Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -6

அத்தியாயம் -6(1)

காலை வேளையில் உறக்கம் கலைந்த பிரசன்னா கண்களை திறக்க மெல்லிய வெளிச்சம் படர்ந்திருந்தது அறையில். அன்று ஞாயிறு என்றாலும் கூட வழக்கமாக எழும் நேரத்தை தாண்டி விட்டது புரிந்து திரும்பி படுக்க, பின் வாயிலுக்கு முன் சோபாவில் அமர்ந்து நாற்காலியில் கால் நீட்டிக் கொண்டு தினசரி படித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.

அனிச்சையாக ஒரு பாதத்தை மட்டும் லேசாக அவள் ஆட்டிக் கொண்டிருக்க, கால் விரல்களில் இட்டிருந்த நீல நிற நகப் பூச்சு பளிச் என்று தெரிந்தது. திருமணத்தன்று அவன் அணிவித்த மெட்டியை வலது கால் விரலில் காணவில்லை.

நெற்றி சுருக்கியவன் தலை உயர்த்தி அவளை பார்த்து விட்டு படுக்கையை பார்க்க இவன் காலுக்கு பக்கத்தில் கிடந்தது. கைப்பற்றி தன் ஷார்ட்சின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன் மீண்டும் வாகாக படுத்து அவளை பார்த்தான்.

இரவு உடையாக அவள் அணிந்திருந்த தொள தொள பேண்ட் கணுக்கால் தாண்டி சற்று மேலே ஏறியிருக்க இடது காலில் ஏதோ சிறு தழும்பு தெரிந்தது.

‘ரௌடி க்கு இன்னும் எங்கங்க தழும்பு இருக்கும்னு தெரியலையே’ மனதில் நினைத்துக்கொண்டே சிரித்தவன் கண்களை அவளிடமே வைத்திருந்தான்.

ஆவி பறக்கும் காபி நிறைந்த கோப்பையை இடது கையில் பிடித்த படி அவ்வப்போது காபியை பருகியவள் தினசரியில் படித்த செய்திகளுக்கு ஏற்றவாறு முக பாவங்களை மாற்றிக் கொண்டே இருக்க இமைக்க மறந்திருந்தான் பிரசன்னா.

எதற்கோ அவள் சத்தமில்லாமல் சிரிக்க, ‘காலையிலேயே என்ன நியூஸ் போட்டு என் டார்லிங்க சிரிக்க வச்சீங்க டா? பரிசா நூறு பொற்காசுகள்டா’ மனதிற்குள் அளந்து விட்டவன் அவளை அளவிடுவதை நிறுத்தியிருக்கவில்லை.

அவன் கட்டிய தாலி சங்கிலி முதுகு பக்கத்தில் வெளியில் தெரியுமாறு தொங்க காலி கோப்பையை பிருந்தா குனிந்து தரையில் வைக்க அந்த சங்கிலி அவளது பக்கவாட்டில் வந்து தொங்கியது. நிமிர்ந்து கொண்டே அந்த சங்கிலியை கையில் பற்றியவள், “உள்ள கிடந்து குத்துற, கொஞ்ச நேரம் ப்ரீயா விட மாட்ட என்னை? உன்னை கட்டினவன விட ஓவரா இருக்கு உன் சேட்டை” என வாய் விட்டு சொன்னாள்.

பிரசன்னா சிரிப்பை அடக்குவதற்குள் பெரும் பாடு பட்டு போனான்.

தாலி சங்கிலியை மீண்டும் முதுகு பக்கம் விட்டவள் தினசரியை வைத்து விட்டு சோம்பல் முறிக்க அள்ளி முடிந்திருந்த கூந்தல் அவிழ்ந்து முதுகில் புரண்டது.

அப்படியே சோபாவில் ஒருக்கலித்து தலை சாய்ந்து கொண்டவள் கண்கள் மூடிக் கொள்ள இவன் எழுந்து வந்து அவள் அருகில் நின்றான்.

காலில் ஸ்பரிசம் உணர்ந்து இவள் விழி திறக்க கணவன் காலை பிடித்துக்கொண்டிருப்பது கண்டு விட்டு, “என்ன தப்பு பண்ணினீங்க, காலையிலேயே என் காலை புடிக்கிறீங்க? காலை புடிச்சாலும் தப்பு தப்புதான்” என்றாள்.

“எங்கடி மெட்டி?” எனக் கேட்டவன் மெட்டி இல்லாத விரலை பிடித்து இழுக்க சொடக்கு விழுந்தது.

“ஆஹா! செம போங்க… அப்படியே எல்லா விரலுக்கும் எடுத்து விடுங்க மாமா” என்றாள்.

நாற்காலியில் இருந்த அவளது இரண்டு கால்களையும் தூக்கி அந்த நாற்காலியில் அவன் அமர்ந்து தன் மடியில் அவள் பாதங்களை வைத்துக் கொண்டவன், “மெட்டி எங்க?” என உறுமலாக கேட்டான்.

அவன் மடியில் கால்கள் இருப்பது என்னவோ போலாக கால்களை தன்னை நோக்கி இழுத்தாள், ஆனால் விடாமல் பிடித்துக்கொண்டவன், “பதில்?” என்றான்.

“தெரியலை, மிஸ் ஆகிடுச்சு போல. தேடணும்” என்றாள்.

“கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுற, என்ன செய்யலாம் உன்னை?” எனக் கேட்டான்.

“எக்ஸர்சைஸ் செஞ்சு உங்க உடம்ப இன்னும் வளர்க்க டைம் ஆகலையா? போங்க எந்திரிச்சு” சிடு சிடுத்தாள்.

தன்னிடமிருந்த மெட்டி எடுத்து சிரத்தையாக அவள் விரலில் அணிவித்து மெட்டியோடு சேர்த்து அந்த விரலையும் மென்மையாக வருடி விட்டான்.

பிருந்தா மீண்டும் காலை தன்னை நோக்கி இழுக்க, கண்டனமாக உச்சு கொட்டி தன்னிடமே பிடித்து வைத்துக்கொண்டவன் பாதத்தை வருட கூசியதில் நெளிந்தாள்.

“ம்ம்…” அவன் அதட்டியதில் நெளிவதை நிறுத்தி விட்டு அவனை பார்க்க, ஒவ்வொரு விரலாக பிடித்து சொடக்கு எடுத்தான். பட் பட் என சொடக்கு முறிய அவனது கனிந்த முகமும் இயல்பான செய்கையும் பிருந்தாவின் உள்ளத்தை அவன் பால் இழுத்து சென்றது.

“தாலி குத்துதுன்னு புலம்பினியே… காயம் ஆகிடுச்சா என்ன?” என விசாரித்தான்.

அவன் என்னமோ அக்கறையாகத்தான் கேட்டான். இவளுக்கு முகம் குப் என சிவக்க, “போங்க எழுந்து!” என சொல்லி அவனிடமிருந்து காலை இழுத்துக் கொண்டாள்.

அவள் முக மாற்றத்தை கவனித்தவன், அவள் தலையில் தட்டி, “நீதான புலம்பின, கேட்டா வெட்க படுற. போகுது போ இதை கட்டினவன் அவ்ளோ மோசமில்லை” அவள் தாலி சங்கிலியை கையில் பிடித்து சொன்னவன், அவள் காதருகில் நெருங்கி, “அவன் காயம் எல்லாம் செய்ய மாட்டான். நம்புடி” என்றான்.

“போடா!” என்றவள் அவனை பிடித்து தள்ள, சிரித்துக்கொண்டே ஓய்வறை சென்று விட்டான். அவன் திரும்பி வரும் போது பிருந்தா அறையில் இல்லை.

அவன் உடற்பயிற்சி முடித்து விட்டு பின் கதவு வழியாக அறைக்குள் வர குளியலறை கதவு தாழிடப் பட்டிருந்தது. முகத்தை துடைத்துக் கொண்டவன் கதவை சாத்தி விட்டு திரும்ப, குளியலறையிலிருந்து வெளி வந்தாள் பிருந்தா.

முட்டி வரை இருக்கும் ஏதோ கவுன் ஒன்றை இரு தோள்களிலும் முடிச்சுகள் போட்டு அணிந்திருந்தாள். தலையில் துண்டால் சுற்றியிருந்தவள் ட்ரெஸிங் டேபிள் முன்பு நின்று தலையை துவட்ட ஆரம்பித்தாள். இன்னும் இவன் இருப்பை உணர்ந்திருக்கவில்லை அவள்.

இரண்டு நிமிடங்கள் துவட்டியவள் துண்டை ஓரம் வைத்து விட்டு விரல்களை கூந்தலில் நுழைத்து சிக்கு எடுக்க, கையில் ஏதோ வலி உணர்ந்தவளாக உதறினாள்.

அவளையே பார்த்திருந்தவன், “என்ன பிருந்தா?” எனக் கேட்டான்.

திகைத்து திரும்பியவள் “எப்ப வந்தீங்க?” எனக் கேட்டாள்.

“நான் வந்ததே தெரியலையா? அடடா!” என அவன் சிரிக்க, பின் பக்க கதவை பார்த்தவள், “ச்சே எப்படி லாக் பண்ணாம விட்டேன்?” என தன்னை தானே கேட்டு, “நல்லவேளை!” என்றாள் அவனிடம்.

“யாருக்கு? எனக்கு வாய்க்கல…” உதடுகள் பிதுக்கி சொன்னவன், “உன் கைக்கு என்ன?” எனக் கேட்டான்.

“போர் அடிக்குதுன்னு கிட்சன்ல போய் காய் கட் பண்ணினேன். என் விரலுக்கும் வெண்டைக்காய்க்கும் வித்தியாசம் தெரியலை” என சொல்லி இடது கை ஆள் காட்டி விரலை காட்டியவள் வலது கையை கூந்தலில் வைக்க அவளை சமீபித்து விட்டான் பிரசன்னா.

“என்ன?” என அவள் கேட்க அவளை தன்னை பார்க்க நிற்க வைத்தவன் அவளது ஈரக் கூந்தலில் தன் வலது கையின் விரல்கள் கொண்டு சிக்கு எடுத்து விட இடது கை அவளது இடையை பற்றி இருந்தது.

சமநிலை கிட்ட அனிச்சையாக அவள் அவனது தோளை பற்ற உடற்பயிற்சி செய்ததன் விளைவாக அவன் உடல் வியர்த்து பிசு பிசுத்து போயிருந்ததை உணர்ந்தாள்.

அவளது கூந்தலில் அலைபாயும் அவன் கைகள் தன்னைப் போல அவளது கண்களை சொருக வைக்க மற்றொரு கையையும் அவனது இன்னொரு தோளில் வைத்து பிடித்துக்கொண்டாள்.

அவன் தோள்களின் வலிமை உணர்ந்தவள் கை அவளை மீறி வருட, ஒரு நொடி தன் கையை அப்படியே நிறுத்தியிருந்தவன் அவளது இடுப்பில் இன்னும் அழுத்தம் கொடுத்து மீண்டும் கூந்தல் இழைகளை மென்மையாக கையாண்டான்.

கண்ணும் கருத்துமாக கூந்தலில் சிக்கெடுக்கும் சேவகத்தை செய்து முடித்தவன் பிருந்தாவை கவனிக்க அவள் அவளை மறந்த நிலையில் இருந்தாள். அவளது முகம் பார்த்து ரசனையாக சிரித்தவன் அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்டினான்.

விழி திறந்தவள் தன் நிலையில் வெட்கி, பதறி பின் விலக பார்க்க, விடாமல் தன்னோடு இறுக்கிக் கொண்டவன், அவள் கன்னத்தோடு கன்னம் வைத்தான்.

கல்லூரி செல்லாதவன் திருமணம் பின்பு சவரம் செய்யாமல் இருக்க அவன் கன்னத்தின் வன்மையில் குறு குறுப்பாக உணர்ந்தாள் பிருந்தா.

“விடுங்க மாமா” கெஞ்சலாக அவள் சொல்ல, “நான் எங்கடி பிடிச்சிருக்கேன்?” என அவனும் கொஞ்சல் குரலில் கேட்டான்.

பிருந்தா நன்றாக பார்க்க அவள்தான் அவனை பற்றியிருந்தாள். அசட்டு சிரிப்போடு அவள் விலக, “ஆழிக் குட்டி அவ ஃப்ராக் காணோம்னு தேடிட்டு இருக்கா, நீ தூக்கிட்டு வந்திட்டியா?” என கிண்டலாக கேட்டான்.

“நம்ம ரூம்லதானே போட்ருக்கேன். குளிச்சிட்டு பாத்ரூம்லேயே சேஞ்ச் பண்ண இந்த ட்ரெஸ்தான் வசதியா இருக்கு. இப்படி திடீர்னு வந்து நிப்பீங்கன்னு எனக்கு என்ன தெரியும். வெளில போங்க இல்ல குளிக்க போங்க, நான் வேற ட்ரெஸ் மாத்தணும்” என்றாள்.

“கை காயம் ஆகியிருக்கே, தானா சேஞ்ச் பண்ணிடுவியா?” கண்களில் குறும்பு மிளிர கேட்டான்.

முறைக்க நினைத்து அவனை பார்த்தவளுக்கு அவளை மீறிக் கொண்டு சிரிப்புதான் வந்தது. அந்த சிரிப்பில் பிரசன்னாவும் சிரிக்க அவனை பிடித்து இழுத்துக் கொண்டு போய் குளியறையில் விட்டாள்.

“என்ன பிருந்தா, என் கூட இன்னொரு முறை குளியலா? ம்ம்… ஆம் வெயிட்டிங் பேப்!” என பிரசன்னா சொல்ல, அவள் உடலெங்கும் மெல்லிய மின்சாரம் பாய்ந்த உணர்வு. வெட்கத்தில் மலர்ந்திருந்த இதழ்கள் சொல் பேச்சு கேட்பேனா என குவிய மறுத்து சண்டித் தனம் செய்ய அவளுக்கு ‘ஹையோ!’ எனதான் இருந்தது.

“போ போ கோல்ட் ஆகிட போகுது, நாளைக்கு பார்க்கலாம்” என இன்னும் பிரசன்னா வம்பு செய்ய குளிர்ந்த நீர் எடுத்து அவன் தலையில் ஊற்றி, “ரொம்ப நல்லவர்தான் மாமா நீங்க, நம்பிட்டேன் நான்” என சொல்லி விட்டு அவன் அடுத்து பேசுவதற்குள் வெளியே வந்து விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement