Advertisement
“டேய் நீ எதுக்கு இன்னும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க கொஞ்சம் சிரிச்ச முகமா இரு பாக்க சக்கிகல“என்று மூக்கை சுருக்கி கூற
“ப்ச் போடா” என்று சலித்து கொண்டவன் “ஜாகிங் போய்ட்டு வரலாமா? ரொம்ப நாள் ஆகுது கிராமத்து வாசம்பிடிச்சு“
“ம் சரி போலாம் நீங்க இருங்க நா கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் அம்மா கேட்டா மேல போயிருக்கேன்னு மட்டும் சொல்லுங்க” என்று விட்டு மாடியை நோக்கி சென்றான் விஷ்ணு
முகம் வாடி அமர்ந்திருந்த வைஷாலியின் அருகில் வந்து அமர்ந்த வைதேகி “ப்ச் கொஞ்சம் சிரிச்ச முகமா இருப்பா அத்தை பாத்தா என்னன்னு கேப்பாங்க அவங்க கிட்ட எதையும் மறைக்க முடியாது” என்றவள் “வீட்டுக்கு வர்றயா?” என்று அவள் மனதை மாற்றும் விதமாக கேட்க
“ப்ச் இல்லப்பா விடியட்டும் வர்றேன் சஞ்சு தனியா இருப்பா!”
“அதுவும் சரி தான்!” என்று கூறியவள் தரையை வெறித்தபடி அமர்ந்திருந்த சஞ்சளாவை பார்த்து “நீ ஏண்டி இப்டி இடிஞ்சு போனவ மாதிரி உக்காந்துட்டு இருக்க இப்போ என்னாச்சு ஒரு வாரம் தானே ஒரு மாசமா இருக்க போற? உன்ன வச்சுக்கிட்டு என்ன தான் பண்ண போறேன்னோ தெரியல! எல்கேஜி குழந்தை அம்மாவ விட்டு வர மாட்டேன்னு அழுகுற மாதிரி இருக்கு நீ பண்றது” என்றவள் “குத்துக்கால் வச்சு உக்காரத வீட்டுக்கு ஆகாது எந்திரிச்சு போய் முகத்தை கழுவிட்டு வா” என்று அதட்டி அனுப்பி வைக்க
அதே நேரம் டீ டம்ளர்களுடன் உள்ளே நுழைந்தார் அன்னம்“நீங்க எதுக்கு அத்தை எடுத்துட்டு வர்றிங்க ஒரு குரல் கொடுத்திருக்கலாம்ல”
“தூக்க முடியாத கனமா? இல்ல நா செய்யாத வேலையா?” என்று துடுக்காக பேசியவர் “இந்தா எடுத்துக்கோ” என்று விட்டு வைஷாலியை பார்த்து
“ஏண்டி கிறுக்கு புடிச்சவளே வர்ற மாப்பிளையெல்லாம் பாக்காமலே வேணான்னு சொல்றியாம் என்னடி ஆச்சு உனக்கு காலகாலத்துல கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டின்னு வாழ்றத விட்டுட்டு இப்டி வேலையவே கட்டிக்கிட்டு அழுதுகிட்டு கிடக்க நா பெத்தது தான் கிறுக்குனா நீயும் அவன் கூட சேந்து கிறுக்கு ஆகிட்டியா? உங்கம்மா சொல்லி புலம்புறா அழுகாத குறை தான் சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு” என்று கண்டிப்பை காட்டிவிட்டு டம்ளரை கீழே வைத்தவர்
“அவ எங்கடி”
“பாத்ரூம்ல இருக்கா அத்தை“, வைதேகி பதிலுறைக்க
“அதிசயமாவுல இருக்கு என்னைக்கும் இல்லாம இந்த வருஷம் வந்துருக்கா! போன வாட்டி கூப்டதுக்கு அம்மாவ விட்டு வர மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா இப்போ மட்டும் எப்டி வந்தாளாம் ஒரு தினுசா தாண்டி இருக்கீங்க நீங்க முணுபேரும்” என்று சந்தேகமாய் பேசியவர் சஞ்சளாவிற்கு உரிய டீயை வைத்து விட்டு “குடிச்சிட்டு குளிக்க வாங்க வெண்ணி வெளாவி வைக்கிறேன்” என்று நகரந்துவிட
“ஹப்பா மழை பேஞ்சு ஓஞ்சது மாதிரி இருக்கு” என்று நிம்மதியான மூச்சை வெளியிட்ட வைதேகி தனக்கு அளித்த டீயை பருக ஆரம்பித்தாள் இஞ்சி ஏலக்காய் நறுமணம் நாசியை துளைக்க தொண்டையில் இதமான சூட்டுடன் அமிர்தமாய் இறங்கியது அன்னத்தின் அன்பான தேநீர்
மாடியேறி சென்றவன் தலை முதல் கால் வரை போர்வையை போர்த்தி கொண்டு படுத்திருந்த தன் அண்ணனை கண்டு “ஏதாவது பண்ணணுமே என்ன பண்ணலாம் நா வறேன்னு தெரிஞ்சும் போர்வைய போத்திக்கிட்டா படுத்துருக்குற இருடா” என்று கறுவிக்கொண்டவன் கைக்கு அகப்படுவது போல ஏதேனும் பொருள் இருக்கிறதா என விழிகளால் துழாவ வாளி நிறைய மழை நீர் இருப்பதை கண்டு விழிகள் விரிந்து முகத்தில் புன்னகை தவழ்ந்தது, சத்தமில்லாமல் அதே சமயம் வேகமாக சென்று தண்ணிரை எடுத்து வந்து உறங்கி கொண்டிருந்தவனின் மேல் உற்றினான் விஷ்ணு “ஐயோ..! அம்மா..!” என்று பதறி அடித்து கொண்டு மூச்சு முட்ட எழுந்தான் புவியரசன்
பனியனும் கைலியும் அணிந்து உறங்கி கொண்டிருந்தவனின் மேல் குளிர் நீர் பட்டதும் பயந்து நடுங்கி போனவன், எதிரில் புன்னகைத்த வண்ணம் இருந்தவனை கண்டு “அட நாசமத்து போனவனே இப்டியாலே பண்ணுவா தூங்கிட்டு இருக்கேன்ல” என்றவாறே தன் நிலையை பரிதபாமாய் பார்க்க சொட்ட சொட்ட ஈரம் வழிந்தோடி குளிர் நீர் உடலை விறைக்க செய்தது
“உன்ன என்ன பண்ணுறேன்னு பாருலே” என்று விஷ்ணுவை பிடிக்க வர சிக்குவேணா என்று வேகமாக படியிறங்கியவன் எதிரில் வந்த அன்னத்தின் மீது மோதினான்
“அடேய் பாத்து வாடா ஏ இப்டி ஓடியார” என்று பின்னால் வந்து கொண்டிருந்தவனை பார்த்தவர் தலை முதல் கால் வரை நனைந்தபடி வந்த மூத்த மகனை கண்டு
“நீ ஏண்டா இப்டி வாறா!”
“எல்லா இவனால தான் தூங்கிட்டு இருந்தேன்ம்மா மேல வந்து தண்ணிய ஊத்திட்டான்” என்று அழுவது போல புகார் ஒப்பிக்க
“உங்க ரெண்டுபேரு கூட ஒரே ரோதனையா போச்சு இனி ஒரு வாரத்துக்கு உங்க சண்டைக்கு ஒரு முடிவே இருக்காது” என்று சலித்து கொள்ள
“பின்ன என்னவாம் வர்றோம்னு தெரியும்? தெரிஞ்சும் தூங்கிட்டு இருந்தான்னா என்ன அர்த்தம் அதான் தண்ணிய எடுத்து ஊத்துனேன் நா பண்ண காரியத்துக்கு எனக்கு நீ நன்றி சொல்லணும் ஆபீசர், குளிப்பாட்டி விட்டுருக்கேன் உன்னோட பொண்டாட்டி கூட செஞ்சுருக்க மாட்டா” என்று மெச்சுதலாய் கூற
“ஏய் என்ன பேச்சு பேசுற மதினிய போய் அடுத்த மனுஷி மாதிரி பேசுற,மருவாதையா பேசு அவ மட்டும் இங்கன இருந்தான்னு வைய்யி வாய் கிழிஞ்சு போயிருக்கும் நேத்து தான் ஊருக்கு கிளம்பி போனா அப்பத்தாவுக்கு உடம்பு முடியலன்னு” என்றவர் “ஏண்டா பெரியவனே இன்னைக்கு வந்துருவால்ள?”
“எனக்கென்ன தெரியும் எங்கிட்டயா சொல்லிட்டா போனா உங்ககிட்ட தானே சொல்லிட்டு போனா தெரியாத மாதிரி கேக்குறிங்க” என்றவன் தனக்கு ஒரு டம்ளரை எடுத்து கொண்டு அறையை நோக்கி செல்ல
“அம்மா…..” என்று ஈனஸ்வரத்தில் பசு மாடு கத்தும் சத்தம் கேட்டது, என்னமோ ஏதோ என்று அனைவருக்கும் உடல் நடுங்கி போக பயத்தில் அன்னம் தொழுவத்தை நோக்கி செல்ல பின்னோடு விஷ்ணுவும் மற்றவர்களும் சென்றனர்
பால்காரன் ராசுவும் பரமசிவமும் சற்று பதட்டத்துடன் நின்றிருக்க “என்னங்க என்னாச்சு”
“ஒன்னுமில்லத்தா இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு பாத்தேன் ஈத்து வலி எடுத்துருச்சு நீ போயி மூக்கையன கூட்டிட்டு வா வெரசா வாத்தா” என்று அவசரமாக கூறி அனுப்பி வைக்க ஓட்டமும் நடையுமாக சென்றார் அடுத்த தெருவிற்கு
பரமசிவம் அருகில் வந்த புவியரசன் “என்னப்பா”
“மூக்கையன கூட்டியாற சொல்லிருக்கேன் வலி எடுத்துருச்சுடா மூத்தவனே” என்று கூற
“ஏப்பா மாட்டு டாக்டரா வேணா வர சொல்லுறேன் அவக வந்தாகன்னா என்ன ஏதுன்னு பாத்து சுளுவா எடுத்துருவாக” என்றவனை பார்த்து சிரித்தவர்
“அட போடா மூக்கைய பாக்காததா இந்த சுத்து வட்டாரத்துலயே இந்த மாதிரி சோழிக்கு பேர் போனவண்டா மாட்டு டாக்டராம் மாட்டு டாக்டரு” என்று அங்களாய்த்து கொண்டதும் அமைதியாக இருந்துவிட்டான் புவியரசன் சுற்றி வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவர்களுக்கு புரிந்து போனது என்ன நடக்க போகிறது என்று அதிசயதுடன் அதிசயமாய் பார்த்து கொண்டிருந்தனர் ஆண்கள் உட்பட, பசுவின் நிலையை பார்த்ததும் சற்று பயம் அப்பி கொள்ள சஞ்சளா துவாரகாவின் கையை இறுக பற்றி கொண்டாள் அவள் பயத்தை அறிந்தவன் போல தன் கரத்தினை அவள் கரத்தின் மேல் வைத்து தட்டி கொடுத்தான்
வேகமாக மூக்கையன் முன்னே வர அன்னம் பின்னோடு வந்தார் “என்னய்யா பரமு குட்டி ஈன்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்னு சொன்ன” என்றபடியே மாட்டின் வயிற்றை அழுத்தினார் கெட்டியான திரவம் போல மாசு ஒழுகி கொண்டிருந்தது பசுவின் பின் புறத்தில்
“சொன்னேன் தான் ஆனா நாமா சொல்றபடியோ இல்ல நினைக்கிறபடியோ எல்லாம் நடந்துருதா என்ன?” என்று பொடிவைத்து பேச
யாருக்கு புரிந்ததோ இல்லையோ விஷ்ணு வைதேகி அன்னம் மூவருக்கும் புரிந்து போனது மறைமுகமாக யாரை குறிப்பிடுகிறார் என்று விஷ்ணுவும் விஜயனும் அறைக்கு சென்றுவிட அன்னம் பதட்டத்துடன் நின்றிருந்தார்
“மசமசன்னு நிக்காம போய் வேலைய பாருத்தா நாங்க பாத்துக்கிறோம்” என்றதும் அன்னம் உள்ளே சென்றுவிட பின்னோடு வைதேகியும் வைசாலியும் சென்று விட்டனர்
“ஏய் சரவெடி வா போகலாம் எல்லாரும் போய்ட்டாங்க” என்றவனை பிடித்து நிறுத்தியவள் “சார் பாத்துட்டு போலாம் நா மாடு குட்டி போடுறத பாத்ததே இல்ல” என்று ஆசையோடு கூற
“பாக்கணும்னா நீ மட்டும் நில்லு என்ன ஏன்டி நிக்க வச்சுட்டு இருக்க நா போறேன் நீ பாத்துட்டு வா” என்று கூச்சத்தில் கையை உருவி கொண்டு துவராகா சென்று விட அதிசயமும் ஆச்சர்யமுமாய் பார்த்து கொண்டிருந்தாள் சஞ்சளா
“மாடு படுத்துருக்குற கோலத்தை பாத்தா கன்டுக்கு தலை திரும்பலையோ?” என்று மனதிற்குள் யோசனை செய்ய
“என்னய்யா யோசனை பண்ற ரெண்டு சீவனையும் காப்பாத்தி கொடுத்துரு மூக்கையா புண்ணியமா போகும்” என்று பரமசிவம் கூற
மாட்டிற்கு பிரசவம் பார்க்க ஆயத்தமானர்,வலியில் கண்கள் நீரை சொரிந்த வண்ணம் தக்கி முக்கி கொண்டிருந்தது பசு, மாட்டின் முதுகை பரிவாக தடவி கொடுத்து அதன் பயத்தை போக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் மூக்கையன் தலையை நிமிர்த்தி கொண்டு எழ முற்பட்ட பசு வலியில் மீண்டும் முடியாமல் படுத்து கொள்ள
“என்னய்யா இது முக்கி முணங்குதே தவிர வேலை ஆக மாட்டிங்கிது” என்றவர் செயற்கையான வலியை உண்டாக்க பின் பகுதியில் மெதுவாக கையை உள்ளே விட்டு புதையலை தேடுவது போல அப்படியும் இப்படியுமாக ஆட்டி கையை வெளியே எடுத்துவிட இயற்கை வலியில் செயற்கை வலியும் சேர்ந்து கொண்டது பசுவிற்கு வலியில் கண்கள் இரண்டும் கலங்கி படுத்திருந்தது
“ம்மா…” என்று வலியில் தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி முக்கி முனங்க மாசு ஒழுகும் பகுதியில் குச்சியாய் ஏதோ தென்பட பரமசிவம் முகத்தில் புன்னகை பிறந்து அதுவரை நிலவிய பதட்டம் காணாமல் போயிருந்தது குச்சியாய் தெரிந்த கன்றின் கால்களை மெதுவாக பிடித்து இழுக்க இழுக்க நழுவி கொண்டு வந்து விழுந்தது மாசுவும் அக்கியும் சேர்ந்த உயிருள்ள பிண்டம், பரமசிவத்திற்கு இருப்பு கொள்ளவில்லை முகத்தில் அத்தனை பிரகாசம் “ஆத்தி பொம்பளை குட்டில போட்டுருக்கு” என்றவர் “ரெண்டு சீவனையும் எந்த சேதாரமும் இல்லாம காப்பாத்தி கொடுத்துட்டய்யா” என்று கையெடுத்து வணங்கியவர்
சற்று நேரத்தில் சிரித்த முகமாய் வீட்டிற்குள் நுழைந்து “ஏத்தா அன்னம் இங்க வா” என்று குரல் கொடுக்க
“என்னங்க என்ன கன்டு போட்டுருக்கு”
“பொம்பளை குட்டி த்தா மகாலட்சிமியே வந்துருக்கு போ போய் பால் சட்டி கொண்டா மூக்கையனே கையோட பால் கறந்து கொடுத்துருவான்” என்றதும் பாத்திரம் எடுத்து வந்து கொடுத்தவர் கையோடு சாம்பிரணி தூபத்தையும் எடுத்து கொண்டு பின்னால் சென்று தொழுவத்தை சுத்தம் செய்து சாம்பிராணி போட்டு முடித்து வர துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டே பசுவையும் கன்றையும் மாறி மாறி பார்த்து சிரித்து சிலிர்த்து கொண்டிருந்தாள் சஞ்சளா “நீ ஏண்டி இங்க உக்காந்திருக்கிறவ உள்ள வா” என்று அழைத்து கொண்டு சென்றார் அன்னம்…
Advertisement