Advertisement
பெண்கள் அனைவரும் டவுனுக்கு கிளம்பி சென்று விட துவாரகாவும் விஷ்ணுவும் பரமசிவனை காண வயலுக்கு சென்றனர் ஜெகநாதன் வைதேகி இல்லம் சென்று பெருமாள் சாமியுடன் பேசி கொண்டிருக்க விஐயன் மட்டும் வீட்டில் மடிகணினியில் மூழ்கி இருந்தான்
வரப்பின் மேல் நடந்து கொண்டே“டேய் விஷ்ணு எதுக்கு வர சொல்லிருகாருன்னு தெரியுமா? எதுனாலும் வீட்டுல வச்சு பேசலாமே தனியா பேசனும்னா.. என்ன விஷயமா இருக்கும்?” என்று யோசனை செய்த வண்ணம் கேட்க
“ம்ம் வைதேகி கல்யாண விஷயமா இருக்கும் அதுக்கு தான் வர சொல்லிருப்பாரு வீட்டுல வச்சு பேச முடியாது இல்லையா” என்று பதிலுறைத்தவன் தென்னை மரத்தின் அடியில் அமர்ந்து மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தவரின் அருகில் வந்து “அப்பா” என்று அழைக்க
“ஏலேய் கோண பயலே மொளகா நாத்துக்கு தண்ணி விட சொன்னா பருத்தி நடவுல தண்ணி விட்டுட்டு கெடக்க காவாய் உடைஞ்சு போகுது பாரு அத முதல அடைச்சிட்டு வேலைய பாருலே ” என்று சத்தம் கொடுத்தவர் மகனை கண்டு கொள்ளாது
அருகில் இருந்த துவாரகாவிடம் “என்னப்பா எப்டி இருக்க ஊர்ல அம்மா சௌக்யம் தானே” என்று நலம் விசாரித்தவர் வயலை சுற்றி பார்வையிட்டு கொண்டே “நம்ம வைதேகிக்கு ஒரு வரன் வந்துருக்கு நல்ல இடம் மாப்பிளை வெளிநாட்டுல வேலை பாக்குறாக கைநிறைய சம்பளம்” என்று கூற
“அப்பா இத எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க“என்று கேட்டதும்
“அடேய் கிறுக்கு பயலே ஓங்கிட்ட யாருலே சொன்னா” என்றதும்
“ஓ..ஓ..ஓ புரிஞ்சிருச்சு நீங்க சொல்லுங்க ப்பா” என்று மேலே ஊக்கியவன் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொள்ள
“வர்ற ஞாயித்து கெழம பொண்ணு பாக்க அவுக வீட்டுல இருந்து வாறாக அவகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும் அது ஒன்னால தான் முடியிம்னு ஏ தங்கச்சி சொல்லுறா பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது ஓம்பொறுப்பு” என்றவர் விஷயம் இது தான் என்று அதற்கு மேல் அங்கு நிற்காமல் நடவு நடும் இடத்திற்கு சென்று விட
“டேய் வைதேகிக்கு மாப்பிள்ளை” என்று துவாரகா ஆரம்பித்ததும்
“மூடு எனக்கு காது கேட்கும் வா போலாம் “என்றுவிட்டு முன்னே செல்ல
“இதுக்கு எதுக்கு என்கிட்ட சொல்லணும் நேரா அவன்கிட்டயே சொல்லிருக்கலாமே என்ன பொழைப்புடா ஒரு இன்ஸ்பெக்டர இப்டி இன்சல் பண்ணிட்டாங்களே வெரி சேம்” என்று புலம்பி கொண்டே பின்னோடு சென்றான் துவாரகேஷ்
அறையில் விஜி மடிகணினியில் கவனத்தை பதித்த படி இருக்க “குருதேவா நீங்க இங்க வந்தும் உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பொறுப்புணர்ச்சிய கண்டு நா வியக்கேன்” என்றான் நக்கலாக
“ஏண்டா சொல்ல மாட்டா நீ விசாரணை பண்ண வேண்டிய கேஸ்க்கு ஹெல்ப் பண்றேண்ல இதுவும் பேசுவ இன்னமும் நக்கல் பண்ணுவா” என்று விட்டு மீண்டும் மடிகணினியில் கவனத்தை செலுத்த
“கோவிச்சுக்காத விஜி செல்லம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் எனக்கு ஹெல்ப் பண்ணறேன்னு தெரியதுல ஆமா என்ன பண்ணிட்டு இருக்கிங்க” என்று அருகில் வந்து அமர
“சபரிக்கு மெயில் அனுப்பிட்டு இருக்கேன்”
“சபரிக்கா” என்றவன் திரையில் இருந்த செய்தியை படித்துவிட்டு “டேய் என்னடா நடக்குது” என்று அதிர்ச்சியில் விஜயனை பார்க்க
“இப்போ எதுக்கு பக்கி இப்டி ஷாக் ஆகுற” என்றவன் “டேய் விஷ்ணு நா நினைச்சது சரி தான் சபரி தம்பி ஏதோ தப்பு பண்றாண்ணு என்கிட்ட சொன்னான் ஆனா என்ன மாதிரியான வேலை பண்றான்னு தெரியாம இருந்துச்சு அவன் வீட்டுக்கு கிளம்பி போகும் போது கார்த்தியோட நடவடிக்கைய அவனுக்கே தெரியாமா கவனிக்க சொன்னேன் கவனிச்சத்துல ஒரு சந்தேகம் வந்துருக்கு?”
“என்ன சந்தேகம்?” என்று விஷ்ணு கேட்க
“அவன் தான் அந்த குற்றவாளியோன்னு இன்னும் தெளிவா தெரியல பட் அவன இன்னும் கொஞ்சம் டிப்பா வாட்ச் பண்ண சொல்லிருக்கேன் பாப்போம் நாம நினைக்கிறது சரியா மட்டும் இருந்துச்சு அந்த நேரம் அவன் காலி” என்று தீவிரமான முக பாவனையுடன் கூற
“எங்களுக்கு தெரியாமா என்னென்னவோ பண்ணிருக்க” என்று மெச்சி கொண்டவன் “சரி அவன உனக்கு தெரியுமா? எங்க! ஆளு யாருன்னு காமி!” என்றவன் திரையில் தெரிந்த கார்த்திக்கின் படத்தை பார்த்து “இவனா!” என்று அதிர்ச்சி அடைய
“ஏண்டா இவன உனக்கு முன்னாடியே தெரியுமா என்ன?” என்று விஐயன் கேட்க
இரண்டு வருடங்களுக்கு பின் நினைவுகளை நகர்த்தி சென்றான் விஷ்ணு, காவலர் பயிற்சி முடிந்து வேலையில் சேருவதற்கான ஆர்டர் வர காத்திருந்தவன் ஜெகநாதன் வீட்டில் இருந்தே வேலைக்கான ஆர்டரை வாங்கி கொண்டு ஊர் செல்லலாம் என்ற முடிவோடு சென்னையில் தங்கி இருந்தான் அப்போது தான் சஞ்சளா அறிமுகமானது அண்ணா அண்ணா என்று விஷ்ணுவின் பின்னோடு அலைவாள்
சாவித்ரி என்றால் அவளுக்கு உயிர் புதிதாக குடியிருக்க வந்த போது அமிர்தாவிடம் சகஜமாக பேசியவர் இருவரும் ஊர்பக்கம் என்பதால் பழகுவதில் தயக்கம் ஏதும் எழவில்லை பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து அவள் எதிர்பார்த்தது போல மதிப்பெண்கள் பெற்றிட ஜெகநாதன் தான் கல்லூரியில் சேர்த்து விட்டது முதலாம் ஆண்டு என்பதால் சற்று பதட்டமும் பயமும் இருக்க விஷ்ணு தான் அழைத்து சென்று அழைத்து வருவான்
என்றும் போல அன்று அழைக்க சென்றவன் கல்லூரி வளாகத்தில் சஞ்சளாவிற்காக காத்திருக்க அழுது கொண்டே வந்தவளை கண்டு பதட்டமடைந்தவன் “என்னம்மா என்னாச்சு ஏ அழுகுற”
“ஒண்ணுமில்லண்ணா வாங்க போலாம் வண்டிய எடுங்கண்ணா” என்று விம்மி கொண்டே கூறினாள்
இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியவன் “ப்ச் என்ன நடந்துச்சு அத சொல்லு அப்றமா வண்டி எடுக்கவா வேணாமான்னு பாக்குறேன்” என்று பிடிவாதமாக கேட்க
“அண்ணா அது வந்து.. வந்து” என்று விசும்பியவள் “கார்த்திக்ன்னு ஒரு பையன் தேர்ட் இயர் படிக்கிறான் என்னோட டிப்பார்ட்மெண்ட் தான் எப்டி அவனுக்கு என்னோட போட்டோ கிடைச்சதுன்னு தெரியல போட்டோவ வேற மாதிரி மேக் பண்ணி மிரட்டுறான் ண்ணா பிரின்சி இல்லாட்டி ப்ரொபசர் யார் கிட்டயாவது சொன்னா நெட்ல போட்டுருவேன்னு பயமுறுத்துறான் அவன் சொல்ற மாதிரி நா நடந்துக்கணுமாம் தப்பு தப்பா என்கிட்ட பேசுறான் எனக்கு பயமா இருக்குண்ணா என்ன பண்றதுன்னு தெரியல” என்று அழுது கொண்டே கூற
“ப்ச் முதல அழுகுறத நிறுத்து என்ன பொண்ணு நீ இந்த மாதிரி மிரட்டுறவன்கிட்ட தைரியமா பேசணும் அதவிட்டுட்டு அழுதுட்டா வருவாங்க, எதிரிக்கு முன்னாடி நம்ம பலவீனத்தை காட்ட கூடாது அதுவே அவனுக்கு பலமா போயிரும் நீ வா பிரின்சிபில் கிட்ட சொல்லுவோம்” என்றவனை தடுத்து நிறுத்தியவள்
“அய்யோ வேணாண்ணா அப்றம் அவன் நெட்ல போட்டுருவான் எல்லாருக்கும் தெரிஞ்சு என்ன ஒரு மாதிரி பாப்பாங்க” என்று கூற
“நீ முதல வா அவன் என்ன பண்றான்னு நானும் பாக்குறேன் உன்னோட கிளாஸ் ரூம் எங்க இருக்கு” என்று கேட்க
“நேரா போய் ரைட்ல திரும்புனா மேல மூணாவது ரூம்” என்று வழி கூற
“நா அங்க இருக்கேன் அவன கூட்டிட்டு வா என்ன பண்றான்னு நானும் பாக்குறேன்” என்றவன் அறையை நோக்கி செல்ல கார்த்திக்கை அழைத்துவர சென்றாள் சஞ்சளா
அவனை அழைத்து வந்தவள் விஷ்ணுவின் அருகில் நின்றுகொள்ள “ஓ.. இவரு தானா அது” என்று நக்கல் தோணியில் கேட்டவன் “சார் உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று மிதப்பாக கேட்டான் விஷ்ணு
“அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற முதல நீ யாரு” என்று திண்ணக்கமாக பதில் கேள்வி கேட்டவனிடம்
“நா இவ்ளோட அண்ணே நீங்க ஏதோ மிஸ் பிகேவ் பண்றதா சொன்னா அதான் என்னன்னு கேட்டு போகலாம்னு வந்தேன்” என்றதும்
“ஹா ஹா..” என்று உரக்க சிரித்தவன் “ஹலோ சார்! அவ என்னோட லவ்வர் நானும் அவளும் லவ் பண்றோம் எதுவா இருந்தாலும் நாங்க பேசிகிறோம் எங்க ரெண்டு பேருக்கு நடவுல இந்த நாட்டாமை வேலை எல்லாம் வேணாம்! உங்க வேலைய பாத்துட்டு போங்க” என்று திமிராக கூறியவன் சஞ்சளாவிடம் பார்வை செலுத்தி
“ஏய் என்னடி ஆள் செட் பண்ணி மிரட்டுறியா மவளே நெட்ல போட்டேன்னு வை உன்னோட மானம் போயிரும் பாத்துக்கோ” என்று மிரட்ட
பளார் என்று கன்னத்தில் அறைந்தான் விஷ்ணு “என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது அவள எதுக்குடா மிரட்டுற நா பேசி முடிக்கிற வரைக்கும் வாய திறக்க கூடாது திறந்த மவனே அடுத்த நிமிஷம் உன்னோட எலும்புகளுக்கு நா உத்திரவாதம் இல்ல நொறுக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்“என்று கோபத்துடன் எச்சரித்தவன் மீண்டும் டேபிள் மேல் அமர்ந்து கொண்டான்
அடி வாங்கிய கன்னத்தில் கை வைத்து கொண்டு“சார் நா யாருன்னு தெரியாமா பேசிட்டு இருக்கீங்க நா நினைச்சா” என்றவனின் வார்த்தை முழுமை அடையும் முன்பே
“என்னடா பண்ணுவா ம் சொல்லு என்ன பண்ணுவா? நா யாருன்னு உனக்கு தெரியாது தெரியாம இருக்குறது தான் நல்லது” என்று ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரித்தவன்
“சஞ்சு நீ இவன லவ் பண்றயா என்ன? உங்கம்மா என்ன பாடுபட்டு தனி மனுசிய இருந்து உன்ன படிக்க வைக்கிறாங்க நீ என்னடான்னா காலேஜ் சேந்த கொஞ்ச நாள்லயே இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்க” என்று கண்டிப்பு கலந்த குரலில் உறுமினான்
“அண்ணா நா அந்த மாதிரி பொண்ணு இல்ல என்ன பத்தி தெரிஞ்சிருந்தும் நீங்களே இப்டி பேசலாமா? நா இவன லவ் பண்ணவே இல்ல முதல் நாள் காலேஜ்க்கு வந்தப்போ என்கிட்ட ப்ரொபஸ் பண்ண சொல்லி ராகிங் பண்ணான் நா முடியாதுன்னு சொன்னேன் டக்குன்னு கைய பிடிச்சிட்டான் கோபத்துல சட்டுன்னு அடிச்சிட்டேன் ப்ரொபசர்கிட்டயும் கம்ளைன் பண்ணேன் அவரும் வான் பண்ணி அனுப்புனாறு அந்த கோபத்துல அசிங்கமா போட்டோ மேக் பண்ணி எல்லார் முன்னாடியும் லவ் பண்றேன்னு சொல்ல சொல்லி மிரட்டுறான் இன்னும் என்னென்னவோ அசிங்கமா பேசுறான் அவன் சொல்ற மாதிரி நடந்துகலன்னா ஆசிட் அடிச்சிருவானாம் தண்ணி பாட்டில வச்சு மிரட்டுறான்” என்று அழுது கொண்டே கூற
“உன்னோட போன கொடுடா” என்று நிதானமாக விஷ்ணு கேட்க
“எதுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது நா கிளம்புறேன்” என்று நகல முற்பட்டவனை ஒரே எட்டில் அவன் கைப்பற்றி இரும்பு பிடியாய் பிடித்து நிறுத்தியவன் அவனிடமிருந்த அலைபேசியை வலுக்கட்டாயமாக பிடுங்கி சஞ்சளாவிடம் “நீ போய் உடைக்கிற மாதிரி ஏதாவது கனமான பொருள் எடுத்துட்டு வா” என்று பணிக்க
வேகமாக சென்று எடுத்து வந்தவள் விஷ்ணுவிடம் கொடுக்க கார்த்தியின் கண் முன்னே சுக்கு நூறாய் உடைத்து மெமரி சிம் என்று இரண்டையும் நாலாய் உடைத்து தூக்கி எறிந்தவன் “ஒரு பொண்ணு விருப்பம் இல்லன்னு சொன்னா உடனே அராஜகத்தை ஆயுதமா எடுத்துற வேண்டியது அவளோட விருப்பத்தை வெளிப்படையா சொல்ல கூடாது?, உங்களுக்கு ஃபேவரா தான் சொல்லணும் இல்லன்னா இந்த மாதிரி மிரட்டி கட்டாயப்படுத்துவிங்க!, அப்டிஇல்லன்னா ஆசிட் அடிச்சு அவளுக்கு வேதனைய உண்டு பண்ணுவீங்க! அப்படியும் இல்லன்னா ஒரு படி மேல போய் ஒரேடியா கொன்னுருவிங்க அது தானே உங்க காதல்“என்று ஏளனமாக மொழிந்தவன்
“எவ்ளோ பெரிய படிப்பு படிச்சு என்ன பிரயோஜனம் பொண்ணுங்கள மதிக்க கத்துக்கணும் அப்பதான் வாழ்க்கையில முன்னேற முடியும் இதுவே உங்கம்மா இல்ல உன்னோட கூட பிறந்தவள போட்டோ எடுத்து போடு இல்ல நா இந்த மாதிரி பண்றேன்னு சொல்லி பாரு உன்ன பெத்ததுக்கு ரொம்ப சந்தோஷபடுவாங்க நீயெல்லாம் ஒரு பிறவி ச்சீ உன்ன இப்டியே விட்டா சரி வராது
நீயெல்லாம் படிச்சு என்னத்த கிழிக்க போற அப்துல்கலாம் ஆக போறாயா? இல்ல நாட்டுக்கு நல்ல குடிமகனா இருக்க போறயா? எதுவும் இல்ல, பொறுக்கி தனம் பண்ணிக்கிட்டு இன்னும் என்ன மொள்ளமாறி தனம் பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிச்சுட்டு இருக்க போற” என்று இகழ்ந்தவன் “வா பிரின்சிபில் கிட்ட உன்ன கம்பளைன் பண்ணாதான் உன்ன மாதிரி தப்பு பண்றதுக்கு மத்த பசங்க யோசிப்பாங்க நீ இந்த காலேஜ்ல இருந்தா இருக்குற பசங்களையும் கொடுத்துருவ” என்றதும்
“சார் சாரி சார் ஏதோ தெரியாம பண்ணிட்டேன் இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன் மன்னிச்சுறுங்க” என்று விஷ்ணுவிடம் மன்றாடியவன் “சொல்லு சஞ்சு இனி உன் பக்கமே நா வர மாட்டேன் ப்ளீஸ் பிரின்சிபில் கிட்ட வேணாம் என்னோட படிப்பே போயிரும்” என்று கெஞ்ச அசையாமல் இருந்தாள் சஞ்சளா
Advertisement