Advertisement
பகுதி – 03
யாஸ்மிதன் வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி.
“இந்த பாட்டி என்ன லூசா. வந்து இறங்கும்போதே டுமீல் டுமீல்னு வாய்லயே துப்பாக்கி வெடிக்குது” என நினைத்தார்கள்.
“அம்மா என்ன பண்றீங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரத்துல வாய வச்சிட்டு கம்முனு இருக்க மாட்டீங்களா?” என மூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களது செல்ல பிராணி வளர்ப்பு நாய் யாஸ்மிதன் குடும்பத்தாரை சுற்றி சுற்றி வந்தது. யாஷ்மிதனிடம் நீண்ட நாட்கள் பழகியதை போல அவன் தோள்பட்டை வரை தாவியது. பயங்கரமான குரலில் அவரை சுற்றி சுற்றி வந்தது.
“மூர்த்தி இந்த டுமீல கட்டி போடாம என்ன பண்ணிங்க. மாப்ள வீட்டார் வர நேரம் ஆகுதுனு தெரியும் இல்ல. இப்ப பாரு அவன. அதுக்கு தான் அவன கூப்பிட்டேன். இப்ப பாரு. அவங்கள உள்ள விடாம ஆட்டம் போடுறான்” என வள்ளியம்மா முறைக்க.
“நாய்க்கு பேரு டுமீலாஆஆஆஆ. அடப்பாவிகளா. இது என்ன குடும்பம். பொண்ணு பேரு அருக்காணி. நாய் பேரு டுமீல். அப்ப இவங்க பேரெல்லாம் இன்னும் வித்தியாசமா இருக்குமோ?” என யாஷ்மிதன் யோசிக்க.
என்னப்பா மாப்ள தம்பி. யோசனை பலமா இருக்கு.. நாயோட பேர கேட்டு தான. அது என் செல்ல பேத்தி வச்ச பேரு. அவ எப்பவும் எதுலயும் ரொம்ப வித்தியாசமா இருக்கனும்னு நினைப்பா. நீங்க உள்ள வாங்க என பாட்டியின் குரல் யாஷ்மிதன் காதில் அலாரம் அடிக்க.
‘ஹிக்கும். அவ பேச்சு பேரு எல்லாமே அப்படி தான் இருக்கு. பேர பாரு டுமீலாம். நாளைக்கு இவளுக்கு புள்ள பொறந்தா என்ன பேரு வைப்பாளோ. கடவுளே. நினைக்கவே பயமா இருக்கு.. வௌவால்னு கூட பேரு வச்சாலும் வைப்பா. குரலையும் பேரையும் கேட்டாச்சு. ஆள் எப்படி இருப்பாளோ. பெருமாளே நீ தான் என்ன காப்பாத்தனும்’ என நினைத்து மனதில் வேண்டியபடி வீட்டிற்குள் சென்றான்.
டுமீல் அவர்களுடன் வாலை ஆட்டிக்கொண்டு பின்தொடர்ந்தான்.
வந்தவர்களை சோஃபாவில் அமர வைக்க.. சில நிமிடங்கள் அங்கு மௌனம் நிலவியது..
வானதி முதலில் ஆரம்பித்தார். எங்களுக்கு ஜாதக பொருத்தம் அருமையா இருக்கு. உங்களுக்கும் சரியா இருக்குனு சொன்னிங்க. உங்க பொண்ணையும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அவ தான் எங்க வீட்டு மகாலட்சுமினு நாங்க முடிவே பண்ணிட்டோம். இனி ஆக வேண்டியத நீங்க தான் சொல்லனும்.
‘இந்த அம்மாவுக்கு ஏன் என்மேல இவ்வளவு கொலைவெறி. நான் இன்னும் பொண்ணையே பாக்கல. அதுக்குள்ள எங்க வீட்டு மகாலட்சுமினு வேற பாட்டு பாடுறாங்க. முடிவே பண்ணிட்டாங்களா? நான் இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?’ என மனதிற்குள் நினைத்தான்.
“எங்களுக்கும் சம்மதம்தான். பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருமுறை பார்த்துகிட்டு அவங்களுக்கு பிடிச்சி இருக்குன்னு ஒரு வார்த்தை மட்டும் சொன்னாங்கனா மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்ப்போம்” என வளர்மதியிடம் இருந்து பதில் வந்தது.
‘இவங்களா பேசி இவங்களா முடிவு பண்ணிக்கிறாங்க. நம்மள ஒரு புழுவாக கூட நினைக்க மாட்டாங்களா?’ என யாஷ்மிதன் மனதிற்குள் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது.
“அதுக்கு முன்னாடி பொண்ண பார்த்துடலாமா?” என வளர்மதி கேட்க.
“பாக்கலாமே. அதுக்கு முன்னாடி சில வார்த்தைகள் பேசி முடிவு பண்ணிடலாம்” என்றார் வளர்மதி.
எல்லாமே பேசி தான முடிவு பண்ண போறோம். சொல்லுங்க. என்ன பேசணும்.
“மாப்பிள்ளை பத்தி கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா” என வளர்மதி கேட்டார்.
ஏற்கனவே சொன்னேனே. பையன் பேரு யாஸ்மிதன். தங்கமான பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்ல. எம்.பி.ஏ படிச்சிட்டு நம்ம கம்பெனி சொத்துபத்து எல்லாம் அவன்தான் பாத்துக்குறேன்.
அதெல்லாம் சரிதான். நாங்களும் கேள்விப்பட்டோம். எங்களுக்கு தேவை மாப்ள வெளிநாட்டுக்கு போக கூடாது. இங்கே தான் இருக்கணும். அது ஒரு முக்கியமான கண்டிஷன். எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவள பிரிஞ்சு எங்களால இருக்க முடியாது. பக்கத்தில கொடுத்தா நினைக்கையில ஒரு எட்டி ஓடிவந்து பொண்ண பாத்துடுவோம்னு தான்.
நீங்களே போகச் சொன்னாலும் என் பையன் வெளிநாட்டுக்கு போக மாட்டான். இங்க இருக்கிற சொத்து கம்பெனி எல்லாம் யாரு பாத்துக்குவாங்க. இவருக்கும் வயசாகிட்டே போகுது. நாங்களும் அப்படி எல்லாம் அனுப்புற ஐடியா இல்லைங்க.
“எங்களுக்கு இது போதும். அப்புறம் எங்க பொண்ண பத்தி சொல்லணும். அவ சுதந்திரமா செல்வாக்கா வாழ்ந்த பொண்ணு. கொஞ்சம் பிரைவசி எதிர்பார்ப்பா. நாங்க ஒழுக்கமா தான் வளர்த்திருக்கோம். ஆனாலும் சொல்லனும் இல்ல” என வளர்மதி கூற.
“எங்களுக்கு ஒரே பொண்ணு அவளையும் கல்யாணம் பண்ணி அவ மாமியார் வீட்டுக்கு அனுப்பியாச்சு. உங்க மகள என் மகளாக பார்த்துக்குறேன். நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். எங்க வீட்டுல சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. என்னங்க நான் சொல்றது சரிதானே” என வானதி தன் கணவர் முகத்தைப் பார்க்க.
“நீ சொன்னா சரியாதான் இருக்கும் வானதி” என்றார்.
பொண்ண வேலைக்கெல்லாம் அனுப்பக்கூடாது. அவ கஷ்டப்படக்கூடாதுனு நாங்க நினைக்கிறோம். எங்க மொத்த சொத்தும் அவளுக்கு தான். அவ சந்தோசமா இருக்கணும். அதுதான் எங்களுக்கு வேணும்.
“எங்களுக்கு இருக்கிற சொத்துக்கு பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். நாங்க ஏன் வேலைக்கு அனுப்ப போறோம். மகாராணி மாதிரி உட்கார்ந்து சாப்பிட்டு தூங்கினா போதும். எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. ராணி மாதிரி பார்த்துப்பான் என் பையன்” என சொல்லிக்கொண்டே வானதி தன் மகனை ஓரக்கண்ணால் பார்க்க.
“முதல்ல பொண்ணையே கண்ணுல காட்டுல. அதுக்குள்ள என்ன எல்லாம் பேசுதுங்க. இவங்களை என்னதான் பண்றது”என மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தான்.
அப்புறம் இன்னொரு விஷயம். என் பையனுக்கு நான் சமச்சா தான் பிடிக்கும். எங்க வீட்டில வேலைக்காரங்க இருக்காங்க. ஆனாலும் அவனுக்கு நான் தான் செய்யணும்னு அடம்பிடிப்பான். அவன் ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா அதை சமைச்சி கொடுக்கற அளவுக்கு உங்க பொண்ணு இருந்தா போதும். கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.
சமையலா.. அதெல்லாம் என் பொண்ணு சூப்பரா சமைப்பாங்க. அவ சமைச்சா இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடணும். அவ்வளவு சூப்பரா இருக்கும். ஆனா பாருங்க. இங்க ரொம்ப செல்லமா வளத்துட்டேன். நாங்க வேணும்னா வேலைக்கு ஆள் அனுப்புறோமே.
வேலைக்கு அங்கயே ஆள் இருக்கு. பையன் ஆசைப்பட்டு கேட்டா அப்படினு தானே சொன்னேன்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம் விடுங்க. என் பொண்ணு சூப்பரா செய்வா. நீங்க கவலையே படவேண்டாம். சொன்ன பேச்சை மீற மாட்டா. கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டா. அவ்வளவு தங்கம் என் பொண்ணு” என தன் மகளை பெருமையாக சொல்லிக் கொண்டார் வளர்மதி.
“ரொம்ப ஓவரா வர்ணிக்கிறாங்களே. ஆனா அவ போன்ல பேசுறத பாத்தா எனக்கு அப்படி தோணலையே. அட பொண்ணு கண்ணுல காட்டுங்கப்பா” என்பதைப் போல தனது தாயை பார்த்து முறைத்தான்.
அதை புரிந்து கொண்டவளாய் அப்புறம் நீங்க உங்க பொண்ணுக்கு என்ன சீர் செய்விங்க அப்படி எல்லாம் நாங்க கேட்க மாட்டோம். நாங்க அதெல்லாம் எதிர்பார்க்கல. ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்ந்தா அதுவே எங்களுக்கு போதும்.
“நாங்களும் அப்படி எல்லாம் ஒண்ணும் செய்யாம விடமாட்டோம். எங்கு மொத்த சொத்தும் என் பொண்ணு ஒருத்திக்கு தானே. எங்களுக்கு நல்ல குடும்பம். தங்கமான மருமகன். அதை விட பெரிய சொத்து வேறென்ன இருக்க முடியும். இத தான் நாங்க எதிர்பாக்கறோம்” என்றார் வளர்மதி.
நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம். பொண்ணு வேலைக்கு போகக்கூடாது. வசதி எல்லாம் எதிர்பார்க்கல. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா அடக்கமான பொண்ணு இருந்தா போதும். வேற எதுவும் எங்களுக்கு வேணாம். நாங்க வேற எதுவும் எதிர்பார்க்கவும் இல்ல.
“என் பொண்ணு நூறு சதவீதம் உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இருப்பா. அதுக்கு நாங்க கேரண்டி” என வளர்மதி அடித்து கூறினார்.
“வானதி மட்டும் விட்டுவிடுவாரா. என் பையனும் அப்படித்தான். சொக்கத்தங்கம்” என்றார்.
“இதுக்கு மேல இன்னும் என்ன பேசணும். பொண்ண வரச் சொன்னீங்கன்னா ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டா நாம ஒரு முடிவுக்கு வருவோம்” என சங்கர் தன் பங்கிற்கு கூற.
“மூர்த்தியும் பொண்ண கூட்டிட்டு வாங்க” என்றார்.
“இதற்குள் வள்ளியம்மா வேலைக்காரம்மாவிடம் சொல்லி காஃபி பலகாரம் எல்லாம் ரெடி பண்ணி வைத்தார். ராசாத்தியம்மா இந்த தட்ட எடுத்துட்டு அருக்காணி ரூமுக்கு வா” என கூறிவிட்டு அவளது அறைக்கு சென்றார்.
அருக்காணி உன்ன பார்த்தா மாப்ள அப்படியே மயங்கி போய்டுவார். என் பேத்தி தங்கச்சிலையாட்டம் இருக்கா.
போதும். ரொம்ப ஓவரா புகழாத பாட்டி. குளிருது பாட்டி என்றாள்.
“இந்த காப்பி பலகாரம் எடுத்துட்டு போய் மாப்பிள்ளை வீட்டார் கிட்ட குடு. மாப்பிள்ளைய நல்லா பாத்துக்கோடியம்மா. பையன் சூப்பரா இருக்காண்டி. உனக்கு ஏத்த ஜோடி. பாக்றவங்க கண்ணுக்கு ராமனும் சீதையுமா இருப்பீங்க” என்று கூற.
‘ஏன் இராவணனும் மண்டோதரியுமா இருக்க கூடாதா? மூஞ்ச பாரு’ என மனதுக்குள் நினைத்தாள். “இந்தா பாரு பாட்டி வெளிய வந்து இந்த அருக்காணி கிருக்காணினு பேர் எல்லாம் சொல்லி கூப்பிட்ட. அவ்வளவு தான். உன்னைய அங்கயே கொன்றுவேன். பாத்துக்கோ. நீ வாயை திறக்க கூடாது” என்றாள்.
“சரிடியம்மா. நீ வேணா முதல்ல காப்பிய கொண்டு போய் கொடு. நான் வாயே திறக்கல. பின்னாடி அமைதியா நிக்கறேன்” என்றார்.
“ஆமா யாரக்கேட்டு உங்க இஷ்டத்துக்கு வாக்கு கொடுக்கறீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்ல. நீங்க தான் கஷ்டப்பட போறீங்க பாட்டி. நான் எப்பவும் அவங்க சொன்ன மாதிரி மகாராணியா தான் இருப்பேன்” என தட்டை வாங்கிக் கொண்டாள்.
எல்லாம் உங்க ஆத்தாக்காரி தான் சொன்னா. நீ அவளையே கேட்டுக்கோ.
‘அவங்க போகட்டும். வந்து பேசிக்கிறேன் என்றவள் அடி மேல் அடி எடுத்து வைத்தாள். இதுக்கு தான் இந்த புடவையே கட்டக்கூடாது. நடக்க கூட முடியல. பொண்ணு பார்த்தா புடவை தான் கட்டிக்கணும்னு எவன் கண்டுபுடிச்சான். சுடிதார் எல்லாம் போட்டா மாப்ள வந்து பொண்ணு பாக்க மாட்டாரோ. அவங்க மட்டும் மாப்பிள்ளை பார்க்க வரும் போது வேஷ்டி சட்டையா போட்டுட்டு வராங்க. எல்லா வகையிலும் பொண்ணுங்களை ஏமாத்தி வச்சிருக்கானுங்க’ என நினைத்துக்கொண்டு தன் அறையிலிருந்து மெதுவாக நடந்து வந்தாள்.
“யாஷ்மிதன் அவளின் வருகைக்காக மனதில் திகிலுடன் காத்திருந்த நொடிகள். அவனது இதயம் படபடக்க, கண்கள் சிறகடிக்க, திகிலோடு எப்படி இருப்பாளோ?” என தன் இமைகளை மெல்ல திறந்து அவளை ஏறிட்டேன். அந்த நொடிகள் உண்மையிலேயே அவனுக்கு மயக்கம் தான் வந்தது.
தொடரும்……
Advertisement