Advertisement

அத்தியாயம் 4

வேகமாக படிகளில் ஏறி, ரியாவின் அறையை அடைந்தாள் ஸ்வேதா.ரியா  அழுது அழுது களைத்து போனது நன்றாகவே தெரிந்தது ஸ்வேதாவிற்கு அந்த பிஞ்சு முகத்தை பார்த்தவுடன்.

ரியாவின் கையை தன் கைக்குள் அடக்கி அழுது கொண்டிருந்த ஸ்வேதாவின் முதுகில் யாரோ கை வைத்த உணர்வு வந்தவளாய்,  நிமிர்ந்து பார்த்தாள்.

ராஜம்மா தான் நின்று கொண்டிருந்தார்.

உன்னோட கலக்கம் புரியுது கண்ணு. ஆனால் உங்கள் உறவு நட்பை   தாண்டி இருக்குமோ?

அவள் புரியாமல் ராஜம்மாவை பார்க்க, யோசித்து பின் அதெல்லாம்   ஒன்றுமில்லைம்மா. என்னால் தானே ரியாவிற்கு காய்ச்சல் வந்து   கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாள். அதனால் தான்…ஆரம்பிக்க, இது    சரி வராது என அவளது பேச்சை மாற்றினார்.

குழந்தை உன்னை பற்றியே பேசுவதனால் தான் தம்பி உங்களிடம்  இவ்வாறு நடந்து கொள்கிறார்.

எனக்கும் தெரியும்மா. அவர் இருக்கும் துயரத்தை கோபமாக  வெளிப்படுத்துகிறார். புரிகிறது அம்மா. அதனால் ஒன்றுமில்லை   என்றாள்.

நீங்கள் அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா, கூறி விட்டு  அவரை பேச விட்டாமல், ரியா எழுந்து விட்டாயா? எப்படிடா இருக்க?

ஸ்வேதா என அவளுடைய பெயரை சொல்லிக் கொண்டே படுக்கையில்   இருந்து ரியா எழுந்து ஸ்வேதாவை கட்டிக் கொண்டாள்.

போ ஸ்வேதா. நீ ரொம்ப மோசம். வருகிறேன் என கூறி விட்டு நீ வரவே  இல்லை. உன்னை பார்க்கணும் போல இருந்தது தெரியுமா?

சாரிடா செல்லம். எனக்கு ஒரு வேலை வந்துவிட்டது. அதனால் தான்டா  வர முடியவில்லை என சொல்லிக் கொண்டே ரியாவின் கழுத்து, நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

அனலை தொட்டது போல இருந்தது பிள்ளைக்கு.

அம்மா, ரியா சாப்பிட்டாளா? ராஜம்மாவை கேட்க,

இன்னும் இல்லைம்மா.

சாப்பிட அவளுக்கு ஏதாவது கொண்டு வருகிறீர்களா? மாத்திரையும்   சேர்த்து என்றாள்.

நடப்பதை அறைக்கு வெளியே கையை கட்டியபடி நோட்டமிட்டுக்   கொண்டிருந்தான் ரகு.

வெளியே வந்த ராஜம்மாவை பார்த்து, அம்மா பாருங்கள். இவள்   என்னோட பிள்ளையை எப்படி மாற்றி இருக்கிறாள்?

தம்பி, நான் உங்களிடம் பேச வேண்டும் என அந்த அறையை விட்டு தள்ளிச் சென்று,

ரியாவை அந்த பெண்ணால் மட்டும் தான் சமாளிக்க முடியும். ரியா, அந்த  பெண்ணை தன் அம்மாவாக நினைக்கிறாள்.

என்ன? கோபமாக அவன் கேட்க,

நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? இந்த பெண் வருவதற்கு முன்னால்  சாப்பிட எவ்வளவு அடம் பிடித்தால் மாத்திரை கூட சாப்பிடவில்லை. ஆனால் இவள், ரியா கண்ணு முன்னால் கூறிய போதும் நம்ம பொண்ணு   வேணாம் என்று மறுக்கவே இல்லை.

உங்களுடைய பொண்ணு, அவளுக்கு அம்மா வேண்டுமென்று  எதிர்பார்க்கிறாள் தம்பி.

என்னம்மா இது என்ன மிட்டாயா? வாங்கி தருவதற்கு, என்னால   என்னுடைய மித்துவை தவிர, யாரையும் நினைக்கவே முடியாது.

எனக்கு புரியுதுப்பா. ஆனால் குழந்தையை பற்றி நினைத்து   பார்த்துக்கோங்க தம்பி.

ஆனால் அந்த பொண்ணு அது மாதிரி நினைக்கலை. நான் அவளிடம்  பேசியதை வைத்துப் பார்த்தால் அந்த பொண்ணு மேல தப்பாக   தெரியவில்லை.

ராஜம்மா சமையற்கட்டில் நுழைந்து, இட்லியை எடுத்து கொண்டு வர, யோசனையிலிருந்த ரகு, அவருடன் சேர்ந்து ரியாவின் அறைக்கு   சென்றார்கள்.

அங்கே சிரிப்பு சத்தம் பலமாக கேட்கவே, இருவரும் வெளியே நின்று  கவனித்தனர். ரியா கலகலவென சிரித்துக் கொண்டிருந்தாள். அதனை   பார்த்த ரகுவிற்கு பேரானந்தமானது.

தம்பி, பார்த்தீர்களா! நம்ம ரியா கண்ணு எவ்வளவு சந்தோசமாக   இருக்கிறாள். இதை தவிர வேறென்ன வேணும் நமக்கு. யாரால சிரிச்சா  என்ன? குழந்தை சந்தோசமாக இருந்தால் அதுவே போதும்.

ரியா கண்ணு, பாட்டி உனக்கு இட்லி கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுடா கண்ணு.

சாப்பிடுவோமா ரியாகுட்டி? ஸ்வேதா கேட்டாள்.

என்னுடைய பொண்ணை அப்படி கூப்பிடாதே? என்றான் ரகு.

நிமிர்ந்து ஒரு முறை அவனை பார்த்து விட்டு, குழந்தையை சாப்பிட   வைத்தாள்.

என்னை விட்டு சென்று விடாதே என ரியா கூற, ஸ்வேதா ரகுவை  பார்த்தாள்.

ரியாவிற்கு உடல்நிலை சரியாகும் வரை இங்கேயே தங்கலாம். ஆனால்  வேற எந்த அறைக்கும் நீ செல்லக்கூடாது.

ம்ம்ம்…என்றாள்.

ரியாம்மா, நீங்கள் தூங்குவீங்களாம். நான் வருகிறேன் என கூறிவிட்டு, ராஜம்மாவை பார்த்து, ரியாவை பார்த்துக் கொள்ளுங்கள் என ரியாவை  படுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள்.

அண்ணா! நான் இரண்டு நாட்கள் இந்த வீட்ல தான் இருக்கணும்.ப்ளீஸ்   அண்ணா..பாலாவிடம் கேட்டாள்.

ஊகூம்…முடியவே முடியாது. நீ இப்பொழுதே வீட்டிற்கு வா பாலா கூற,

அண்ணா!…என்னால் தான் அந்த குட்டி பொண்ணிற்கு உடல்நிலை  சரியில்லாமல் போனது. ப்ளீஸ் அண்ணா, அம்மாவையும் நீங்கள் தான்   சம்மதிக்க வைக்க வேண்டும். அம்மாவிடம் இப்பொழுதே பேசி விட்டு   கூறுங்கள்.

நானே முடியாது என்கிறேன். நீ…

பேசாதீர்கள் அண்ணா! குட்டி குழந்தைக்காக தான் கேட்கிறேன். அதுவும்  அம்மாவை இழந்து தவிக்கும் குழந்தைக்காக தான்.

சரி சரி என்றான் பாலா சலிப்பாக. பின் அம்மாவையும் சம்மதிக்க  வைத்தான்.

ஸ்வேதா, அம்மா முதலில் என்னை போல் முடியாது என்றார். ஆண்  பிள்ளை இருக்கும் இடத்தில் எப்படி பெண் பிள்ளையை விட முடியும்  என பேசினார்கள். நான் தான் அந்த சின்ன பொண்ணுக்காக பேசி   சமாளித்து வைத்திருக்கிறேன்.

“தேங்க்யூ சோ மச் ஆப் யூ” அண்ணா! என சந்தோசமாக முகத்தை    திருப்ப, அங்கே ரகு அவளருகே நின்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவுடன், அவனிடம் எதுவும் பேசாமல் விலகி நின்றாள்.

ஆனால் அவன் பார்வையோ மிகவும் கூர்மையாக, யாரிடம்        பேசுகிறாள்? நினைத்துக் கொண்டிருக்க, ரகுவை கவனித்து விட்டு, நாம் அப்புறம் பேசலாம் என கூறவே, ரகு அவ்விடம் விட்டு அகன்றான். ஸ்வேதா ரகுவை பார்த்து சிறுபுன்னகையை உதிர்த்தாள்.

இரவு உணவை முடித்த பின், ஸ்வேதா அனைவரிடமும் என் உடையை   என்னுடைய அண்ணனை எடுத்து வர சொல்லி இருந்தேன். அவர் வந்து  கொண்டிருப்பார்.

என்ன உளறுகிறாய்? உனக்கு தான் யாருமே இல்லையே?

ஆமாம், எனக்கு யாருமே இல்லை தான். தற்பொழுது சில உறவுகள்  கிடைத்துள்ளனர்.

முறைத்தபடியே அவளை பார்த்தான் நம்பாதவனாக,

அன்று கூறினேனே! ஒரு போலீஸ் என்னை காப்பாற்றினார் என்று  அவரை தனது அண்ணணாகவும், அவர் அம்மாவை தன்னுடைய   அம்மாவாகவும் ஏற்றுக் கொண்டதை கூறினாள்.

பாருங்கம்மா. யாரு கூப்பிட்டாலும் அவள் போய் விடுவாள் போல? என்ன   ஜென்மங்களோ! என்றான் கடுமையாக.

அவளையும் மீறி ஸ்வேதா கண்ணில் நீர் பெருகியது.

இதனை கேட்டவாறு உள்ளே வந்த பாலா, என்ன பேசிக் கொண்டு  இருக்கிறாய்? என கோபமாக ரகு அருகே வர,

ஸ்வேதா இடையே வந்து, வேண்டாம் அண்ணா என தடுத்தாள்.

இப்படி கேவலமாக பேச்சு வாங்க தான் இங்கே வந்தாயா?

அண்ணா, நான் வந்தது ரியாக்காக தான்.

இவன் பேசியது அம்மாவிற்கு தெரிந்தால் அவர்கள் நிலைமை? நீயும்   பார். உன்னை எப்படி அசிங்கபடுத்தி விட்டான்.

நீ இப்பொழுதே வீட்டுக்கு வந்தே ஆகணும்.

ப்ளீஸ் அண்ணா…நான் சீக்கிரமே வந்து விடுவேன். அந்த குட்டி  பாப்பாக்காக அண்ணா ப்ளீஸ்..ப்ளீஸ்…கெஞ்சினாள்.

பாலா எதுவும் பேசாமல் இருக்கவே, அம்மாவிடம் எதுவும் கூறாதீர்கள். நீங்கள் செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என அவளது   ஆடையை வாங்கிக் கொண்டாள்.

அடஅடடாடா….என்னமா நாடகமாடுகிறீர்கள்? எங்கே போய் இந்த  உடையை வாடகைக்கு வாங்கிட்டு வந்த? பாலாவை கேட்க,

பாலாவிற்கு கோபம் எகிற, இன்னும் ஒரு வார்த்தை பேசினாய் என்றால்  போலீஸ் ஸ்டேசனுக்கு தான் உன்னை இழுத்துட்டு போகணும்.

என்னயவே….ரகு ஆரம்பிக்க,

அய்யோ! நிறுத்துங்க என கத்தினாள் ஸ்வேதா.

அண்ணா, ப்ளீஸ் வாங்க என பாலாவின் கையை பிடித்து வெளியே   அழைத்துச் சென்று, அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

 அம்மா, நான் ரியாவின் அறையிலே தங்கிக் கொள்கிறேன்.

 நீ தாராளமாக தங்கிக் கொள்.

வேகமாக அவளுடைய லக்கேஜுடன் படியில் ஏறினாள் சிவந்து அழுத  கண்களுடன்.

என்ன தம்பி, நீங்கள் இப்படி பேசி விட்டீர்களே?

நம்முடைய ரியாவிற்காக தான் அவள் இங்கே தங்குகிறாள். நீங்கள்    உங்களது வார்த்தைகளால் நோகடித்து விட்டீர்களே!

எந்த பெண்ணும் இவ்வளவு நடந்த பின்பும் தங்க மாட்டாள். ஆனால்  இந்த பொண்ணு ரியா குணமடைய எவ்வளவு தாங்கிக் கொள்கிறாள்.

அம்மா, இந்த மாதிரி ஆட்களிடம் இவ்வாறு தான் நடந்து கொள்ள  வேண்டும்.

ராஜம்மா எதுவும் கூறாமல் சென்று விட்டார். ஸ்வேதா, ரகுவின்   பேச்சால் காயமுற்று வேதனையில் அழுது தூங்க முடியாமல் தவித்துக்   கொண்டிருந்தாள். ஆனால் மற்ற அனைவரும் தூங்கினர்.

  “  வலியுணர்ந்த

     பிறகும்

     என் வலி

     புரியவில்லையா?……உமக்கு

     உன்

     கலை மிகுந்த பேச்சு

     என்

     உயிர்நாடி

     துடிப்பற்று  போகுதே..”

ரகுவிற்கு இடையிலே முழிப்பு தட்டியது. மணி இரண்டை காட்டியது.  ரியாவை பார்க்க உள்ளம் துடித்தது அவனுக்கு. எழுந்து ரியாவுடைய  அறையை தட்டினான். தட்டிய உடனே அறை கதவு திறக்கப்பட்டது. ஸ்வேதா தான் தூங்கவே இல்லையே!

நீ தூங்கவில்லையா? சாதாரணமாக கேட்டான் ரகு.

பதில் கூறாமல் நின்றாள்.

ரியாவை பார்க்கணும் என்றான் அமைதியாக. அறையினுள் நுழைந்தான்.  ரியாவின் படுக்கையில் அவள் தலையின் அருகே ஒரமாக அமர்ந்து ,  அவளது முடியை வருடியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் இங்கே இருக்கலாமா? கேட்டான் அவன். அவள் எதுவும் கூறாமல்   இருக்கவே,

உன்னுடைய ஆடைகள் இந்த அறையில் தானே உள்ளது. அதனால் தான்   கேட்டேன்.

ம்…இருங்கள்.

நீ ஏதேனும் ஒரு அறையில் தங்கிக் கொள் என்று அறைக்கான சாவி  முழுவதையும் கொடுத்தான்.

எனக்கு எதுவும் வேண்டாம் என அவள் சொல்லிக் கொண்டே கீழே  இறங்க,

ஏய் ஸ்வேதா நில்லு, நில்லு என அவள் பின்னே ஓடியவன், தவறி  அவளை தள்ளி விட்டு அவள் மேலே விழுந்து, ஒரு விநாடி ஒருவரை  ஒருவர் பார்க்க, அவள் நினைவுக்கு வந்து அவனை தள்ளி விட    முயற்சி செய்ய, அவன் அவளது கையை மேலும் இறுக்கமாக பிடித்துக்   கொண்டு அவளிடம்,

என்ன, உனக்கு இப்படி இருந்தால் தான் பிடிக்குமோ? என அவளது   இடுப்பில் கை வைத்து, அவளது முகமருகே அவன் முகத்தை கொண்டு  வர, பளாரென ஓர் அறை அவன் கன்னத்தில் வைத்தாள். பிறகு அவனை   ஆக்ரோசமாக தள்ளி விட்டு எழுந்தாள். அவனும் எழுந்து,

உனக்கு எவ்வளவு தைரியம்? மீண்டும் அவளது கையை அழுத்தி பிடிக்க, அவனது கையை உதறி விட்டு அங்கிருந்து அழுது கொண்டே ஓடினாள். அப்பொழுது தான் என்ன செய்து விட்டோம் என்பதை உணர்ந்தான். வருத்தத்தோடு அறையினுள் சென்றான். ஸ்வேதாவோ ஓடிப் போய்  அழுது கொண்டே பூஜை அறைக்குள் அந்த இரவில் நுழைந்தவள், காலை   வரை தூங்காமல் காயத்திரி மந்திரம் எழுதினாள் போல.

கண்ணிற்கு கீழே கருவளையம் வந்து ரொம்ப சோர்ந்து மயங்கி விழுந்து    கிடந்தாள் பூஜை அறையிலே.

காலையில் எழுந்தவுடன் எல்லா அறையையும் திறந்து விட்டு, பூஜை   அறையை பார்த்து திடுக்கிட்டு வேகமாக உள்ளே சென்றார் ராஜம்மா.

ஸ்வேதா “காயத்திரி மந்திரம்” எழுதிய நோட்டை மடியில் போட்டபடி  கீழே விழுந்து கிடந்தாள்.

தம்பி, தம்பி என கத்தினாள் ராஜம்மா.

ரகு அவளை பார்த்து அதிர்ந்து நின்றான்.

ரகு நீரை எடுத்து வர, ராஜம்மா நீரை தெளித்தார்.

எழுந்த ஸ்வேதாவை பார்த்து, என்னம்மா இரவு தூங்கவில்லையா? இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? கேட்டவுடனே ஸ்வேதா, ராஜம்மாவை  கட்டிக் கொண்டாள்.

இவளை தான் எவ்வளவு காயப்படுத்தி விட்டோம் என்பதை உணர்ந்து, சாரி என பேச வாயெடுத்தான்.

அதற்குள் ஸ்வேதா, என் அண்ணன் கூறியது சரிதான். நான் இங்கே  வந்திருக்க கூடாது. நான் ரியாவிற்காக மட்டுமே வந்தேன். எப்படியும்  அவள் இன்றைக்குள் சரியாகி விடுவாள். நான் கிளம்பி விடுவேன். இனி  யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் கூறி விட்டு தளர்வான நடையுடன் அறைக்கு சென்றாள்.

எனக்கு என்ன ஆயிற்று? நான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டேன்? இதுவரை யாரிடமும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதில்லையே? என மனதினுள் நினைத்தவாறே ரகு நிற்க,

தம்பி, நேற்று எதுவும் நடந்ததா?

அது வந்தும்மா..என தயங்கினான்.

எதுவும் கூறாதீர்கள். எனக்கு புரிந்து விட்டது. அந்த பெண்ணிடம் நீங்கள்  மறுபடியும் கடுமையான முறையில் நடந்து கொண்டீர்கள். அப்படித்தானே?

நான் தவறு செய்து விட்டேன்மா.

நான் சென்று அவளை பார்க்கிறேன் என ராஜம்மா அறையில் பார்த்தால், ஸ்வேதா தூங்கிக் கொண்டிருந்தாள். ரியாவை எழுப்பி ராஜம்மா அவள்   தூங்கட்டும். வா கண்ணு நாம் கீழே செல்லலாம் என ரியாவை தூக்கிக்  கொண்டு, அறைக்கதவை சாத்தி வைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

கொஞ்ச நேரம் கழித்து தானாகவே கீழே வந்த ஸ்வேதா, ரியாவை   சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டாள். மருந்து கொடுத்து தூங்க வைத்தாள்.

ராஜம்மா,ஸ்வேதாவை பார்த்து, உனக்கு எப்படி உள்ளது? என  கேட்க,

எனக்கு என்னம்மா? நான் நன்றாக தானே இருக்கிறேன் என எதுவும் நடக்காததை போல் பேசவே,

என்னடா, இந்த பொண்ணு… ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டே இருந்தார் ராஜம்மா.

மதிய வேளையும் ரியாவை சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டாள். குழந்தைக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்தாள்.

பின் சாயங்காலம் இருவரும் ஒளிந்து விளையாடினார்கள். மாலையில்   நன்றாகவே குணமடைந்து விட்டாள். அதனால் ரியாவால் விளையாட   முடிந்தது. தன் வேலை முடிந்ததை உணர்ந்தாள் ஸ்வேதா.

தான் வீட்டிற்கு கிளம்புவதாக கூறும் போது மணி ஏழை தாண்டியது.

இப்பொழுது வேண்டாம்மா. நாளைக்கு காத்தால விடிஞ்சதும்  கிளம்பிடுமா?

எனக்கு அம்மா, அண்ணாவை பார்க்கணும் போல் உள்ளது. அம்மாவின்  உடல்நிலை இப்பொழுது தான் சரியானது. அதன் பின் தான், நான்  ரியாவை பார்க்க வந்தேன்.

ஒ! அதனால் தான் ரியாவை பார்க்க வர தாமதமானதா? ராஜம்மா   கேட்க, ரகுவிற்கு ஒரு மாதிரி இருந்தது.

அவள், ம்ம்ம்…என்றாள்.

உங்கள் அண்ணாவை வர சொல்லி இருக்கிறாயா?

இல்லைம்மா. நானே சென்று விடுவேன்.

கழிகாலம்மா. சொன்னா கேளு. ரகு தம்பி என ராஜம்மா வாயெடுக்க,

வேண்டாம்மா. என்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் வேண்டாம்மா.

ரகு வேகமாக அவளருகே வர, தள்ளி நின்றாள்.

இது ரொம்ப மோசமான ஏரியா? நான் வருகிறேன் என கூறிக் கொண்டே அவளது பதிலை எதிர்பார்க்காமல், அவளது பையை வாங்கிக் கொண்டான்   ரகு.

அவள் எதுவுமே பேசவே இல்லை.

ரகு காரின் உள்ளே சென்று அவளையும் ஏற்றிக் கொண்டு, காரை எடுத்தான். ஆனால் காரை எடுக்க முடியவில்லை.

அம்மா, ரியாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள்   ஆட்டோவில் தான் போகணும். ஆட்டோ ஸ்டாண்டு வரை நடந்து  போகிறோம். பக்கத்தில் தானே உள்ளது. வருகிறோம் என ராஜம்மாவிடம்  கூறி விட்டு இருவரும் வெளியே வந்தனர். ஸ்வேதா செல்வதை  பார்த்தால் ரியா அழுவால் என்பதால் ரகு கூறியவுடன், ராஜம்மா  ரியாவை உள்ளே அழைத்துச் சென்றார். பின் தான் ரகுவும், ஸ்வேதாவும்  வெளியே வந்தனர்.

தம்பி, நானும் வரவா? முத்துச்சாமி  கேட்க,

இல்லண்ணே. நான் பார்த்துக் கொள்கிறேன் என அவளது ஒரு பையை  ரகுவும், மற்றொன்றை ஸ்வேதாவும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

ஸ்வேதா இடையிடையே ரகுவை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே  நடந்தாள். அவனும் அதனை கவனித்தான்.

என்ன? ரகு கேட்டான்.

ஒன்றுமில்லை என்றாள்.

என்னவென்று கூறு?

ஒன்றுமில்லைன்னு சொல்றேன்ல

இருவரும் இப்படியே பேசிக் கொண்டிருக்க, இருட்டு பகுதி வந்தது. அங்கே  நாலைந்து தடியன்கள் வந்து அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

என்னடா வேணும் உங்களுக்கு? ரகு கேட்க, அவர்கள் பதில் கூறாமல்   தாக்க ஆரம்பித்தனர்.

ரகுவும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். அதில்  ஒருவன் மட்டும் கத்தியை எடுத்து ரகுவை நோக்கி வர, ஸ்வேதா அதை  பார்த்து ரகுவின் அருகே வர, அவன் ரகுவை கத்தியால் குத்த, ஸ்வேதா   அதை வாங்கிக் கொண்டாள். மறுகணமே அவள், அவன் மேல் சரிய, நடப்பதை நம்ப முடியாமல் ரகு நிற்க, அவளை கையில் பிடித்துக்  கொண்டே வெகுண்டு அனைவரையும் துவம்சம் செய்தான். வந்த  தடியன்கள் எழ முடியாமல் எழுந்து ஒடினார்கள். ஸ்வேதாவை  பார்த்ததால், தடியன்களை கவனிக்காமல் விட்டு விட்டான்.

ஸ்வேதா, நீ….நீயா? என பேச முடியாமல், என்ன செய்து விட்டாய்?  எதற்காக? என அவளை கையில் ஏந்தியபடி கேட்க, அவள் அவனது   கையை பிடித்துக் கொண்டே, மற்றுமொறு கையை அவனது கன்னத்தில்  வைக்க, அவள் கையில் இருந்த இரத்தம் அவன் கன்னத்திலும் ஒட்டியது. அவனை பார்த்து சிரித்து விட்டு திக்கி, திக்கி ஏதோ கூற வந்து  முடியாமல் மயக்கமானாள்.

ஏய் எழுந்திரு, ஸ்வேதா எழுந்திரு…என அழுது கொண்டே கத்தினான். ஆனால் எதற்கும் பயனில்லை.

அவளை கையிலே தூக்கிக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஓடினான். அவள் அவனது மார்பில் சரிந்து கிடந்தாள். அவளை ஒரு ஆட்டோவில்    ஏற்றி, அண்ணா சீக்கிரம் மருத்துவமனை செல்லுங்கள். ம்…சீக்கிரம்   என்றான்.

அவளது வயிற்றுப் பகுதியில் இரத்தம் அதிகமாக கசிய, அவனது   சட்டையை கழற்றி அவளது இடுப்பில் கட்டினான். ஒரு வழியாக   மருத்துவமனையை அடைந்தார்கள்.

Advertisement