Advertisement
யாதவ், “நாம பஸ்ட்ல இருந்து சேர்ந்து பார்ப்போமா?” என்று கேட்டான்.
அவள், “இன்னொரு நாள் முதல்ல இருந்து பார்க்கலாம்.. இப்போ, கிளைமாக்ஸ் மட்டும் பார்ப்போம்.. ஓகே.”
“ஓகே”
இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அவள் படத்தின் காட்சிகளை பற்றி சிரித்துப் பேசிய படி பார்க்க, குழந்தை அதை வெகுவாக ரசித்து மகிழ்ந்தான். இதுவரை யாரும் அவனுடன் இப்படி உட்கார்ந்து, காட்சிகளை விவரித்துப் பேசிய படி பார்த்தது கிடையாது.
படம் ஐந்து நிமிடத்தில் முடிய, அவளது கழுத்தை கட்டிக் கொண்ட குழந்தை, “லவ் யூ சந்துமா” என்று கூறியபடி கன்னத்தில் முத்தமிட்டான்.
அவளும் மகிழ்ச்சியுடன், “மீ டூ லவ் யூ ஸோ மச் பேபி” என்றபடி அவனது இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.
யாதவ், “நீ என் கூடயே இருக்கிறியா ப்ளீஸ்?” என்று கொஞ்சல் கலந்த கெஞ்சலுடன் கேட்டான்.
சிறிது யோசிப்பது போல் பாவனை செய்த செந்தமிழினி, “நான் எங்க தூங்குவேன்?” என்று கேட்டாள்.
குழந்தை உற்சாகத்துடன், “என் கூட தான்” என்றான்.
“அப்போ டாடா?”
“டாடாவும் தான்.. நீ நான் டாடா எல்லார்(ரு)ம் ஒன்னா தூங்கலாம்.. டாடி மம்மி பேபி ஒன்னா தான் படுப்பாங்க..”
“சமத்து, தங்கம்.” என்று அவனுக்கு திருஷ்டி கழித்தவள், “நீங்க சொல்ற படியே செய்யலாம். ஆனா கொஞ்ச நாள் கழிச்சு” என்றாள்.
உடனே முகம் சுருங்கிவிட, “அப்போ நீ என் கூடவே இருக்க மாட்டியா?” என்று கேட்டான்.
அவனது கன்னங்களை மென்மையாகப் பிடித்து ஆட்டியபடி, “யது கண்ணா ஸ்மைலி பேபி ஆச்சே!” என்றவள் அவனைத் தூக்கி மடியில் வைத்து அணைத்தபடி, “அதான், கொஞ்ச நாளில் உங்க கூடவே வந்திருவேன்னு சொன்னேனே!” என்றாள்.
அவன் சுருங்கிய முகத்துடனே, “நீ சும்மா சொல்ற.. யதுக்காகச் சொல்ற” என்றான்.
“இல்லைடா தங்கம்.. அம்மா உங்க கூடவே வந்து இருப்பேன்.. அதுக்கு டாடா அம்மாவை கல்யாணம் செய்துக்கனும்.”
“கல்யாணம்னா என்ன?”
“அது..” என்று ஒரு நொடி யோசித்தவள், “ஹ்ம்ம்.. கல்யாணம், ஒரு பாய்க்கும் கேர்ளுக்கும் நடக்கும்.. அதுக்கு அப்புறம், அந்த கேர்ள் அந்த பாய் கூட, அவன் வீட்டுக்கு வந்திடுவா” என்றாள்.
“அப்போ நான் உன்ன கல்யாணம் செய்துக்கவா? நீ என் கூடவே இருப்ப!” என்று கூறி செந்தமிழினியையே அலற விட்டான், குழந்தை.
‘என்னது!’ என்று மனதினுள் அலறியவள் அவனிடம் பொறுமையாக, “அப்படி இல்லை கண்ணா.. பேபீஸ் கல்யாணம் செய்துக்கக் கூடாது.. பிக் பீபிள் தான் செய்யனும்.. டாடா என்னை கல்யாணம் செய்தா, சந்துமா உங்க கூடவே இருப்பேன்.” என்றாள்.
“ஓ!” என்று குழந்தை கூற, அவள் நிம்மதி மூச்சை வெளியிட்டாள்.
“அம்மா நல்லா இருக்கு.. அப்படியே சொல்லவா?”
“ஓ.. சொல்லுங்களேன்” என்றாள் புன்னகையுடன்.
“அம்மா.. கல்யாணம் எப்படி செய்வாங்க?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
“டாடா அம்மா கழுத்தில் தாலி கட்டணும்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“அதான் டாடா செயின் போட்டாங்களே!” என்றான்.
அவள் அவனை கண்ணைச் சுருக்கி பார்க்கவும்,
“ஷ்ஷ்” என்றபடி பல்லை காட்டிச் சிரித்த குழந்தை, “இனி யது சொல்ல மா(ட்)டான்.” என்றான்.
சட்டென்று சிரித்தவள் அவனது நெற்றியில் முட்டியபடி, “என் செல்ல பட்டுக்குட்டி” என்று கொஞ்சினாள்.
“எப்போ வருவ சொல்லு” என்று அவன் அதிலேயே குறியாக இருக்க,
அவள், “அதுவா கண்ணா!” என்று கதை சொல்வது போல் ஆரம்பித்து ஏற்ற இறக்கதுட்டன், “நம்ம ரிலேடிவ்ஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் ஒரு பெரிய மண்டபத்துக்கு கூப்பிட்டு..” என்றவளின் பேச்சை இடையிட்ட குழந்தை,
“ரிலேட்னா என்ன? மண்டமம்னா என்ன?” என்று கேட்டான்.
“ரிலேட் இல்லை.. ரிலேடிவ்ஸ்.. அப்படினா சொந்தக்காரங்க.. அதாவது.. அம்பிகா ஆச்சி, நேகா சித்தி எல்லோரும் உங்களுக்கு சொந்தக்காரங்க..”
“ஓ”
“மண்டபம்னா ரொம்பப் பெரிய ஹால்.. அங்க வச்சு பங்ஷன்ஸ் கொண்டாடுவாங்க..” என்றவள் அவன் கேட்கும் முன் தானே, “பங்ஷன்ஸ்னா கல்யாணம், பர்த்டே கொண்டாடுறது.” என்றாள்.
“ஹ்ம்ம்.. இப்போ சொல்லு”
“நல்ல கதை கேட்கிறீங்க செல்லம்” என்றவள் தொடர்ந்தாள். “ஒரு நல்ல நாள் பார்த்து, எல்லோரையும் மண்டபத்துக்கு கூப்பிட்டு.. டாடா என் கழுத்தில் தாலி கட்டி கல்யாணம் செய்துப்பாங்க.. அப்புறம் என்னையும் யது கண்ணாவையும் யாரும் பிரிக்கவே முடியாது.” என்ற படி அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
அதே நேரத்தில் மங்களம் மகளுடன் இவர்களை பிரிக்கத் தான், திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.
அம்பிகா, “என்னமா இப்படி ஆகிருச்சு! இந்த தமிழ் மரகதத்தை மாதிரி அமைதியா இருப்பான்னு..” என்றவரின் பேச்சை முறைப்புடன் இடையிட்ட மங்களம்,
“யாரு! அந்த மரகதம் அமைதியா? இன்னைக்கு எப்படி எல்லாம் பேசினானு சொன்னதை கேட்டும் அவளை போய் அமைதினு சொல்ற! அந்த வீட்டில் ஆம்பளைங்க ரெண்டும் அமைதி.. இதுங்க தான் ஆட்டிப் படைச்சு அராஜகம் செய்யுதுங்க.” என்றார்.
“ஸப்பா! என்னமா கோபம் வருது! ஒரு நிமிஷம் அவ உருவத்தில் காளியாத்தாவே என் கண் முன்னால வந்த மாதிரி இருந்துச்சு.”
மங்களம் முறைக்கவும், “சும்மா முறைக்காதமா.. நீயும் தானே பயந்த?” என்றார்.
“நா..ன்.. ஒன்னும் பயப்படலை.. போயும் போயும் அந்தப் பொடுசுக்கா நான் பயப்படுவேன்!” என்று கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை என்பது போல் கூறினார். (ஓ இவருக்கு தான் மீசை கிடையாதே! அப்போ மூக்கில் மண் ஒட்டவில்லை என்று வச்சிப்போம்)
பின் அவசரமாக, “அடுத்து என்ன செய்றதுன்னு யோசிப்போம்.” என்று பேச்சை மாற்றினார்.
“இந்த நேகாக்கு என்னாச்சுனு தெரியலை.. திடீர்னு இப்படி பல்ட்டி அடிச்சுட்டா.”
“நான் தான் முதல்ல இருந்தே சொல்லிட்டு இருந்தேனே! அவ சரி இல்லை.. அத்வைத் கிட்ட சரியாப் பேச மாட்டிக்கிறா.. அவன் மனசை மாத்த முயற்சியே எடுக்க மாட்டிக்கிறானு சொன்னேன்.. நீ தான் கேட்கலை”
“சரி.. இப்போ, என்ன செய்யம்மா? அவருக்கு வேற நேகாவை கட்டிக் கொடுக்கிறதில் விருப்பம் இல்லை.. ‘வேண்டாம்னு சொல்றவன் கிட்ட ஏன் தொங்குற?’னு சொல்றார்.. கூடவே ‘உன் முதல் பொண்ணு செய்த கொடுமை போதாதா! அவனை அவன் விருப்பம் போல் வாழ விடு’னு வேற சொல்றார்.”
“ஏன் தொங்குறனா! எல்லாம் உன் மூத்த பொண்ணு செய்த வேலை தான்.. கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ எடுத்துச் சொன்னேன்.. கேட்டாளா! இப்போ பாரு.. அவ செஞ்ச காரியத்துக்கு நேகாவை யாரு வந்து கட்டுவா? துருவ், கொஞ்சம் கூட அசையவே மாட்டான்.. அத்வைத்னா வீட்டுக்கு கொஞ்சம் பார்ப்பான்.. அதான் அவனுக்கு கட்டி வச்சிரலாம்னு பார்த்தா, அந்தச் சிறுக்கி வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா.”
“ஹ்ம்ம்.. எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.” என்ற அம்பிகா, “இந்தக் கல்யாணத்தை நிறுத்த வழியே இல்லையாமா?” என்று கேட்டார்.
“கடைசி அஸ்திரமா, ஒன்னே ஒன்னு இருக்குது”
“என்னமா அது?” என்று அம்பிகா ஆர்வமாகக் கேட்டார்.
“யது குட்டி தான்”
அம்பிகா காற்றுப் போன பலூனாக, “அட போமா.. நீ தானே அவன் அவளை சந்துமானு சொல்றான்னு சொன்ன!”
“அது சரி தான்டி.. நாம சொல்ற விதத்தில் சொன்னா, குழந்தை கல்யாணத்தை மறுப்பான்”
“என்னமா சொல்ற?”
“செந்தமிழினி உன்னோட அப்பாவை கல்யாணம் செய்து இங்கே வந்துட்டா, உன்னை உன் அப்பா கிட்ட இருந்து பிரிச்சிடுவா.. உன்னை இந்த வீட்டை விட்டே அனுப்பிடுவானு சொல்லுவோம்.”
அம்பிகா கண்கள் ஒளிர, “சூப்பர்மா” என்றார்.
Advertisement