மறந்து போ என் மனமே 10 7266 மறந்து போ என் மனமே அத்தியாயம் 10 மேலும் ஒருமாதம் சென்றிருக்க… அன்று வெள்ளிக்கிழமை என வெண்மதி ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலில் மல்லிகையைச் சூடி இருக்க… ஷிபான் சேலை அவளது வளைவு நெளிவுகளை எடுத்துக் காட்ட… இளமாறனின் கட்டுபாட்டை எல்லாம் மீறி மனைவியைப் பார்வையாலேயே விழுங்கினான். கணவனின் பார்வை முகம் சிவக்க செய்தாலும், வெண்மதி அவனை அலட்சியபடுத்தவும் செய்தாள். இளமாறன் மகள்களை அழைத்துக் கொண்டு பள்ளியில் விடச் சென்றான். பிள்ளைகளுக்குக் காலையில் சமைத்திருந்தாலும், கணவனுக்கு மதியம் திரும்பச் சூடாகச் சாதம் வைப்பாள். அன்று மதிய உணவுக்கு வழக்கத்தை விட இளமாறன் சீக்கிரமே வந்துவிட… சாதம் அடுப்பில் இருந்தது. “என்ன சீக்கிரம் வந்துடீங்க? சாப்பிட்டு எங்காவது வெளிய போறீங்களா?” என வெண்மதி கேட்க, “வேலை ஒன்னும் இல்லை. அதுதான் சீக்கிரம் வந்துட்டேன்.” என்றான். வெண்மதி சாதத்தை வடித்து விட்டு, ஹாலுக்கு வந்தவள், “சோறு வடிச்சிட்டேன், இப்பவே சாப்பிடுறீங்களா?” எனக் கேட்க, “இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும்.” என்றவன், “இந்தா இதை உள்ள வை.” என்றபடி அவன் அவளிடம் ஒரு பையைக் கொடுக்க… உள்ளே அவளின் நகைகள் இருந்தது. அடகு வைத்திருந்ததை மீட்டு வந்திருந்தான். வெண்மதி பீரோவைத் திறந்து நகைகளை உள்ளே வைத்துக் கொண்டிருக்க… இளமாறன் அவளைப் பின்னால் இருந்து அனைத்துக் கொண்டான். அவனை உதற சென்றவள், “ப்ளீஸ் வெண்மதி முடியலை டீ…” என்ற கெஞ்சலில் அவள் அப்படியே நிற்க… மனைவியை மெதுவாக நகற்றி பீரோவை பூட்டி சாவியை எடுத்து மேலே வைத்தவன், அவளைக் கட்டிலுக்கு நகர்த்திக் கொண்டு சென்றான். ஆறு மாத தவிப்பு அவன் தேடலில் இருக்க… வெண்மதி அப்படியே நின்றாள். வேண்டாம் நினைக்காதே என அறிவு சொன்னாலும், மனம் அவன் செய்த துரோகத்தை நினைக்க… அதனால் அவள் உடல் விறைக்க… அதை உணர்ந்தவன், அவளை விட்டு விலக நினைக்க… செய்த தவறுக்கு பல விதங்களில் மன்னிப்பை கேட்டுவிட்டான்… இனியும் அவனைத் தவிக்க விடுவதால் என்ன பயன்? வெண்மதி அவனைத் தன் கைகளால் அணைத்துக்கொள்ள… இளமாறனுக்கு நம்ப முடியவில்லை… சந்தோஷத்தில் மனைவியை இன்னும் இறுக அணைத்தவன், அவளோடு காதல் உலகில் சஞ்சரித்தான். நீண்ட நாட்கள் கழித்து ஏற்பட்ட கூடல் என்பதாலோ… தேடல் நீண்டு கொண்டே சென்றது. அதன் பிறகு வந்த நாட்களும், கணவனும் மனைவியும் மிகவும் ஒன்றிப்போனார்கள். வெண்மதியின் மனதில் எறிந்த தீ அணைத்ததா தெரியாது. ஆனால் அவள் அது தன்னை எரிக்காமல் பார்த்துக் கொண்டாள். எத்தனை நாட்கள் அவளும் வாழாமல் அவனையும் வாழ விடாமல் வைத்திருப்பது. முன்பெல்லாம் கணவனும் மனைவியும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்தாலும், உண்டதும் இளமாறன் கிளம்பி விடுவான். அப்படியே அவர்கள் எதாவது பேசினாலும், வசந்தா உடனே வந்து அதில் மூக்கை நுழைப்பார். இப்போது அப்படி இல்லை. மதிய உணவுக்கு வந்தால்… வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு செல்வான். அப்போது இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்வதும் வாடிக்கையானது. முன்பு மாமனார் மாமியாருக்குக் சேர்த்து செய்வதால் அதிகம் வேலை இருந்தது. இப்போது பிள்ளைகள் பள்ளிக்கு சென்று விட்டால்… அடுத்து ஒருமணி நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, மாலை அவர்கள் வரும் வரை ஓய்வாகத்தான் இருப்பாள். அன்று மதிய உணவுக்கு வந்த கணவனிடம், “வீட்ல ரொம்பப் போர் அடிக்குது.” என வெண்மதி இழுக்க… மனைவி என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்குப் புரியாமல் இல்லை. “போர் அடிச்சா உன் மாமியாரை போய்ப் பார்த்து வேணுங்கிறதை செஞ்சிட்டு வா…” என அவன் வாயுக்குள் சிரிப்பை அடக்கியபடி சொல்ல… வெண்மதி கணவனை முறைத்தாள். “பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நல்லா சமைச்சு சாப்பிட்டு நிம்மதியா இருக்காம… எதுக்கு வேலைக்குன்னு அலையணும்னு நினைக்கிற.” “ஒருவேளை வேலைக்குப் போனா… இவனை எல்லாம் அண்டி இருக்க வேண்டாம்னு நினைக்கிறியோ.” என அவன் கேட்க, “நான் நினைக்கிறது இருக்கட்டும். ஒருவேளை பொண்டாட்டி வேலைக்குப் போனா… இவ நம்மை மதிக்க மாட்டான்னு நீங்க நினைக்கிறீங்களோ என்னவோ…” என வெண்மதி அவன் பக்கமே திருப்ப… “நாமதான் நல்லா படிக்கலை, பசங்களையாவது நல்லா படிக்க வைக்கணும். நீ வேலைக்குன்னு வெளிய அலைஞ்சிட்டு வந்தா… பசங்களை எப்படிக் கவனிப்ப… அதுக்குச் சொன்னா உனக்குப் புரிய மாட்டேங்குது.” என்றான். “சரி விடுங்க.” என வெண்மதியும் அந்தப் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள். அவர்கள் சொந்தத்தில் ஒரு திருமணம். முந்தினம் வரவேற்புக்கு இளமாறன் மனைவி மகள்களை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றான். கணவனோடு இப்படி வெளியே செல்ல வேண்டும் என்பது வெண்மதிக்கு மிகவும் ஆசை. அவள் ஆசை நிறைவேறியதில், நன்றாகப் பட்டு சேலை உடுத்தி நகைகள் அணிந்து சென்றாள். மகள்களுக்கும் பட்டுப்பாவாடை சட்டை அணிவித்து, அதற்கு ஏற்ற தலை அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தாள். வண்டியை நிறுத்திவிட்டு நான்கு பேரும் மண்டபத்திற்குள் செல்ல… முதல் வரிசையிலேயே வசந்தா, ரஞ்சிதா மற்றும் மணிமேகலை மூவரும் உட்கார்ந்து இருந்தனர். வெண்மதி அவர்களைக் கவனிக்கவில்லை. அவளிடம் வந்து பேசிய உறவினரோடு பேசியபடி பின்னே இருந்த இருக்கையில் சென்று கணவன் பிள்ளைகளுடன் உட்கார்ந்து கொண்டாள். “பார்த்தியா என்னமா மினுக்கிட்டு வந்திருக்கான்னு…” வசந்தா சொல்ல… “இப்போ தனியா போயாச்சு…. அவ இஷ்டத்துக்கு இருக்கா…..” என்றால் ரஞ்சிதா. “நினைச்சதை சாதிச்சிட்டா இல்ல… இவளை இப்படியே எல்லாம் விடக் கூடாது. எதாவது பண்ணனும்.” என்றால் மணிமேகலை. சேர்ந்து இருக்கும் போது வீட்டுச் செலவு எல்லாம் இளமாறன் பார்த்துக் கொண்டான். அதனால் வசந்தா கணவனின் பென்ஷன் பணத்தை மகள்களுக்குச் செலவு செய்து கொண்டிருந்தார். இப்போது அப்படியில்லை அல்லவா… அதனால் வசந்தா மகள்களுக்குக் கொடுப்பது இல்லை. மணிமேகலைக்கு அந்தக் கோபம்தான். “ஏற்கனவே நீயும் அம்மாவும் பேசினதுதான் இவ்வளவு தூரம் கொண்டு வந்திடுச்சு. திரும்ப எதையும் புதுசா இழுத்து வைக்காத…” என ரஞ்சிதா எச்சரித்தாள். மேடையில் இருந்த மணமக்களிடம் சென்று வாங்கி வந்த பரிசை கொடுத்துவிட்டு இறங்கும் போதுதான் வெண்மதி மாமியார் நாத்தனர்களைக் கவனித்தாள். ஆனால் அவள் கண்டுகொள்ளாமல் இருக்க… இளமாறன் மட்டும் எப்போது வந்தார்கள் எனக் கேட்டுவிட்டு, தாங்கள் சாப்பிட போவதாகச் சொல்லி உடனே வந்துவிட்டான். சாப்பிட்டதும் உடனே அங்கிருந்து கிளம்பியும் விட்டனர். வெண்மதிக்கு வரும் வழியில் நினைக்க நினைக்க ஆத்திரம் தான். அவள் மட்டும் புகுந்த வீட்டினருக்கு பயந்து அடங்கிச் சென்றிருந்தால்… அவள் நிலைமை என்னவாகி இருக்கும். படித்து வேலையில் இருக்கும் பெண்கள் கூட…. புகுந்த வீட்டில் தங்களுக்கு நடக்கும் அராஜகத்தைத் தட்டி கேட்க பயந்து கொண்டு அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் உண்டு. வெண்மதி அவளுக்கு நடந்த அநியாத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் தான்… அவளுக்கு நியாயம் கிடைத்தது. இன்று கணவன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். படிப்போ, பணமோ, வேலையோ மட்டும் பெண்களுக்குத் தைரியத்தைத் தந்து விடுவதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் வீட்டில் இதே போலச் சம்பவங்கள் நடப்பது உண்டு. எதிர்த்துக் கேள்வி கேட்டால்… இருக்கும் வாழ்க்கையை இழக்க வேண்டியது வருமோ என்ற அச்சத்திலேயே நிறையப் பெண்கள் அடங்கிப் போய் விடுவதும் உண்டு. அதே படிக்காத கூலி வேலை செய்யும் பெண்கள் கூட மிகுந்த தைரியத்துடன் இருப்பார்கள். ஒழுங்கா இருக்கிறதுன்னா… உன் கூடக் குடும்பம் நடத்துறேன், இல்லைனா என் வழியைப் பார்த்திட்டு போக எனக்குத் தெரியும். ஆனா நீ செய்யும் அநியாத்தை பொறுத்திட்டு உன்னோட வாழ மாட்டேன் என வெண்மதி தைரியமாகக் கணவனைக் கேட்டாள் தானே… அப்படிக் கேட்கவும் தைரியம் வேண்டும். எல்லோரும் அப்படிக் கேட்டு விட மாட்டார்கள். அந்தத் திருமணதிற்காக வந்த ரஞ்சிதாவும் மணிமேகலையும் வார இறுதி வரை அம்மா வீட்டிலேயே தங்கினர். இளமாறன் எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை அம்மாவுக்கும் சேர்த்து அசைவம் வாங்கிக் கொண்டு சென்றான். அவன் சென்ற போது மணிமேகலை ஹாலில் தான் இருந்தாள். “இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை. பொண்டாட்டியை அடக்கி வைக்கத் துப்பில்லை, அவ பேச்சைக் கேட்டுட்டுத் தனிக் குடித்தனம் போயிட்டு… இப்போ எதோ பாசம் இருக்கிற மாதிரி வார வாரம் கறியையும், மீனையும் தூக்கிட்டு வர… ஏன் இது அம்மாவுக்கே வாங்கிக்கத் தெரியாதா?” என அவள் அடுத்து ஒரு சண்டையைத் தொடங்க…. “திருந்தவே மாட்டியா நீ… இவ இருக்கானு தெரிஞ்சிருந்தா நான் இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேன்.” என்றவன், “இனிமே நான் எதுவும் வாங்கிட்டு வரலை… நீயே அம்மாவை பார்த்துக்கோ.” என்றான் இளமாறன் கோபமாக. “நீ ஒன்னும் சும்மா பார்க்கலை. நாளைக்கு இந்த வீடு உனக்குத்தான். அதுக்காக நீ பார்த்துக்கிற. ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத.” என மணிமேகலை விடாமல் வம்பிழுக்க…மகளின் பேச்சிற்கு வசந்தாவும் ஒத்து ஊதினார். “இவன்தான் எங்களோட இருக்காம போயிட்டானே… இவனுக்கு எதுக்கு வீட்டை கொடுக்கணும்? எங்களுக்குப் பிறகு மூணு பேருக்கும் தான் வீடு.” என வசந்தா சொல்ல… “அப்போ இவளுங்களுக்குப் போட்ட நகை எல்லாம் கணக்குல இல்லையா… இவளுங்க கல்யாணத்துக்கு நானும் சம்பாதிச்சுக் கொடுத்தேன். இவளுங்களுக்கு எவ்வளவு சீர் வரிசை செஞ்சிருப்பேன். அப்போ அதெல்லாம் கணக்கு இல்லை.” “எனக்கு உங்க வீடே வேண்டாம். நான் சம்பாதிச்சு வீடு கட்டிக்க எனக்குத் தெரியும்.” என்றான் இளமாறனும் திமிராகவே…. “நான் பார்க்கிறதே இந்த வீட்டுக்காகன்னு சொன்ன பிறகு, நான் ஏன் பார்க்கணும்? உங்க பொண்ணுங்களையே பார்க்க சொல்லுங்க. நான் இனி இங்க வர மாட்டேன்.” எனச் சொல்லிவிட்டு இளமாறன் சென்று விட… “ஓ… நீ இதுக்குதான் அவன்கிட்ட சண்டை இழுத்திட்டே இருந்தியா? உங்களுக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சாச்சு… அவனுக்குக் கல்யாணம் கூட அவனே தான் பண்ணிகிட்டான். நான் ஒன்னும் செலவு பண்ணலை. இது என் சம்பாத்தியம். நான் என் மகனுக்குத்தான் இந்த வீட்டை கொடுப்பேன்.” என இளமாறனின் தந்தை சொல்ல… “நீ பேசினாலே பிரச்சனை தான். உன்னைப் பேசாதன்னு தானே சொன்னேன்.” என்றால் ரஞ்சிதா மணிமேகலையைப் பார்த்து. “அப்படிச் சொன்னா வீடு வேணும்னு அவன் இங்கேயே வருவான்னு நினைச்சு சொன்னேன்.” என்றால் மணிமேகலை. இளமாறனுக்கு வீட்டிற்குச் சென்ற பிறகும் கொதிப்பு அடங்கவே இல்லை. அப்படி அங்கே என்ன நடந்திருக்கும் என வெண்மதிக்கு தெரியவில்லை. கேட்டால் சொல்லவா போகிறான் என நினைத்து அமைதியாக இருந்தாள். “யாருக்கு வேணும் அந்த வீடு. அதை விட நல்ல வீடு நான் கட்டுறேன்.” என்றவன், மகள்களிடம் “நாம புது வீடு கட்டிட்டு அங்க போகலாம்.” என்றதும், மகள்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. “உங்களுக்கு அப்பா ஆளுக்கொரு ரூம் வர்றது போலப் பெரிய வீடா கட்டித் தரேன்.” எனச் சொல்லிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்த வெண்மதி, “என்ன உங்களுக்கு வீடு இல்லைன்னு சொல்லிட்டாங்களா….” எனக் கேட்க, இளமாறன் நடந்ததைச் சொன்னான். ஆனால் வசந்தாவும் மணிமேகலையும் இவர்களை அங்கே வர வைக்கவே அப்படிப் பேசி இருப்பார்கள் என வெண்மதிக்கு புரியவே செய்தது. திரும்ப இவங்களோடவா…. வீடே வேண்டாம் டா சாமி…. என நினைத்துக் கொண்டாள். இளமாறன் அதற்குப் பிறகு அவன் வீட்டிற்குச் செல்லவே இல்லை. எதோ வந்து போய்க் கொண்டிருந்தான். அதுவும் இப்போது சுத்தமாக இல்லை. இளமாறனின் தந்தை மட்டும் சில நேரங்கள் நடந்தே இவன் கடைக்கு வந்து சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு செல்வார். அப்போது பேத்திகளைப் பார்த்துக் கொள்வார். வெண்மதி அவருக்கு டீ போட்டு அவளே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவாள். கணவர் மகனைப் பார்க்கக் செல்வது வசந்தாவுக்குத் தெரியாது. அவனே வருவான் என நினைத்து முதலில் அலட்சியாமாகவே இருந்தார். ஆனால் இளமாறன் மாத கணக்கில் வராமல் இருக்க… ஒருநாள் இரவு மகனிடம் போன் செய்து அழுது புலம்பினார். அப்போது வெண்மதி அருகில் தான் இருந்தாள். “உன் பொண்ணு அந்த வாய் பேசினா அவளையே பார்க்க சொல்லு.” என்றான். “அவ உன்னை எப்படியாவது இங்க வர வைக்கத்தான் அப்படிப் பேசினா… ஆனா நீ அதைத் தப்பா புரிஞ்சிகிட்ட….” என்றதும் இளமாறன் அமைதியாக இருக்க… எங்கே மீண்டும் அவன் அம்மா வீட்டிற்குச் செல்லலாம் எனச் சொல்லி விடுவானோ என வெண்மதிக்கு அச்சமாக இருந்தது. “அவங்க என்னவோ பேசிட்டு போகட்டும். நீங்க எப்பவும் போலப் பண்றதை பண்ணுங்க. அது நம்ம கடமையும் கூட…” என வெண்மதி சொல்ல… அவர்களுக்குத் தேவையானது வாங்கிக் கடை பையனிடம் கொடுத்து அனுப்ப ஆரம்பித்தான். வசந்தாவும் மணிமேகலையும் எதற்காகச் சொல்லி இருந்தாலும், அவர்களின் வீடு பற்றிய பேச்சு, அவனைப் பாதிக்கவே செய்திருந்தது. தனக்கு என்று சொந்தாமாக வீடு வேண்டும். அதைத் தான் சம்பாதித்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் இளமாறனுக்கு வந்துவிட்டது. அவன் எப்போதோ வாங்கிப் போட்ட இடம் இருக்கிறது. வீடு கட்ட தான் பணம் வேண்டும். அதற்குப் பணம் முயன்று சேர்த்துக் கொண்டிருந்தான்.