“யார் வேணாம்னு சொன்னா? தாராளமா சைட் அடிக்கலாம். சைட் மட்டுமில்லை. அதுக்கும் மேல” என்று அவன் எதையோ சொல்ல வர,பட்டென்று அவன் வாயை மூடினாள் வேதா.
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.” என்றவள் தலையை ஆட்ட, அருகில் வந்ததில் அவளின் நெருக்கம் அவனின் உணர்வுகளை தூண்டிவிட்டு அவனுக்கு காதல் அவஸ்தையை கொடுக்க, அவன் பார்வையின் போக்கு மாறியதைக் கண்டவள், சட்டென்று கைகளை எடுத்துக் கொண்டாள்.
‘இன்னைக்கு எனக்கு பல கட்ட சோதனைகள் இருக்கும் போல’ என்று முனங்கியவன், கோவிலைச் சென்று சேர்வதற்குள் ஒரு வழியாகியிருந்தான்.
அம்மனின் பெயரில் அர்ச்சனை செய்து சன்னிதானத்தில் கைகூப்பி நின்றிருந்தவளின் மனம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியுமே நிறைந்திருந்தது.
முழு நிலவாய் கைகூப்பி நின்றிருந்தவளின் நெற்றியில் விஜய் குங்குமத்தை வைக்க, இருந்த கொஞ்சம் நஞ்சம் சஞ்சலமும் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.
“எடுப்போமே” என்றவன் போட்டோவாய் எடுத்துத் தள்ளிவிட்டான். அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து, அவளை தோளில் கையிட்டு அணைத்தபடி எடுத்த போட்டோ அவ்வளவு அழகாய் இருந்தது.
திரும்பி வரும் வழியெல்லாம் அவளுக்கு காதம்பரி ஞாபகம் தான். கடைசியாக அவருடன் தான் வேதா கோவிலுக்கு சென்றது. அதற்கடுத்து இத்தனை மாதங்களுக்குப் பிறகு இப்போது விஜயுடன் வந்திருக்கிறாள்.
அன்று அன்னையின் நினைவு அதிகமாய் இருக்க, அதுவே அவளை அமைதியாய் இருக்க செய்தது.
வீட்டிற்கு முன் காரை நிறுத்தியவன்,
“சீக்கிரம் கிளம்பு வேதா. காலேஜ்க்கு டைம் ஆச்சு. நான் அகரனை போக சொல்லிட்டேன். நானே டிராப் பண்றேன்” என்று பேசிக் கொண்டே போக, அவள் அமைதியாகவே இருந்தாள்.
“வேதா..” என்று அவன் கொஞ்சம் சத்தமாக அழைக்க,
“ங்கான்..!” என்றாள்.
“என்னமா ஆச்சு?” என்றான் புரியாமல்.
“ஒண்ணுமில்லைங்க” என்றவள், நேராக சென்று அமுதாவிற்கு விபூதியை வைத்துவிட்டாள்.
“நீங்களும் எடுத்துக்கோங்க ஆன்ட்டி” என்று சித்தியிடம் நீட்டியவள், அர்ச்சனைக் கூடையையும் அவரிடம் கொடுத்துவிட்டு செல்ல,
“என்னாச்சு வேதா? கிளம்பலையா? ட்ராபிக்ல மாட்டிட்டா டைம் ஆகிடும். போய் கிளம்புமா” என்றான்.
அப்போதும் அவள் அப்படியே இருந்தாள். அவள் கண்கள் கலங்கியதைப் போல் இருக்க,
“என்னாச்சுடா?” என்றான் தவிப்பாய்.
“எனக்கு டைட்டா ஒரு ஹக் வேணும்” என்றாள்.
அடுத்த நிமிடம் அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் வேதா. ஆதியும் அந்தமுமாய் தனக்குள் இறுக்கிக் கொண்டான். அந்த இறுக்கம் அவளுக்கு போதவில்லை போலும். தனக்குள் ஒன்றியவளை மேலும் இறுக்கிக் கொண்டான். தன் மார்புச் சட்டையில் அவள் கண்ணீரை உணர்ந்தவன்,
“என்னாச்சுடா? இப்ப ஏன் இந்த அழுகை?” என்றான் தவிப்புடன்.
“தெரியலை!! ஆனா, அழணும்னு தோணுது” என்றாள்.
சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன்,
“வேதா ஆர் யு ஓகே” என்றான்.
“ம்ம்”
“வேணும்னா லீவ் சொல்லிடவா” என்றான் மீண்டும்.
“இல்ல வேண்டாம். பத்து நிமிஷத்துல வந்துடுவேன்” என்றவள் வேகமாய் சென்று விட்டாள். அவன் தான் புரியாமல் நின்றான்.
கல்லூரி செல்லும் வர அமைதியாக வந்தவளை விநோதமாக பார்த்தான்.
கல்லூரி வந்தும் அவள் அமைதியாக இறங்க போக,
“வேதா” என்றான் அழுத்தமாய்.
“சொல்லுங்க சார்” என்றாள்.
“நீ இப்படி இருந்தா பார்க்க நல்லாவே இல்லை”
“அப்போ பார்க்காதிங்க” என்றாள் முறுக்கிக் கொண்டு.
“நானும் பார்க்கக் கூடாதுன்னு தான் நினைக்கறேன். ஆனா, கண்ணு உன்னை மட்டும் தான பார்க்குது” என்றவன் அவளை மேலும் கீழும் பார்க்க, குப்பென்று சிவந்தாள் வேதா.
“சார் இது காலேஜ்” என்றவள் நார்மல் மோடுக்கு மாறியிருக்க,
“இப்படி இருக்குறது தான் நல்லா இருக்கு.இப்போ போ” என்றான் சிரிப்புடன்.
“உங்களை” என்று முறைக்க முயன்று சிரித்தவள்,
“உங்க கார்ட் குடுங்க. பிரண்ட்ஸ்க்கு ட்ரீட் வைக்கணும்” என்றாள் உரிமையாய். அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன், பர்ஸை எடுத்து நீட்டினான்.
பர்சிலிருந்து கார்டை உருவிக் கொண்டவள், அதிலிருந்த போட்டோவைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தபடி, எதையும் பார்க்காததைப் போல் அவனிடம் கொடுத்துவிட்டாள்.
“நம்பர் சொல்லுங்க” என்றவள் அவன் நம்பரை சொல்லவும்,
“ம்ம் ஓகே” என்றபடி இறங்கி சென்று விட்டாள். செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,தானும் இறங்கி செல்ல, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த லயாவிற்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.
“இதோ பார்..! திரும்ப திரும்ப சொல்றேன். விஜய் சார் என் ஆளு. அவரைப் பார்க்குறது, இப்படி கார்ல ஒண்ணா வந்து இறங்குறது இந்த வேலையெல்லாம் இனி வச்சுக்கக் கூடாது. இனி அவர் கிட்ட லிப்ட் கேட்டு போறதா பார்த்தேன்” என்று லயா பல்லைக் கடித்து பேசிக்கொண்டிருக்க,
பின் பெஞ்சில் தோதாக சாய்ந்து அமர்ந்து, கைகளை பின்னாக வைத்துக் கொண்ட வேதா,
“போனா என்ன பண்ணுவ?” என்றாள் நக்கலாய்.
“உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்டையே இப்படி பேசுவ?”
“ஆமா யார் நீ? எதுக்கு இப்படி வந்து கத்திட்டு இருக்க. ஏற்கனவே எனக்கு மூட் சரியில்லை. சோ பேசாம போய்டு” என்றாள் வேதா பொறுமையாய்.
“நான் யாருன்னு தெரியுமா?” என்று லயா தெனாவெட்டாய் பேச,
“நீ யாரா இருந்தா எனக்கென்னடி? மூடிட்டு போடி” என்று கத்தியிருந்தாள் வேதா. அதுவரை வேதா இப்படி பேசி பார்த்திராதவர்கள் அதிர்ந்து பார்க்க, அவளுக்கோ பொறுமை எல்லாம் பறந்து விட்டிருந்தது.