Advertisement
வேணுகோபால் அமைதியாக இருக்க, மரகதம், “இவ தான் பின் விளைவுகளைப் புரியாம பேசுறானா, நீங்களும் சிரிக்கிறீங்க! அவங்களை விட்டு விலகி இருக்கிறதால் தானே நிம்மதியா இருக்கிறோம்.” என்றார்.
வேணுகோபால் அமைதியான வருத்தம் நிறைந்த குரலில், “நிம்மதியா இருக்கிறோம். ஆனா, முழு மனசோட சந்தோஷமா நிறைவா இருக்கிறோமா? என் தங்கச்சியை நினைத்து நான் வருந்துறதைப் பார்த்து, நீயும் வருந்திட்டுத் தானே இருக்கிற!” என்றார்.
“நீங்க என்ன சொன்னாலும், என்னோட முடிவில் மாற்றம் இல்லை.. அந்தக் குடும்பத்தோட நமக்கு தொடர்பு வேணாம்..” என்றவர் மகளைப் பார்த்து, “ஆபீஸ் பழக்கத்தை நீ வீடு வரை கொண்டு வரதா இருந்தா, நீ வேலையை விட வேண்டியதா இருக்கும்.” என்றவர் அறைக்கு சென்று விட்டார்.
செந்தமிழினி தந்தை கையைப் பற்றியபடி, “நீங்க கவலைப்படாதீங்க அப்பா.. உங்க தங்கையை உங்களோட நான் சேர்த்து வைக்கிறேன்.” என்றாள்.
அவரோ மென்னகையுடன் அவளது தலையை வருடியபடி, “வேணாம்டா..” என்றார்.
அவள் சிறு அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க, அவர், “மனசு ஆசைப்படும் தான், ஆனா மூளை தான் எது சரினு ஆராய்ந்து எடுத்துச் சொல்லும்.. சில விஷயம் மூளை சொல்றபடி நடந்தா தான் நல்லது..” என்றார்.
கண்ணை சுருக்கிப் பார்த்தவள், “பேசாம அந்த கிழவியை போட்டு தள்ளிடுவோமா!” என்றாள்.
லேசாக சிரித்த வேணு கோபால், “பெரியவங்களை இப்படி எல்லாம் பேசக் கூடாதுடா” என்றார்.
“உங்களை மாதிரி புத்தரா என்னால் இருக்க முடியாதுப்பா” என்றவள், “சாரிப்பா..” என்றாள்.
“புதுசா எந்தக் கவலையும் வந்திடலை.. இது எப்போதும் இருக்கிறது தான்.. என்னை பத்தி கவலைப்படாம, நீ போய் நிம்மதியா தூங்கு”
“எல்லாம் சீக்கிரம் சரி ஆகும்பா.. நீங்களும் எதைப் பத்தியும் கவலைப்படாம தூங்குங்க.”
மகளுக்காக, “சரிடா” என்றவர், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றார்.
“குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றுவிட்டு தனது அறைக்குச் சென்றவள், அத்வைத்தை கைபேசியில் அழைத்தாள்.
அத்வைத் அழைப்பை எடுத்ததும், “சொல்லு தமிழ்” என்று கூற,
“ஃப்ரீயா அத்தான்? யது கண்ணா என்ன செய்றான்?” என்று கேட்டாள்.
“ஃப்ரீ தான்.. யது தூங்கிட்டான்”
“அதுக்குள்ள தூங்கிட்டானா?”
“இன்னைக்கு மதியம் தூங்கலை போல.. அதான் சீக்கிரம் தூங்கிட்டான்.”
“ஓ” என்றவள், “இங்கே இப்போ தான் ஒரு குட்டி புயல் கரையைக் கடந்தது.. நாளைக்கு மாமா வந்தா சுனாமி வர வாய்ப்பு இருக்குது”
“என்னாச்சு?”
அவள் அன்னையுடன் நிகழ்ந்த வாக்கு வாதங்களை சுருக்கமாகக் கூறினாள்.
“பார்த்துக்கலாம் விடு.. கவலைப் படாத” என்றான்.
“எனக்கு என்ன கவலை? ஜஸ்ட் உங்களுக்கு தகவல் சொன்னேன்.. அவ்ளோ தான்.. நிலவரம் கலவரமாவே இருந்தாலும், என்னோட அத்தான் இருக்க கவலை ஏன்!” என்றாள்.
மென்னகையுடன், “ஹ்ம்ம்” என்றவன், “நாளைக்கு அப்பா பொண்ணு கேட்டு வந்துட்டு போனதுக்கு அப்புறம், அத்தை உன்னை சந்தேகப்பட மாட்டாங்களா?” என்று கேட்டான்.
“ஏன் படாம! இருநூறு சதவிதம் சந்தேகப் படுவாங்க.. நான் தான் ‘இன்னைக்கு தான்மா அத்தான் கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டாங்க.. நான் வீட்டில் பேசிக்கோங்கனு சொல்லிட்டேன்’னு அடிச்சுச் சொல்லிடுவேனே!”
“நீ ஜகஜாலக் கில்லாடி தான்” என்றான் சின்ன சிரிப்புடன்.
“அப்புறம் அத்தான்.. என்ன செய்துட்டு இருந்தீங்க?”
“என்ன செய்துட்டு இருந்தீங்கனா?”
“யது கண்ணா தூங்கிட்டான்.. ஸோ”
“ஸோ?”
“என் கூட டூயட் பாடிட்டு இருந்தீங்களா?” என்றாள் குறும்புடன்.
மென்னகையுடன், “அந்த லெவலுக்கு எல்லாம் நான் இன்னும் போகலை.” என்றான்.
“மனம் இருந்தால் மார்கபந்து” என்றாள். (வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் வரும் வசனம்)
“நீ முதல்ல நம்ம வீட்டுக்கு வா.. அப்புறம் பார்க்கலாம்.”
“எதை?”
“என்னது எதை?”
“பார்க்கலாம் சொன்னீங்களே, அதான் எதை பார்க்கப் போறீங்கனு கேட்டேன்.” என்று அவள் ஒரு மாதிரியான குரலில் கூற,
“பேச்சு ஒரு தினுசாப் போற மாதிரி தெரியுது!” என்றான் உதட்டோரப் புன்னகையுடன்.
“அது நீங்க எடுத்துக்கிறதைப் பொருத்து.”
“நான் எப்படியும் எடுத்துக்கலை”
“அப்போ நானும் எப்படியும் சொல்லலை”
“உனக்கு வாய் ஜாஸ்தி”
“அதான் உலகம் அறிந்த விஷயம் ஆச்சே!”
“இங்க வா.. நான் உன் வாயை அடக்குறேன்.”
“எப்படி?”
“எப்படினு நீ நினைக்கிறியோ, அப்படி தான்” என்றான் சற்று சரசமான குரலில்.
சட்டென்று புதுவித உணர்வு அவளை ஆட் கொள்ளவும், அவள் அமைதியானாள்.
“என்ன அமைதியாகிட்ட?”
“ஹ்ம்ம்” என்றாள் சிறு வெட்கத்துடன்.
லேசாக வாய்விட்டுச் சிரித்தபடி, “வெறும் வாய் மட்டும் தான்” என்றான்.
“அதெல்லாம் இல்லை” என்று அவள் ரோஷமாகக் கூற,
“அப்போ செயல்லையும் காட்டுவனு சொல்ற!”
மீண்டும் வெட்கத்துடன், “ஹ்ம்ம்” என்றாள்.
அவன் ரசனையுடன் சிரிக்க, “குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ் அத்தான்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
அழைப்பைத் துண்டித்த பிறகும் அவளது இதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டது. வெட்கம் கொண்டு பேச முடியாமல் அழைப்பைத் துண்டித்தது தான் தானா என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது. இதுவரை உணர்ந்திடாத அந்த மெல்லிய படபடப்புடன் கூடிய புது உணர்வு, அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன்னைப் பெண்ணாக உணரச் செய்து, மலர வைக்க அத்வைத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நொடியில், உணர்வுப் பூர்வமாக உணர்ந்துக் கொண்டாள்.
அங்கே அத்வைத்தும் அதே நிலையில் தான் இருந்தான். அவள் அழைப்பைத் துண்டித்த பிறகும் கூட அவளது குரல் அவனது காதில் ஒலிப்பது போல் இருந்தது. ஒரே நாளில் தன்னுள் இப்படி ஒரு மாற்றமா என்று பெரிதும் ஆச்சரியம் கொண்டான்.
‘ஒருவேளை நமக்கே தெரியாம யது மாதிரி நாமளும் அன்புக்காக ஏங்கிப் போய் இருந்து இருக்கிறோமோ! அதான், அன்பு கிடைக்கவும் சட்டுன்னு பிடிச்சுக்கிட்டேனோ!’ என்று யோசித்த அவனுக்கு ‘இல்லை’ என்ற பதிலையே அவனது மனசாட்சி கொடுத்தது.
‘நிச்சயம் இது மட்டும் காரணம் இல்லை’ என்று நினைத்தவன், தன்னை முழுமையான ஆணாக உணர வைக்க செந்தமிழினியால் மட்டுமே முடியும் என்பதை, அந்த நொடியில் உணர்வுப் பூர்வமாக உணர்ந்து கொண்டான்.
அப்பொழுது அருள்மொழி செந்தமிழினியை கைபேசியில் அழைத்தான்.
அவள் அழைப்பை எடுத்ததும், அவன், “என்னடி அத்தை வீட்டுக்குலாம் போயிருக்க.. என் கிட்ட சொல்லவே இல்லை! துருவும் நீ வீட்டுக்கு வந்ததை சொல்லலை” என்றான்.
“அப்போ, நீயா கூப்பிடலை! அம்மா விஷயத்தை சொன்னதுக்கு அப்புறம், போன் செய்ற!” என்றாள்.
“ஏதோ ஒன்னு.. நீ ஏன் சொல்லலை?”
“என்னது ஏதோ ஒன்னா!” என்று கோபம் கொண்டவள், “நான் உன் கிட்ட விஷயத்தை சொல்லனும்னா, நீ போனை எடுக்கனும்.. ஒருத்தி போன் செய்தப்ப நாம எடுக்கலையே! அவளை கூப்பிட்டு என்ன ஏதுனு கேட்போம்னு இல்லை.. சாவகசமா மூனு நாள் கழிச்சு, அதுவும் அம்மா சொன்னதால் போன் செய்துட்டு, உனக்குப் பேச்சு வேற!” என்று வெகுண்டாள்.
‘மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டியேடா அருளு!’ என்று மனதினுள் கூறிக் கொண்டு, “ஹி.. ஹி.. சாரிடி..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“வழியாத சகிக்கலை” என்றாள்.
“நேத்து பேசனும்னு நினைச்சேன்.. நீ தலை வலினு படுத்துட்டனு அம்மா சொன்னாங்க.. அதுக்கு முன்னாடி ரெண்டு நாள் செம பிஸி.. வேலை டென்ஷனில் நானே மண்டை காஞ்சிப் போய் இருந்தேன்”
“..”
“என்னோட செல்ல தங்கச்சி தானே.. ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தவனின் பேச்சை மீண்டும் இடையிட்டவள்,
“இந்தக் கொடுமையை கேட்கிறதுக்கு உன்னை மன்னிச்சுத் தொலைக்கிறேன் போ” என்றாள்.
அவன் மென்னகையுடன், “சரி சொல்லு” என்றான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தில் வர ஸீன் ஒன்னு பார்த்தேன்” என்றவள், “விஷ்ணு காது குத்துனு பொய் சொல்லி அவனோட அண்ணனை லவ்வர் வீட்டுக்கு பொண்ணு கேட்க கூட்டிட்டுப் போவானே.. அந்த ஸீன் தான்” என்றாள்.
“இப்போ எதுக்குடி சம்பந்தம் இல்லாம இதை சொ..” என்று பேசிக் கொண்டிருந்தவன் பேச்சை நிறுத்தி அதிர்ச்சியுடன், “பிசாசே! என்னடி செய்து வச்சிருக்க?” என்று அலறினான்.
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “நான் எதுவும் செய்யலை.. நாளைக்கு இல்லைனா, நாளானைக்கு சிக்ஸ்-பேஸ்(6face – ஆறுமுகம்) மாமா நம்ம வீட்டுக்கு வந்து அத்தானுக்கு என்னை பொண்ணு கேட்பாங்க.” என்றாள்.
“என்னடி சொல்ற?” என்று பெரிதும் அதிர்ந்தவன், “உனக்கு யாரு இதைச் சொன்னது?” என்று கேட்டான்.
“எதை?”
“உன்னை பொண்ணு கேட்டு மாமா வருவாங்கனு யாரு சொன்னது?”
“அத்தான் கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டார்.. நான் ஓகே சொல்லிட்டேன்.”
“எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமாச் சொல்ற! அத்வைத் தான் விஷயத்தை சொன்னானா?”
“ஹ்ம்ம்”
“இதை ஏன்டி அம்மா கிட்ட சொல்லலை?” என்று கேட்டான்.
அவளோ, “எதுக்கு அம்மாவை பிரிப்பர் செய்துட்டு! லைவா நடக்கிறப்ப தான் அம்மாவோட மறுப்பு ஸ்டராங்கா இருக்கும்.” என்றாள்.
“என்னடி சொல்ற? ஓகே சொன்னேன் சொல்ற! ஆனா, அம்மா ஸ்டராங்கா மறுப்பு சொல்லனும் சொல்ற!” என்று, அவன் முடியை பிச்சிக்காத குறையாக வினவினான்.
அவளோ கேலிக் குரலில், “என்ன மயிலு! தல கிறுகிறுன்னு சுத்துதா?” என்றாள். (‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் வரும் வசனம்)
“கொலை வெறியை ஏத்தாதடி”
“இப்போ எதுக்கு இவ்ளோ பத்துசன்?”
“பத்துசன்ஆ!”
“அதான் டென்சன்”
“இப்போ மட்டும் என் முன்னாடி இருந்த, கொன்னுடுவேன் பிசாசு.. உசுரை எடுக்காம விஷயத்தை சொல்லித் தொலை” என்று அவன் பொரிய,
அப்பொழுதும் அவள் அலட்டிக் கொள்ளாமல், “பெருசா ஒன்னும் இல்லைடா.. கிழவியைச் சும்மா விடக் கூடாதுனு முதல்ல மறுப்பு சொல்லி, அப்புறம் ஓகே சொல்லிக்கலாம்னு பிளான் போட்டேன்.” என்றாள்.
Advertisement