Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -5

அத்தியாயம் -5(1)

பிருந்தாவும் பிரசன்னாவும் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்திருந்தனர். கைக்குட்டையில் ஐஸ் துண்டு வைத்து லேசாக வீங்கியிருந்த அவனது கீழ் உதட்டில் கர்ம சிரத்தையாக ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.

சற்று நிறுத்தி விட்டு வீக்கம் மறைந்ததா என பிருந்தா தனது கண்களால் ஆராய்ச்சி செய்ய, “ம்… ஏன் நிறுத்தின?” என அதட்டினான்.

“சும்மா கத்தாதீங்க, அதான் காயம் ஆகிடுச்சுன்னு தெரியுதுல்ல? அப்புறம் என்ன டாட் டாட் டாட் க்கு கிஸ் பண்ணுனீங்க?” என கடு கடுத்தவள் மீண்டும் ஐஸ் ஒத்தடம் வைக்க போக அவள் கையை பிடித்து தடுத்தவன், “அந்த மூணு டாட் என்ன வார்த்தை டி? படிச்சவளா நீ? என்ன பேச்சு பேசுற? மரியாதை தெரியாதா உனக்கு? அப்பப்ப வா போ வாடா போடான்னு சொல்ற, சரிதான்னு பொறுத்து போனா ஓவரா போறியா?” கோவமாக சீறினான்.

மன்னிப்பு கேட்காமல் அழுத்தமாக அவள் பார்த்திருக்க, ஐஸ் துண்டு இருந்த கைக்குட்டையை பிடுங்கி எறிந்தான்.

“யூ டேமிட், சாரி கேட்கணும்னு கூட தோணல, அவ்ளோ திமிரா உனக்கு?” கத்தினான்.

தலை குனிந்து கொண்டவள் வாயே திறக்காமல் போக பிடித்து படுக்கையில் தள்ளியவன் எழுந்து வெளியே செல்ல, “அச்சோ போகாதீங்க, லிப் இன்னும் மாறல” என்றாள் அவசரமாக.

திரும்பி நின்று அவளை முறைத்தவன், “நீ செய்றது பேசுறது எல்லாம் காண்டாகுது. இப்படியே போறேன். நீதான் காரணம்னு நெஞ்ச நிமித்திக்கிட்டு சொல்றேன்” என்றான்.

“ச்சீ!”

“என்ன ச்சீ? எனக்கொன்னும் அசிங்கம் இல்ல, என் பொண்டாட்டி என் மேலே அப்படி ஒரு காதல் வெறியில இருந்திருக்கான்னு நினைப்பாங்க. அது எனக்கு பெருமைதானே?”

“விளையாடாதீங்க”

“ஹேய் சும்மா சொல்றேன்னு நினைக்கிறியா?” தீவிர தொனியில் கேட்டவன் திரும்ப முனைய,

“ப்ளீஸ் ப்ளீஸ் என் மானமே போய்டும், போகாதீங்க” என கெஞ்சலாக சொன்னாள்.

“போக விடாம நீதான் ஏதாவது செய்யணும்… டூ மினிட்ஸ் உனக்கு டைம். சாரி கேட்டு சமாதானம் பண்ணலாம்னு நினைக்காத. அந்த ஸ்டேஜ் தாண்டிட்டேன் நான்” என சொல்லி கைகளை கட்டிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டான்.

“ரெண்டு நிமிஷத்துல என்ன செய்ய… நூடுல்ஸ் செஞ்சு ஊட்டி விட்டா சமாதானம் ஆகிடுவானா?” அவளின் முணு முணுப்பு காதில் விழ கதவை நெருங்கினான் அவன்.

“இருங்க இருங்க… யோசிச்சிட்டு இருக்கேன்ல…” என அவள் சொல்ல மீண்டும் அவளை பார்க்க நின்று கொண்டான்.

அவள் நெற்றியை தட்டிக் கொண்டும் நகம் கடித்தும் புடவை முந்தானையை விரலில் சுற்றியும் அவனை சமாதானம் செய்யும் மார்க்கம் தெரியாமல் போக, “இன்னும் டுவெண்ட்டி செகண்ட்ஸ்தான் இருக்கு” என்றான் காரியகாரன்.

மனதிற்குள் அவனை திட்டியவள், “ஓகே இனிமே உங்களை மாமான்னு கூப்பிடுறேன், எப்பவும்” என்றாள்.

இதழ்க்கடையோரம் சிரிப்பு சிந்த, “பேச்சு மாறிட்டீனா?” என சந்தேகமாக கேட்டான்.

“அதான் உதட்ட எப்படி வீங்க வைக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களே… இதே மாதிரி திரும்பவும் செஞ்சுக்கிட்டு என்னை மிரட்ட மாட்டீங்க? நான் பேச்சு மாற மாட்டேன்” என்றாள்.

அப்படியெல்லாம் யோசித்திருக்காத பிரசன்னா சத்தமாக சிரிக்க அவள் கோவத்தை அடக்கிக் கொண்டு பார்த்திருந்தாள்.

“நல்ல புத்திசாலிடி நீ, நீயே ஐடியா எடுத்து கொடுக்கிற எனக்கு” என சொல்ல தன் தலையில் வேகமாக இரண்டு கொட்டுக்கள் வைத்துக்கொண்டவள், “சரி வாங்க இப்படியே போகாதீங்க” என்றாள்.

“ஹான் கேட்கலையே” காதுக்குள் சுண்டு விரல் வைத்து குடைந்து கொண்டே சொன்னான்.

“வாங்க மாமா” என மாமாவில் ஒரு அழுத்தம் கொடுத்து கூறவும்தான் இவள் பக்கத்தில் வந்தமர்ந்தான்.

“இப்போ கேளு சாரி” என அவன் சொல்ல உச்சு கொட்டி பார்த்தாள்.

“டாட் டாட் டாட்க்கு… கேளு சாரி” அதட்டலாக சொல்ல தன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு, “சாரி” என்றாள்.

“ஹான்?”

“சாரி மாமா” என வார்த்தைகளை கடினமாக உச்சரித்தாள்.

“ம்ம்… போ போய் வேற ஐஸ் க்யூப் எடுத்திட்டு வா”

“எதுக்கு?”

“என்ன கேட்ட?”

“எதுக்கு மாமா?” எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“நைட் சாப்பாட்டுக்கு எப்படியும் வெளில வந்துதான் ஆகணும் நான். இந்த ஸ்வெல்லிங் சரியாக வேணாமா? உன் இஷ்டம் ப்பா, எனக்கொன்னுமில்லை” தோள்களை குலுக்கி அலட்சியமாக அவன் சொல்ல, இன்று எனக்கு நேரம் சரியாக வாய்க்கவில்லை, இரு பார்த்துக் கொள்கிறேன் என மனதில் கறுவிக் கொண்டே எழுந்து சென்றாள்.

பிருந்தாவின் சிரத்தையான ஒத்தடத்தால் வீக்கம் மறைய இரவு உணவின் போது எந்த கேள்வியும் எழவில்லை. அன்று இரவு அங்குதான் தங்கினார்கள். இப்போதும் எதுவும் வம்பு செய்வானோ என்ற பயத்தோடுதான் உறங்க சென்றாள், ஆனால் அமைதியாக இருந்தான்.

முதல் நாள் அரை குறையாக தூங்கியவளுக்கு கண்கள் சொருக படுத்த உடனே உறங்கியும் விட்டாள்.

“வாலு வாலு! எப்படி அடாவடி பண்ணிட்டு குழந்தை மாதிரி தூங்குறது பாரு!” செல்லமாக மனைவியை கடிந்து கொண்டவன் ஒரு விரல் கொண்டு அவள் இதழ்களை தொட்டு பின் அந்த விரலை தன் இதழ்களில் ஒற்றி ஒரு இதழ் தொடா முத்தம் கொடுத்தான்.

அவளை பார்க்க படுத்துக் கொண்டவன் அவள் உருவத்தை கண்களில் நிரப்பி நிரப்பியே நிறைந்து போய் உறக்கத்தை தழுவினான்.

மறுநாள் பிரசன்னாவின் வீடு வந்து விட்டனர். இன்னும் இரண்டு நாட்கள் சென்ற பின்னர் இருவருமே தங்கள் பணிகளை பார்க்க ஆரம்பிக்கலாம் என பேசி முடிவெடுத்துக் கொண்டனர். பிருந்தாவின் காரை இங்கு அனுப்பி வைத்து விட்டார் கேசவன்.

“எதுக்கு அந்த கார், நான் போற வழிதானே உன் காட்டன் மில்? நான் ட்ராப் பண்ணுவேன், ஈவ்னிங் ஃபைவ்க்கு எல்லாம் நான் ரிட்டர்ன் வந்திடுவேன், அந்த நேரம் உனக்கு வசதி படலைன்னாலும் வீடு வந்திட்டு அப்புறம் நானே வருவேன் பிக் அப் பண்ண. கார் வேணாம், திருப்பி அனுப்பிடு” என்றான் பிரசன்னா.

“நல்லா இருக்கே, ஒண்ணு செய்யலாம், நான் உங்களை காலேஜ்ல ட்ராப் பண்ணுறேன், அப்புறம் ஈவ்னிங்கும் நானே பிக் அப் செய்துக்குறேன்” என அலட்சியமாக சொன்னாள் பிருந்தா.

பிரசன்னா கடு கடு என முகத்தை வைத்துக்கொள்ள, “கடுப்பாகுதுல்ல மாமா? எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது என் கார், நான் ஆசையா வாங்கினது. எனக்கும் டிரைவிங் தெரியும், உங்க பிக் அப் ட்ராப் எல்லாம் எனக்கு வேணாமே” என்றாள்.

“போடி!” என சொல்லி விட்டு வேறு வேலை பார்க்க தொடங்கி விட்டான்.

‘போடா’ என்ற வார்த்தை தொண்டை வரை வந்தாலும் தான் உறுதி கொடுத்ததற்கு இணங்க அந்த போடாவை விழுங்கி விட்டு அவளும் வேறு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

சினிமாவுக்கு சென்று வாருங்கள் என புதிய படத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்து கொடுத்தான் விஜய். வீட்டில் சும்மாதான் பொழுது போகிறது என்பதால் பிருந்தாவும் மறுக்காமல் கிளம்பினாள்.

நெட் கை வைத்த நீளமான டாப், லெகிங்ஸ் அணிந்து மிதமாக உதட்டு சாயம் பூசி அளவாக கண் மை தீட்டி தயாராகி நின்றவளை அதிருப்தியாக பார்த்தவன், “என் கூட வரும் போதுன்னு இல்ல, இப்ப நீ மிஸஸ் பிரசன்னாங்கிறதால எப்பவும் இப்படி வேஷம் போடாத. வைப் இட் ஆஃப்!” அவள் உதடுகளை காட்டி அழுத்தமாக சொன்னான்.

தன் உதடுகள் முன் நீண்டிருந்த அவனது கையை தட்டி விட்டவள், “எனக்கு பிடிச்சதை செய்யக் கூடாதுன்னு ஏன் சொல்றீங்க? ஏதாவது வேலிட் ரீசன் இருக்கா? சும்மா…” அலட்சியமாக பேசினாள்.

“நீ இயற்கையாவே என் கண்ணுக்கு அழகாதான் தெரியுற, இது வேணாம். க்ளீன் பண்ணு” என்றான்.

“ஹையோ மாமா உங்க கண்ணுக்கு அழகா தெரியதான் இதெல்லாம் செய்றேன் நினைச்சீங்களா?”

“வேற யார் கண்ணுக்குடி?” உறுமினான்.

“ஆ ஊ ன்னா பொங்காதீங்க. எனக்கு பிடிச்சிருக்கு செய்துக்குறேன்”

“எனக்கு பிடிக்கலை”

“அது உங்க கஷ்டம், நான் என்ன செய்ய?”

“உன்கிட்ட பேசி பேசியே தொண்டை தண்ணி வத்தி போகுது. போ துடைச்சிட்டு வேற நல்ல ட்ரெஸ் இருந்தா போட்டுட்டு வா… டைம் இல்ல”

“இப்படியே போறதா இருந்தா போலாம். இல்லைனா டிக்கெட் மெசேஜ் எனக்கு ஃபார்வர்ட் பண்ணுங்க, நான் போறேன்”

“நான் இல்லாம போவியா?”

“வேற என்ன செய்றது? மூவி பார்க்கிறதுன்னு எனக்குள்ள ஃபிக்ஸ் பண்ணிட்டேன், நீங்க கூட்டிட்டு போகலைனாலும் நான் போவேன்” என பிருந்தா சொல்லிக் கொண்டிருக்க அவள் கை பிடித்து தர தர என இழுத்துக் கொண்டு போய் குளியலறையில் நிறுத்தினான்.

“எதுக்கு காட்டு மிராண்டி தனம் செய்றீங்க?” என கத்தினாள் பிருந்தா.

தண்ணீர் எடுத்து அவள் ஆடை நனையுமாறு ஊற்றி விட்டவன் அவளது ஈரமான சுடிதார் டாப் கொண்டே அவளது உதட்டு சாயத்தையும் அழிக்க முற்பட அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

லேசாக தடுமாறினாலும் விழாமல் நின்று கொண்டவன் அவளை தன்னருகே இழுத்து பின் பக்கமாக திருப்பி நிற்க வைத்து இரு கைகளையும் இடையோடு சேர்த்து பிடித்து அவளை அசைய விடாமல் நிறுத்தினான். அவளது உதட்டு சாயம் முழுதையும் அழித்து விட்டு பின்னரே அவளை விட கலங்கிய கண்களும் கோவம் பொங்கிய மனமுமாக நின்றிருந்தாள் பிருந்தா.

“ஒரு தடவ சொன்னா கேட்கணும், சும்மா வாய் பேசிக்கிட்டு. பொண்ணா லட்சணமா கிளம்பி வா” என பிரசன்னா சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருந்த கப்போர்ட் திறந்தவள் கண்ணில் பட்ட ஹார்பிக் எடுத்து அவன் சட்டை மேல் பிதுக்கி ஊற்றினாள்.

பிரசன்னா அதிர்ந்து போய் பார்த்திருக்க, “உங்க மூளையையும் க்ளீன் பண்ண இப்படி ஏதாவது இருந்தா போட்டு நல்லா க்ளீன் பண்ணுங்க. ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ இடியட்!” ஹார்பிக் பாட்டிலை கீழே எறிந்து விட்டு குளியலறை விட்டு வெளியேறி இருந்தாள்.

ஷவர் திறந்து தன்னை சுத்தம் செய்து கொண்டவன் மூளையின் சூட்டையும் தணிக்க முயன்றான். சுவரில் ஓங்கி குத்தி தன் கோவத்தை எல்லாம் வெளியேற்றி குளித்து விட்டு வெளியில் வர சுத்தமாக கை இல்லாத டாப், லெகிங்ஸ் என தயாராகி இருந்தவள் அவனை கோவமாக பார்த்தாள்.

அவன் முறைப்பாக பார்த்துக் கொண்டிருக்க ட்ரெஸிங் டேபிள் முன் நின்று வேண்டுமென்றே அதீதமாக உதட்டு சாயம் பூசி தன்னை சரி பார்த்துக் கொண்டவள், “டென் மினிட்ஸ் டைம் உங்களுக்கு, கார்ல வெயிட் பண்றேன்” என சொல்லி வெளியேறி விட்டாள்.

பிரசன்னாவுக்கு கோவத்தை தாண்டி மனம் சோர்வாக உணர, ஈரம் கூட துடைக்காமல் இரண்டு நிமிடங்கள் அப்படியே யோசனையாக அமர்ந்திருந்தான். பின் எழுந்து தயாராகி அம்மாவிடம் சொல்லிக் கொண்டவன், “எங்க அவ?” எனக் கேட்டான்.

“முன்னாடியே வெளில போய்ட்டா. போய் பாரு” என கங்கா சொல்ல, அம்மா கூட அவள் ஆடை பற்றி எதுவும் சொல்லவில்லையா என்ற யோசனையோடு வெளியில் சென்றான்.

காருக்கு பக்கத்தில் கைபேசியில் தன் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்த பிருந்தா அவளது டாப் மேல் இடுப்பு வரை இருக்கும் ஓவர் கோட் அணிந்திருந்தாள். பார்த்தாலே தெரிந்தது அந்த டாப்போடு சேர்ந்தது என்று.

“வேணும்னே டென்ஷன் பண்றா!” சிறு குரலில் வாய் விட்டு புலம்பிக் கொண்டே காரில் அமர்ந்தவன் அவளை பார்க்க, அவள் பொறுமையாக அம்மாவிடம் கிளம்புவதாக சொல்லி விட்டு கைபேசியை அணைத்து விட்டு அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து காரின் கதவை மூடினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement