Advertisement
இரண்டு மூன்று முறை அழைத்தும் சுவிட்ச் ஆப் என்று வரவே நேராக காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி வைத்துவிட்டு திரும்ப விஜயன் உள்ளே நுழைந்தான் வேகமாக அவன் அருகில் வந்த வைதேகியிடம் “எப்டி ஆச்சு நல்லா தானே இருந்தாங்க?” என்று திகைப்புடன் கேட்க
“நல்லா தான் இருந்தாங்க ண்ணா தூக்கத்துலயே இறந்துட்டாங்க என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியலை சஞ்சு எதுவுமே பேச மாட்டிங்கிறா சிலை மாதிரி இருக்கா” என்று சஞ்சளாவை கைகாட்டி கூற
“எதிர்பாராத இழப்பு அவளால இன்னும் நம்ப முடியலை வைதேகி அதான் விஷயத்தை ஜீரணிக்க முடியாம உக்காந்துட்டு இருக்கா” என்றவன் “சரி அவனுங்க ரெண்டு பேரும் எங்க ஆளையே காணோம்?”
“போன் பண்ணேன் எடுக்களை ஸ்டேஷன்ல இன்பார்ம் பண்ணிருக்கேன் ண்ணா” என்றவள் விஜயனை அமருமாறு கூறிவிட்டு நகர்ந்துவிட்டாள்
விஷ்ணு துவாரகேஷ் இருவரும் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததுமே அங்கிருந்த கான்ஸ்டபிள் சந்திரன் வைதேகி கூறிய விஷயத்தை சொல்ல அனைத்தையும் பார்த்து கொள்ளுமாறு அருள்ஜோதியிடம் கூறிவிட்டு இருவரும் இல்லம் விரைந்தனர்
சற்றும் எதிர்பார்க்கவில்லை அலைபேசியை உயிர்ப்பித்து பார்க்க அத்தனை அழைப்புகள் வைதேகியிடத்திலிருந்து, இருவரும் தங்களது முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டனர் தான் அவள் அருகில் இல்லையே என்ற எண்ணமே துவாரகேஷை பரிதவிப்பில் ஆழ்த்தியது “நேற்றே கூறினாளே வீட்டிற்கு செல்கிறேன் மனம் ஏதோ விபரீதம் என்று உரைக்கிறது என்னவென்று தான் தெரியவில்லை என தவிப்போடு கூறினாளே அவள் மனம் பட்ட பாட்டை புரிந்து கொள்ளாது சுயநலமாய் இருந்துவிட்டேனே” என்று தன்னையே வஞ்சித்து கொண்டான் துவாரகேஷ் வாய்மொழி பேசவில்லை ஆனால் மனம் உரைத்தது உந்தியது வேகமாக செல்லுமாறு அவன் மனம் அறிந்தவனாக இருசக்கர வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான் விஷ்ணு
அரைமணி நேர பயணத்தை பதினைந்து நிமிடங்களில் கடந்து இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர் வேகமாக காலணிகளை கழற்றி எறிந்து வீட்டிற்குள் நுழைந்தவனின் பார்வை தவிப்போடு சஞ்சளாவை தேடியது, கூட்டம் அதிகமில்லை என்றாலும் ஓரளவிற்கு நிறைந்திருந்தது இல்லம்! அமிர்தாவின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த தன் தாயை கண்டதும் அருகில் சென்றவன் ” ம்மா..” என்று அழைக்க திரும்பி பார்த்தவரிடம் “எப்டிம்மா! என்ன ஆச்சு அத்தைக்கு? சஞ்சு எங்க இருக்கா?” என்று கவலையும் கலவரமும் நிறைந்த முகத்துடன் கேட்க
சேலை தலைப்பால் வாய் பொத்தியபடி அழுதவர் அவள் அமர்ந்திருந்த இடத்தை கைகாட்டி“டேய் பயமா இருக்குடா எதுவுமே பேச மாட்டிங்கிறா நா வந்ததுல இருந்து பாக்குறேன் அந்த இடத்தை விட்டு அசையாம அப்டியே இருக்கா பேச்சு கொடுத்தாலும் எதுவும் பேச மாட்டிங்கிறா ஒரு சொட்டு கண்ணீர் விடல, அவளுக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயமா இருக்குடா” என்று மகனின் தோளில் முகம் புதைத்து அழுதார் விசாலாட்சி
“ப்ச் நீங்க பயப்படாதீங்க அவளுக்கு எதுவும் ஆகாது நாம எல்லாரும் எதுக்கு இருக்கோம் எல்லாம் முடியட்டும் அவகிட்ட பேசிக்கலாமா அதுவரைக்கும் அவள யாரும் தொந்தரவு பண்ண வேணாம்” என்று கண்டிப்போடு கூறியவன் எழுந்து சஞ்சளாவின் அருகில் சென்று அமர்ந்தான்
என்ன பேசுவது எதை பேசுவது எப்டி ஆறுதல் கூறுவது என ஆதி அந்தம் எதுவும் புரியாமல் விழிகள் பிதுங்க துயரம் நிறைந்த முகத்துடன் சற்று நேரம் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் எதையும் உணரும் மனநிலையில் அவள் இல்லை என்பதை புரிந்து கொண்டு “சஞ்சளா சஞ்சும்மா..” என்று அழைக்கும் போதே அவனுக்கு குரல் கரகரத்தது தொண்டை குழியில் துக்கத்தை விழுங்கி அடக்கியவன் மீண்டும் “சஞ்சும்மா..” என்று அவள் கரம் பற்றி சன்னமான குரலில் அழைக்க
ஏறெடுத்து அவனை பார்த்தவள் அசரரி போல வாய்மொழி விடுத்தாள் “பேச்சுக்கு ஒரு வார்த்தை சொன்னிங்களே அது நடந்துருச்சு மாமா வாழ்நாள் முழுக்க இனி பிரிஞ்சு தான் இருக்க போறேன்” என்று கண்களில் ஜீவனில்லாமல் சிரிப்பா அழுகையா வேதனையா தூக்கமா கோபமா என்று எதிலும் வரையறுக்க முடியாத எதனுடனும் ஒப்பிட முடியாத பாவனையில் கூறிவிட்டு மறுபடியும் அமிர்தாவின் உடலை வெறிக்க தொடங்கினாள்
“தன் வார்த்தைக்கு இத்தனை வலிமையா அறிந்து கூறினேனோ அல்லது அறியாமல் கூறினேனோ சம்பவம் நடந்தேறிவிட்டதே” என்றெண்ணியவனுக்கு அவளின் வார்த்தைகள் உயிரை தேடி சென்று கொஞ்சம் கொஞ்சமாக வதைக்க தொடங்கியது
அவளை அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று எழுந்த மனதை அடக்கி கொண்டவனுக்கு கண்ணீர் வர தயராய் இருந்தது உதடுகள் துடித்தது அவனுக்குள் பிரவாகம் போல அழுகை வெடித்தது, யாருக்கும் தெரியவில்லை ஏன் எதிரில் ஊமையாய் சமைந்திருப்பவளுக்கு கூட அவன் மனதின் ஓலம் கேட்கவில்லை கத்தினான் கதறினான் உருண்டு புரண்டு ஓய்ந்தான் மனத்திற்குள்ளேயே மானசீகமாக அவளிடம் மன்னிப்பும் வேண்டினான் துவாரகேஷ் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விஷ்ணுவின் அருகில் வந்து நின்று கொண்டான்
அவன் முகம் பிரதிபலித்த வேதனையை கண்டு இருவரும் தோளில் கைபோட்டு ஆறுதலாய் அணைத்து விடுவித்து “என்னடா சஞ்சளா என்ன சொன்னா ஏதாவது பேசுனாளா?” என்று விஷ்ணு கேட்க
“பேசுனா” என்றவன் அவள் கூறிய வரிகளை கூறி “மறுபடியும் அவங்கள வெறிச்சு பாத்துட்டு இருக்கா எதுவா இருந்தாலும் மனசு விட்டு அழுகனும் ஆனா அவ ஜீவனே இல்லாம உக்காந்திருக்கா விஷ்ணு, அவள என்னால இப்டி பாக்கா முடியலடா ரொம்ப கஷ்டமா இருக்கு அவ பக்கத்துல கொஞ்ச நேரம் இருந்தா நிச்சயம் வாய்விட்டு அழுதுருவேன்,
என்னாலயும் முடியலை எல்லாம் கைகூடி வர்ற நேரம் இப்டி நடந்துருச்சேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு அவளோட மன பயம் உண்மையாகிருச்சு நேத்தே அவள வீட்டுல வந்து விட்டுருக்கணும் தப்பு பண்ணிட்டேன் எல்லாம் என்னால தான்” என்று குற்றவுணர்வில் புலம்பியவன்
“என்னால அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியல அப்டியே ஆறுதல் சொல்றதா இருந்தாலும் என்னனு சொல்றது விஷ்ணு அவளுக்கு இது எவ்ளோ பெரிய இழப்பு வெறும் ஆறுதல் வார்த்தையில அவளோட மனச சரி பண்ண முடியுமா?” என்று கேட்டவனின் கண்கள் பனித்தது
“சரி ஃபீல் பண்ணாத யாரும் இத எதிர்பாக்கல அடுத்து நடக்க வேண்டியத பாப்போம்” என்று விஜயன் கூற
கடகடவென இறுதிசடங்கிற்கான வேலைகள் ஆயத்தமாகின எதற்கும் அசையாமல் கல்லாக அமர்ந்திருந்தவளை கண்டு துவாரகாவின் மனம் வேதனையுற்றாலும் விஷ்ணு விஜயன் இருவரும் அவனுக்கு ஆறுதலாய் இருந்து தேற்றினர் அமிர்தாவின் உடலை மின் மயானத்திற்கு சென்று தகனம் செய்யும் வேலையை கவனிக்க தொடங்கும் வேளையில் வைதேகி குடும்பத்தினர் வந்திறங்கினர் சாவித்ரிக்கு அவளின் நிலையை காண சகிக்கவில்லை ஓவென்று அழுது ஓய்ந்தார்
உடலை எடுத்து செல்லும் போதும் எழுந்து வந்து அமிர்தாவின் முகத்தை பார்க்கவில்லை உடலை எறிந்துவிட்டு அனைவரும் வரும் போதும் எவரையும் எதையும் கண்டுகொள்ளவில்லை அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள் பார்வை மட்டும் தையல் இயந்திரத்தின் மீது படிந்திருந்தது “ஓயாது ஒலிக்கும் தையல் இயந்திரத்திற்க்கு நிரந்தர விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது தடதடதடவென இசைக்கும் கால்கள் இல்லை சர் சர்ரென்று கத்திரிகோல் வைத்து துணியை கிழிக்கும் விரல்கள் இல்லை எங்கே சென்றாலும் ஏய் சஞ்சு எங்கடி இருக்க என்ற ஜீவன் நிறைந்த குரல் இல்லை ஆயிரம் தான் வசைபாடினாலும் இரவில் அணைத்து கொண்டு உறங்கும் கரங்கள் இல்லை இவையெல்லாம் இனி வரப்போவதும் இல்லை என்று அவளிடம் உரைத்து கொண்டே வந்தே மனம் அவளின் சலனமற்ற நிலை கண்டு உணர்வுகளுக்கு விடுமுறை அளித்திருப்பாள் போலும் கல்நெஞ்சுகாரி” என்று வசைப்பாடி விம்மியது
என்ன நினைத்தாளோ சட்டென எழுந்தாள் கால்கள் உணர்வுகளுக்குள் சிக்கின மரத்து போன கால்களை உதறியவள் நடைபயிலும் குழந்தை போல மெல்ல மெல்ல அடிவைத்து அறைக்குள் சென்று ஐக்கியமாகி கொண்டாள் யாரும் அவளை தடுக்கவில்லை தனிமை அளித்து எட்ட நின்று அவள் செயல்களை இயலாமையுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்
இரவு உணவை சாவித்ரியின் வீட்டில் ஏற்பாடு செய்து கொண்டிருக்க சஞ்சளாவை சாப்பிட வருமாறு அழைக்க சென்ற வைதேகி கவலையுடன் திரும்பி வந்தாள்
அவளை எதிர்கொண்ட விசாலாட்சி “என்னாச்சும்மா அவ வரலையா?” என்று கவலையுடன் கேட்க
“இல்லம்மா கண்ண மூடி படுத்திருக்கா தூங்குறான்னு நினைக்கிறேன் அவள எழுப்ப மனசு வரல அதான் வந்துட்டேன்” என்று கூற
“உறங்கி எழுந்தாள் அவள் மனம் சற்று தெளியும்” என்று எண்ணிய விசாலாட்சி சரியென்று அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டார், சற்று நேரத்தில் சஞ்சளாவை தவிர அனைவரும் உணவை முடித்து கொண்டு படுக்க சென்றுவிட விசாலாட்சியும் துவாரகேஷும் சஞ்சளாவிற்கு துணையாக அவளது இல்லம் சென்றனர், விஜயன் காலை அவசர வேலை இருப்பதாக கூறிவிட்டு சடங்குகள் முடிந்த சற்று நேரத்திலேயே கிளம்பி சென்றுவிட்டான்
கூடத்தில் பாய்விரித்து தாயும் மகனும் படுத்து கொள்ள சற்று நேரம் அமிர்தாவை எண்ணி அழுத விசாலாட்சி கண்ணீர் சிந்தியபடியே உறங்கி போனார் உறக்கம் வராமால் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான் துவாரகேஷ், திடீரென கதவு திறக்கும் ஓசை கேட்டு ஓணானை போல தலையை மட்டும் தூக்கி பார்த்தவன் சஞ்சளா மாடிக்கு செல்வதை கண்டு மெல்ல எழுந்து காலடிகளை ஊமையாக்கி அவள் பின்னோடு சென்றான்
இருளை வெறித்தபடி வெம்மை தரும் நிகழ்வை எண்ணி குளிர் காய்ந்து கொண்டிருந்தவளை கண்டதும் மனம் இளகியது அவனுக்கு “சஞ்சும்மா” என்று அதிக சப்தங்கள் எழுப்பாது அழைத்தான் துவராகேஷ்
மெல்லிய குரலோசை செவிகளை எட்டிட எந்தவித பாவனையும் காட்டாது சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவள் துவாரகாவை கண்டு “என்ன சார்”
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க கீழ வா தனியா இங்க வந்து நிக்காத” என்று அச்சம் கலந்த குரலில் மீண்டும் அழைக்க
“ஏ சார் இங்க இருந்து குதிச்சுறுவேன்னு பயப்படுறீங்களா?” என்று கீழே எட்டி பார்த்தவள் கணக்கிட்டு கூறலானாள் “சரியா விழுந்தா கை கால் போகும் ஏடாகூடமா விழுந்தா உயிர் மட்டும் இருக்கும் எந்த அசைவும் இருக்காது அடுத்தவங்களுக்கு பாரமா முடங்கி போய் படுத்துருக்கணும் அவ்ளோ ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன் பயப்படாதிங்க சார்” என்று தெளிவாக பேசியவளின் பேச்சு மேலும் அவனுக்கு பயத்தை அளித்ததே தவிர தணிக்கவில்லை
“ஏய் எதுக்கு இப்போ இப்டி பேசுற நீ முதல வா கீழ போலாம்” என்று அருகில் வந்தவன் அவள் கரம் பற்றி இழுக்க
அசையாமல் நின்றவள் “விடுங்க சார் ஒருவேளை நா ஏதாவது தப்பா முடிவெடுத்துருவேன்னு நினைச்சீங்கன்னா நீங்களும் என்கூடவே இருக்கலாம் எனக்கு எந்த ஆட்சோபணையும் இல்ல” என்று அவனது கரத்தினை விலக்கி நிதானமாக பேசலானாள்
Advertisement