Advertisement
“உட்காருங்க எங்க போறீங்க”., என்று சொல்லிவிட்டு சிவா கையை பிடித்து வைத்துக்கொண்டான்.
மதுவை பார்த்து “நான் உன் கூட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல அவளோ அவனை பார்க்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.
“நீங்க பேசுங்க நாங்க வெளியே போறோம்”., என்று சொல்லவும்
“இல்லை இல்லை நான் அவளை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு “வா மாடிக்கு” என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க வேறு வழியின்றி எழுந்து பின் சென்றாள்.
எப்படியும் பேச வேண்டிய விஷயங்களை பேசி தானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு.
அவன் ஏற்கனவே வெளியே சொல்லி விட்டு வந்ததால் யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை., பேச அழைத்து செல்கிறான் என்று அமைதி காத்து இருந்தனர்.
முந்தைய நாள் இரவின் மழையின் தாக்கமோ என்னவோ, மேகம் மூடியே இருந்தது. அதனால் மொட்டைமாடி நன்றாகவே வெயில் இல்லாமல் அருமையான கால சூழலோடு காட்சியளித்தது. எப்போதும் இவற்றையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இருக்கும் மதுவிற்கு அன்று எவையுமே கண்ணுக்கு தெரியவில்லை.
அவன் பின்னால் மாடி ஏறி வந்தவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆளுக்கு ஒருபுறமாக சுவரில் சாய்ந்தபடி நிற்க.
அவனோ “சரி இப்போ சொல்லு என்ன” என்றான்.
அவளோ அவனை திருதிருவென பார்த்தபடி “நீங்க தான் பேசணும் ன்னு சொன்னீங்க”., என்றாள்.
மெதுவாக “ஆமா பேசணும் நான் தான் சொன்னேன்., ஆனா நேத்தைக்கு நீதான் நீங்க அது சரி இல்ல., இது சரியில்லன்னு என்கிட்ட லிஸ்ட் போட்டுட்டு இருந்த., அதை முழுசா சொல்லு, நான் அதுக்குதான் உன்னை பேச கூட்டிட்டு வந்தேன்., நேத்தைக்கு நைட் உனக்கு குளிர்காய்ச்சல் ப்ளஸ் டென்ஷன், எல்லாத்துக்கும் உன்னால வந்த பயம் வேற., இப்ப சொல்லு நான் என்ன சரியில்லை”., என்றான்.
அவளோ ‘அச்சோ நேற்று நைட்டு உள்ளது மறந்து இருப்பாங்கன்னு நெனச்சேன்‘., என்று நினைத்துக்கொண்டே,
“நீங்க எப்பவும் கோவப்படுவீங்க” என்றாள்.
“சரி வேற” என்றான்.
“சாதாரணமா பேச மாட்டீங்க., சிடுசிடு ன்னு தான் பேசுவிங்க” என்றாள்.
“சரி வேற” என்றான்.
‘நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் வேற வேற ன்னு கேட்டுட்டு இருக்காங்க‘ என்று மனதிற்குள் நினைத்து அவள் அவனை நிமிர்ந்து பார்க்க…
“சரி சொல்லு, உனக்காக தான் கேட்டுட்டு இருக்கேன்., நீ உன் மனசுல என்ன இருக்குன்னு சொன்னா தான் எனக்கு தெரியும்.,
அப்பதான் நான் எதை எதை கரெக்ட் பண்ணிக்க முடியும்., முடியாது ன்னு சொல்லுவேன், சில குணங்கள் என்னோட கூடப்பிறந்தது, அதெல்லாம் மாற்ற முடியாது, அது மட்டும் இல்லாம என்னோட வேலைக்கு நான் எல்லார் கூடவும் சிரிச்சு பேச முடியாது., புரிந்ததா”., என்று சொல்ல அமைதியாக தலையை ஆட்டிக் கொண்டாள்.
“உனக்கு எது எது அண் கம்பார்டேபிலா ஃபீல் பண்ற அப்படிங்கறத மட்டும் சொல்லு., உன் கிட்ட அந்த மாதிரி இல்லாம நான் பாத்துகிறேன்., அதற்காக மத்தவங்க கிட்ட நான் எப்படி இருக்கணும் நீ சொல்லக் கூடாது”., என்று சொன்னான்.
‘அய்யோ வேதாளம் முருங்கை மரம் ஏறுதே‘ என்று தோன்றியது. ஏனெனில் அவனது குரல் உத்தரவிடும் தொனியிலேயே இருந்தது.
மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாயும் அந்த வார்த்தையை வெளியிட்டு விட்டது.,
“நீங்க எப்பவும் இப்படித்தான் ஆர்டர் போடுற மாதிரி தான் பேசுவிங்க” என்று சொன்னாள்.
அவனும் சிரித்துக் கொண்டே “அது பழக்கமாயிடுச்சு மது., என்னோட வேலை அப்படி., எல்லார்ட்டையும் அப்படித் தான் பேசுவேன்., நான் கொஞ்சம் இறங்கி பேசினாலும் என் தலைல மொளகா அரைச்சுருவாங்க புரிஞ்சுதா”., என்று சொல்ல அவனிடம் லேசாக தலையை ஆட்டி கொண்டாலும் ‘ஐயோ ஐயோ‘ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“வேற எதுவும் சொல்லனுமா என்ன., அவ்வளவுதானா” என்று கேட்க அவன் முகத்தைப் பார்ப்பதும் தலையை குனிவதுமாக இருக்க., “என்னமோ சொல்ல நினைக்குற சொல்லு” என்று கேட்டான்.
“எனக்கு கல்யாணம் ன்ற மைண்ட் செட் இன்னும் வரல” என்று தயங்கி தயங்கி கூறியவள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ கையை கட்டிக்கொண்டு அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்., அவன் பார்வையே இவளுக்கு சற்று பயத்தை விதைக்க எப்படி சொல்வது என்று மீண்டும் தயங்கிக்கொண்டே நின்றவளை பார்த்து “சொல்லு” என்றான்.
அமைதியாக நின்றவள் சற்று தயக்கத்திற்குப் பின்னர் “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்று கேட்டாள்.
” எதுக்கு” என்றான்.
இவளோ ‘அய்யோ அதை எப்படி நான் சொல்லுவேன்‘ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “அது அது” என்று தயங்க..,
அவனும் சிரித்துக் கொண்டே “மது ரிலாக்ஸா இரு., டென்ஷனாகாத இது ஜஸ்ட் வேண்டாம்னு சொன்னா மாறப் போறது கிடையாது., என்ன பொருத்த வரைக்கும் என் லைஃப்ல நீ மட்டும் தான்., அப்புறம் என் லைஃப் விட்டு வெளியே வரவே முடியாது., இது பைனல் முடிவு புரிஞ்சதா., நீ எதுக்கு தயங்குற ன்னு தெரியுது., அது அப்புறமாய் யோசிக்கலாம், அதைப் பத்திப் பேச வேண்டாம் புரியுதா., இப்போதைக்கு ரிலாக்ஸா இரு., யார் என்ன சொன்னாலும் மைண்ட்ல எடுக்காத, அமைதியா இரு., ஆமா சிவாவ எதுக்கு அடிக்க போன”., என்றான்.
“நான் அடிக்கலையே” என்றவளிடம்.,
“பெருசா தூக்கி வீசினியே” என்று சொல்ல.,
“அது வேற” என்று தயங்கி சொல்ல.,
“வெளியே இருந்து பார்க்கும் போது தெரிந்தது., அவன் ட்ட சண்டை அப்புறமா வச்சுக்கோ., எல்லாரும் ஏதோ ஒரு டென்ஷன் ல கோபத்தை காட்டிருப்பாங்க., ஒரு ஆசைல பண்ணிட்டாங்க., அதுக்காக எல்லார்ட்டையும் கோபத்தை காட்டாத., நார்மலா இரு”., என்று சொன்னான்.
அவனிடம் லேசாக தலையை ஆட்டினாலும் மனதிற்குள் ‘சொல்றதெல்லாம் கேட்கணுமா என்ன‘ என்று தோன்றியது.
அதேநேரம் அவனும் அதை தான் சொன்னான். “நான் சொல்றதெல்லாம் கேட்கணும் கட்டாயம் கிடையாது., ஆனால் நான் சொல்றது உன் நல்லதுக்கு தான், அதை புரிஞ்சுக்கோ” என்று சொல்லிவிட்டு அமைதியானவன்,
“செமஸ்டர் எக்ஸாம் எழுதுற இல்லையா” என்று கேட்க
“எழுதணும்” என்று மெதுவாக சொன்னாள்.
“இந்த தடவை எழுதுறதா இருந்தா எழுது., இல்லனா சேர்த்து எழுதிக்கோ” என்று சொன்னான்.
அதற்கும் அமைதியாக நின்றாளே தவிர வெளியே தலை ஆட்டவில்லை.
மனதிற்குள்ளே ‘ஆறு மாச போராட்டம் எல்லாம் காலியா போச்சு., இனி படிச்சா என்ன., படிக்காட்டி என்ன‘., என்று தோன்றியது, ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை., ‘அவன்தான் முகத்தை பார்த்தாலே கண்டுபிடித்து விடுகிறானே‘ என்று தோன்றியது.
எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
“கீழே போலாமா” என்று கேட்டான்.
ம்ம் தலையாட்டி விட்டு போகப் போகும் போது.,
அவள் கையை பிடித்து நிறுத்திவனை., பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் முகத்தில் அழுத்தமான பார்வையை பதிக்க., அவசரமாக தலை குனிந்து கொண்டாள்.
“கைய விடுங்க” என்றாள் மெதுவான குரலில்.,
“ஏன் யாரும் எதுவும் சொல்லுவாங்க ன்னு பயமா” என்றான்.
எதுவுமே பதில் சொல்லாமல் கையை உருவி கொள்ள முயன்றாள்.
அவனோ சிரித்தபடி ” நேற்று நான் தான் உன்னை இங்கிருந்து கீழே தூக்கிட்டு போனேன்”., என்றான்.
அவசரமாக நிமிர்ந்து அதிர்வோடு பார்த்தவள் மீண்டும் குனிந்து கொண்டாள்.
மெதுவாக அவள் கன்னத்தில் கையை கொடுத்து அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் “எப்பவும் என் முகத்தை பார்த்து பேசு சரியா” என்று சொன்னான்.
‘ நீங்க நான் நினைத்ததெல்லாம் கண்டுபிடிக்கவா‘ என்று அவள் மனதிற்குள் நினைக்கும் போதே.,
“நீ நினைக்கிறத நான் கண்டுபிடிக்கிறது இருக்கட்டும்., நீ என் முகத்தை பார்த்து பேசலை னா, அப்புறம் எப்படி நான் நினைக்கிறத நீ கண்டுபிடிப்ப” என்று கேட்டான்.
கண்ணை விரித்து அவனை பார்க்கும் போதே., அவனோ “அப்படி பார்க்காத மது அப்புறம் நடக்குறதுக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை”., என்று சொன்னவன்.
அவள் கன்னத்தில் தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்து “முகத்தை பார்த்து பேசு சரியா, அப்பதான் என் முகத்துல இருக்கறத உன்னால புரிஞ்சுக்க முடியும்., எப்பவும் என்னை பார்த்தாலே குனிஞ்சுகிற., உன்னால என் முகத்த பார்த்து கண்டுபிடிக்கவே முடியாது” என்று சொல்லி அவள் கன்னத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து பின்பு மெதுவாக கையை எடுத்தவன்,
“கீழே போ, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று சொல்லிவிட்டான்.
அவன் வருவதற்காக காத்திருக்காமல் கீழே வந்தவளை எல்லோரும் பிடித்துக் கொண்டனர்.
“ஓகே தானே” என்று கேட்க எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
நந்தினி வந்து “என்ன அண்ணன் பேசி ஓகே பண்ணிட்டாங்களா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
மதுவின் மனமோ ‘எல்லாம் விதிப்படிதான் நடக்கும் ன்னு இத தான் சொல்லுவாங்க போல., இதுக்கு நான் போராடாமல் இருந்திருக்கலாமோ‘., என்று தோன்ற தொடங்கியது.
அதன் பிறகு எதுவும் பேசாமல் ‘நடப்பது விதிப்படி நடக்கட்டும்‘ என்று அமைதி காக்க தொடங்கினாள்.
தேவையற்ற எண்ணங்களில் இருந்து
நீ வெளி வா.. உன்னை மீறி நடக்கும்
நிகழ்வுகளுக்கு நீ எதை சிந்தித்தும்
பலன் இல்லை..!
Advertisement