Advertisement
சஞ்சய் விழி விரித்து நண்பனைப் பார்க்க, மதிவர்மன், “XXXXXXX அபிசாரா வண்டி நம்பர்… அவளைப் பற்றிய முழு விவரமும் எனக்கு வேணும்” என்றான்.
“டேய்!!! என்னடா? பார்த்ததும் காதலா?”
மறுப்பாக தலை அசைத்தவன், “இது எங்களோட நாலாவது சந்திப்பு…. மோதலில் ஆரம்பித்து காதலில் கொண்டு வந்து விட்டிருக்குது” என்றான் கனவில் சஞ்சரித்தபடியே.
“வர்மா… இவ்ளோ வேகம் வேணாம் டா… அவ மனசில் என்ன இருக்குதுனு தெரியாம…” என்றவனின் பேச்சை இடையிட்ட மதிவர்மன், “முதல் ரெண்டு சந்திப்பிலும் என் மேல் அவளுக்கு கோபம் தான் என்றாலும், இன்னைக்கு அவ கண்ணிலும் அதே உணர்வை நான் பார்த்தேன் டா…” என்றான்.
நண்பனின் காதல் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு தனக்குத் தெரிந்த துப்பறிவாளரை அழைத்த சஞ்சய் அபிசாராவின் பெயரையும் வண்டி எண்ணையும் கூறி அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து தரக் கூறினான்.
பின் நண்பனை வம்பிழுக்கும் நோக்கத்துடன், “என்ன பண்ணி மிரட்டின டா! அந்த பொண்ணு இப்படி பயந்து போய் இருக்குது” என்று கேட்டான்.
“யாரு! அவ பயந்தவளா!”
“நீ காட்டிய போட்டோவில் அப்படி தான் தெரியுது”
“அதுவா!!!!” என்றவனின் உதடுகள் ரசனையுடன் கூடிய ரகசிய புன்னகையை உதிர்க்க, அவனது கைகளோ அவனையும் அறியாமல் கன்னத்தை வருடியது.
நண்பனை விசித்திரமாக பார்த்த சஞ்சய், “ரைட்டு முத்திப் போச்சு” என்றான்.
மதிவர்மன் புன்னகையுடன், “இதெல்லாம் சொன்னா புரியாது டா… அனுபவிக்கனும்” என்று ரசித்துக் கூறினான்.
“உன்னை கிட்ட வச்சிக்கிட்டு எங்கிருந்து நான் அனுபவிக்க! எல்லா பொண்ணுங்களும் உன்னைத் தான் பார்க்கிறாங்க” என்றான்.
வாய்விட்டு சிரித்த மதிவர்மன், “வா டா” என்றபடி அவனை அழைத்துச் சென்றான்.
இத்துடன் நிகழ் காலத்திற்கு திரும்பியவனின் மனம் மீண்டும் அதே கேள்வியை தான் கேட்டது. ‘எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க வேண்டியது! ஏன்டி அப்படி பேசின? என்னை எப்படிடி உன்னால தூக்கி போட்டுட்டு போக முடிஞ்சுது? உன் மேல அதிகமா கோபம் இருக்கிறப்ப கூட என்னால நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியலையே! ஆனா நீ!!!!!!!!’ என்று வாய்விட்டு கேட்டவனின் மனம் வலியில் கதறிய அளவிற்கு சரிசமமாக கோபத்திலும் தகித்தது.
அபிசாராவோ, ‘நான் செய்தது தப்பு தான்… அன்னைக்கு இருந்த மனநிலையில் என்ன செய்றேன்னு தெரியாம அப்படி பண்ணிட்டேன்… நீ இல்லாம எனக்கு வாழ்வே இல்லை மதி… ப்ளீஸ் என்னை வெறுத்துறாதடா’ என்று நிலவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் சஞ்சய், ‘என்னை மன்னிப்பியா ஆரு? உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்… அம் வெரி சாரி ஆரு… என்னை மன்னிக்கலைனாலும் வெறுத்துறாதடி ப்ளீஸ்’ என்று தன்னவளிடம் மானசீகமாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.
ஆதிராவோ, ‘என்னோட காதலை கொச்சை படுத்தி, என் கேரக்டரையே தப்பா பேசிட்டியே டா! உன் பின்னாடியே வந்ததால என்னோட அருமை உனக்கு தெரியலை டா… இனி நானா உன் கிட்ட வர மாட்டேன்’ என்று கூறிக் கொண்டவள் மீண்டும் தனது காதலுக்காக தானே இறங்கி போகப் போவதைப் பற்றி அறியவில்லை.
யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாள் அழகாக விடிந்தது. ஆனந்தன் அமுதாவின் சதாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. புகழ்வேந்தன் குடும்பத்தில் மதிவர்மனைத் தவிர அனைவரும் வந்திருந்தனர்.
புகழ்வேந்தன் ப்ரனேஷ் கையைப் பற்றி, “வர்மாக்கு ஒரு முக்கியமான மீட்டிங்… அதான் அவனால் வர முடியலை… சாரி” என்று கூற,
ப்ரனேஷ், “நேத்தே வர்மா சொன்னான்”
“வர்மா பேசினானா?”
“ஹ்ம்ம்… சாரி கேட்டான்… உன்னை மாதிரி ஒருமையில் தான் பேசணும்னு பாசத்தால் மிரட்டினான்” என்றார் புன்னகையுடன். புகழ்வேந்தனும் புன்னகைத்தார்.