. அவனை என்ன அப்படியா நாம வளர்த்தோம்..? அவ்வளவு கண்டிப்பான அப்பா, அம்மாவா நாம..? இது தான் பிரச்சனை, இப்படி தான் நான் சொல்ல போறேன்னு ஒரு வார்த்தை நம்மகிட்ட போன் பண்ணி கேட்டுட்டு சொல்லியிருக்கலாம் இல்லை..” “விடு கண்ணு, அவன் சூழ்நிலை எப்படி இருந்துச்சோ..?” “நமக்கும் இத்தனை வருஷ வாழ்க்கையில இந்த மாதிரி ஆயிரத்தெட்டு சூழ்நிலை வந்துச்சுங்க, நாம பார்க்காத, கடக்காத பிரச்சனை இல்லை, இருந்தும் எந்த சூழ்நிலையிலும் நாம அப்பா, அம்மாங்கிற இடத்துல இருந்து தவறி இருக்கோமா..?” “கண்ணு.. நீ இப்படி யோசிச்சா எல்லாம் தப்பா தான் தெரியும், நம்ம பிள்ளைக்கு கல்யாணம் பண்ற நேரத்துல இந்த மனசு கஷ்டம் எல்லாம் தேவையா சொல்லு..” “ம்ம்..” விரக்தியாக சிரித்த கண்ணம்மா, “எனக்கு புரியுதுங்க, ஆனா இந்த அம்மா மனசு ஏத்துக்க மாட்டேங்குதே, நம்ம பிள்ளைங்க நமக்கு கொடுக்கிற ஒரே மரியாதை அவங்க கல்யாண பொறுப்பை நம்ம கிட்ட கொடுக்கிறது தான், மத்தபடி அவங்களுக்கு நாம செய்றது, செஞ்சது எல்லாம் எல்லாம் கடமையில போயிடும், இந்த ஒரு விஷயம் மட்டும் தானே நம்ம அப்பா, அம்மா நமக்கு நல்லது தான் செய்வாங்கன்னு நம்பி கொடுக்கிற விஷயம், அதை என் மகன் எனக்கு கொடுக்கல தானே..?” “நம்ம பொண்ணு கொடுத்தாலே கண்ணு..” “அந்த பாக்கியம் எனக்கு கிடைச்சதுங்க.. அதுவே போதும்ன்னு மனசை தேத்திக்குவேன்..” “கண்ணு.. நீ இவ்வளவு வருத்தப்படுற அளவு நம்ம உதய் இல்லைன்னு உனக்கே தெரியும், ஏதோ இப்போ கேள்விபட்ட உடனே வர கோவம் தான் இது, சீக்கிரமே வடிஞ்சுடும், அதனால உதய்கிட்ட இதை பத்தி ஏதும் பேசி அவனை கஷ்டப்படுத்திடாத..” “அவன் எனக்கும் மகன் தாங்க, அப்படி எல்லாம் பேசிட மாட்டேன், ஆனா என் ஆதங்கத்தை அவன்கிட்ட சொல்லாம போக மாட்டேன்..” “இது என்ன பதில் கண்ணு..” “இது தாங்க உண்மையான பதில், அவ்வளவு சீக்கிரம் அம்மா மனசு பிள்ளைங்க தப்பை மறந்துடாதுங்க, அவங்களை திட்டிட்டா, கேட்டுட்டா மட்டும் தான் மனசு ஆறும், விடுங்க..” முடித்துவிட்டவரின் போன் திரும்ப ஒலித்தது. “உங்க ரோட்டரி கிளப் குமார் வைப், இவங்க ரொம்ப பேசுவாங்க, நான் பேசல..” எடுக்காமல் விட்ட கண்ணம்மா, “உங்க மகன் பொறுமையா இருந்திருந்தா இந்த கஷ்டமே இல்லை..” என்றார் திரும்பவும். “கண்ணு.. இந்த விஷயம் எப்போ, எப்படி வெளியே வந்திருந்தாலும் பேசுறவங்க, பேசிக்கிட்டே தான் இருந்திருப்பாங்க..” கணபதி நிதர்சனத்தை சொல்ல, “அதென்னமோ உண்மை தாங்க..” கண்ணம்மா முகம் கொஞ்சம் தெளிய, “ஏங்க.. நமக்கே இப்படின்னா, அங்க பவ்யா வீட்லயும் எவ்வளவு பிரச்சனை போயிட்டிருக்கும், அவங்க ஆளுங்களும் நம்மை பத்தி இப்படி தான் ஏதாவது பேசிட்டு இருப்பாங்க இல்லை..” கேட்க, “கண்டிப்பா கண்ணு.. இது எப்போவும் நடக்கிறது தானே, அதுவும் RK சார் வட்டம் ரொம்ப பெரிசு.. நிறைய பேச்சு இருக்கும்..” கணபதி சொன்னார். “ம்ம்..” கண்ணம்மாவிடம் யோசனை. “என்ன கண்ணு..?” கணபதி மனைவியின் யோசனையில் கேட்க, “இனி நாம என்ன செய்யணும்ன்னு யோசிச்சிட்டு இருக்கேங்க, இவன் வேற பொசுக்குன்னு எல்லோருக்கும் சொல்லிட்டான், நம்ம முறை ஒன்னு இருக்கே, பவ்யா அப்பாவை நேர்ல போய் பார்த்து பேசணும், அப்பறம் நாம வந்து ஏதும் பேசலன்னு அவங்க நினைச்சிற கூடாது இல்லை..” என, கணபதியும் அதை ஆமோதித்தார். “நீ சொல்றது சரி கண்ணு, முதல்ல நாம இதை பத்தி உதய்கிட்ட பேசிட்டு போவோம்..” சொல்லி கொண்டிருக்க, அவரின் போன் ஒலித்தது. “இப்போ யாருங்க..” கண்ணம்மா சலிப்புடன் கேட்டார். “உதய் தான் கண்ணு..” என்றவர், எடுத்து, “சொல்லு உதய்..” என, “என்னப்பா செய்றீங்க..?” என்று கேட்டான் அவன். “ரூம்ல தான் இருக்கோம் உதய்..” கணபதி சொல்ல, கண்ணம்மாவிற்கு புரிந்து போனது மகன் எதோ பேச நினைக்கிறான் என்று. அதுவும் தன்னிடம் பேசாமல் கணவருக்கு அழைத்து பேசுவதிலே தன் கோவம் அவனுக்கு புரிந்திருக்கும் என்று தெரிந்தது. “ஓஹ்.. அம்மா இருக்காங்க தானே, போனை ஸ்பீக்கர்ல போடுங்க..” என, கணபதி அப்படியே செய்தார். “ம்மா.. ப்பா.. அது.. நீங்க RK சார் வீட்டுக்கு போய் பேசிட்டு வந்துடுறீங்களா..?” தயங்கி தான் கேட்டான். “பேசலாம் உதய்..” கணபதி தான் சொன்னார் கண்ணம்மாவின் அமைதியில். “முடிஞ்சா இன்னிக்கே பேசிடுங்க..” உதய் சொல்ல, “ஏன்..? அதையும் நீயே பேசிடேன் உதய்..” கண்ணம்மா அம்மாவின் குரலில் கேட்டார். “ம்மா.. ப்ளீஸ் உங்க கோவம் எனக்கு புரியுது, அதுக்கு சாரி கேட்டு உங்களை இன்னும் கஷ்டப்படுத்த மாட்டேன்..” “உதய்.. இப்போ எதுக்கு நீ போன் பண்ணன்னு மட்டும் சொல்லு..” கண்ணம்மா கண்டிப்புடன் இடைவெட்டினார். “ராம் சார்கிட்ட போய் முறையா பேசுங்கம்மா, அது.. க்கும்.. கல்யாணம் எப்போன்னு.. முடிஞ்சா சீக்கிரமே வைக்கிற மாதிரி பேசுங்க..” என, இது கண்ணம்மா யோசித்தது என்றாலும் மகன் சொல்லும் போது அம்மாவாக கோவம் வர தான் செய்தது. “சரி.. நாள் பார்த்துட்டு..” “ஜஸ்ட் போய் பேச எதுக்கு நாள் எல்லாம்மா..” “உதய்.. நான் கண்டிப்பா நாள் பார்த்து தான் போவேன், அப்படி நாள் இன்னிக்கு சரியில்லைன்னா போன்லயாவது அவர்கிட்ட கண்டிப்பா பேசிடுவேன்..” வைத்துவிட்டார். அந்த பக்கம் உதய் முகம் கசங்கி தான் போனது கண்ணம்மாவின் கோவத்தில். “சாரிம்மா.. எனக்கு வேற வழி இல்லை, இப்போ எங்க கல்யாணம் நடந்தா தான் நடந்த மாதிரி, இல்லை அவ எப்போவும் ஒத்துக்க மாட்டா..” “ம்ப்ச்.. இப்போவுமே அவ ஓகே சொல்ற வாய்ப்பு கம்மி தான், அவதான் நான் சொல்லிட்டேன்ற கோவத்துல கிளம்பினாளே..” அவன் இப்படி அவர்கள் திருமணம் பற்றி சொன்னதை ஷாரா விரும்பவில்லை என்று புரிய தான் செய்தது. பார்ப்போம்.. யோசிக்க, இங்கு கணபதி பஞ்சாங்கத்தில் நாள் பார்த்தார். “கண்ணு.. இன்னிக்கே நாள் நல்லா தான் இருக்கு, போய் பேசிட்டு வந்துடலாம்..” என, நேரம் பார்த்து கணவனும், மனைவியும் ராமை பார்க்க கிளம்பினர் உதய்க்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு. இவர்கள் வரும் தகவலை உதய் ஜின்னா மூலம் ராமிற்கு தெரிவித்திருக்க, அவர் வாசலிலே இவர்களை எதிர்கொண்டு உள்ளே அழைத்து சென்றார். “உட்காருங்க..” கணபதி தம்பதியினரை அமர வைத்தவர், ஜோதி குரல் கொடுக்க அவர் பலகார தட்டுடன் வந்தார். மறுக்காமல் சிறிது எடுத்து கொண்டவர்கள், ஜுஸையும் குடித்து முடித்தனர். “பவ்யா.. ஆபிஸ் போயிருக்காண்ணா..?” கண்ணம்மா கேட்க, “ஆமாம்மா..” என்றார் கொஞ்சம் சங்கடத்துடன். இவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் ராம் அவளை வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிட்டார் தான். அவளோ, “இல்லைப்பா எனக்கு வேலை இருக்கு..” என்றுவிட்டவள், “கல்யாணம் பத்தி எந்த முடிவும் சொல்லாதீங்க..” என்றும் சொல்லியிருந்தாள். “இது தான் அண்ணியாண்ணா..?” ஹாலில் இருந்த பெரிய ஷாக்க்ஷி போட்டோவை பார்த்து கண்ணம்மா கேட்க, “ஆமாம்மா..” என்ற ராம் முகத்தில் மலர்வு. கண்ணம்மாவின் அண்ணா, அண்ணி முறை பிடிக்க தான் செய்தது. “ரொம்ப அழகா இருக்காங்கண்ணா, இப்போ தான் புரியுது பவ்யா பால் கலர் எப்படி வந்துச்சுன்னு..” ஷாக்க்ஷியின் கலர் பார்த்து சொன்னார். “ஷாக்க்ஷி நார்த் சைட்ம்மா..” ராம் சொல்ல, “ஓஹ்.. அலைகள் ஓய்வதில்லை..” என, ராமிடம் லேசான உதடு விரிப்பு. மகளுக்கு சம்மந்தம் பேச வந்திருப்பவர்களிடம் தன் காதல் திருமணம் பற்றி விலாவரியாக பேச முடியவில்லை. அதற்காக சொல்லாமலும் இருக்க முடியாதே..? “காலேஜ் படிச்சப்போ பழக்கம், எல்லார் வீட்ல போல எங்க ரெண்டு வீட்லயும் ஒத்துக்கலை..” “இப்போவும் யாரும் பேசுறதில்லையாண்ணா..?” “ஷாக்க்ஷி வீட்ல இப்போ அப்பப்போ ஷாராகிட்ட மட்டும் பேசுவாங்க, ரொம்ப டச் இல்லை.. எனக்கு ஒரு அண்ணா மட்டும் தான். அவரும் குடும்பத்தோட ஜெர்மனி செட்டில்ட். எப்போவாவது வருவாங்க..” என, “நம்ம குடும்பம் கொஞ்சம் பெருசு தான்ண்ணா, ஆனா எல்லாம் போன்ல தான், ஏதாவது நல்லது, கெட்டதுல நேர்ல பார்த்துகிறதோட சரி..” கண்ணம்மாவும் சொல்ல, மிகவும் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தது.