Advertisement
பொழுது நன்றாக புலர்ந்திருக்க வைதேகி இல்லம் செல்வதாக கூறவும் நானும் வருகிறேன் என்று சாவித்ரியும் உடன் சென்றார் சஞ்சளா வைஷாலி இருவர் மட்டும் அறையில் தனித்திருக்க ஆண்கள் மூவரும் நடைப்பயிற்சியை முடிந்தது கொண்டு தோட்டத்திலேயே குளிப்பதற்கான உடைகளை உடன் எடுத்து சென்றுவிட பரமசிவமும் சந்தைக்கு கிளம்பி சென்று விட்டார் புவியரசன் பணிக்கு கிளம்பி கொண்டிருக்க “ஏய்யா அரசு அப்பா வேலைக்கு போறதுக்கு முன்னாடி வயலுக்கு வந்துட்டு போக சொன்னாரு” என்று போகிற போக்கில் கூறிவிட்டு செல்ல உரமூட்டை எடுப்பது பற்றி நேற்று இரவு பேசியது நினைவு வந்தது
வேகமாக அறைக்குள் நுழைந்தவளை கண்டும் காணாது போல கண்ணாடியில் முகம் பார்த்து தலைவாரி கொண்டிருந்தான் புவியரசன் “என்ன மாமா கிளம்பியாச்சா அப்பத்தா உன்ன கேட்டுச்சு மாமா” என்றவள் “மன்னிச்சிறு அதுக்கு முடியலன்னு சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதா ஓங்கிட்ட கூட சொல்லாம அத்தைகிட்ட மட்டும் சொல்லிட்டு போய்ட்டேன்” என்று அறையை ஒழுங்கு படித்தி கொண்டே படபடவென பேசியவள் அவனிடமிருந்து பதில் வார்த்தை வராமல் போக திரும்பி பார்த்தாள்
அலுவலக பையை எடுத்து கொண்டு நகர முற்பட்டவனை வாசல் புறம் சென்று இடைமறித்தவள் “ப்ச் இப்போ என்னத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுருக்க போன் போட்டே மனுசன் எடுக்கவே இல்ல என்ன என்ன பண்ண சொல்லுறீக? உங்களுக்கே தெரியும் அதுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாதுன்னு தெரிஞ்சும் இப்டி நடந்துகிட்டா எப்டி மாமா” என்று தன்னிலை விளக்கம் அளிக்க அவளை உறுத்து பார்த்தான், கோபமா அல்லது இயல்பான பார்வையா என்று வரையறுக்க முடியாத வகையில் பார்த்தவன் எதுவும் கூறாமல் அவளை கடந்து விறுவிறுவென சென்றுவிட
கணவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவள் “சரியான முசுடு எந்த நேரத்துல எப்டி இருக்குதுன்னு கணிக்கவே முடியல நைட்டு வீட்டுக்கு தானே வரணும் அப்ப பாத்துக்கிறேன்” என்று மனதில் கருவிக்கொண்ட தமயந்தி தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்
தாய் தந்தை சிறு வயதிலேயே இறந்து விட பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவள் அரசு பள்ளியில் தக்கி முக்கி எப்படியோ பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருந்தாள் புவியரசுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை கிடைக்கவே சொந்தம் விட்டுபோக கூடாது என்று எண்ணி பரமசிவம் தனது ஒன்று விட்ட தங்கை மகளான தமயந்தியை மூத்தவனுக்கு கட்டி வைத்து மருமகளாக்கி கொண்டார்
“அத்தே அத்தே” என்று குரல் கொடுத்து கொண்டே அடுக்களைக்குள் புகுந்தவளை கண்டு
“வாத்தா எப்ப வந்த ஆத்தா நல்லா இருக்கா இன்னும் ரெண்டு நாள் கூட இருந்து பாத்துட்டு வர வேண்டியது தான இங்கன என்ன அவசரமா வெட்டி முறிக்க வேண்டிய சோழி இருக்குன்னு வந்துட்ட” என்று அன்னம் கேட்க
“இல்ல அத்தே அத பாத்துக்க சொல்லி பக்கத்து வீட்டு கனகா அக்காகிட்ட சொல்லிட்டு தான் வந்துருக்கேன் அவககிட்ட சொல்லமா போயிட்டேன்னு உங்க மகன் முகத்தை தூக்கி வச்சுகிட்டு இருக்காரு இதுல ரெண்டு நாள் தங்குனே… அம்புட்டு தான் அங்கனயே கிடன்னு சொல்லிருவாறு அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவள் “நீங்க போங்க நா பாத்துகிறேன்” என்று கூற
“இருக்கட்டும்மா இப்போதான வந்துருக்க செத்த நேரம் உக்காரு பிள்ளைங்க வேற வந்துருக்காக உன்னோட கொழுந்தனும் வந்துருக்கான்”
“தெரியுமே எனக்கு! உங்க எல்லாருக்கும் முன்னாடியே போன் போட்டு சொல்லிட்டாரு நான் தான் யாருக்கிட்டயும் சொல்லல” என்று சிரித்து கொண்டே கூற
“அட கிறுக்கி” என்றவர் “நம்ம செவள கன்டு போட்டுருக்கு பொம்பளை குட்டி நல்லது நடக்க போகுதுன்னு நினைக்கே பாப்போம்” என்றவர் “குளிச்சுட்டு கிளம்பி வா கடை வீதிக்கு போய் செட்டியார் கடையில பிள்ளைகளுக்கு சீல எடுத்துட்டு வரலாம்” என்று அவசரமாக கூற
“அத்தே நானே டவுனுக்கு போலாம்னு தான் இருந்தேன் டாக்டர பாக்கணும்” என்று சிரித்தபடி கூற
“நெசமாவா சொல்லுற தாயி தள்ளி போயிருக்கா” என்று கண்களில் ஆர்வம் குமிழிட கேட்டவர் ஆம் என்று தலையாட்டிய மருகளின் கன்னத்தை தடவி திருஷ்டி கழித்து “சரி சரி வெரசா கிளம்பி இரு அவுக சாப்டதும் போகலாம் வெயிலுக்கு முன்ன போயிட்டு வந்திரலாம்” என்று கூற
“சரிங்க த்தே” என்றவள் “யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேணாம் டாக்டர பாத்து உறுதிபடுத்திட்டு சொல்லிக்கலாம்” என்று விட்டு சிரித்து கொண்டே தன்
அறைக்கு சென்றாள் தமயந்தி
தன் இல்லம் வந்த வைதேகி உடல் மெலிந்து கண்களில் ஜீவன் இல்லாத பார்வையில் விட்டதை வெறித்து கொண்டிருந்த தன் தந்தையை பார்த்ததும் கண்ணீர் துளிகள் துளிர்த்து கன்னத்தை கறைப்படுத்த “அப்பா” என்று குரல் கொடுத்ததும் விட்டத்தில் இருந்து பார்வையை அகற்றிய பெருமாள்சாமிக்கு வாசலில் நின்றிருந்தவளை கண்டு பேச்சே எழவில்லை அவளை பார்த்த சந்தோஷத்தில் கண்ணீர் குளம் கட்டி நிற்க உள்ளே இருந்து எட்டி பார்த்த இந்திராணி “வாடி எப்ப வந்த கூட யாரும் வரலையா?” என்று கேட்டவர் மகளின் கை சுமையை வாங்கி கொண்டார்
“நா நாலு மணிக்கெல்லாம் வந்துட்டேன் அத்தை வீட்டுல தான் இருந்தேன் நீங்க எந்திருச்சிருக்க மாட்டீங்க விடிஞ்சதும் போலான்னு சொல்லிட்டாங்க சித்தியும் வந்துருக்காங்க” என்றவள் பின்னே திரும்பி பார்க்க சாவித்ரி இல்லை
“சரி சரி போய் குளிச்சிட்டு வா அவ பக்கத்து வீட்டுல நின்னு பேசிக்கிட்டு இருப்பா” என்று கூறிவிட்டு இந்திராணி வெளியே செல்ல
தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தவள் “என்னப்பா என்மேல கோபமா? நா வந்தது உங்களுக்கு பிடிக்கலையா?” என்று கவலையோடு கேட்க
“என்னம்மா இப்டி சொல்லிட்ட உன்ன பாத்த சந்தோஷத்துல வார்த்தையே வரல அதான் அப்டியே உக்காந்துட்டு இருக்கே சரி நீ எப்டி இருக்க வேலையெல்லாம் எப்டி போகுது வேலை பிடிச்சிருக்கா” என்று விசாரிக்க
“எல்லாமே சூப்பரா இருக்கு ப்பா மாமாவும் கூட தான் இருக்காரு அவரும் வந்துருக்காரு அப்றம் வைஷாலி வேற வந்துருக்கா அப்றமா வரேன்னு சொன்னா” என்றவள் “ரொம்ப மெலிஞ்சு போயிருக்கீங்க சரியாவே சாப்பிடுறது இல்லனு அம்மா சொன்னாங்க ஏம்பா உங்க உடம்ப நீங்க தானே பாத்துக்கணும்! நடந்தத மறந்துட்டு நடக்க போறதா பாருங்க முடிஞ்சத நினைச்சு ஒன்னும் ஆக போறது இல்ல” என்று வருத்தத்துடன் கம்மிய குரலில் கூற
“எனக்கே புத்திமதியா?” என்று சிரித்தவர்“நடந்தத மறந்துட்டேன் ம்மா நீ வந்துட்டல இனி அப்பா தெம்பா இருப்பேன்” என்று சிரித்தபடி கூற
“சரிப்பா நா போய் குளிச்சிட்டு வறேன் அத்தை டவுனுக்கு போகணும்னு சொல்லிருந்தாங்க” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்
ஆண்கள் மூவரும் குளித்து விட்டு இல்லம் வர துவாரகாவின் முகம் வாடி இருந்தது உடைமாற்றி கொண்டு வெளியே வந்த விஷ்ணுவிடம் “வாங்க கொழுந்தனாரே எப்டி இருக்கீக சென்னை போனதும் மதுரை பக்கம் இருக்குறவகள மறந்துட்டீக போல..” என்று இழுத்து பேச
“என்ன மதினி பண்றது உங்க மாமானர் தான் இந்த பக்கமே எட்டி பாக்க கூடாதுன்னு கண்டிப்போட சொல்லிட்டாரே! பின்ன என்ன பண்ண சொல்றிங்க?” என்று சலித்து கொள்ள
“வர கூடாதுன்னு தானே சொன்னாரு போன் பண்ணி பேச கூடாதுன்னு சொல்லலேயே?” என்றவள் “அது சரி இப்போ மட்டும் எதுக்கு வந்துருக்கீகலாம்”
“உங்க மாமனார் தான் வர சொன்னாரு வந்துருக்கேன்! ஏ எதுக்குன்னு என்கிட்ட கேக்காதீங்க அதோ அவரே வர்றாரு கேட்டுக்கோங்க” என்று வாசல் பக்கம் கைகாட்ட பரமசிவம் வந்து கொண்டிருந்தார் உடன் புவியரசனும் வர
“அடி ஆத்தி எனக்கு எதுக்கு வம்பு வந்து உக்காருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அடுக்களை புகுந்து கொள்ள சன்ன சிரிப்புடன் நகன்றான் விஷ்ணு
அனைவரும் தரையில் அமர பரிமாற வந்த தமயந்தியிடம் “நா பாத்துகிறேன் நீ போய் சாவித்திரி வைதேகிய கூட்டிட்டு வா” என்று அனுப்பி விட்டு வாழை இலையில் பரிமாற தொடங்கினார் அன்னம் கம்பு தோசையும் கொள்ளு சட்னியும் என்று எளிமையாக காலை உணவை தயாரித்திருந்தார்
இருவரையும் அழைத்து வந்த தமயந்தியையும் அமர சொல்லி பரிமாற பரமசிவம் உணவருந்தி முடித்து எழுந்து செல்லும் வரை யாரும் பேசவில்லை, தந்தை சொல் தட்டாத மைந்தனை போல பரமசிவத்தின் பின்னோடு பெரிய மகனும் சென்றுவிட துவாரகா எதையோ பறிகொடுத்தது போல உணவை அளந்து கொண்டிருந்தான் “ஏலே செவத்தவனே சாப்பிடாம என்ன யோசனை பண்ணிட்டு இருக்க இன்னொரு தோசை வைக்கவா” என்று அன்னம் கேட்க
“வேண்டாம்” என்று தலையசைத்தான் அன்னதிற்கு அவன் பெயரை சரியாக உச்சரிக்க வராது என்பதால் அவனின் நிறத்தை வைத்தே அழைப்பார் “என்னடா ஆச்சு போகும் போது நல்லா தானே இருந்தான்?”
“அது ஒன்னுமில்லம்மா” என்று விட்டு விஜயனும் விஷ்ணுவும் நமட்டு சிரிப்பை உதிர்த்தனர் “அன்னம்” என்று பரமசிவம் குரல் கொடுக்கவே வேகமாக எழுந்து சென்றுவிட
துவாரகேஷ் பாதி உணவில் எழுந்து கொண்டான் “டேய் டேய் உக்காருடா நாங்க சிரிக்கல சாரி” என்ற இருவரின் பேச்சையும் செவிமடுக்காது அறைக்குள் சென்று முடங்கி கொள்ள
“என்னடா எதுக்கு கோவிச்சுக்கிட்டு போறான்” என்று சாவித்ரி கேட்க
“அதுவா அத்தை மேல தெரு கோமதி பொண்ணு இல்ல அதான் ஊருக்கு தண்ணி எடுத்துவிடுவாறே அவரு பொண்ணு”
“ஆமா அவளுக்கு என்ன?”
“நாங்க குளிச்சிட்டு வரும் போது அந்த பொண்ணு எதிர்ல வந்துச்சு அத்தை அதான் சோகமா இருக்கான்!”
“அந்த பொண்ணு வந்தா இவனுக்கு என்ன புரியிற மாதிரி சொல்லுடா”
“போன வருஷம் நம்ம ஊரு திருவிழாவுக்கு வந்தான்ல அப்போ அந்த பொண்ண பாத்துருக்கான் பாத்ததும் பிடிச்சு போச்சு அந்த பொண்ணுகிட்ட பேச முயற்சி பண்ணிருக்கான் முடியல இன்னைக்கு தான் அந்த பொண்ண பாத்தான் தனியா இல்ல துணையோட!, அவளோட புருஷனும் சேந்து வந்துட்டு இருந்தான் அத பாத்துதான் அய்யா முகத்தை சோகமா வச்சுட்டு இருக்காரு” என்றதும் அனைவரும் சிரித்து விட்டனர்
சஞ்சளாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் வரும் அளவு சிரித்தவள் “ஒன்சைட் லவ்க்கு ஓவர் பீலிங்கா” என்றவள் “அண்ணா அவருக்கிட்ட சொல்லுங்க ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாதுன்னு” என்று கூற அறையில் இருந்தபடி கேட்டு கொண்டிருந்தவனுக்கு அவள் கூறியதை கேட்டு கோபம் வரவில்லை மாறாக இதழில் புன்னகை தவழ்ந்தது.
தொடரும்..
என்னை இங்கே வர செய்தாய் என்னனவோ பேச செய்தாய் புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன?
அருகினில் அமர்ந்தென்னை உற்று உற்று பார்க்கும் உந்தன் துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன? என்ன?
Advertisement