இரவு எல்லாம் அவரவர் அறைக்குள் அடங்க, “தோட்ட வீட்டுக்கு போறேன்” என்றான் தேவா எனும் நல்லவன் மட்டும்.

“சரி கிளம்புங்க” என்று துளசி படுத்துக்கொள்ள,

“கிளம்பவா?” தேவா நின்று அவளை முறைத்தான்.

“லைட் ஆப் பண்ணிட்டு, கதவை சாத்திட்டு போயிடுங்க” என்றும் மனைவி சொல்ல.

“என்னடி லொள்ளா?” என்றான் கணவன் அவள் போர்வையை இழுத்து.

“ச்சு. குளிருதுங்க” என்று துளசி திரும்ப போர்வையை எடுக்க போக, தேவா மனைவி மேல் விழுந்து வைத்தான்.

“வலிக்குதுங்க. இப்படியா விழுவீங்க”

“இப்போ குளிராதுடி”

“போர்வையை உருவிட்டு என்னமோ! தள்ளி படுங்க”

“முடியாது. நம்ம சண்டை இன்னும் முடியலை” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.

துளசி அவன் பின் தலை முடி பற்றி இழுத்து தன் முகம் பார்க்க வைத்தாள்.

தேவா அவளின் பிடிக்குள் அடங்காமல் உதட்டில் முத்தம் வைக்க, “சம்மதம் சொல்ல போறீங்களா?” என்று கேட்டாள் துளசி.

“சம்மதம் கொடுக்காட்டி, முத்தம் கொடுக்க விட மாட்டியா என்ன?” என்றவன், திரும்ப திரும்ப அவளின் உதட்டில் தடம் பதித்தான்.

“என்னங்க”

“சொல்லுங்க”

துளசி கணவன் கன்னங்களை அழுத்தமாக பற்றி தன் கண்களை காண வைத்தவள், “உங்களுக்கான என் கிஃப்ட்டை நீங்க தடுக்க முடியாது” என்றாள்.

“அதில என் பங்கும் இருக்குடி” என்றான் கணவன்.

“தெரியுது இல்லை. கொடுங்க”

“எனக்கு உன் கிப்ட் வேணாம்”

“தேவா”

“பேர் சொல்ற”

“வாடா, போடா கூட சொல்லுவேன்”

“சொல்லு. கேட்போம்” என்றவனிடம் ஆவலே!

“ச்சு” என்ற துளசி கண்களை மூடி கொண்டாள். கோவம் என்பதை விட வருத்தம் அதிகம்.

தேவா மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன், “எனக்கு பொண்ணு வேணாம்டி” என்றான்.

“என் புருஷனுக்கு வேணும்” என்றாள் துளசி உறுதியாக.

என் அப்பாவிடம் நான் எப்படி இருந்தேன்! என் அப்பா என்னிடம் எப்படி இருந்தார்! அந்த உறவு! அதில் இருக்கும் அன்பு!

எனக்கு என் அப்பா ஹீரோவாக இருந்தார். அவருக்கு நான் இளவரசியாக இருந்தேன்!

என் தேவா இதை அனுபவிக்க வேண்டாமா! அவருக்கு அந்த அன்பு கிடைக்க வேண்டாமா! இளவரசி அவருக்கும் வேண்டும்!

எத்தனை வகையான உறவில் பெண் ஒருவன் வாழ்க்கையில் வந்தாலும், மகள் எனும் உறவு வேறு. அதற்கு வேறெந்த ஈடு இணையும் கிடையாதே!

“எனக்கு நீங்க இருக்கீங்க, பசங்க இருக்காங்க, அப்பா ஸ்தானத்துல இரண்டு மாமாங்க இருக்காங்க. அண்ணன் ஸ்தானத்துல இந்த வீட்டு மருமகன்ங்க இருக்காங்க. ஆனாலும் என் அப்பா போல யாரும் கிடையாது. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியல. முடியவும் முடியாதுங்க” என்று துளசி சொல்ல,

“எங்களுக்கும் என் அப்பா அப்படிதாண்டி” என்றான் தேவா.

“என் பசங்களுக்கும் நானும் அப்படி தான். அப்பாவா எப்படின்னு நான் உணர்ந்துட்டேன். போதும் எனக்கு” என்றான்.

துளசி உடல்வாகு எப்போதும் ஒன்று போலவே உள்ளது.  இரண்டு குழந்தை வயிற்றில் இருந்த போதும் எடை கூடவில்லை. இவளின் சத்து தான் கரைந்து போனது போலவே பிரசவ அறையில் இருந்து வெளியே வருவாள். பழையபடி மீளவே ஆறேழு மாதமாகிவிடும்.

தேவாவிற்கு போதுமென்றாகிவிட்டது. இனி குழந்தை பற்றி அவன் நினைக்க கூட தயாராக இல்லை. ஆனால் துளசி  விட வேண்டுமே!  ஜீவாவிற்கு இரண்டு வயது ஆகவும் ஆரம்பித்துவிட்டாள்.

தேவா விடாப்பிடியாக நிற்க, மனைவி அவனுக்கு மேல் நிற்கிறாள்.

“பசங்களுக்கு அப்பாவா இருக்கிறதும், பொண்ணுக்கு அப்பாவா இருக்கிறதும் ஒரே மாதிரியா என்ன? நாம அதை புரிஞ்சுக்கவே நமக்கு பொண்ணு வேணும்” என்றாள் துளசி.

 தேவாவிற்கே அவளின் பிடிவாதம் ஆச்சரியம் தான்!

“என்னடி இப்படி மல்லுக்கு நிக்கிற?” என்று கேட்டுவிட்டான் தேவா.

“இன்னும் நிக்கவே ஆரம்பிக்கலை. கேட்டுட்டு தான் இருக்கேன்” என்றாள் மனைவி.

“நீ போந்தா கோழியாவே இருந்திருக்கலாம்டி” என்று தேவா அவளிடம் சரிந்து படுக்க போக, துளசி அவன் டிஷர்ட் காலர் பற்றி தன்னோடே இருக்க வைத்தாள்.

“உன்மேல வெய்ட் போடாம இருக்கிறதால என் கனம் உனக்கு தெரியலை” என்றான் தேவா.

“அப்படியா? உங்க வெய்ட் எனக்கு தெரியாதா?” துளசியிடம் அவ்வளவு விஷமம்.

“ஹேய்” தேவா காதுகள் சட்டென சிவந்துவிட்டன.

“ரொம்ப சீண்டாதடி! மயங்க மாட்டேன்”

“இன்னும் மயங்க என்ன இருக்காம்?” என்று கேட்டாள் மனைவி.

“தெரிஞ்சு தான் என்னை மடக்க பார்க்கிற”

“நான் மடக்காமலே என்கிட்ட மடங்கினவர் தானே நீங்க”

“ஹேய் என்னடி. ரொம்ப பேசுற” என்று அவளின் கன்னத்தை கடித்து வைத்தான்.

“சண்டை போடுறோமா என்ன?” துளசி குறும்பாக கேட்க.

“கண்டிப்பா. அதிலென்ன சந்தேகம்” என்றான் நல்லவன்.

“சமாதானம் எப்ப நடக்கும்” என்று கணவன் நெஞ்சை வருட,

“நீ உன் பிடிவாதத்தை விட்டுட்டா” என்றான் தேவா.

“எனக்கு சமாதானமே வேணாம். போங்க” என்று தள்ளிவிட,

“எனக்கு வேணுமே” என்றவன் மனைவியை முழுதாக தனக்குள் அடக்கினான்.

“ஏங்க வைக்கிறடி. சீக்கிரம் என் பேச்சை கேளு” என்றவன் மனைவி முந்தானையில் கைவைக்க,

சுள்ளென அடி வைத்தவள், “நீங்க ஓகே சொல்லி கூட சமாதானம் பண்ணலாம்” என்றாள்.

எப்படியும் அவள்தான் ஜெயிப்பாள் என்று தேவாவிற்கு தெரிந்து தான் இருந்தது. அதனாலே கோபத்துடன் அலைந்தான்.

துளசி அவன் கோபத்தையும் கண்டுகொள்ளவில்லை. பிடிவாதத்தையும் விடவில்லை.

“பசங்களை இதுக்காகவே அத்தைகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன். வேஸ்ட் ஆச்சு பார்த்துக்கோங்க” என்று மிரட்டல் வேறு கணவனுக்கு.

“நானும் வேஸ்ட் ஆக கூடாதுன்னு தான் பாடுபடுறேன். விடுடி என்னை” என்றவன், மனைவியின் முந்தானைக்குள் மறைந்து போனான்.

“ஸ்ஸ். ஏங்க, அச்சோ” என்று துளசி அவனை விலக்க முடியாமல் முந்தானையை விலக்கினாள்.

“வந்தியா வழிக்கு” என்று மனைவியை பார்த்து கண்ணடித்தவன், துளசியின் சிவந்த முகத்தில் தெரிந்த முறைப்பில், “வலிச்சிடுச்சா?” என்று கேட்டு காயம் செய்த இடத்தை வருடியவன், மெல்ல கீழிறங்க, துளசி டக்கென அவனை தடுத்தவள்,

“டேட்டூ பக்கம் இனி நீங்க போக கூடாது. சொல்லிட்டேன்” என்றாள் மிரட்டலாக.

தேவா கண்கள் இடுங்க மனைவியை பார்க்க, “நான் கொடுக்க நினைக்கிறதை நீங்க வேணாம் சொல்றீங்க? உங்க காதல் உங்களுக்கு உசத்தின்னா என் புருஷனுக்கு நான் கொடுக்கிறதும் பெருசு தான்” என்றாள் மூச்சிரைக்க.

“என்னோட காதலை நான் இப்படி தான் கொடுப்பேன். வேணாம் சொல்வீங்களா நீங்க” என்று அவன் கன்னத்தில் மெலிதாக அடி ஒன்றும் வைத்தாள்.

“காதலா” தேவாவின் இதழ்கள் புன்னகைக்க ஆரம்பித்தன.

இத்தனை வருடத்தில் இன்று தான் துளசியிடம் இருந்து காதல் எனும் வார்த்தையை கேட்கிறான்.

காதல் என்கிறாள்! உங்களுக்கு கொடுக்கணும் என்கிறாள்!

ஆனந்தி அதிர்ச்சி! மனதுக்குள் ஜிலுஜிலுவென ஏதோ படர்ந்தது.

துணை இல்லா அவன் காதலுக்கு ஜோடி கிடைத்துவிட்டதாக நெஞ்சம் அதிர்கிறது.

“இப்படித்தான் ப்ரொபோஸ் பண்ணுவியாடி” என்று தேவா கேட்க.

“எனக்கு இப்படி தான் வரும்” என்றாள் மனைவி முறைப்பு மாறாமல்.

அடாவடி காதல்காரன் தேவா! அவன் மனைவியோ அமைதிப்படை காதலாக அல்லவா இருக்கிறாள்!

துளசி நெற்றி முட்டி அவள் மீது முழுவதுமாக படுத்துவிட்டான்.

அவனுக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் வெறுமை, நிரம்புகிறது!

தேவாவை முழுதாக அணைத்து கொண்ட துளசி, “என் கிஃப்ட்டை அக்சப்ட் பண்ணிகோங்க” என்றாள்.

தேவா நிமிர்ந்து மனைவி கண்களை கண்டவன், “எப்போ இருந்து?” என்று கேட்டான்.

“தெரியாது. பிடிக்கும். காதலா எப்போ மாறுச்சுன்னு தெரியாது” என்றாள் மனைவி.

தன்னுள் உருமாறும் உணர்வுகளை அவ்வளவு எளிதில் இனம் காண முடியுமா என்ன? தேவாவிற்கு இது தெரியும்!

“இதை தவிர வேற கிஃப்ட் கிடையாதா?” தேவா கேட்க,

“இதுல தான் என் முழு காதலும் இருக்கு” என்றாள் மனைவி.

பேராசைக்காரன் தேவா! அவனுக்கு முழுதும் வேண்டும்! ஆனால் மனைவி!

“என்னை கண்டிப்பா ஆரோக்கியமான வைச்சுப்பேன். உங்க பொண்ணு சப்போர்ட் பண்ணுவா” என்றாள் துளசி.

“பொண்ணே கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது துளசி” தேவா சொல்ல.

“கிடைக்கிற வரைக்கும் நானும் விட மாட்டேன்”

“என்ன”

“பதறாதீங்க.  நிச்சயம் இப்போ பொண்ணு தான்” என்று உறுதியளித்தாள்.

“பிடிவாதத்தை விடவே மாட்டியா?”

“கண்டிப்பா மாட்டேன்”

அவளின் உறுதி தேவாவிற்கு புரியாமல் இல்லை. “இந்த ஒரு முறை மட்டும்” என்று சம்மதம் கொடுத்தான்.

துளசி கண்கள் கலங்கி கணவன் முகமெல்லாம் முத்தம்!

“இவ்வளுவா ஏங்கி போயிருந்த?” தேவா அரைகுறை மனதோடு சம்மதம் சொன்னவன் அதிர்ந்தான்.

“பேசிட்டே இருந்தா பாப்பா கிடைக்காது” என்று துளசி கணவன் உதட்டை அடைத்தாள்.

“ஹேய். நிதானமாடி” என்ற தேவா சில நிமிடங்களில் அவன் நிதானத்தை இழந்தான்.

இத்தனை வருடங்களில் இன்று தான் துளசி முழுதாக தேவாவின் வெயிட்டை உணர்கிறாள்.

தன்னுள் மிச்சம் பிடித்திருந்த அத்தனையும் துளசியிடம் சேர்த்தவனின் கனம் மனைவியை மூச்சடைக்க வைத்தது.

“மொத்த வித்தையையும் இன்னைக்கு தான் இறக்கியிருக்கீங்க போல” என்று துளசி கணவன் மீசையை இழுக்க,

“சரிக்கு சமமா என்னை பிழிஞ்ச நீ பேசக்கூடாதுடி” என்றான் கணவன்.

“ஏங்க” என்று துளசி வெட்கத்தில் அவன் நெஞ்சுக்குள் ஒளிய,

“ஏமாத்தியிருக்க நீ? உன் இடுப்பு வலுவை பார்த்துட்டேன்டி கேடி” என்றான் தேவா.

இருவர் மனதும் நிறைந்திருக்க, காதலும் முழுவீச்சில் உடைப்பெடுக்க, எஞ்சியிருந்த அத்தனை இரவுகளும் அவர்களுக்கான தேனிலவே!

“என் காதல் தோற்கவில்லை” என்ற பெரும் மகிழ்ச்சியை கணவனுக்கு கொடுத்தாள் துளசி.

“தேவாவை நான் இழக்கவில்லை” என்ற மாபெரும் நிம்மதியை மனைவிக்கு கொடுத்தான் தேவா.

ஓர் நல்ல நாளில், அதிகாலை சுபவேளையில் துளசியின் பரிசு தேவாவை சென்று சேர்ந்தது.

பூ போன்று மகளை தன் கைகளில் ஏந்தினான் தேவா.

“உங்க காதல் சாபமில்லை. எனக்கான வரம்!” என்றாள் துளசி.

துளசிக்கு ஆழமான முத்தத்தை பரிசளித்து பரிபூரணமாக நின்றான் தேவா.

தேவா காதலும் வென்றது! தேவாவும் வென்றான்!