Advertisement

மதுர ப்ரியம்!..

24

மதுவிற்கு மனம் வலித்தது.. நான் என்ன அவனை பயப்படுத்துகிறேனா.. பயமா இருக்காம் என்னை பார்த்தால்.. ம்க்கும்.. எனக்குத்தான் இப்போ பயமா இருக்கு.. ட்ரிங்க்ஸ் பண்ணுவாராம்.. ஐயோ! இதெல்லாம் எப்போ.. உண்மையாகவே எனக்கு  தெரியலையே.. அப்போ இன்னும் லீகல் இஸ்ஸுஸ் எதுவும் முடியலையா? பாலாஜி அண்ணாவும் ஏதும் சொல்லலையே.. சாம்!..‘ என அவளின் மனது முதலில் பயம்தான் கொண்டது. 

ஒருபாடு அழுதாள்.. மனதில் குழப்பம் தொடங்கியது.

சற்று நேரத்தில் சாம் சத்தம் வெளியே கேட்டது.. கோதை “மது.. மது” என இவளறையின் வாசலில் நின்று கூப்பிடும் சத்தமும் வெளியே கேட்க, அவசர அவசரமாக முகம் கழுவி வெளியே வந்தாள், மது. 

சாம், அவளை பார்த்ததும்  “ம..ஊ..” என தாவினான் அவளிடம். மதுவிற்கு உடல் சிலிர்த்தது.. குழந்தை தன்னிடம் தாவியதும். அமைதியாக அவனை வாங்கிக் கொண்டாள். எல்லாம் பின்னுக்கு போனது.. யாரும் கொடுக்க முடியாத தைரியத்தை சாம் அவளுக்கு கொடுத்தான்.. இப்போது.

மது ”யாரு டா..” என கேட்டபடியே அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள் இதமாக.. எதோ புதையல் கண்டவள் போல.. அதை யாருக்கும் காட்டாமல் மறைப்பவள் போல.. எதையும் முகத்தில் காட்டாமல்.. தன் படபடப்பை குழந்தைக்கு முத்தம் தந்து.. அவனை நெஞ்சோடு அணைத்து குறைத்துக் கொண்டாள்.

சித்ராவிற்கு ஆச்சர்யம் இப்போது இருவரையும் பார்த்து. அன்னையாக அவருக்கு.. பெண் இப்படியொரு சுமையை ஏற்கிறாளே என கவலைதான். ஆனால், குழ்ந்தை என்னமோ.. பெற்றவள் போல, அவள் வந்த ஒரே நாளில், அவளிடம் தாவுவதும்.. புகார் சொல்லுவதையும் பார்க்க.. ஆச்சர்யம்தான். அந்த குழந்தை எவ்வளவு தேடியிருக்கும் அன்னை என்ற உறவை.. என அன்னையாக யோசித்தார் சித்ரா. ஏதும் கவலைபடாமல்.. அமைதியாக இருவரையும் பார்த்திருந்தார்.. பின் “மது, சாதம் பிசையவா குழந்தைக்கு..” என்றார்.

மது, சாம் மேல் கவனம் வைத்திருந்ததால்.. அன்னையிடம் கவனம் பதியவில்லை.. அவளுக்கு. இப்போது வித்யா, கோதை இருவரும் “மது..” என அழைத்து சித்ரா சொன்னதை சொல்ல.. மது, தன் அன்னையை பார்த்தாள். 

சித்ரா அதட்டலாக “என்ன டி.. அவனுக்கு இப்போ, கொடுப்பியா லேட் ஆகுமா” என்றார். 

மது “சாப்பிடுவான் ம்மா.. நீ கொடு.” என்றாள். அன்னை பெங்களூர் சென்று வந்ததிலிருந்து பேசவேயில்லை.. மதுவிடம். இப்போதுதான் பேசுகிறார். மதுவிற்கு காரணம் தெரியவில்லை.. ஆனால், குழந்தைக்காக பேசுகிறார் இப்போது என புரிந்துக் கொண்டாள்.. ‘நல்லவேலை.. அம்மா, குழந்தையின் மேல் கோவத்தை காட்டவில்லை’ என எண்ணியும் கொண்டாள்.

மதிய நேரம் மது சாம்க்கு உணவு ஊட்டி முடிக்க.. பெரியவர்கள் எல்லோரும், அவளையும் அபர்ணாவையும் உண்பதற்காக அழைத்தனர். சாம் என்னமோ அழுதுக் கொண்டே இருந்தான்.. அவன் தந்தையை தேடுகிறான் போல.. என எல்லோருக்கும் புரிந்தது.

கோதை “மது சாப்பிட்டு ஷிவாவிற்கு வீடியோ கால் செய்துக் கொடு.. சாம் பேசட்டும்..” என்றார்.

மது “மாமா, இப்போவே கூப்பிடுங்க மாமா.. அவன் அழறான்” என தன் மாமனாரிடம் சொல்லிவிட்டாள்.. தன் எண்ணிலிருந்து அழைத்தால்.. எடுப்பானோ மாட்டானோ.. அத்தோடு, கூப்பிடாதே என சொல்லி இருக்கிறான்.. எப்படி அழைப்பது. அதனால் மாமனாரிடம் சொல்லிவிட்டாள்.

கணேசனும் மகனை வீடியோ காலில் அழைத்தார்.. சாம்’மிடம் தந்தையை காட்டினார்.. சாம் இன்னும் அழுதான்.. அந்த போனை அடித்தான்.. “ப்பா.. ப்பா” என தன் பாட்டியை பார்த்து ஏதோ கூறினான்.

கோதை, முன்பெல்லாம் ஷிவாவை மிரட்டுவார்.. பேரனுக்காக, அதனால்.. அவரை பார்த்து அழுத படி எதோ சொல்ல.. பெரியவர்கள் யாருக்கும் தாங்கவில்லை.. கோதை இப்போது ஷிவாவை மிரட்டினார் “எங்க டா.. போன குழந்தையை பார்க்காமல்.. பாவம் டா அவன்.. காலையிலிருந்து சரியில்லை.. மது இருப்பதால் அவளின் பின்னால் சுற்றினான்.. இப்போது முடியலை டா.. அவனால், அழுகறான், நைட் வந்திடு டா..” என்றார்.

ஷிவா ”அம்மா… நைட் எப்படி வர முடியும்.. அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க.. எனக்கு வேலை இருக்கு.. நீங்கதானே எல்லாம் அவசர அவசரமாக செய்தீங்க, இன்னும் ரெண்டுநாள் ஆகும்.. பார்த்துக்கங்க.. பேபி..” என அன்னையிடம் பேசி.. இறுதியாக குழந்தையை சமாதானம் செய்தான்.

சாம், மதுவின் மேல் சாய்ந்துக் கொண்டிருக்க.. கோதை, போனை பேரனுக்கு காட்டிக் கொண்டிருந்தார். ஷிவா ஏதோ பேசியபடியே இருந்தான்.. சாம் அப்படியே கண்ணசந்தான்.

அவன் உறங்கவும்.. கோதை மகனிடம் “டேய்.. மதுவையும் பெங்களூர் கூட்டிட்டு போயிடு டா.. குழந்தை பாவம் டா” என்றார்.

ஷிவா “எனக்கு அடுத்த வாரம் சென்னையில் வேலை இருக்கு.. வந்திடுவேன்.. நான் பார்த்துக்கிறேன் ம்மா..” என்றவன் போனை வைத்துவிட்டான்.

மது தனது அறையில் சாம்’மை உறங்க வைத்தாள். 

வெளியே வந்தாள்.. பெண்கள் இப்போதுதான் உண்டுக் கொண்டிருந்தனர். ஸ்ரீ மகனோடு உறங்கி இருந்தான். அபர்ணாவும் மதுவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்படியே கீழே அமர்ந்து சோபாவில் தலை சாய்த்து அபர்ணா உறங்க.. மது ஒரு குஷென் எடுத்து கொடுத்து.. அவளை படுக்க சொன்னாள்.. தானும் அங்கேயே உறங்கி போனாள்.

வித்யாதான், சாம் உறங்கும் அறையின் கதைவை திறந்து வைத்துக் கொண்டார்.. பிள்ளை விழித்து அழுதால்.. தெரிய வேண்டும் என  அங்கேயே  கொஞ்ச நேரம் உறங்கினார்.

கணேசன், தண்டபானியோடு வேறு அறையில் உறங்கினார்.. பெண்கள் ஹாலில் அப்படியே உறங்கினர். மனதில் எல்லோருக்கும் கேள்விகள் நிறைய உண்டு.. இந்த பிள்ளைகள் என்ன செய்யுமோ என பயம் கவலை இருந்தாலும்.. எல்லோரும் சேர்ந்து இருப்பாதால்.. அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை போல.. எல்லாம் சரியாடும் என நம்பினர்.

மாலையில் எழுந்து.. மது கீழே சென்றாள்.. எல்லோரும் டிபன் வேலையில் இருந்தனர். ஸ்ரீ நின்றிருந்தான் உதவியாக.. இவள் வந்ததை பார்த்து “மது.. “ என்றான்.

மது “அத்தான்.. இங்க என்ன பண்றீங்க.. சமையல் தெரியுமா” என்றாள்.

ஸ்ரீ “அதெல்லாம் விடு, ஷிவா எப்படி இருக்கார்.. நீ எப்படி இருக்க..” என்றான்.

மது தன் விரல்களை பார்த்தவாறே.. “அவருக்கு வேலை அத்தான்.. அவசரமாக நடந்த கல்யாணம்.. உங்களுக்கு தெரியாததா..” என்றாள் சட்டென.. அவளால் ஸ்ரீயிடம் பொய் பேசவோ.. சமாளிக்கவோ முடியவில்லை.

ஸ்ரீ “மது, ஷிவா.. நல்ல டைப்.. நான் பேசினதும்.. இல்லைங்க, பாலாஜிகிட்ட சொல்லிட்டேன் என்றார். சரிவராது வேண்டாங்க வேண்டாங்க.. அவங்க கொஞ்ச நாளில் சரியாகிடுவாங்க  எனதான் பேசினார். பின் நான்தான் உறுதியா இருக்கா.. தரணியும் அப்படி நினைச்சிதான் விட்டான். ஆனால், எதும் மாறலையே அவள். என்னிடம் பேசி நான்கு வருடமாகிறது.. உங்களுக்காகதான்.. என்னிடம் பேசியிருக்கிறாள்..ன்னு சொல்லித்தான் அவரை கொஞ்சம் அமைதியாக்கினான். அவர் கம்பெனிக்கு போயிருந்தேன்.. விசாரித்த வரை.. நல்லவிதமாகத்தான் சொன்னார்கள்.. தனது பழைய தவறை நினைத்து நினைத்து வருந்துவார் போல.. ரொம்ப இறுக்கமாக இருக்கார். நீயும் கொஞ்சம் பொறுமையாக இரு மது.. எல்லாம் சரியாகிடும்.” என்றான் நல்ல விதமாக.

மது “ம்… சரி அத்தான். அவரை அடிக்கடி போய் பாருங்க.. இப்போதிக்கு அவர் வீட்டுக்கு எல்லாம் வரமாட்டார். நீ.. நீங்க பேசுங்க..” என்றாள்.

ஸ்ரீ “சரி மது.. இருக்கட்டும், நான் பார்த்துகிறேன்” என்றான். பின் வேறு எதோ பேசத் தொடங்கினர் இருவரும்.

சாம் கீழே வந்தான், விளையாடிக் கொண்டிருந்தான். அவனிற்கு பழம் ஊட்டினாள் மது. பின் கோதை பால் எடுத்து வந்து கொடுத்தார்.. கீழே குடிக்க வைத்தாள் மது.

இரவு உணவு பாக் செய்ய அமர்ந்தாள் மது. சாம் மேலே செல்லவில்லை.

தரணி வந்தான்.. “வா மது” என்றவன் மேலே சென்றுவிட்டான்.

தரணி உடைமாற்றி.. மது வேலை பார்க்கிறாளே என கீழே வந்தான்.. சாம்.. பால்(ball) விளையாடிக் கொண்டிருந்தான்.

மது “என்ன சீக்கிரம் வந்துட்ட” என்றாள். 

Advertisement