வீடே போர்க்களமாகக் காட்சியளிக்க, சொற்போரிட்டுக் கொண்டிருந்த மரகதத்தையும் செந்தமிழினியையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார், வேணுகோபால்.
அப்பொழுது அவரது கைபேசி அலற, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவர், “சொல்லுப்பா” என,
எதிர்முனையில் இருந்த அருள்மொழி, “இன்னைக்கு சத்தம் அதிகமா இருக்கே! என்னாச்சுபா?” என்று கேட்டான்.
அப்பொழுது, “நீ என்ன சொன்னாலும் என் முடிவில் இருந்து நான் மாற மாட்டேன்.” என்று மரகதம் கூறிக் கொண்டு இருந்தார்.
அதற்குப் பதிலாக, “தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.” என்றாள் செந்தமிழினி.
“இப்போ எதுக்குடி இதைச் சொல்ற?”
“ஹ்ம்ம்.. உன் பொண்ணுக்கு உன்னை விட பிடிவாதம் அதிகம்னு சொல்றேன்.” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் கூற, அவர் கோபமூச்சை வெளியிட்டபடி, அவளை முறைத்தார்.
வெளியே சென்ற வேணுகோபால், “காலையில் ஆரம்பிச்ச சண்டை.. ஓய்ந்தபாடா இல்லைடா.. காலைச் சாப்பாட்டை பன்னிரெண்டரைக்கு போட்டாங்க.. மதிய சாப்பாடு நைட்டுக்குள்ளயாச்சும் கிடைக்குமானு தெரியலை.” என்று கவலையோடு கூறினார்.
அவர் சொன்ன விதத்தில் மெலிதாகச் சிரித்தவன், “ஏன்பா இப்படி இருக்கிறீங்க? நீங்க தடுக்க வேண்டியது தானே! அம்மா கிட்ட பேசுங்களேன்.” என்றான்.
“ஏன்டா மகனே நான் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா! வேலியில் போற ஓணானை வேட்டிக்குள்ள விடச் சொல்ற!”
“அப்பா! சரி, தமிழ் கிட்ட பேசுங்க.. அவ நீங்க சொன்னா கேட்பாளே!”
“கேட்பா தான், ஆனா தனியாச் சொன்னா.. இவங்க தான் இடைவெளியே விடாம சாப்பிடும் போது கூட பிஜிஎம் (BGM – Back Ground Music) வாசிக்கிறாங்களே! அது போக, இந்த விஷயத்தில் எனக்கே அம்மா சொல்றது தான் சரினு தோணுது.”
“என்ன பிரச்சனைனு சொல்லுங்க.. தமிழ் கிட்ட நான் பேசுறேன்.”
“தமிழுக்கு ட்ரேனிங் இந்த வாரத்தோட முடியுது..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“ஆமா.. அதில் என்ன பிரச்சனை?”
“இப்போ பெர்மனென்ட் ப்ளேஸ்மென்ட் பெங்களூர், சென்னை ரெண்டு இடத்திலும் வேகன்சி இருக்குதாம்.. தமிழ் பெங்களூர் போறேன்னு சொல்றா, அம்மா முடியாதுன்னு சொல்றா.”
“அம்மா சொல்றது சரி தானேப்பா.. சென்னையில் வேகன்சி இல்லைனா, பெங்களூர் சரினு சொல்லலாம்.”
“இப்போ புரியுதா! நான் ஏன் எதுவும் பேசலைனு.”
“சரி, போனை தமிழ் கிட்ட கொடுங்க”
உள்ளே சென்று, “தமிழ், அருள் பேசுறான்.” என்று போனை நீட்ட,
மரகதம், “ஸ்பீக்கர் போடுங்க.” என்றார்.
வேணுகோபால் அவ்வாறே செய்யவும், அருள்மொழி, “தமிழ், இந்த விஷயத்தில் அம்மா சொல்றது தான் சரினு எனக்கும் தோணுது.. பாஷை தெரியாத ஊரில் நீ ஏன் கஷ்டப்படனும்?”
“உனக்கும் இது பொருந்தும் தானே! பையன்னா ஒரு சட்டம், பொண்ணுனா ஒரு சட்டமா?”
“இதில் பையன் பொண்ணு எங்கே வந்தது?” என்று அருள்மொழி வினவ,
அதே நேரத்தில் மரகதம், “ஆமாடி அப்படி தான்.. என்ன தான் ஆணுக்கு பெண் நிகர்னு சொல்லிக் கிட்டாலும், சில விஷயம் நம்ம ஊருக்கு செட் ஆகாது..
‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ னு உன்னை மாதிரி ஆட்களுக்காகத் தான் வள்ளுவர் எழுதி வச்சிருக்கார்”
“என்னோட மானசீக குரு பாரதியார் தான்.. ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!’னு உன்னை மாதிரி ஆட்களுக்காகத் தான் பாரதி அன்னைக்கே எழுதி வச்சிருக்கார்”
“நான் என்ன சொல்றேன்! நீ என்ன சொல்ற! சும்மா விதண்டாவாதம் செய்யாத.. அப்போ, நீ வேலைக்கே போக வேண்டாம்”
“உனக்கு பதில் சொல்லத் தெரியலைனா, உடனே வேலையை விடச் சொல்லுவியா? இந்த வேலை கிடைக்கிறது ஒன்றும் ஈஸியான விஷயம் இல்லை.. உன்கிட்ட சொல்லாம அங்க போக எனக்குத் தெரியாதா? உன்னிடம் சம்மதம் கேட்டா, நீ என்னை வேலையை விடச் சொல்லுவியா?” என்று சண்டக்கோழியாக சிலிர்த்துக் கொண்டு நின்றாள் செந்தமிழினி.
“நீ..” என்று மரகதம் ஆரம்பிக்க,
அருள்மொழி சற்று குரலை உயர்த்தி, “அம்மா.. நான் தான் பேசிட்டு இருக்கிறேனே.. கொஞ்சம் என்னைப் பேச விடு..” என்றான்.
“யாரு என்ன சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லை” என்று மரகதம் கூற,
“என் முடிவிலும் தான்” என்றாள் செந்தமிழினி.
இருவரும் முறைத்துக் கொண்டு நிற்க,
அருள்மொழி, “தமிழ்.. பொண்ணு பையன்னு நான் பேசவே இல்லை.. இத்தனை வருஷம் இங்கே இருந்ததில் கிடைத்த அனுபவத்தை வைத்துத் தான் சொல்றேன்.. பெங்களூர் மட்டும் தான் ஆப்ஷன்னா, நானே அம்மாகிட்ட பேசி, உன்னை இங்கே கூட்டிட்டு வருவேன்.
ஆனா, உனக்கு சென்னை கிடைக்கிறப்ப, நீ ஏன் இங்கே வந்து, என்னை மாதிரி கஷ்டப் படணும்னு தான் சொல்றேன்.. நம்ம வீட்டிலேயே நிம்மதியா இருந்து, அம்மா சாப்பாடு சாப்பிட்டு சந்தோஷமா இரு.. கொஞ்சம் யோசிடா..” என்றான்.
“டேய்.. இவளுக்கு முடிச்சுட்டு தான் உனக்கு பார்க்கணும்.. ரெண்டு வருஷம் கழிச்சு இவளுக்கு பார்த்து முடிச்சு.. அதுக்கு அடுத்த வருஷம்னா உனக்கு இருபத்தி ஒன்பது வயசாகிடும்”
“அம்மா.. இப்ப எல்லாம் பொண்ணுங்களே அந்த வயசில் தான், கல்யாணம் செய்துக்கிறாங்க.”
“மத்த வீட்டுக் கதையைப் பத்தி எனக்குக் கவலை இல்லை”
“அட்லீஸ்ட் ஒரு வருஷமாச்சும் அவளை ப்ரீயா விடுமா.” என்று அவன் கூற,
செந்தமிழினி, “டேய் அண்ணா!” என்று கத்தினாள்.
‘இவ ஒருத்தி மலை இறங்கிட்டு இருக்கிற ஆத்தாவை ஜெட் வேகத்தில் திரும்ப மேல ஏத்தி விட்டிருவா.’ என்று மனதினுள் புலம்பியவன்,
“தமிழ் கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்றான்.
பின் அன்னையிடம், “என்னம்மா சொல்ற?”
“சரி..” என்றார் மரகதம் அரை மனதுடன்.
“இப்போ சரி சொல்லிட்டு, கொஞ்ச நாளில் மாப்பிள்ளை, கல்யாணம்னு ஆரம்பிச்சா, பெங்களூர்லாம் இல்லை, அப்ராட் போய்டுவேன்.” என்று மிரட்டிய செந்தமிழினி, “டேய் அண்ணா.. எதுக்கும் வாய் வார்த்தையா ஒழுங்கா சொல்லச் சொல்லு.” என்றாள் கறார் குரலில்.
மரகதம் அவளை முறைத்தபடி, “சரிடி.. நீ சென்னையிலேயே வேலை பார்த்தா, இன்னும் ஒரு வருஷத்துக்கு உனக்கு மாப்பிள்ளை பார்க்க மாட்டேன்.” என்றவர் அறியவில்லை, மகள் தனக்கு அந்த வேலையை வைக்கப் போவது இல்லை என்பதோடு,
தானே, ‘இவளை பெங்களூருக்கே வேலைக்கு அனுப்பி இருக்கலாம்’ என்று நினைத்து மனதினுள் வருந்தப் போவதை.
அன்னையைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தவள் தனது அறைக்குச் சென்றாள்.
அன்னையிடம் சில நிமிடங்கள் பேசிய அருள்மொழி அடுத்து தங்கையின் எண்ணிற்கு அழைத்தான்.
அவள் அழைப்பை எடுத்ததும், “என்னடா அண்ணா மேல கோபமா?” என்று கேட்டான்.
அவள் வாய்விட்டு சத்தமாகச் சிரிக்கவும், “என்னடா?” என்று கேட்டான்.
அவள் புன்னகையுடன், “அங்க வந்து தினமும் உனக்கு வடிச்சுக்கொட்ட நான் என்ன லூசா? நேத்தே சென்னை தான் வேணும்னு எழுதிக் கொடுத்துட்டேன்.. எனக்கு, லக்ஸ், பாடிசோடாக்குமட்டும் பெருங்குடி.. மத்தவங்க அதே ஸ்டெர்லிங் ரோட் ஆபீஸ்.” என்றாள்.
[பாடிசோடா – அவளது நண்பன் கண்ணன். கண்ணன் என்ற பெயர் கண்ணா, கண்ஸ், ஐய்ஸ்(eyes,) சோடா புட்டி என்று பலவாறு உருமாறி, தற்போது பாடி சோடாவில் வந்து நிற்கிறது.
லக்ஸ்(LUX) – அவளது தோழி லட்சுமி.
கல்லூரியில் செந்தமிழினிக்கு பெரிய நண்பர்கள் பட்டாளமே இருந்தாலும், இவர்கள் மூவரும் தான் நெருங்கிய நண்பர்கள். அதுவும் இவளது சேட்டைகளின் முக்கிய கூட்டாளி கண்ணன் தான்.]
“அடிப் பாவி.. அப்புறம் எதுக்குடி நாள் பூரா சண்டை போட்டிருக்க? என்னையும் தொண்டைத் தண்ணி வத்த பேச வச்ச?”
“எனக்கு என்னவோ, உனக்கு செம நாட்டுக்கட்டை தான் அமையும்னு நினைக்கிறேன்.. அதுவும் நீயா அமைச்சுக்கப் போறது இல்லை.. நம்ம எமரல்டா(மரகதம்) பார்த்து தந்தா தான் உண்டு”
“என்ன ஒரு நல்ல எண்ணம்!”
“சரி சரி.. என்னோட வெற்றியை பாடிசோடா, லக்ஸ் கிட்ட சொல்லணும்.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள் அடுத்து நண்பர்களை அழைத்து பேசத் தொடங்கினாள்.