Advertisement
ஆதிரா அறையினுள் அவள் முன் நின்றிருந்த மதிவர்மன், “உனக்கும் சஞ்சய்க்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“அவனைப் பற்றி என் கிட்ட பேசாத” என்றாள் கோபக் குரலில்.
“என்னாச்சு?”
“இதை கேட்கத் தான் வந்தியா?”
“ஹ்ம்ம்”
“நான் அவனைப் பற்றி பேச விரும்பலை… வேற எதுவும் இருந்தா பேசு இல்லை கிளம்பு” என்றாள் கறார் குரலில்.
அவள் அருகில் அமர்ந்தவன், “இன்னைக்கு பங்சன் எப்படி போச்சு?” என்று பேச்சை மாற்றினான்.
“நல்லா போச்சு, பட் அனு இல்லாம எனக்குத் தான் போர் அடிச்சுது… அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்”
“உன் பிரெண்ட் ஏன் வரலை?”
“நாளைக்கு வீட்டில் பங்சன் வச்சிட்டு எப்படி வருவா?” என்றவள், “எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.
“என்ன?”
“உண்மையைச் சொல்லணும்”
“நான் எப்போ பொய் சொல்லி இருக்கிறேன்?”
“நீ பொய் சொன்னதா நான் சொல்லலையே!”
“நீ சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம்?”
“பொய்யும் இல்லாம உண்மையும் இல்லாம ஒரு பதிலைச் சொல்லக் கூடாதுனு உண்மையைச் சொல்லுனு முதல்லேயே சொல்றேன்”
அவன் உதட்டோர மென்னகையுடன், “என்ன தெரிஞ்சுக்கணும்?”
“அனு மேல் உனக்கு இருக்கும் கோபம் அவ உன்னிடம் ப்ரொபோஸ் பண்ணதுக்காக இல்லை தானே?”
“ஏன் இந்த சந்தேகம்?”
அவள் முறைப்புடன், “கேள்வி கேட்காம உண்மையான பதிலைச் சொல்லு” என்றாள்.
“ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம, நான் சொன்னதையும் புரிஞ்சுக்காம திரும்பத் திரும்ப ப்ரொபோஸ் பண்ணதால் தான் அவ மேல எனக்கு கோபம்…”
“அதுக்காக இவ்ளோ கோபமா? அதுவும் பார்க்கிற நேரம் எல்லாம் எப்படி முறைக்கிற!”
“என் கோபம் தான் அவளை விலக்கி வைக்கும்னு கொஞ்சம் அதிகமான கோபத்தைக் காட்டினேன்… அண்ட் அவளைப் பார்க்கும் போது நான் மறக்க நினைக்கிற விஷயம் நினைவிற்கு வரதாலும் அவளை அவாயிட் பண்ணேன்”
“நீ மறக்க நினைத்த விஷயம் அபி அண்ணியா?”
உணர்ச்சியற்ற முகத்துடன், “என் உயிரில் கலந்தவளின் நினைவு என் உயிர் போனாலும் என் ஆன்மாவில் கலந்து இருக்கும்” என்றான்.
தமையனின் காதலின் ஆழத்தைக் கண்டு பிரம்மித்தவள், “அப்பறம் ஏன் இந்த பிரிவு?” என்று கேட்டாள்.
அவன் தோள்களைக் குலுக்கவும், அவனைப் பற்றி அறிந்தவளாக அதைப் பற்றி மேலும் கேட்காமல், “அண்ணி உன்னை விட்டு பிரிஞ்சதுக்காக அனு மேல் உனக்கு கோபம் இல்லையா?” என்று கேட்டாள்.
“சாரா என்னை விட்டு போனதுக்கு, அனன்யா மேல் ஏன் நான் கோபப் படனும்?” என்று அவன் நிதானமாக வினவ,
“அப்போ உங்க பிரிவுக்கு அனு காரணம் இல்லையா?” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“பிரியனும் நினைத்து விலகியது சாரா தான், ஆனா நான் நினைத்து இருந்தால் அவளை என்னை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன்… இது நானா ஏற்படுத்திக்கிட்ட பிரிவு… ஸோ உன் பிரெண்டை குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கச் சொல்லு”
“நீ என்னைக் குழப்புற”
“என்ன நடந்துதுன்னு உன் பிரெண்ட் கிட்ட கேளு”
“ஏன் அதை நீயே சொல்றது தானே!”
“என்ன நடந்துதுனு எனக்குத் தெரியாது, ஆனா எங்க பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது உன் பிரெண்ட் தான்னு நான் யூகித்தேன்…”
“ஸோ… நான் என்ன நடந்ததுன்னு கேட்டு, உன் கிட்ட சொல்லணுமா?”
“ஏன் எனக்கு வாய் இல்லையா?”
அவள் அவனை முறைக்க, அவனோ அலட்டிக் கொல்லாமல், “உனக்கு தெரிஞ்சுக்கணும்னு நினைத்தால் உன் பிரெண்ட் கிட்ட கேட்டு தெரிஞ்சுகோ… பட் எனக்கு அது தேவை இல்லை… அண்ட் எனக்கு எது வேணும் வேண்டாம்னு தீர்மானிப்பது நானாக மட்டுமே இருப்பேன், ஸோ அதைத் தெரிந்து ஆகப் போறது எதுவும் இல்லை…”
“அபி அண்ணி ரொம்ப பீல் பண்றாங்க”
“இதை விடு… உனக்கும் சஞ்சய்க்கும் என்ன பிரச்சனை?”
“அவனைப் பற்றி பேசாதேனு சொன்னேன்” என்று சற்று கோபமாகவே கூறியவள், “உனக்கு தெரிஞ்சுக்கணும்னு நினைத்தால் உன் பிரெண்ட் கிட்ட கேட்டு தெரிஞ்சுகோ” என்று அவன் கூறியதையே கூறினாள்.
அவன் உதட்டோர மென்னகையுடன், “நான் சஞ்சய் கிட்ட கேட்டுக்கிறேன்” என்றான்.
தோள்களைக் குலுக்கியவள், “எதிர்விசை தான் ஈர்க்கும்னு சொல்றது போல், ரொம்ப சாப்ட்டான அபி அண்ணியை உனக்கு பிடிச்சிருச்சோ?” என்று கேட்டதும் அவன் வாய்விட்டு சிரித்தான்.
“இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிற?”
“நீ சொன்ன ஜோக்கைக் கேட்டதும் சிரிப்பு வந்திருச்சு”
அவள் முறைக்கவும், அவன் மென்னகையுடன், “உன் அண்ணி பத்தி உன் பிரெண்ட் கிட்ட கேளு… இப்போ நான் இடத்தை காலி பண்றேன்” என்றபடி அவன் எழ,
“ரொம்ப தான்… போடா” என்று உதட்டை சுழித்தாள்.
மதிவர்மன் சென்றதும் மீண்டும் சஞ்சயின் நினைவுகள் அவளை ஆக்கிரமிக்க, தலையை உலுக்கிக் கொண்டு அனன்யாவை கைபேசியில் அழைத்தாள். ஆனால் அனன்யா அந்த அழைப்பை எடுக்கவில்லை. எங்கே அன்னைத் தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற கவலையிலும் குற்ற உணர்ச்சியிலும் தத்தளித்துக் கொண்டிருந்த அனன்யா கைபேசியை ‘சைலென்ட் மோட்’-ல் போட்டிருந்தாள்.