Advertisement
அனைவரின் மனமும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருக்க, பேரன் ஊட்டிவிட ஆறுமுகம் உண்டார்.
சில வாய் உணவை வாங்கிய பின் அவர், “போதும் சாமி.. நீங்க சாப்பிடுங்க” என்றார் கரகரத்த குரலில்.
குழந்தை தட்டை காட்டி, “சப்பாத்தி இல்லையே!” என்றான்.
“இதோ தாத்தா தரேன்” என்றவர் தனது தட்டில் இருந்து ஊட்ட,
அவன், “அம்மா யது பிக் பாய்..” என்று ஆரம்பிக்க,
செந்தமிழினி, “இன்னைக்கு வாங்கிக்கோங்க” என்றதும், குழந்தை மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டான்.
துருவ், “ஸ்ப்பா.. முடியலைடா.. ‘ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதும்மா’னு ஜீவா பாட்டு பி.ஜி.எம் கேட்குது.. நீ அடிக்கிற கூத்தை தாங்க முடியலைடா.” என்றான்.
செந்தமிழினி அவனை முறைத்தபடி, “தேனுமா இவனுக்கு சாப்பாடு போடாதீங்க” என்று கூற,
சரோஜினி, “அதானே! என் பேரனையா பேசுற!” என்று கூற,
ஆறுமுகம், “இப்போ மட்டுமில்லை.. ரெண்டு வேளைக்கு சாப்பாடு போடாத, சரோ.” என்றார்.
அத்வைத்தைப் பார்த்து, “நீ மட்டும் ஏன்டா அமைதியா இருக்கிற!” என்ற துருவ் பின் செந்தமிழினியைப் பார்த்து தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்ட படி, “உன்னோட பையனை நான் எதுவும் சொல்லலை, ஆத்தா.. என்னை விட்டுரு” என்றான்.
செந்தமிழினி, ‘பொழைச்சுப் போ’ என்பது போல் பார்க்க,
யாதவ், “கொப்புர(கொப்பரை) தேங்கானா என்னம்மா?” என்று கேட்டான்.
துருவ், “ஏற்கனவே என் இமேஜ் அதல பாதாளத்துல தான் கிடக்குது.. இதுக்கு மேல முடியாது.. அழுதுருவேன்!” என்று கூற, அனைவரின் முகத்திலும் சன்னமான புன்னகை அரும்பியது.
யாதவின் தட்டில் சப்பாத்தித் துண்டுகளை வைத்த செந்தமிழினி, “அது அம்மா சும்மா சொன்னது தங்கம்.. அதை விடுங்க.” என்றதும்,
குழந்தை சரி என்பது போல் தலையை ஆட்டினான்.
செந்தமிழினி ஒரு தட்டில் உணவை வைத்து அத்வைத்திடம் நீட்ட, அவன் எழுந்து சென்று மங்களத்திடம் கொடுத்து விட்டு வந்தான்.
செந்தமிழினியின் செய்கையில் சரோஜினி மரகதத்தின் வளர்ப்பை எண்ணி பெருமை கொள்ள, ஆறுமுகம் மரகதத்தின் வளர்ப்பை மெச்சியபடி நிம்மதியாக உணர்ந்தார்.
அதன் பின் அனைவரும் மென்னகையுடன் உண்ண ஆரம்பித்தனர். உணவை முடித்துக் கொண்டு யாதவை சமாளித்து செந்தமிழினி விடைபெற்றுக் கிளம்பினாள்.
“கடைசி வரை எனக்கு நீ ஸ்வீட் தரவே இல்லை” என்று அவளது காதில் கிசுகிசுத்து, அவளை வெட்கத்துடன் முறைக்க வைத்த பிறகே, அத்வைத் வழி அனுப்பினான்.
வீட்டிற்குச் சென்றதும் செந்தமிழினி, “அம்மா நான் அத்தை வீட்டில் சாப்பிட்டுட்டேன்” என்று கூற,
மரகதம் அவளை முறைக்கவும் இல்லை. ‘சரி’ என்று பதில் கூறவும் இல்லை. அவளும் அவரது ஊஞ்சலாடும் மனநிலையை அறிந்தது போல், அவரது பதிலை எதிர் பார்க்காமல் தனது அறைக்குச் சென்றாள்.
அவள் பின்னால் சென்ற அருள்மொழி, “சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே!” என்றான்.
“நீ என்ன ப்ரி.கே.ஜி பாப்பாவா! கை பிடிச்சு கூட்டிட்டுப் போக” என்று அவள் நக்கலாக கூற,
“போடி.. நானே போய்க்கிறேன்” என்றான்.
அவளோ இன்னும் நக்கலாக, “நீ எல்லாம் வாயில் வடை சுடத் தான் லாய்க்கு.” என்றாள்.
“ஏன்!” என்று அவன் எகிற,
“என்னவோ சென்னை வந்ததும் அத்தானை நேரில் போய் பார்க்கிறேன்னு ஸீன் போட்ட!” என்றாள்.
“எதை, எப்போ செய்யனும்னு எனக்குத் தெரியும்.” என்றான்.
“இன்னைக்கு எமரல்டை கரைக்க பார்த்தியாக்கும்! இப்போ பேச வேணாம்னு சொல்லி டைம் கேட்டு இருப்பாங்களே!”
“ஹ்ம்ம்.. எனக்கு என்னவோ ரொம்ப நாள் எடுத்துக்க மாட்டாங்கனு தான் தோணுது.” என்றவன்,
“சரி அங்க என்ன நடந்துச்சு? கிழவியை வச்சு செஞ்சிருப்பியே! அதைச் சொல்லு” என்றான்.
உதட்டைப் பிதுக்கி, “இன்னைக்கு நான் பெருசா எதுவும் செய்யலை.” என்றவள் அங்கே நடந்ததைக் கூறினாள்.
அருள்மொழி கோபத்துடன், “துருவ் சொல்ற மாதிரி, அது ஒரு கூனி கிழவி தான்” என்றான்.
“அது சகுனியும் கூனியும் கலந்த விஷ ஜந்து”
“ஹ்ம்ம்” என்றவன், “மாமாவும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.. இனி அத்தை கொஞ்சமாச்சும் நிம்மதியா இருப்பாங்க.. நீ போனதுக்கு அப்புறம் அத்தையைப் பார்த்துக்கோ” என்றான்.
“ஹ்ம்ம்.. அந்தக் கிழவியை அடக்க ஒடுக்கமா ஒரு இடத்தில் உட்கார வச்சிடலாம்”
மரகதம், “அருள், சாப்பிட வா” என்று அழைக்கவும், அவன் எழுந்து சென்றான்.
உணவின் போது அருள்மொழி அத்வைத் வீட்டில் நடந்ததை கூறினான்.
வேணுகோபால், “ஹ்ம்ம்.. இனியாது என் தங்கை நிம்மதியா இருக்கட்டும்.” என்றார்.
அருள்மொழி, “நீ என்னமா ஒன்னுமே சொல்லலை?” என்று வினவ,
மரகதம், “நான் சொன்னது தானே நடந்து இருக்குது.” என்றார்.
அருள்மொழி, “ஆனா, நீங்க பயந்த மாதிரி எதுவும் நடக்கலையே!” என்றான்.
“இப்போ தானே ஆரம்பிச்சு இருக்குது.”
“தமிழ் தெளிவா சமாளிப்பம்மா”
“சமாளிப்பே வாழ்க்கைனு ஆகிடக் கூடாதுன்னு தான், நான் பயப்படுறேன்.”
“இப்போ தான், எல்லோருமே சுதாரிச்சுட்டாங்களே அம்மா!”
“குழந்தையோட மனசு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.. குழந்தையோட மனசை இப்படியே கொண்டு போகனும்னா, ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும், தமிழ் அதிக அக்கறை எடுக்கனும்.. எடுப்பா தான்.. ஆனா அதோட விளைவு!” என்று நிறுத்தினார்.
அருள்மொழி புரியாமல் பார்க்க, அவர், “குழந்தையோட மனசை மச்சினியோட மாமியார் கலைக்காமப் பார்த்துக்கலாம்.. ஆனா, பிரச்சனை வேற விதத்தில் வர அதிக வாய்ப்பு இருக்குது.. இப்போ நான் சொன்னா உங்களுக்கு அது பெருசாத் தெரியாது. ஆனா நாளடைவில் இந்த திருமண பந்தத்தின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.”
“என்னம்மா சொல்றீங்க?”
“ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் யாதவ் கிட்ட தமிழ் அதிக கவனம் செலுத்தும் போது அவன் அவளை ரொம்ப நெருங்குவான்.. அது நல்லது தான் என்றாலும்.. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்.. தமிழ் யார் கிட்ட நெருக்கம் காட்டினாலும் குழந்தையால ஏத்துக்க முடியாமப் போகும்.. அது அத்வைத்தா இருந்தாலும் அதே நிலை தான்.. அப்போ கணவன் மனைவிக்குள் நெருக்கம் எப்படி வரும்? சின்ன சின்ன அன்பான செயல் மிஸ் ஆகும்.. முதல்ல பெருசாத் தெரியாது. ஆனா நாளடைவில் சலிப்பு தட்டும்.. அத்வைத் மனம் தமிழை நாடும் நேரங்களில் அவ குழந்தையை மனசில் கொண்டு விலகினா!” என்று நிறுத்தினர்.
“நீங்க ரொம்ப யோசிக்கிறீங்கம்மா.”
“என் மகளுக்காக நான் யோசிக்காம, வேற யாரு யோசிப்பா?”
“தேவை இல்லாம பயப்படுறீங்கனு தான் எனக்குத் தோனுது”
“உனக்குப் புரியாது..” என்றவர், “எங்கே! என் பயம் தேவை இல்லாததுனு, உன் அப்பாவை சொல்லச் சொல்லு பார்ப்போம்.” என்றார்.
வேணுகோபால் அமைதியாக இருந்து மனைவியின் பயம் சரியே என்று சொல்லாமல் சொன்னார்.
அருள்மொழிக்கு ஆயாசமாக இருந்தது.
அறையில் இருந்தபடி இவற்றை கேட்டுக் கொண்டிருந்த செந்தமிழினிக்கும் அன்னை கூறுவது சரி என்றே தோன்றியது. தனக்கும் சரோஜினிக்கும் நடுவில் யாதவ் வந்தது, குழந்தையின் பொறாமையை உணர்ந்த, யாதவ் அழைத்ததும் தான் அத்வைத்தை உதறி விட்டுச் சென்றது தவறு என்றும் புரிந்துது. இனி இருவரையும் சமமாகத் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டாள்.
அறையை விட்டு வெளியே வந்தவள் அன்னையை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ்மா” என்றாள்.
அருள்மொழி புரியாமல் தங்கையைப் பார்க்க,
மரகதம், “ஆக.. நான் சொன்னது நடந்துருச்சு!” என்றார் மகளின் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி.
அவளோ புன்னகையுடன், “இனி நடக்காது.” என்றாள்.
மூச்சை இழுத்து விட்ட மரகதம் மேசை மீது இருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு எழுந்து செல்ல, செந்தமிழினியும் மீதம் இருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, அவர் பின்னே சென்றாள்.
“அம்மா இப்படி இருக்காத.” என்றாள்.
அவர் பதில் கூறாமல் அவளை திரும்பிப் பார்க்க, அவளோ கண்ணில் குறும்புடன், “நீ சிரிச்சாலே பார்க்க சுமாரா தான் இருப்ப.. இதில் இப்படி முகத்தை வச்சிட்டு இருந்தா!” என்று கூறி நிறுத்த,
“ஏன்டி சொல்ல மாட்ட! இப்போ எங்க முகம் எல்லாம் உனக்கு அப்படி தான் தெரியும்.” என்றார்.
விரிந்த புன்னகையுடன், “எக்ஸ்சக்ட்லி மேகி.. எனக்கு என் அத்து மட்டும் தான், பார்க்கிற மாதிரி இருக்கார்.” என்று கூறி, கண் சிமிட்டினாள்.
இவள் செய்த கலாட்டாவில் மனம் சற்றே இலகுவானாலும், இடுப்பில் கைவைத்தபடி அவளை முறைத்துக் கொண்டு அவர் நிற்க, அவளோ அவரது கன்னத்தை மூன்று முறை கிள்ளுவது போல் கொஞ்சியபடி, “புஜூக்கு.. புஜூக்கு.. புஜூக்கு” என்று கொஞ்சி விட்டு ஓடிவிட்டாள்.
‘இன்னும் சின்ன பிள்ளை மாதிரி இருக்கிற இவ என்னத்தை குழந்தையை பார்த்துக்கப் போறாளோ!’ என்று முணுமுணுத்தாலும் அவரது முகத்தில் சிறு புன்னகை இருந்தது.
அறைக்குச் சென்ற செந்தமிழினி அத்வைத்தை கைபேசியில் அழைத்தாள்.
அழைப்பை எடுத்த யாதவ், “ஹாய் ம்மா” என்றான் உற்சாக குரலில்.
இவளும் உற்சாகத்துடன், “ஹாய் யது கண்ணா.. என்ன செய்துட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“டாடா பாட்டு பாடி.. யது தூங்கப் போறான்”
“ஓ.. சூப்பர்.. அம்மா குட் நைட் சொல்ல தான் கூப்பிட்டேன்.. சமத்தா தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி முத்தம் கொடுத்தாள்.
அவனும், “ஓகேம்மா.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி முத்தம் கொடுத்தான்.
“டாடா கிட்ட குடுங்க.”
“ஹ்ம்ம்” என்ற குழந்தை கைபேசியை அத்வைத்திடம் நீட்டியபடி, “டாடா அம்மா பேசுறா” என்றான்.
அத்வைத் கைபேசியை வாங்கி, “ஹலோ” சொன்னதும்,
“யது கண்ணா தூங்கினதும் கூப்பிடுங்க.” என்றாள்.
“சரி.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று மகனுக்காகக் கூறினான்.
“நான் காத்திருப்பேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
யாதவை தூங்க வைத்து விட்டு அவன் அழைக்க, முதல் அழைப்பு முடியும் முன்பே எடுத்து இருந்தாள்.
“கைலேயே வச்சிட்டு இருந்தியா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்”
“என்னாச்சுடா?”
“என்ன என்னாச்சு?”
“தமிழ்!”
“அது.. உங்களுக்கு ஸ்வீட் குடுக்காம வந்துட்டேனேனு கொஞ்சம் பீல் ஆகிட்டேன்.”
அவள் வருந்துவதைப் புரிந்து கொண்டவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு, “அதனால என்ன! நாளைக்கு ஒன்னுக்கு ரெண்டா வாங்கிக்கிறேன்” என்றான்.
“ஆங்!”
“என்ன!” என்று அவன் மென்னகையுடன் வினவ,
“அது..”
“ஹ்ம்ம்..”
“நீங்களே எடுத்துக்கோங்க”
லேசாகச் சிரித்தவன், “சரி.. நீ எப்போ தருவ?” என்றான்.
“அது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்” என்றாள் சிறு வெட்கத்துடன்.
“அதான் முடிஞ்சுருச்சே”
“ஊரறிய கல்யாணம் செஞ்சதுக்கு அப்புறம்”
“அப்போ ஆஃபிஸியல் பஸ்ட் நைட்டில் தரப் போற”
அவள் அமைதியாக இருக்க, அவன், “முத்தம் கொடுத்து தான் உன் வாயை மூட வைக்க முடியும்னு நினைத்தேன்.. ஆனா முத்தத்தை பத்தி பேசினாலே போதும் போலவே!”
“அத்தான்” என்று அவள் சிணுங்க,
“உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமை கண்கள் தூங்காது..
உயிரே என் உயிரே..
அகம் அறிவாயோ.. அருள் புரிவாயோ..
வாரம் தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாதே!
உன் ஆசை.. உன் ஆசை..
நானே சொல்வேனே..
கண்ணால் ஆமாம் என்பாயே!
எங்கெங்கே உதடு போகும்..
அங்கங்கே உயிரும் போகும்..
அன்பாலே உன்னை ஆள்வேனே!” என்று ‘கள்வரே!’ பாடலை (ராவணன் திரைப்படம்) தனக்கு ஏற்றவாறு ஆண்பாலாக மாற்றிப் பாடினான்.
அவன் குரலில் வழிந்த காதலும் தாபமும் அவளுள் காதலை மீறி சிறு தாபத்தை விதைக்க, “அத்து” என்று அவளது குரல் காதலுடன் குழைந்து ஒலித்தது.
“இப்பவே உன்னைத் தூக்கிட்டு வரனும் போல தோனுது..”
“ப்ளீஸ் அத்தான்.. இப்படி எல்லாம் பேசாதீங்க”
“ஏன்?” என்ற கேள்வியைக் கூட குழைவாகத் தான் கேட்டான்.
“என்னவோ செய்யுது”
“என்ன செய்யுது?”
“ப்ளீஸ்”
“பேசுறதுக்கும் தடா போட்டா எப்படி!”
“நான் அங்க வந்த பிறகு பேசுங்க.. இப்போ வேணாம்.”
“நீ இங்க வந்த பிறகு, பேசிட்டா இருப்பேன்!”
அவள் உதட்டை கடித்தபடி அமைதியாகிவிட, இன்று போதும் என்று நினைத்தானோ என்னவோ! இயல்பான குரலில், “அத்தை என்ன சொல்றாங்க?” என்று பேச்சை மாற்றினான்.
“டைம் கேட்டு இருக்கிறாங்க”
“ஹ்ம்ம்.. மாமா என்ன சொல்றாங்க?”
“அப்பா ஓகே தான்.. அம்மா தான் கொஞ்சம் பயப்படுறாங்க”
“அது பயம் இல்லை.. கவலை.. மகள் சந்தோஷமா நிறைவா வாழனுமேனு கவலை.. அது நியாமானது தானே!”
“ஹ்ம்ம்”
“எனக்கு உன்னோட போட்டோ அனுப்பு”
“எதுக்கு?” என்றவள், “இதுக்குள்ள எனக்கே தெரியாம என்னை போட்டோ எடுத்து, உங்க கேலரியை நிறைச்சு இருக்க வேணாமா?”
“அப்போ, நீ அதை தான் செஞ்சு வச்சிருக்க!”
“ஆமா.. பின்ன, நான் என்ன உங்களை மாதிரியா!”
“நீ நம்ம வீட்டுக்கு வா.. நீ ஸ்வீட் குடுக்கிற மாதிரியே வித விதமா எடுக்கிறேன்.” என்றான்.
“ஏய்!”
வாய்விட்டுச் சிரித்தவன், “எல்லாரோட போட்டோவும் அனுப்பு.. அம்மா கிட்ட காமிக்க கேட்கிறேன்.” என்றான்.
“ஓ.. எனக்கு தோனவே இல்லை.. ச..”
“பரவா இல்லை.. இப்போ அனுப்பு”
“ஹ்ம்ம்”
“எதையும் பத்தி யோசிச்சு மனசை குழப்பிக்காம நிம்மதியாத் தூங்கு..”
“ஹ்ம்ம்”
“இப்போ ஓகேயா?”
“என் செல்ல அத்து” என்று அவள் கொஞ்ச, ஒரு நொடி பேச்சற்று இருந்தவன் பின் மென்னகையுடன், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் இதழி” என்று கூறி அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
அவன் நேரில் கொடுத்தது போல் அவளது உடல் சிலிர்த்துக் கொள்ள அவள் மெல்லிய குரலில், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் அத்து” என்று கூறி லேசாக முத்தம் கொடுத்து அழைப்பைத் துண்டித்தாள்.
மண(ன)ம் வீசும்…
Advertisement