Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -10

அத்தியாயம் -10(1)

மனம் முழுதும் கசந்த உணர்வோடு பிரசன்னா பக்கத்தில் பிருந்தா அமர்ந்திருக்க உல்லாச புன்னகையோடு காரோட்டிக் கொண்டிருந்தான் அவன்.

“நீ பாட்டுக்கும் போய்ட்ட, இங்க ஒருத்தன் என்ன கஷ்டபடுவான்னு கொஞ்சமாச்சும் தோணியிருக்க வேணாம்?” எனக் கேட்டான். அவள் காதில் வாங்காதது போல் திரும்பிக் கொண்டாள்.

வழியில் சிக்னலில் கார் நிற்க, “மொத்தமா ஒன்றரை மாசம் ஓடிப் போச்சு டி, ஆனாலும் ரொம்பத்தான் வீம்பு உனக்கு” என்றான்.

காதில் விரல் வைத்து குடைந்து கொண்டவள் அலட்சியமாக வெளியே வேடிக்கை பார்க்க, “உன்கிட்டேர்ந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் பேப், உன் மாமா எல்லாத்தையும் சமாளிப்பான்” என்றான்.

பிருந்தா முகத்தில் ஏளனப் புன்னகை நெளிந்தது. அசராமல் முகம் நிறைந்த சிரிப்போடு வண்டியை எடுத்தான்.

வீடு வந்ததும் காரிலிருந்து இறங்கியவள் வேகமாக நடக்க அவளுக்கு பின் இறங்கியவன் அவளிடம் ஓடி வந்து தோளை சுற்றி கை போட்டுக் கொள்ள வெடுக் என அவனை தள்ளி விட்டாள்.

அவள் இடது கை வளைவில் தன் வலது கை நுழைத்து தன்னோடு இறுக பற்றிக் கொண்டு, “எங்க இப்போ புடிச்சு தள்ளு பார்ப்போம்” என சொல்லி நடந்தான். அவளுக்கு வலிக்காதவாறான பிடிதான், ஆனாலும் அவளால் அவனை விலக்க முடியவில்லை.

முறைத்தவள் அவனோடு நடந்து கொண்டே அவன் வலது பாதத்தில் மிதித்து விட்டு “ஓ… சாரி” என்றாள்.

“தெரிஞ்சே தெரியா…ம பண்ணிட்ட… அப்படித்தானே?” நக்கலாக அவன் கேட்க எரிச்சலாக பார்த்தாள்.

“ஷூ அழுக்காகிடுச்சு பாரு. அதை விடு உன் காலுக்கு ஒண்ணும் அடியில்லையே?” என கேலி சிரிப்போடு கேட்டான்.

இன்னும் இன்னும் எரிச்சல் வழிய அவனை பார்த்தவள், “மலைமாடு மாதிரி ஏன் பிடிச்சு வச்சிருக்கீங்க? கையை விட்டு தொலைங்க” என்றாள்.

“அப்படியெல்லாம் விட முடியாது. இனி எப்பவும் நீ என் பிடிக்குள்ளதான். உன் மனசுல பதியற வரை இப்படித்தான்” என்றவன் அவளை விடாமல் அவளுடனே வீட்டுக்குள் நுழைந்தான்.

இருவரையும் ஒரு சேர பார்த்த கங்கா திகைத்து போய் நிற்க, “ம்மா ரெண்டு காபி போட சொல்லு, நான் வரேன் வாங்க” என போகிற போக்கில் சொல்லி சென்றான். அவளுக்கும் மாமியாரிடம் பேசும் மனநிலை இப்போது இல்லை என்பதால் அவன் இழுப்புக்கு சென்றாள்.

எதுவும் புரியாமல் சமையல் செய்யும் அம்மாவை காபி போட சொல்லி விட்டு நிர்மலாவுக்கு அழைத்து பேசினார் கங்கா.

“என்ன அண்ணி சொல்றீங்க? பிருந்தா என்கிட்ட எதுவுமே சொல்லலையே… இருங்க நான் போன் பண்ணி கேட்குறேன்” என்றார் நிர்மலா.

“வேணாம் வேணாம். இங்கதான் இருக்கா. அவளா எதுவும் சொன்னா கேட்டுக்க, நாங்க இத்தனை பேர் இருக்கோம்ல பார்த்துக்கிறோம்” என்றார் கங்கா.

“அண்ணி…” என தயங்கினார் நிர்மலா.

“அவளே உன்கிட்ட பேசுவா, நீ ரிலாக்ஸா இரு” என கங்கா சொல்ல, மகள் திடீரென எப்படி சென்றாள் என்ற குழப்பத்தோடே கைபேசியை வைத்தார் நிர்மலா.

பலோஸா பேண்ட், தளர்வான டி ஷர்ட் என இலகு உடை மாறிக் கொண்ட பிருந்தா தன்னை பார்த்திருந்த பிரசன்னாவை பொருட்படுத்தாமல் பின் பக்க கதவை திறந்து கொண்டு விடு விடு என தோட்டம் நோக்கி சென்று விட்டாள்.

தானும் வேறு உடை மாற்றிக் கொண்டு இருவருக்கும் காபி வாங்கிக் கொண்டு அவளிடம் சென்றான். நடை போட்டுக் கொண்டிருந்தவள் முன் காபி கோப்பையை நீட்ட, “வாங்கி உங்க மூஞ்சுல ஊத்தணும் போலத்தான் இருக்கு. நான் கொஞ்சம் ஷாந்த மூட்ல இருக்கும் போதே தப்பிச்சு ஓடிப் போய்டுங்க” என்றாள்.

“பரவாயில்லடி ஊத்து!” என்றவன் கோப்பையை நீட்டிய படியே நிற்க வாங்கியவள் அவன் முகத்தில் ஊற்ற செல்வது போல பயம் காட்டினாள். அவனோ இமைகள் கூட மூடாமல் இம்மி அளவு கூட நகராமல் நின்றான்.

“என்ன இதை ஊத்தினா அதை வச்சு அப்படியே பாவம் ஃபீல் கிரியேட் பண்ணலாம்னு ஐடியாவா?”

“பிருந்தா நம்புடி, டயர்டா தெரிஞ்ச. நிஜமா அக்கறையாதான் எடுத்திட்டு வந்தேன்” என்றான்.

“ஓ அக்கறை! ஆனா பாருங்க… எனக்கு இப்போ காபி குடிக்கிற மூட் இல்ல, டீ வேணும்” என்றாள்.

அவளை யோசனையாக பார்த்தவன் அவளிடமிருந்து காபி கோப்பையை வாங்கிக் கொண்டு தனக்கான காபியை பருகிக் கொண்டே வீடு நோக்கி நடந்தான்.

பிருந்தாவின் மனம் அமைதியிழந்து கொதித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவனது பழைய செயலுக்கே விளக்கம் தராத போது மீண்டும் நிர்பந்தம் செய்து தன்னை அழைத்து வந்ததை எண்ணி எண்ணி அவளுக்கு தலைவலி எடுக்க ஆரம்பித்தது. எதுவும் செய்ய முடியாமல் தானே இவனிடம் வந்தது வேறு ஆத்திரத்தை கிளற அவன் தேநீரோடு வந்து நின்றான்.

“எனக்கு மூட் மாறிட்டே இருக்கு, டீ பார்த்தா வாமிட் வருது. வெறும் பால் போதும்” என்றாள்.

பிரசன்னா அழுத்தமாக அவளை பார்க்க, “என் மேல அவ்ளோதான் உங்க அக்கறையா மாமா? ப்ச்…” என்றாள்.

“சரி அப்புறம் உன் கோவத்தை காட்டு, முத டீய குடி. உனக்கும் தெம்பு வேணுமே” என பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு சொன்னான்.

“க்குவா” என உமட்டுவது போல செய்தவள், “பார்த்தாலே வாந்தி வருது, போங்க போய் பால் எடுத்திட்டு வாங்க” என்றாள்.

“ம்ம்… இங்க வேணாம், வா ரூம் வா, வாமிட் வருதான்னு செக் பண்ணிடலாம்” என்றவன் அவள் கையை ஒற்றைக் கையால் பற்றிக் கொண்டு அறைக்கு இழுத்து சென்று கதவை காலால் உதைத்து சாத்தினான்.

“அராஜகம் பண்றீங்க. உங்களை கேட்டேனா டீ வேணும் காபி வேணும்னு?” சீறினாள்.

“நீ டீ கேட்கலை?”

“காபி கேட்டேனா உங்களை?”

“அந்த காபி வேஸ்ட்டா போச்சு. இது நீ கேட்ட டீதான், குடி வாந்தி வந்தா பார்த்துக்கலாம்” என்றான்.

அவள் முகம் திருப்ப, “குடின்னு சொன்னேன்” என அதட்டினான்.

“முடியாது” அவளது கடிப்பட்ட பற்களுக்கு இடையிலிருந்து வார்த்தை சீறி வந்தது.

அவளை வம்படியாக பருக வைக்க யோசித்தவன் சூடான தேநீரை அப்படி பருக செய்ய இயலாது என்பதால் வேறு திட்டத்தோடு அவளை நெருங்கினான்.

பிருந்தா விலகி செல்ல ஒற்றைக் கை கொண்டே அவளது முதுகை அணைத்தவாறு பிடித்துக்கொண்டவன் அவள் பின்னந் தலையை பற்றி விலகாதவாறு பிடித்துக்கொண்டான்.

பிருந்தா என்ன செய்ய போகிறான் என தெரியாமல் விழிக்க மற்றொரு கையில் இருந்த தேநீரை ஒரு வாய் பருகியவன் அவள் முகத்தை நெருங்கினான்.

தன்னிடமிருந்து அவளுக்கு தேநீரை கடத்தி விட்டு அவன் விலக, அவன் சட்டையில் அவன் பருக செய்த தேநீர் கொண்டு அபிஷேகம் செய்திருந்தாள்.

திடுக்கிட்டு பார்த்தவன், “என்னடி இது?” என கோவமாக கேட்டான்.

“வாயிலேர்ந்து வந்தா வாந்தி மாமா, நான்தான் சொன்னேன்ல… பாருங்க டி ஷர்ட் டீடீ…ஷர்ட் ஆகிப் போச்சு” தன் வாயை துடைத்துக் கொண்டே சொன்னாள்.

தன் டி ஷர்ட்டை அவள் டி ஷர்ட்டில் துடைத்துக் கொண்டவன், “இதுக்கெல்லாம் அசர மாட்டேன் நான்” என சொல்லி மீண்டும் ஒரு வாய் பருகி விட்டு அவளை நெருங்கினான்.

பட் என அவன் கையிலிருந்த தேநீர் கோப்பையை பறித்துக் கொண்டவள் அவன் தலையில் கவிழ்த்தாள். நல்ல வேளையாக தேநீர் மிதமான சூட்டில் இருந்தது அப்போது.

தலையை சிலுப்பியவன், அவள் கையிலிருந்த காலி கோப்பையை பிடுங்கி தரையில் வீசி எறிய பீங்கான் கோப்பை சில்லு சில்லாக உடைந்து சிதறியது.

சிறு ஏளன சிரிப்போடு பார்த்தவள், “அவ்ளோதான் உங்க அக்கறையா மாமா?” எனக் கேட்டாள்.

பெரிய மூச்சு எடுத்துக் கொண்டவன், “புகை நுழையுற கேப்ல பூந்து புறப்பட்டு வர்றவன்டி நான்” என்றான்.

“நல்ல தற்பெருமை!”

“எவ்ளோ திமிர் உனக்கு? வா வந்து என்னை குளிக்க வை, வாடி” என சொல்லி தர தரவென குளியலறை இழுத்து சென்று நிறுத்தினான்.

“என்ன பார்க்கிற? இப்போ இங்க தண்ணீரில்… ஒரு ஜல புல ஜங்!” கண்கள் சிமிட்டி அவன் சொல்ல, அதீத ஆத்திரத்தோடு அவனை பார்த்திருந்தாள்.

“இந்த மாமனோட சேவையும் தங்களுக்கு உண்டு. பட் ஃபர்ஸ்ட் நீங்கதான்” என்றவன் சட்டையை கழற்றி விட்டு பார்க்க, தரையில் விழுந்து கிடந்தாள் பிருந்தா.

பதறிப் போனவன் முட்டியிட்டு அமர்ந்து அவள் கன்னம் தட்ட அவளிடம் விழிப்பு இல்லை. கோப்பையில் தண்ணீர் எடுத்து தெளித்து தெளித்து பார்த்தான். அவளிடம் துளி அசைவு கூட இல்லாமல் போக தூக்கி கொண்டு வந்து படுக்கையில் கிடத்தியவன் அம்மாவுக்கு அழைத்து உடனே அறைக்கு வரும் படி சொன்னான்.

“ஐயையோ! அங்க என்னவோங்க பிரசன்னா பதறுறான்” என அருகில் அமர்ந்திருந்த கணவரிடம் கங்கா சொல்ல, அப்போதுதான் வீட்டுக்குள் வந்த விஜய், கங்கா, அரங்கநாதன் மூவரும் பிரசன்னா அறைக்குள் நுழைந்தனர்.

அறையில் தேநீர் சிந்தி, கோப்பையின் துண்டுகள் சிதறி, பிருந்தாவும் மயங்கி இருப்பதை கண்டவர்கள் அதிர்ந்தனர்.

Advertisement