அறை வாயிலுக்கு முதுகு காட்டி தரையில் ஒற்றை காலில் முட்டி போட்டு அமர்ந்தபடி கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டிருந்த செந்தமிழினி, “யது கண்ணா எப்போதுமே விளையாடி முடிச்சிட்டு, டாய்ஸ் எடுத்து வச்சிரணும்.. வாங்க.. வந்து, எடுத்து வைக்க. அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றாள்.
யாதவ் அவள் அருகே வரவில்லையே என்ற நினைப்புடன் திரும்பிப் பார்த்தவள் கண்டது, மூடிய கதவின் மீது ஒற்றைக் காலை வைத்து, மறு காலை தரையில் ஊன்றி, கைகளை கட்டியபடி மாயக் கண்ணனின் புன்னகையுடன் தன்னை பார்த்துக் கொண்டிருந்த அத்வைத்தை தான்.
சட்டென்று கையில் இருந்த விளையாட்டு சாமான்களை தரையில் வைத்தபடி எழுந்து நின்றவள் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “இப்போ தான் வந்தீங்களா அத்தான்?” என்றாள்.
அவன் அப்படியே அசையாமல் நிற்கவும், “அத்தான்!” என்றாள்.
“ஊரறிய கல்யாணம் முடியும் வரை ரூமுக்குள்ள வர மாட்டேன்னு யாரோ சொன்னாங்க!” என்றான் அதே வசீகர புன்னகையுடன்.
அவனது புன்னகையில் மயங்கும் மனதை இழுத்துப் பிடித்தபடி, “என்ன விளையாட்டு அத்தான் இது! கதவைத் திறங்க.. என்ன நினைப்பாங்க?” என்றாள்.
“மூன்றாம் மனிதர்களைப் பற்றி கவலை இல்லை.. ஆனா, நான் சொல்றது நம்ம வீட்டு ஆட்களை”
“நம்ம வீட்டு ஆட்களுக்கு நம்மைப் பற்றி தெரியாதா?” என்றபடி அவளை நெருங்க,
அவள் படபடப்பை மறைத்து, “யது கண்ணா வந்திருவான்.. நான் வெளியே போறேன்” என்றபடி நகர்ந்தாள்.
அவளது கையை பிடித்து நிறுத்தியபடி, “துருவ் பார்த்துப்பான்” என்றவன் முடித்த போது அவளது கையை சுண்டி இழுத்திருக்க, அவள் அவனது நெஞ்சில் முட்டி நின்றாள்.
அவள் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவன் மென்மையாக பட்டும் படாமல் அவளைச் சுற்றி கையை அணைவாக வைத்த படி, “இது பிடிக்கலையா?” என்று கேட்டான்.
அவள் மறுப்பாகத் தலையசைக்க, தனது முகத்தை அவள் முகம் அருகே கொண்டு சென்ற படி, “அப்போ பயமா?” என்றான் மென்னகையுடன்.
அவனது அருகாமையில் உணர்வலைகள் தாக்கப்பட்டு மூச்சடைப்பது போல் உணர்ந்தவள் அவனது சீண்டலில், “என்னக்கென்ன பயம்?” என்றாள்.
அவன் விரிந்த புன்னகையுடன் ஒரு கையால் அவளது தோளையும் மறு கையால் அவளது இடையையும் பற்ற, அவள் பேச்சற்று போனாள்.
அவன், “வெறும் பேச்சு மட்டும் தான்” என்றான்.
அவள் அதற்கு பதில் சொல்ல நினைத்தாலும் அவனது பார்வையும், குரலும், தொடுகையும் அவளை வேறு உலகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டு இருந்தது.
அவளது நிலையை உணர்ந்தார் போல் அவன் மெல்லிய குரலில், “இதழி” என்று அழைத்தான்.
அப்பொழுது சரியாக, “அம்மா” என்று யாதவ் அழைக்கவும், சட்டென்று மாயவலையில் இருந்து விடுபட்டவளாக, அவனை உதறித் தள்ளி விட்டு கதவைத் திறந்து வெளியேறி இருந்தாள்.
அத்வைத் தலையைக் கோதிய படி உணர்ச்சிகளை அடக்கி மெத்தையில் அமர்ந்தான். அவனுக்கு துளி கூட ஏமாற்றமோ கோபமோ இல்லை.
மாறாக மகனின் மீது அவள் கொண்டுள்ள அன்பை நினைத்து, அவன் மனம் நெகிழத் தான் செய்தது.
அவனது மனசாட்சி, ‘இது உனக்கே ஓவரா தெரியலையாடா! மூனு வயசுப் பையனோட அப்பா மாதிரியா நடந்துக்கிற!’ என்று கூற,
அவனோ மென்னகைத்தபடி, ‘இதெல்லாம் சின்ன சின்ன த்ரில்.. இப்போ தான் என்ஜாய் பண்ண முடியும்.’ என்று கூறிக் கொண்டான்.
மகன் மற்றும் செந்தமிழினியின் பேச்சு சத்தத்தைக் கேட்டு, அறையை விட்டு வெளியே சென்றான்.
யாதவ், “யது சித்தா கூட ஐஸ்-கிரீம் சாப்(பி)டப் போறான்.” என்றான்.
செந்தமிழினி, “யது கண்ணா சமத்து தானே!” என்றாள்.
குழந்தை சிறு யோசனையுடன் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினான்.
“விளையாடும் போது மூனு தும்மல் போட்டீங்க.. ஸோ, டூ டேஸ் கழிச்சு ஐஸ்-கிரீம் சாப்பிடலாம்.. ஓகே?” என்றாள்.
“ஓகேம்மா” என்ற குழந்தை துருவை பார்த்து, “சித்தா இப்போ நோ ஐஸ்-கிரீம்.. அம்மா டூ டேஸ் அப்புறம் கூட்டிப் போவா” என்று உடனே கூறவும், அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கூடத்தில் அமர்ந்து இருந்த மங்களம் மட்டும் வெறுப்புடன் பார்த்தபடி எழுந்து தனது அறைக்குச் சென்றார்.
அவள் இன்னமும் முறைத்துக் கொண்டு நிற்க, அத்வைத் சிரித்தான்.
அப்பொழுது தான் புரிந்து, அத்வைத்தைப் பார்த்து, “டேய் உன் வேலையா!” என்ற துருவ் இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தி ஆட்டியபடி, “உனக்கு உதவி செஞ்சதுக்கு உன்னால என்ன முடியுமோ அதை சிறப்பா செஞ்சுட்டடா” என்று நடிகர் சத்யராஜ் வடிவேலிடம் கூறுவது போல் கூறினான்.
அத்வைத் அதற்கும் சிரிக்க, செந்தமிழினியோ துருவை முறைத்தபடி, “இன்னொரு முறை இப்படி செய்த! உனக்கு செட் ஆகுறதையும் கலைச்சு விட்டிருவேன்.. அப்புறம் கடைசி வரை காஞ்ச கொப்பரை தேங்கா தான் நீ” என்று கூறிச் சென்றாள்.
துருவ், “ஒரு சின்னப் பையனை ரெண்டு பேரும் இப்படி பந்தாடுறது, சரியே இல்லை சொல்லிட்டேன்” என்று கூற,
அத்வைத்தோ, “போடா.. போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா.. சாப்பிடலாம்.” என்று விட்டு அறைக்குச் சென்றான்.
துருவ், ‘ஓ மை கடவுளே! இதுங்களுக்கு சீக்கிரம் கல்யாணத்தை செய்து வச்சு எனக்கு விமோசனம் கொடு.’ என்று மனதினுள் வேண்டியபடி தனது அறைக்குச் சென்றான்.
முகம் கை கால்களை கழுவி உடை மாற்றி வந்த அத்வைத், தானாக உண்டு கொண்டிருந்த மகனைப் பார்த்து ஆச்சரியம் கொண்டான்.
அத்வைத், “இந்த வீட்டில் தமிழ் நாட்டமை செய்யாம வேற யாரு செய்வா!” என்று கூற,
“அதானே! உன்னோட பதவி எப்பவோ பறி போய்டுச்சு” என்ற துருவ் அன்னையின் தோளை பற்றி அழுத்திய படி, அவரை அமரச் செய்து தானும் அமர்ந்தான்.
மங்களம் முறைத்துக் கொண்டு நிற்க,
அனைவருக்கும் பரிமாறிய செந்தமிழினி, அத்வைத் அருகே உடகார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
ஒருவாய் சப்பாத்தியை சுவைத்ததும், “எப்போதும் போல செம டேஸ்ட் தேனுமா.” என்ற படி ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.
தன்னை அழைக்காமல் அனைவரும் உண்பதைக் கண்ட மங்களம் கடும் கோபத்துடன், “சண்டாளி.. எடுபட்ட சிறுக்கி.. நல்லா இருப்பியா! என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிச்சிட்டியே..” என்று கத்த ஆரம்பிக்க,
அத்வைத், “கூப்பிட்டப்ப வராம வீம்பு செய்துட்டு இப்போ எதுக்கு கத்துறீங்க? குழந்தை முன்னாடி பேசுற பேச்சா பேசுறீங்க! அமைதியா இருக்க முடிஞ்சா வந்து சாப்பிடுங்க. இல்லை, ரூமுக்குப் போங்க. நான் சாப்பாடு கொண்டு வரேன்.” என்றான் கடுமையான குரலில்.
அவர், “ராசா..” என்று ஆரம்பிக்கும் பொழுதே,
“இனி இப்படி தான் இருக்கும் ஆச்சி.. பழகிக்கோங்க..” என்று பேச்சு முடிந்தது என்பது போல் உண்ண ஆரம்பித்தான்.
மங்களம் செந்தமிழினியை தான் திட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட யாதவ், “டாடா” என்று அழைத்தான்.
அத்வைத், “என்ன கண்ணா?” என்றதும்,
குழந்தை மங்களத்தை முறைத்துவிட்டு, “இந்த பேய் ஆச்சி, நமக்கு வேணாம்.” என்றான்.
ஒரு நொடி வேதனையில் இறுகிய தந்தையின் முகத்தைப் பார்த்த அத்வைத் மகனைப் பார்த்து, “இப்படி எல்லாம் பேசக் கூடாது, கண்ணா.” என்றான்.
அத்வைத் புருவ முடிச்சுடுடன், “என்ன பேசினாங்க, கண்ணா?” என்று கேட்டான்.
குழந்தை செந்தமிழினியைப் பார்க்க, அவள் ஆறுமுகத்தை மனதில் கொண்டு மறுப்பாக தலை அசைத்தாள்.
சட்டென்று செந்தமிழினியை திரும்பிப் பார்த்த அத்வைத், அவளது தலை அசைப்பை பார்த்து முறைத்தான்.
அவள் மெல்லிய குரலில் வாயைத் திறக்காமல், “தனியாக் கேளுங்க, அத்தான்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தாள்.
அத்வைத் யோசிக்க, ஆறுமுகம், “பெரிய ஆச்சி என்ன சொன்னாங்க யது குட்டி?” என்று கேட்டார்.
குழந்தை அப்பொழுதும் செந்தமிழினியைப் பார்க்க, இதை பார்த்துக் கொண்டிருந்த மங்களத்திற்கு உடம்பு முழுவதும் அரைத்த மிளகாயை பூசியது போல் எரிந்தது.
இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று செந்தமிழினி சம்மதமாகத் தலையசைக்க, அதைப் பார்த்த மங்களம் தனது அறைக்குத் திரும்ப,
அத்வைத், “ஆச்சி நில்லுங்க.” என்றான்.
அவர், “இது சரி இல்லை ராசா.. குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிற.” என்று கண்டனக் குரலில் கூறினார்.
“நீங்க எதுவும் செய்யலைனா, இங்கே வந்து உட்காருங்க” என்று அத்வைத் கூற,
துருவோ, “அதில் என்ன சந்தேகம்! அதுவும் நீ என்ன சாதாரண குற்றவாளியா! எமதர்மராஜா இன்னும் ஏன் தீர்ப்பு எழுதாம இருக்கிறார்னு தான் தெரியலை” என்றான்.
அத்வைத் அவனை முறைக்க, அவனோ தமையனை கண்டு கொள்ளாமல், “நீ சொல்லுடா யது குட்டி” என்றான்.
யாதவ் காலையில் மங்களம் பேசியது அனைத்தையும் கூற, மங்களம் மனதினுள், ‘எல்லாத்தையும் இப்படி போட்டுக் கொடுக்குதே இந்த குட்டி! எல்லாம் இந்தச் சிறுக்கியோட கைவண்ணமா தான் இருக்கும்.. சமத்துக் குட்டியை எனக்கு எதிரா திருப்பி, குட்டி பிசாசா மாத்தி வச்சிருக்கா.’ என்று செந்தமிழினியை திட்ட ஆரம்பித்தார்.
அனைத்தையும் கேட்டு அத்வைத் கோபத்துடன் பேசும் முன்,
ஆறுமுகம், “நான் உங்களோட மகன் தானா? இல்லை, என்னை தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தீங்களாமா?” என்று வருத்தமும் வலியும் விரக்த்தியுமாகக் கேட்டார்.
மங்களம், “ஆறுமுகா!” என்று அலற,
அவரோ வலியுடன், “நிஜமா தான்மா கேட்கிறேன்.. என்னைத் தான் சந்தோஷமா வாழ விடலை.. இப்போ என் பையனையும் பேரனையும் நிம்மதியா வாழ விடமாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கிறீங்களே! எப்படிமா உங்களால இப்படி இருக்க முடியுது? இத்தனை வருஷம் அம்மா அம்மானு நீங்க சொன்னதுக்கு எல்லாம் தலையை ஆட்டினேனே! அதுக்காகவாது, என் பையனையும் பேரனையும் சந்தோஷமா வாழ விடக் கூடாதா?” என்று கேட்டார்.
மங்களம் அதிர்ச்சியுடன் மகனைப் பார்த்தாரே தவிர, அப்பொழுதும் தனது தவறை உணரவே இல்லை.
அத்வைத் மங்களத்தைப் பார்த்து கோபத்தை அடக்கிய தீர்க்கமான குரலில், “இன்னொரு முறை என் வாழ்க்கையில் குறுக்கிட்டீங்க! யோசிக்காம உங்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுருவேன்.. இது தான், நான் உங்களுக்கு கடைசியா சொல்றது.. பார்த்து நடந்துக்கோங்க” என்றான்.
மங்களம் வேறு வழியில்லாமல் அமைதியாக தனது அறைக்குச் சென்றுவிட்டார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, அத்வைத், “ஆச்சி பத்தி தெரியாதா! சாப்பிடுங்கப்பா.. நான் போய் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன்.” என்றான்.
செந்தமிழினி, “யது கண்ணா, தாத்தாக்கு ஊட்டி விடுங்க பார்ப்போம்” என்று கூற,
குழந்தை உற்சாகத்துடன் தனது பிஞ்சு கரத்தினால் ஒரு சிறு துண்டு சப்பாத்தியை எடுத்து குருமாவில் பிரட்டி எடுத்து, ஆறுமுகத்தின் வாய் அருகே கொண்டு சென்றான்.