Advertisement
சென்னை:
தங்கள் அறையை ஒட்டி இருந்த உப்பரிகையில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த மித்ராணி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவன் புகழ்வேந்தன் புறம் திரும்பி புருவம் உயர்த்தவும்,
புகழ்வேந்தன், “வயசானாலும் உன்னோட அழகு அப்படியே இருக்குது… லவ் யூ டி அல்லிராணி” என்று கண்சிமிட்டளுடன் கூறி இதழ் குவித்து முத்தத்தைப் பறக்க விட,
மித்ராணி வெட்கத்தை மறைத்தபடி, “நான் சொல்ல வேண்டிய டயலாக் இது… எப்போதும் என்னை வசியம் செய்யும் வசீகரன் நீ தான்”
“யாரு யாரை வசியம் செய்றானு பார்த்துருவோமா?” என்று விஷம புன்னகையுடன் வினவ,
மித்ராணி, “போதும்… போதும்… கல்யாண வயசில் பையனையும் பொண்ணையும் வச்சுகிட்டு…”
“நம்ம பேரன் பேத்திக்கே கல்யாண வயசு வந்த பிறகும் நான் இப்படி தான் இருப்பேன்” என்று கூறி கண்சிமிட்ட, அதை மனதினுள் ரசித்தாலும் மித்ராணி வெளியே முறைத்தார்.
வாய்விட்டு சிரித்த புகழ்வேந்தன், “உன்னோட முறைப்பில் காரமே இல்லை அல்லிராணி” என்றார்.
மித்ராணி கண்ணில் குறும்புடன், “காரம் தானே! கஞ்சியில் அதிகமா போட்டு தரேன்” என்று கூற, இருவர் முகத்திலும் ரசனையான காதல் புன்னகை அரும்பியது. அவர்களின் கடந்த காலம் கொடுத்த ரகசிய புன்னகை அது.
ஆம் புகழ்வேந்தன் மித்ராணி மீதான காதலை உணராமல் குடும்ப பகையை தீர்த்துக்கொள்ள மித்ராணியை கட்டாய கல்யாணம் செய்து, பின் தன் காதலை உணர்ந்து மித்ராணி கொடுத்த தண்டனைகளை ஏற்று, போராடி தன் காதலை புரிய வைத்து மித்ராணியையும் தன்னை காதலிக்க வைத்தார். ஆடை தொழிற்சாலை, நூற்பாலை, கட்டுமானத் தொழில், மென்பொருள் நிறுவனம், எஃகு தொழிற்சாலை(steel industry), தானுந்து தொழிற்சாலை(automobile industry), உல்லாச விடுதி(resort) என்று இன்னும் நிறைய தொழில்களை ‘வேந்தன் குரூப் ஆஃப் கம்பனீஸ்’ என்ற பெயரில் நடத்தி தொழில் சாம்ராஜியத்தின் முதல் இடத்தில் இருப்பவர் புகழ்வேந்தன். மதிவர்மன் வந்த பிறகு தொழில் மேலும் விரிவடைந்துள்ளது. (புகழ்வேந்தன் மித்ராணி கதையை அறியாதவர்கள் எனது ‘ஏன்டி உன்னை பிடிக்குது!!’ கதையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.)
புகழ்வேந்தன் மித்ராணி தம்பதியர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் மதிவர்மன், இளையவள் ஆதிரா மருத்துவம் இளங்கலை(MBBS) இறுதி ஆண்டில்(இன்டர்ன்ஷிப்-internship) இருக்கிறாள். புகழ்வேந்தன் மித்ராணி இருவருமே சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். புகழ்வேந்தனின் வற்புறுத்தலில் மித்ராணியின் அன்னை கமலாவும் இவர்களுடன் தான் இருக்கிறார். புகழ்வேந்தன் அன்னை கலைவாணியும் கமலாவும் சகோதரிகள் போலவே பழகுவர்.