Advertisement
கண்ணில் சிறு கோபம் கலந்த மகிழ்ச்சியுடனும், உதட்டோர சிறு அலட்சிய வளைவுடன் வெற்றிப் புன்னகை புரிந்த அபய்தேவை குற்றாசு வலியை மீறி வன்மத்துடன் முறைத்தான்.
அவனது முறைப்பில், விரிந்த புன்னகையை சிந்திய அபய்தேவ் சட்டைப் பையில் இருந்த கைபேசியை எடுத்து ஏதோ செய்தான்.
பின் கனகப்ரியாவைப் பார்த்து, “இப்போ அபிக்கு வீடியோ காள் போடுறேன்.. அவனைப் பார்த்து அழாம பேசுங்க.. நீங்க திடமா இருந்தா தான் அவன் சீக்கிரம் சரியாகி வீட்டிற்கு வருவான்” என்று கூறியதும்,
வேகமாக கண்களை துடைத்த கனகப்ரியா, “ரெண்டு நிமிஷம்.. மொகத்த கழுவிட்டு வாரேன்” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறப் போக,
அவளது அன்னை கோபத்துடன், “நில்லுடி” என்றார்.
நின்று அன்னையை திரும்பிப் பார்த்தாள்.
இத்தனை நாட்கள் இல்லாத தனி திடத்தையும் தெளிவையும் மகள் முகத்தில் கண்டவர் கோபத்துடன், “கொஞ்சமாச்சு அண்ணே மேல பாசம் இருக்காட்டீ?” என்றார்.
அவளும் கோபத்துடன், “அவெனுக்கு இருக்கா?” என்று கேட்டாள்.
அவர் முறைப்புடன், “யே ராசாவ இந்த நெலைக்கு கொண்டாந்தவென நீயி கட்டிக்க ஒரு நாளும் நா சம்மதிக்க மாட்டேன்” என்றார்.
“ஓ சம்மதத்தை நா கேக்குலியே”
“என்னடி வாயி ரொம்ப நீளுது!”
“நீயி ஓ மவனுக்கு மட்டுதே ஆத்தாவா இருக்க!” என்றவளின் குரலில் அவளை மீறி சிறு வலி தெரிந்தது ஆனால் அதை உணரும் நிலையில் அவளது அன்னை தான் இல்லை.
அவரோ கோபத்துடன், “இருட்டீ.. நானே ஒன்னிய பொழி போட்டுபுடுறே” என்றார்.
அவள் பதில் கூறாமல் அவரை வெறித்துப் பார்க்க, அவருக்கோ அது அலட்சியப் பார்வையாகத் தோன்றியது.
அவர் ஆங்காரத்துடன் முறைத்தபடி, “இவிங்கெ இருக்க தெகிரியதுல ரொம்ப ஆடாதடி” என்றார்.
தோழியின் மனநிலையை புரிந்து ஆதரவாக அணைத்துக் கொண்ட அமிர்தவள்ளி, “இங்கன சவடாலு வுடாம மொத ஓ மவன கெவனி” என்றாள்.
அவர் கோபத்துடன் பதில் கூறும் முன், அபய்தேவ், “வினை விதைத்தவன் வினை அறுப்பான், கேள்விப்பட்டு இருப்பீங்கனு நினைக்கிறேன்” என்றபடி கைபேசியில் ஒரு காணொளியை ஓட விட்டான்.
அதில் குற்றாசு கனகப்ரியாவை அடிப்பதில் இருந்து அவன் இறுதியாக கீழே விழுந்தது வரை பதிவாகி இருந்தது. குற்றாசு அபய்தேவின் காதருகே மெல்லிய குரலில், ‘பத்தலனாக்க யே அடி எப்புடி இருக்கும்னுட்டு ஓ கூட்டாளிய கேளுலே’ என்று கூறியது தெளிவாகப் பதிவாகி இருக்க, குற்றாசு அதிர்ச்சியுடன் அபய்தேவைப் பார்த்தான்.
அவன் அன்னை அதிர்ச்சி கலந்த சிறு பயத்துடனும், காமாட்சி அதிர்ச்சி கலந்த கோபத்துடனும், கனகப்ரியா கடும் கோபத்துடன் குற்றாசைப் பார்க்க, அமிர்தவள்ளி, “வசமா சிக்கினடி” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
குற்றாசு கனகப்ரியாவை அடிப்பதை கண்டதும், அபய்தேவ் கைபேசியில் காணொளியை பதிவு செய்யும் பொத்தானை அழுத்தி கைபேசியை தனது சட்டை பையில் வைத்து விட்டான். அபய்தேவ் வைத்திருந்த கோணத்திற்கு குற்றாசு சரியத் தொடங்கியது மட்டுமே தெரிந்தது, அவன் இரத்தம் கக்கியது தெரியவில்லை ஆனால் அவனது அன்னையின் குரல் பதிவாகி இருந்தது. குற்றாசின் முறைப்பை பொருட்படுத்தாது சிரித்தபடி கைபேசியை சட்டை பையில் இருந்து எடுத்தபோது தான் காணொளி பதிவை நிறுத்தும் பொத்தானை அழுத்தினான்.
காணொளி முடிந்ததும் அபய்தேவ், “இந்த வீடியோவை என்னோட போலீஸ் நண்பனுக்கு அனுப்பிட்டேன்.. இனி அபி விஷயத்தில் நீ தலையிட்டால் களி திங்க வேண்டியது தான்.. உன்னை உள்ள தள்ளத் தான் நினைத்தேன் ஆனா பிறக்கப்போற உன்னோட குழந்தைக்காக இத்தோட உன்னை விடுறேன்..
இங்கிருந்து கிளம்புறப்ப நானே என்னை வெளிப்படுத்துவேன்.. அதுவரை நான் யாருங்கிற விஷயம் யார் மூலமாவது வெளியே கசிந்தாலோ, உன் பார்வை லைட்டா அபி பக்கம் திரும்பினாலோ, கொஞ்சம் கூட யோசிக்காம உன்னை உள்ளே தள்ளுற வேலையை பார்த்திடுவேன்” என்று மிரட்டினான்.
இயலாமை தந்த கோபத்தில் குற்றாசு கையை ஓங்கி தரையில் இரண்டு முறை அடிக்க, அதற்கு மேல் அடிக்க விடாமல் அவனது கையை அன்னை பற்றிக் கொண்டார்.
அபய்தேவ் கனகப்ரியாவை பார்த்து, “நான் ஊருக்கு கிளம்புறப்ப உங்களையும் கூட்டிட்டு போறேன்.. நம்ம வீட்டில் இருந்தே படிங்க.. அபி தேறியதும் முதல் முகூர்த்ததில் உங்களுக்கும் அபிக்கும் கல்யாணம்” என்றான்.
கனகப்ரியா நம்பிக்கை தந்த தெளிவுடன் மெலிதாக புன்னகைக்க, அபய்தேவ் விரிந்த புன்னகையுடன், “நல்லாவே சிரிக்கலாம்.. இனி உங்களுக்கு மகிழ்ச்சி மட்டும் தான்” என்றான்.
“தேங்க்ஸ்”
“போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. அபியை பார்க்கலாம்” என்றதும் அவள் புத்துணர்ச்சியுடன் துள்ளி குதித்து கொல்லைபுறம் நோக்கி ஓடினாள்.
குற்றாசு அபய்தேவை பார்த்து இளக்காரமாக சிரிக்க முயற்சித்து, வலியில் முகம் சுளித்து அலறினான். அவனது அலறல் வித்யாசமான விலங்கின் சத்தத்தை போல் மெலிதாகத் தான் கேட்டது.
அதைப் பார்த்து அவன் அன்னை பதற,
மெலிதாக சிரித்த அபய்தேவ், அடுத்த நொடியே ரௌத்திரம் மின்னும் விழிகளுடன் குரலை உயர்த்தாமல் ஆனால் அழுத்தமான குரலில், “உன்னால் இனி பேசவே முடியாதுடா” என்றான்.
பின் உதட்டோர அலட்சிய சிரிப்புடன், “வெளி ஆட்களுக்கு பொண்ணு தர ஊர் சம்மதிக்காதுன்னு தானே இந்த இளக்காரம்! அதை சமாளிக்க எனக்குத் தெரியும்.. உன்னை மாதிரி குள்ளநரித்தனம் செய்யாம நேர் வழியிலேயே சமாளிப்பேன்” என்றான்.
குற்றாசு கோபத்துடன் பேச முயற்சிக்க, அது வலியை தந்ததோடு மீண்டும் சிறிது இரத்தம் கக்கினான்.
“அய்யோ ராசா” என்று அழுதபடி அவன் அன்னை பதற,
காமாட்சி, “வள்ளி வைத்தியரை கூட்டிட்டு வா” என்றார்.
குற்றாசின் அன்னை, “ஒன்னு வேணா.. நானே பாத்துகிடுறேன்.. மொத கெளம்புங்க” என்றார்.
காமாட்சி, “சித்தி அப்புடி தா சொல்லுவா.. நீயி போய் கூட்டியா” என்றார்.
ஆனால் அமிர்தவள்ளி அசையாமல் நிற்கவும், அவர், “வள்ளி” என்று அதட்டினார்.
அப்பொழுதும் கிளம்பாமல் அபய்தேவை தான் நோக்கினாள்.
அவன் குற்றாசை பார்த்தபடி, “இவன் எழுந்து அவனோட ரூமுக்கு போனதும், கூப்பிட போ” என்றான்.
‘ஏ வூட்டுலேயே என்னிய நாட்டாம செய்யிறியா?’ என்று கோபமாக கேட்க நினைத்த குற்றாசு மீண்டும் இரத்தம் கக்கினான்.
அவன் அன்னை பதறியவராக, “யய்யா ராசா.. வேணாயா.. ஏதும் பேசாதயா.. நீயி மெல்ல உசும்பினாக்க(எழும்பினாக்க) நாமளே வைத்தியர் வூட்டுக்குப் போய்டலாம்” என்றார் அழுகையுடன்.
அவன் எழும்ப முயற்சிக்க, அவன் அன்னை கைதாங்கலாக பற்றி உதவினார். மெல்ல எழுந்தவன், ‘ஒன்னிய பொறவு கெவனிச்சிகிடுறே’ என்ற முறைப்பு பார்வையை அபய்தேவ் நோக்கி செலுத்திவிட்டு அன்னையுடன் வெளியேறினான்.