Advertisement
அருள்மொழி, “இது விளையாட்டு இல்லை, தமிழ்” என்றான் சற்று கோபக் குரலில்.
“விளையாட்டாச் சொன்னாலும், நான் தெளிவா, உறுதியா தான் இருக்கிறேன்.” என்று தீவிர குரலில் கூறினாள்.
“தமிழ் உண்மையைச் சொல்லு.. என்ன நடந்தது?”
“நான் ஏன்டா பொய் சொல்லப் போறேன்?”
“அத்வைத் நிச்சயம் உன் கிட்ட கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டு இருக்க மாட்டான்.”
“ஏன்? நான் அவ்ளோ வொர்த் இல்லை அப்படீங்கிறியா?”
“உன்னோட வொர்த் தெரிஞ்சதால தான் உன் வாழ்க்கையை நினைச்சு, அவன் கேட்டு இருக்க மாட்டான்னு உறுதியாச் சொல்றேன்.”
“யது கண்ணா என்னை எப்படி கூப்பிடுவான்னு தெரியுமா?” என்றவள், “சந்துமானு தான் கூப்பிடுவான்.. அவன் என்னை அவனோட அம்மாவா தான் பார்க்கிறான்..” என்றாள் சற்று நெகிழ்ந்த கனிவான குரலில். பின், “அத்தான் யதுக்காக கேட்டு இருக்கலாமே!” என்றாள்.
சற்று யோசித்தவன், “இருந்தாலும் ஏதோ இடிக்குது!” என்றான்.
“எதுவும் இடிக்கலை”
“இது நடக்காது தமிழ்.. அம்மா ஒத்துக்க மாட்டாங்க”
“அதெல்லாம் ஒத்துக்குவாங்க”
“நீ அத்தை வீட்டுக்குப் போறதையே மறுக்கிற அவங்க, எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க?”
“அத்தான் பார்த்துப்பார்”
“அம்மா வருத்தப்படுவாங்க.. என் கிட்ட பேசும் போது, உன்னை பெங்களூர் ஆபீஸ்சே போக விட்டிருக்கலாம்னு சொல்றாங்க..”
“முதல்ல கஷ்டமா இருக்கலாம். ஆனா பின்னாடி கண்டிப்பா சந்தோஷமா தான் இருப்பாங்க”
“ப்ச்.. புரியாமப் பேசாத தமிழ்”
“நீ தான் புரியாம பேசுற”
“ரெண்டாந்தாரமா போறதுக்கு உனக்கு என்ன அவசியம்?”
“அவசியம் இல்லை. பிடித்தம்.. எங்க மூனு பேருக்குமே பிடிச்சு இருக்குது.”
“மூனு பேரா?”
“யது கண்ணா, நான், அத்தான்” என்றவள், “அத்தான் யாரோ மூன்றாம் மனுஷன் மாதிரி பேசுற!” என்றாள்.
“எனக்கு நீ தானேடா முக்கியம்!”
தமையனின் பாசத்தில் நெகிழ்ந்தவள் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “நீ சந்தோஷப் படுவனு நினைத்தேன்.” என்றாள்.
“உன்னோட காதல் தோல்வியை மறந்துட்டு, நீ கல்யாணம் செய்துக்கிற முடிவை எடுத்தது எனக்கு ரொம்ப சந்தோசம் தான், ஆனா, அத்வைத்..” என்று அவன் நிறுத்த,
“ஏன் அத்தானுக்கு என்ன குறை? அண்ட் எனக்கு காதல் தோல்வினு யார் சொன்னது?” என்று கேட்டாள்.
“நீ சொல்லலைனா எனக்குத் தெரியாதா? சரி அத்வைத்காக ரெண்டாந்தாரம் என்ற விஷயத்தை கூட விட்டிரலாம்.. ஆனா, அந்தக் கிழவி!”
“லூசா நீ! நான் கிழவி கூடயா குடும்பம் நடத்தப் போறேன்? விட்டுத் தள்ளு, அந்தக் கிழவியை..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“அத்தை கூட தான் அந்தக் கிழவி கூட குடும்பம் நடத்தலை!” என்றான்.
அவளோ அசராமல், “ஆனா நான் தேனுமா இல்லை. அண்ட் அத்தானும் மாமா இல்லை.” என்றாள்.
பிறகு, “ஆமா என்னோட காதல் பத்தி என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்டாள்.
“தெளிவாத் தெரியாது தான்.. ஆனா என்னோட யூகம் சரி தானே!”
“என்ன யூகம்?”
“அது..” என்று ஒரு நொடி தயங்கியவன், “உனக்கு லவ் பெயிலியர் தானே!” என்றான் சற்று இறங்கிய குரலில்.
“இல்லை.. என்னோட காதல் இப்பவும் எப்பவும் உயிருடன் தான் இருக்கும்.. ஏன்! நான் இறந்த பிறகும் கூட, என்னோட ஆன்மா மூலம் என் காதல் உயிருடன் இருந்துட்டே தான் இருக்கும்.” என்றாள் காதலுடன் கூடிய ஆவேசக் குரலில்.
தங்கையின் காதலைக் கண்டு பிரமித்தவன், பின் அதிர்வுடன், “நீ.. நீ அத்வைத்தை தான் காதலிச்சியா?” என்று கேட்டான்.
அவள் அமைதியான நிதானக் குரலில், “காதலிச்சியா இல்லை, காதலிக்கிறேன்.. காதலிப்பேன்.. காதலிச்சிட்டே இருப்பேன்.” என்றாள்.
அவன் அமைதியாக இருக்க, “ஷாக்கை குறை.. ஷாக்கை குறை” என்றாள் கிண்டலான குரலில்.
“இந்த விஷயம் அவனுக்குத் தெரியுமா?” என்று அமைதியான குரலில் கேட்டான்.
“தெரியாது”
“ஏன் சொல்லலை?”
“(இ)தோ பார்.. உன்கிட்ட இதுவரை எதையும் மறைச்சது இல்லை.. என்னோட காதலை மறைச்சேனா அது என்னை நினைத்து நீ வருந்தக் கூடாதேனு சொல்லலை.. எனக்கு தெரிஞ்சு தான் பொண்ணு கேட்கிற விஷயம் நடக்கப் போகுதுனு உன்கிட்ட சொல்லனும் நினைச்சேன்.. அதான் சொன்னேன்.. உன்னால் முடிஞ்சா அம்மா கிட்ட எனக்கு சப்போர்ட்டாப் பேசு.. இல்லைனாலும் பரவா இல்லை” என்றாள்.
அவன் மீண்டும் அமைதியாக இருக்கவும், அவள் சற்று எரிச்சலான குரலில், “இப்போ என்ன நடந்து போச்சுனு நீ இப்படி அமைதியா இருக்கிற?” என்று கேட்டாள்.
“உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு என்ன சொல்லனே தெரியலை.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. எப்போதுமே நான் உன் பக்கம் இருப்பேன்.”
“ஹ்ம்ம்.. அது நல்ல அண்ணனுக்கு அழகு” என்றவள், “தேவை இல்லாம கவலைப் படாத.. எல்லாம் சரியா தான் நடக்கும்.. அம்மா கிட்ட கொஞ்சம் போராடனும், ஆனா முடியும்.. அங்கே கிழவி ஒத்துக்கலை தான், ஆனா அத்தான் உறுதியா சொல்லிட்டாங்க.. அண்ட் கல்யாணத்துக்கு அப்புறம் அந்தக் கிழவியை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.. ஸோ, கவலைப் படாம போய்த் தூங்கு” என்றாள்.
‘இனி எங்கே நிம்மதியாத் தூங்க!’ என்று மனதினுள் நினைத்தவன் தங்கையிடம், “சரிங்க மேடம்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.” என்றான்.
“ஓகேடா.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவளின் மனம், அத்வைத்துடன் பேசியதை அசைப்போடத் தொடங்கியது.
சட்டென்று நினைவு வந்தவளாக, அத்வைத்தை மீண்டும் கைபேசியில் அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்து, “என்ன தமிழ்?” என்று கேட்கவும்,
“நாளைக்கு பிளான் இருக்குது தானே?” என்று கேட்டாள்.
“நான் அப்போவே சொல்ல வந்தேன்.. நீ டாபிக்கை மாத்திட்ட.. நானும் திரும்ப சொல்ல விட்டுட்டேன்.. நாளைக்கு முகூர்த்தம் ஒன்பது டு பத்தரை தானே.. ஒன்பது மணிக்கு கோயிலில் இருக்கிற மாதிரி பார்த்துக்கோ.” என்றான்.
“ஹ்ம்ம்.. சரி அத்தான்.” என்றவள் “அப்புறம் அத்தான்..” என்று சற்று தயங்க,
அவன் ஆச்சரியத்துடன், “தமிழுக்குப் பேச தயக்கமா?” என்றான்.
“எனக்கே ஆச்சரியமா தான் இருக்குது.” என்றவள், “உங்களால.. உங்க கிட்ட தான் இப்படி.. நீங்க என்னை மாத்துறீங்க.” என்றாள் குறைபடுவது போல் சிறு சிணுங்கலுடன்.
அவளது சிணுங்கலை ரசித்து உல்லாசமாகச் சிரித்தபடி, “என் கிட்ட மட்டும் இப்படி இருக்கலாம்.” என்றவன், “ஏன்! இந்த மாற்றம் உனக்குப் பிடிக்கலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“பிடிச்சு இருக்குது.. கூடவே, என்னவோ செய்யுது”
“என்ன செய்யுது?”
“தெரியலை”
சில நொடிகள் மௌனத்தில் கழிய, வார்த்தைகள் இல்லா மனங்களின் மெல்லிய உணர்வு பரிமாற்றத்தை இருவருமே ரசித்தனர்.
“நீ ஏன் தமிழ் என் வாழ்க்கையில் முதல்லேயே வரலை?” என்று அவன் ஆழ்ந்த குரலில் வினவ,
சட்டென்று மாயவலையில் இருந்து வெளியேறியவள், அவனை தேற்றும் வகையில் மென்மையான குரலில்,
“இப்பவும், நான் தான் அத்தான் உங்க மனசில் முதல்ல நுழைந்து இருக்கிறேன்.” என்றாள்.
“அது சரி தான்” என்றவன்,
“இருந்தாலும் கடவுள் என்னை இப்படி வஞ்சித்து இருக்க வேண்டாம்.” என்றான்.
“பழசை விடுங்க அத்தான்.. இனி நடக்கிறதைப் பார்ப்போம்”
“ஒருவேளை எஃப்.பி-யில் உன்னை ப்ளாக் செய்யாம இருந்து இருந்தா, நீயே என்னோட வாழ்க்கையில் முதல்ல நுழைந்து இருப்பியோ?”
“இருக்கலாம்..” என்றவள்,
“அப்படி நடந்து இருந்தால்.. இப்படி நடந்து இருந்தால்னு நினைத்து நிகழ் காலத்தை தொலைக்கிறதை விட, நிகழ் காலத்தை சந்தோஷமா வாழலாமே!”
“ஹ்ம்ம்..”
“நீங்க பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பொக்கிஷமா நம்ம யது கண்ணா கிடைச்சு இருக்கிறானே! அதை மட்டும் நினைங்க அத்தான்”
“ஹ்ம்ம்.. யது என்னோட குட்டி தேவதைனா, நீ எங்க வாழ்க்கையை வசந்தமாக்க வந்த தேவதை”
“ஹச்.. ஹச்” என்று தும்மியவள், “என்னால முடியலை அத்தான்” என்றாள்.
சட்டென்று சிரித்தவன், “வாலு.. கொஞ்சம் பீலிங்கோட பேச விடுறியா?” என்றான்.
“அது எதுக்கு? எனக்கு இந்த சோக பிஜிஎம்-யே பிடிக்காது.. நமக்கு எப்போதுமே, அடிக்கிற அடியில் தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேணாமா! தான்”
“ஏன்! மெலோடி பாட்டெல்லாம் பிடிக்காதா?” என்றான் குறும்பு குரலில்.
“மே பி, உங்க கூட கேட்டாப் பிடிக்கலாம்”
மெலிதாக சிரித்தவன், “சட்டென்று மாறுது வானிலைனு, சட்டு சட்டுன்னு என்னோட மனசை மாத்திடுற.. யூ ஆர் சான்ஸ்லெஸ்.” என்றான்.
பின், “சரி எதுக்கு தயங்கின? அதைச் சொல்லு” என்றான்.
“உங்க கிட்ட பேசும் போது ஒரு ப்ளோல பேசிடுறேன்.. ஆனா, போனை வச்சதுக்கு அப்புறம் சந்தேகம் வருது.”
“என்ன சந்தேகம்?” என்று அவன் சற்று தீவிர குரலில் வினவ,
“அதை எப்படி சொல்லனு தெரியலை.. ஐ மீன் நான் சொல்ல வரது சரியாப் புரியுமானு தெரியலை.” என்றாள்.
“என்ன?”
“அது.. பஸ்ட் டைம் பேசுறப்ப, கொஞ்சம்.. இரு பொருள் பட பேசினேன்ல..” என்று சிறு தயக்கத்துடன் பேசிக் கொண்டிருந்தவளின் பேச்சை இடையிட்டு,
“அப்படியா! அப்படி என்ன பேசின?” என்று அறியாதவன் போல் அவன் வினவ,
“அத்தான்!” என்று லேசாகச் சிணுங்கினாள்.
மீண்டும் ரசனையுடன் மெலிதாகச் சிரித்தவன், “அப்படி பேசினதால உன்னைத் தப்பா நினைச்சுப்பேனோனு நினைக்கிறியா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்” என்றவள், “வேற யார் கிட்டயும் இப்படி பேசினது இல்லை.. என்னவோ உங்க கிட்ட பேச தோணுச்சு.. அதுவும் பிளான் செய்துலாம் பேசலை.. அந்த நொடி தோணினதை தான் பேசினேன்.” என்றாள்.
“இதை பிளான் செய்து வேற பேசுவியா!” என்றவன் அவளை சகஜமாக்க, புன்னகையுடன், “என் கிட்ட அப்படி பேசலைனா தான் தப்பு” என்றான்.
அவனது பதிலில் நிம்மதியானவள் குறும்புடன், “ஸோ, உங்க கிட்ட தப்பு செய்தா சரினு சொல்றீங்க!” என்றாள்.
அவனும் குறும்புடன், “தப்புனு எதைச் சொல்ற?” என்று கேட்டான்.
“நீங்க எதை நினைகிறீங்களோ அதை”
“நான் எதையும் நினைக்கலையே!”
“ஆமா.. நீங்க ஒன்னும் தெரியாத பாப்பா தான்.. நம்பிட்டேன்.. இப்போ நிஜமாவே குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
இருவரின் முகத்திலும் அழகான நிறைவான நேசப் புன்னகை பூத்தது.
மண(ன)ம் வீசும்…
Advertisement