அன்று இரவு யாதவ் உறங்கியதும், அவனை சுவற்றின் ஓரம் படுக்க வைத்த அத்வைத் செந்தமிழியை நெருங்கினான்.
அவன் யாதவை தூக்கவுமே, அவள் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
அவன் அவள் இடையில் கைபோட்டு அவளை உரசியபடி படுக்க, அவளோ அமைதியாகப் படுத்து இருந்தாள்.
“இதழிமா” என்று அவன் மென்மையாக அழைக்க, அவள் கண்டுகொள்ளவே இல்லை.
“உன் அத்து பாவம் தானே.. பேசுடா” என்று கொஞ்சியபடி கெஞ்சினான்.
அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
“எனக்கு இதழி மாதிரியே ஒரு குட்டி தேவதை வேணும்டா.. ப்ளீஸ்டா..” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பட்டென்று அவனை நோக்கி திரும்பியவள் சற்று கோபக் குரலில் முறைப்புடன், “அதுக்காக எல்லார் கிட்டயும் போய் சொல்லுவீங்களா?” என்றாள்.
அவன் அவளை தன்னுடன் இறுக்கியபடி நெற்றியில் முத்தமிட,
அவனது நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளியவள், “நீங்க ஒன்னும் என்னை கொஞ்ச வேணாம்” என்றாள்.
“நான் கொஞ்சாம வேற யாரு கொஞ்சுவாங்க!” என்றபடி மீண்டும் அவளது இடையை வளைத்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“என் பையன் என்னை கொஞ்சுவான்” என்றபடி அவள் திமிற,
அவனோ உல்லாசமான குரலில், “என் பொண்ணை விட்டுட்ட! அவளும் உன்னை கொஞ்சுவா” என்றபடி அவளது தொண்டைகுழியில் இதழ் பதித்தான்.
அவனிடம் கிறங்கும் மனதையும் உடலையும் அடக்கியபடி, “ஏன் அத்தான் இப்படி செய்றீங்க?” என்றாள் சற்று இறங்கிய குரலில்.
தனது இதழ் தீண்டலை நிறுத்தியவன் அவளது முகம் நோக்கியபடி, “இதழிமா நானும் யதுவும் எவ்ளோ ஆசைப்படுறோம்!” என்றான்.
“அதுக்காக! எல்லோரிடமும் சொல்லுவீங்களா? அவங்க எல்லோரும் நம்ம குடும்பம் தான் என்றாலும் நம்ம விஷயம் நமக்குள் தான் இருக்கனும்” என்றாள்.
“சாரிடா.. அது நான் வேணும்னு சொல்லலை..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“வேணும்னு தான் சொன்னீங்க.. உங்களுக்கு பொண்ணு வேணும்னு தான் சொன்னீங்க” என்றாள்.
லேசாகச் சிரித்தவன், “பொண்ணு வேணும்னு தான் சொன்னேன் ஆனா நிஜமாவே சொல்லனும்னு உள்நோக்கத்துடன் சொல்லலை.. அந்த நேரம் என் பயம் அப்படி வெளிபட்டிருச்சு.. சாரிடா” என்றான்.
அவன் விரிந்த புன்னகையுடன், “நீ என்னோட சக்கரைக்கட்டி” என்றபடி இதழில் இதழ் பதித்தான்.
நீண்ட முத்தத்திற்கு பிறகு அவன் விலக, அவள், “ஹ்ம்ம்.. ட்ராக் மாத்தாதீங்க!” என்றாள்.
“யாரு! நானா மாத்துறேன்!”
“பின்ன! பேச்சு பேச்சா இருக்கனும்”
“நீ வாயில் பேசினதுக்கு நானும் வாயால் தானே பதில் பேசினேன்!” என்று சரசமாக அவன் கூற,
அவள் செல்ல முறைப்புடன், “அப்போ நானும் வாயால் பேசுறேன்னு கடிச்சு வச்சிருவேன்.” என்றாள்.
அவன் அவளது காதில் ஏதோ அந்தரங்கமாகக் கூறி உல்லாசமாகச் சிரிக்க,
அவள், “ஏய்!” என்ற படி அவனது புஜத்தில் நன்றாக அடித்து, “நான் தூங்கப் போறேன்.” என்று கூறி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவன் சத்தமாகச் சிரிக்க, சட்டென்று திரும்பியவள் அவனது வாயை மூடிய படி, மகனை எட்டிப் பார்த்தாள்.
விடி விளக்கின் ஒளியில் மகனின் சீரான உறக்கம் நன்றாகத் தெரிய, நிம்மதியுடன் கணவன் பக்கம் பார்வையை திருப்பியவள் முறைத்தபடி கையை அவனது வாயில் இருந்து எடுத்தாள்.
அவளை மென்மையாக அணைத்த படி, “இன்னைக்கே இதைப் பேசி முடிச்சிடுவோம்.. நிஜமாவே எனக்கு பயம் தான்டா. இந்த ஆச்சி அப்படி பேசியதும், எங்கே குழந்தை வேணவே வேணாம்னு சொல்லிடுவியோனு பயந்துட்டேன்.” என்றவனின் குரலில், இப்பொழுதும் சிறு பயமும் வருத்தமும் இருக்க,
“அந்தக் கிழவி சொல்றதை என்னைக்கு நான் பொருட்படுத்தி இருக்கிறேன்!” என்றாள்.
“அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்ற?”
“உங்களுக்குத் தெரியாதா! யது மட்டும் போதும்னு நினைத்து தானே சொல்றேன்.”
“அது தான் ஏன்? யார் அவன் மனசை கலைத்தாலும், நீ சொல்றது தானே அவனுக்கு வேத வாக்கு!”
“ஹ்ம்ம்” என்று அவள் அரை மனதுடன் கூற,
அவளது அடிவயிற்றை மென்மையாக வருடிய படி, “நம்ம குழந்தையை சுமக்கும் ஆசை உனக்கு இல்லையாடா?” என்று காதலும் சிறு ஏக்கமுமாகக் கேட்டான்.
அவனது நெஞ்சில் தலை சாய்த்து கண்களை மூடியபடி அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள். அவளது இறுகிய அணைப்பே அவளுக்கும் அந்த ஆசை இருக்கிறது என்று எடுத்துக் கூறியது.
கையை பின்னால் கொண்டு சென்று விடிவிளக்கை அணைத்தவன், தன்னவளை அணைத்தபடி, “குட்டி இதழி பெத்துக்கலாமாடா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“ஹ்ம்ம்”
“அப்போ அதுக்கான முயற்சியில் இறங்குவோமா?” என்று கிறக்கத்துடன் கேட்டவனின் கரங்கள், அதற்கான வேலையில் இறங்கி இருக்க,
கண்களை மூடிய நிலையிலேயே மென்னகையுடன், “கேடி அத்து.” என்றாள்.
அவளது கழுத்து வளைவில் உதட்டை உரசிய படி, “கேடி இதழிக்கு ஏற்ற கேடி அத்து” என்றவனின் இதழ்கள் கீழ் இறங்க, அவனது சிகைக்குள் கை விட்டு, அவனது முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டாள்.
மென்னகையுடன் முத்த யுத்தத்தை தொடங்கிய அவனின் கரங்கள் அவளது மேனியில் வீணை மீட்ட, அங்கே அழகிய தாம்பத்தியம் அரங்கேறியது.
கூடலின் முடிவில் நிறைவான புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ இதழி” என்று அவன் கூற,
அவளும் நிறைவான புன்னகையுடன், “லவ் யூ ஸோ மச் அத்து” என்று கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டு அவன் தோள் சாய்ந்தாள்.
அடுத்த நாள், காலை உணவின் போது செந்தமிழினி, “என்ன காளிங்கா உன் ஃப்ரெண்ட் சத்தத்தையே காணும்?” என்றாள்.
அவளை முறைத்த துருவ், “காலையிலேயே என் வாயை கிளராத” என்றான்.
“என்ன இருந்தாலும் உன்னோட திக்கெஸ்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்று அவள் ஏற்ற இறக்கத்துடன் கிண்டலாகக் கூற, அவளை கொலைவெறியுடன் பார்த்தான்.
உடனே யாதவ் எப்பொழுதும் போல், “சித்தா அம்மா முறைக்காத” என்றான்.
“சித்தா ஐஸ்-கிரீம்னு வரும் போது உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று துருவ் கூற,
யாதவ், “அம்மா வாங்கி தர்(ரு)வா” என்று கூறி செந்தமிழினி செய்வது போல் அழகு காட்டினான்.
துருவின் தோளில் தட்டிய சரோஜினி, “வம்பு செய்யாம சாப்பிடுடா” என்று கூற,
அவன், “ஓ மை கடவுளே! வீடே தமிழ் ஆர்மியா மாறி இருக்குதே!” என்று கூற, அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
செந்தமிழினி சரோஜினியைப் பார்த்து, “துருவ் ஃப்ரெண்ட் சாப்பிட்டாங்களா தேனுமா?” என்று வினவ,
அவர், “அவங்க அறையிலேயே சாப்பிட்டு விட்டாங்கடா.. நேத்துல இருந்து எதுவுமே பேசலை..” என்று கவலையுடன் கூறினார்.
துருவ், “இப்போ தான் வீடு வீடா இருக்குது.. என்ஜாய்மா” என்று கூற,
“சும்மா இருடா” என்றவர், “அத்வைத்” என்று அழைக்க,
அவன், “சிலரோட குணத்தை மாத்தவே முடியாதுமா.. ரெண்டு நாள் அமைதியா இருந்துட்டு திரும்ப ஆரம்பிப்பாங்க.. உங்க மகன் நிம்மதியான வாழ்க்கை வாழனும்னு நினைத்தால், அவங்களுக்காக என் கிட்ட பேசாதீங்க” என்று முடித்துக் கொண்டு, எழுந்து சென்று கை கழுவினான்.
சரோஜினி பரிதாபமாக செந்தமிழினியைப் பார்க்க, அவள் ‘நான் பேசுறேன்’ என்பது போல் கண்களை மூடித் திறந்து உணர்த்தினாள்.
ஆறுமுகத்திற்கு வருத்தமாக இருந்தாலும் மகனுக்காக அமைதி காத்தார்.
யாதவைப் பள்ளியில் விட்டுவிட்டு மகிழுந்தில் அலுவகத்திற்கு சென்றுக் கொண்டு இருந்த பொழுது செந்தமிழினி, “அத்து” என்று அழைக்க,
அவளது குரலில் இருந்தே அவள் எதைப் பற்றி பேசப் போகிறாள் என்பதை உணர்ந்தவன், “நமக்கான நேரத்தில் அவங்களைப் பற்றிப் பேசாத.” என்று கூறினான்.
“நீ அப்பாக்காக சொல்றனு எனக்குப் புரியுது.. இத்தனை வருஷம் அப்பாக்காக பார்த்து நானும் அம்மாவும் கஷ்டப்பட்டது போதும்.. அத்தை அப்போவே சொன்னாங்க.. சிலரோட குணத்தை மாத்தவே முடியாது, நாம தான் தள்ளி இருக்கணும்னு சொன்னாங்க.. அது நூறு சதவிதம் உண்மைனு இப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன்”
“யது கண்ணாக்கு என் பேச்சு தான் வேத வாக்குனு நேத்து நீங்க தானே சொன்னீங்க! சமாளிக்கலாம், அத்தான்”
“உனக்கு புரியலை தமிழ்.. இது யதுவோட நிற்காது.. இன்னும் ரெண்டு இல்ல மூனு வருஷத்தில் துருவுக்கு கல்யாணம் ஆகும்.. புதுசா வர பொண்ணு உன்னை மாதிரி இருந்துட்டா சரி.. இல்லைனா இவங்க குடும்பத்தையே சிதைச்சிடுவாங்க”
அவன் கூறுவது உண்மை என்பதால் அவள் அமைதியாக இருக்க, “நான் பார்த்துக்கிறேன்.. நீ விடுடா” என்றான்.
“கடைசியா ஒரு மாசம் பொறுத்துப் பார்க்கலாமே!”
“இத்தனை வருஷம் திருந்தாதவங்க, நீ சொல்ற இந்த ஒரு மாசத்தில் திருந்திடுவாங்களா?”
“இப்போ இருக்கிற சூழ்நிலை வேற”
“என்ன வேற?”
“நம்ம வீட்டில் யாரோட ஆதரவும் அவங்களுக்கு இல்லை.. நேகா அம்மா கிட்ட எப்படியும் விஷயத்தை சொல்லி இருப்பாங்க.. ஆனா அவங்க நம்மகிட்ட உங்க ஆச்சிக்கு ஆதரவா பேசலை.. எங்கே ஏதாவது பேசினா, நீங்க ஆச்சியை அவங்களோட அனுப்பிடுவீங்களோனு பயந்து அமைதியா இருக்கலாம்..
ஸோ, இப்போ உங்க ஆச்சி யாரும் இல்லாம தனி மரமா இருக்காங்க.. இந்த நிலையில் அவங்களை முகம் சுளிக்காம தேனுமா தான் கவனிச்சுக்கிறாங்க.. இதையெல்லாம் உணர்ந்து அவங்க திருந்த வாய்ப்பு இருக்குது..”
“நீ அப்படியே அத்தையோட பிரதிபலிப்பு” என்றவன், “சரி பார்ப்போம்.. ஆனா ஒரு மாசம் எல்லாம் முடியாது.. பத்து நாள் தான்” என்றான்.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் அமைதியாகவே சென்றது.
அதற்கு அடுத்த நாள், புது பிரச்சனை கிளம்பியது. அன்று அத்வைத் துருவ் இருவருக்கும் வேலை சற்று தாமதமாக முடியவும், செந்தமிழினி முதலில் வீடு திரும்பினாள். ஆட்டோவில் கிளம்ப இருந்தவளை கண்ணன் தனது இரு சக்கர வண்டியில் அழைத்து வந்து விட்டான்.
அவனோ, “இல்லை மச்சி.. இன்னொரு நாள் வரேன்” என்று கூறி கிளம்பினான்.
அவள் வீட்டின் அழைப்பு மணியை அடித்ததும் கதவை திறந்த சரோஜினியின் முகம் கலக்கமாக இருந்தது. வாசலில் வைத்து எதுவும் கேட்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக உள்ளே நுழைந்தவள் கண்டது, பழைய மங்களத்தை.
ஆம் கடந்த நான்கு நாட்களாக அமைதியாக இருந்த மங்களத்தின் முகத்தில் தற்போது பழைய தெனாவெட்டும் இகழ்ச்சிப் பார்வையும் குடியேறி இருந்தது.
அதைக் கண்டதும் அவள் மனதில் தோன்றியது, ‘அத்து சொன்னது தான் சரி.. இது திருந்தாத கேஸ்’ என்றது தான்.
மங்களம் முன் எதுவும் கேட்க விரும்பாமல், “ட்ரெஸ் மாத்திட்டு வரேன் தேனுமா” என்றபடி தனது அறைக்குச் சென்றவள்,
அங்கே இருந்த பெண்ணைப் பார்த்து யோசனையுடன், “நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.
அவளோ மங்களத்தை விட கூடுதலான தெனாவெட்டு மற்றும் இகழ்ச்சி பார்வையுடன், “யாதவ் அம்மா” என்றாள்.
ஆம்! வந்திருந்தது அத்வைத்தின் முன்னால் மனைவி மேனகா.