அத்தியாயம் – 13

அந்த இரவு வேளையில் பேஸ்மெண்ட்டில் காரைப் பார்க் செய்துவிட்டு, மூன்று பேரும் லிஃப்ட்டில் அவர்கள் தளத்தை அடைந்த போது எதிர் ஃபிளாட்டில் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.  

“இன்னும் பார்ட்டி முடியலை போல ண்ணா.” என்றார் ருக்மிணி.

“தெரியலை டீ..மிஸஸ் ஸென் ஆறு மணிக்குன்னு சொன்னா..இப்ப மணி எட்டாயிடுத்து.” என்று பேசியபடி அவரது ஃபிளாட்டின் கதவைத் திறந்து கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன். அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளாமல் அவன் ஃபோனில் பிஸியாக இருந்தான் ஜெய். அப்போது எதிர் வீட்டின் வரவேற்பறையில் இருந்து குரல் கொடுத்தார் மிஸஸ் ஸென்.

“மிஸஸ் கிருஷ்ணன்..வாங்க..இப்பதான் கேக் கட் செய்யப் போறோம்.” என்றார்.

“இப்பதான் கேக் கட் செய்ய போறாளாம்..கூப்பிடறாளே..என்ன ண்ணா செய்ய?” என்று சங்கடப்பட,

“நீ போய் தலையைக் காட்டிட்டு வந்துடு..கேக்கெல்லாம் சாப்பிட வேண்டாம்..முட்டை போட்டிருப்பா.” என்று எச்சரிக்கை விடுத்தார் பாலகிருஷ்ணன்.

“அவாளுக்கும் நவராத்திரி ண்ணா..முட்டை சாப்பிட மாட்டா.” என்றார் ருக்மிணி.

“நேக்கு அதெல்லாம் தெரியாது..சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன்.” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றார்.

அப்போது அவருடைய வீட்டிலிருந்து வெளியே வந்த மிஸஸ் ஸென், ருக்மிணியுடன் ஜெய்யும் இருப்பதைப் பார்த்து,”பேட்டா..நீங்களும் வாங்க.” என்று அழைப்பு விடுத்தார்.

அவர் அழைப்பை நிராகரிக்க முடியாமல், அம்மா, பையன் இருவரும் நிவேதிதாவின் வீட்டிற்குச் சென்றனர்.  அங்கே அந்தப் பிளாக்கை சேர்ந்த சில குழந்தைகளும் வேறு சில குழந்தைகளும் பெற்றோர்களும் இருந்தனர். 

அவருடைய மகன் பினாக்கியையும் மருமகள் சுஷ்மிதாவையும் ஜெய்க்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மிஸஸ் ஸென். மஞ்சள் நிற பர்த்டே ஃபராக்கில் அழகாக இருந்தாள் நிவேதிதா.  மிஸஸ் ஸென்னின் கையைப் பிடித்து ஃபிரிஜ்ஜிற்கு அழைத்து சென்று,”கேக்கை வெளியே எடுங்க.” என்றாள்.

நிவேதிதாவின் உதவியுடன் ஃபிரிஜிலிருந்து ஜாக்கிரதையாகக் கேக்கை கொண்டு வந்து செண்டர் டேபிளில் வைத்தார் மிஸஸ் ஸென்.  சதுர வடிவில் சாக்லெட் பேஸ், அதன் மேல் வட்ட வடிவில் வெண்மையான வண்ணிலா கேக். அதன் மேல் மூன்று கரமெல் பார் முக்கோண வடிவில்.  சதுர  வடிவிலிருந்த சாக்லெட் பேஸின் மேல் அனைத்து வடிவங்களிலும் வெள்ளைச் சாக்லெட் துண்டுகள்.  வெவ்வேறு வடிவங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த பர்த்டே கேக்.  

அந்த கேக்கைப் பார்த்து,“ஏன் இதுலே ஹாப்பி பர்த்டேன்னு எழுதலை? என்று அந்தக் கூட்டதிலிருந்த, சற்று வயதில் பெரிய குழந்தை கேட்டது.

“அவளுக்குப் பிடிச்ச மாதிரி பர்த்டே கேக்  பண்ணியிருக்கறது அவளுக்கு ஹப்பினெஸ் கொடுக்கணும்னுதான்னு அவங்க மேம் சொன்னாங்க.” என்று மிஸஸ் ஸென் பதிலளித்தார்.

உண்மையில் அந்த கேக் நிவேதிதாவிற்கு பிடித்தமான வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால்,  அவள் முகத்தில் ஒளிர்ந்த மகிழ்ச்சியே ஹப்பி பர்த்டே வாக்கியத்தை அனாவசியமாக்கியது.

குழந்தைகளும் பெரியவர்களும் வாழ்த்து பாட, பெருமை பொங்க அவளுடையப் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினாள் நிவேதிதா.  இரவு உணவிற்கான நேரம் நெருங்கி விட்டதால் வந்திருந்த விருந்தினர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்க முடியாமல் அவசரமாகக் கேக்கையும் ஸ்னாக்ஸையும் பேக் செய்து, ரிடர்ன் கிஃப்டுடன் குழந்தைகளையும் பெற்றோர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் மிஸஸ் ஸென்னும் சுஷ்மிதாவும்.  கடைசியாக, ருக்மிணிக்கும் அவர் பேக் செய்ய ஆரம்பித்த போது பாலகிருஷ்ணன் சொன்னது அவரது நினைவுக்கு வர,

“கேக் வேண்டாம் மிஸஸ் ஸென்..முட்டை போட்டது சாப்பிடறது இல்லை.” என்று மறுத்தார்.

“இதுலே முட்டைக் கிடையாது….எல்லாமே வெஜிடேரியன் தான்.” என்று பதில் அளித்தார் மிஸஸ் ஸென்.

அப்போது அவள் கேக்கில் இருந்த வடிவங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிவேதிதா,” பாட்டி, உங்களுக்கு கேக் வேணாம்னா சாக்லெட் தரட்டுமா?” என்று ருக்மிணியிடம் கேட்டாள்.

“தாயேன்.” என்றார் ருக்மிணி.

உடனே ஓடிப் போய் ஃபிரிஜைத் திறந்து, அதிலிருந்து ஒரு பெரிய டப்பாவை கொண்டு வந்து, அதைத் திறந்து, டைனிங் டேபிளின் மேல் இருந்த தட்டில் அதைக் கொட்டினாள் நிவேதிதா.  டப்பாவிலிருந்து வைட் சாக்லெட், டார்க் சாக்லெட்டில் ஆங்கில எழுத்துக்களும், சதுரம், வட்டம், முக்கோணம், இதய வடிவங்களும் தட்டில் குவிந்தன.

ஸீரியஸான முகத்துடன், “உங்க பெயர் சொல்லுங்க நான் அந்த ஆல்ஃபட் சாக்லெட் கொடுக்கறேன்.” என்றாள் நிவேதிதா.

அவள் சொன்னது புரியாமல் ருக்மிணி மௌனம் காக்க, அதுவரை அவன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த ஜெய், டேபிள் அருகே வந்து, நிவேதிதாவின் முன் மண்டியிட்டு,”ஜெய்” என்றான்.

உடனே, அந்தச் சாக்லெட் குவியலிலிருந்து  “J, A, I என்ற ஆங்கில எழுத்துக்களை தேர்ந்தெடுத்து, அதை வைத்து ‘JAI’ என்று டேபிளில் அமைத்து, “கரெக்ட்டா?” என்று அவனிடம் கேட்டாள் நிவேதிதா.  அவன் இல்லை என்று தலையசைத்தவுடன், “I” யை எடுத்துவிட்டு அந்த இடத்தில் “Y” யை வைத்தாள்.    

“ப்ரிலியண்ட்.” என்று அவளை அணைத்துக் கொண்டான் ஜெய்.

அடுத்து, ருக்மிணியைப் பார்த்து,”உங்க பெயர் சொல்லுங்க பாட்டி.” என்றாள் நிவேதிதா.

“பாட்டி பெயர் பெரிசு..உனக்கு எழுத வராது.” என்றார் மிஸஸ் ஸென்.

“அவளுக்கு எந்த சவுண்ட் ஃபார்ம் செய்ய முடியும்?” என்று அவரிடம் கேட்டான் ஜெய்.

“வவ்வள்ஸ் A, E, I அப்புறம் “A, I” இரண்டோட சவுண்டும் சேர்ந்து வர்ற  “Y”.” என்றார் மிஸஸ் ஸென்.

“ஓகே..பாட்டியோட பெயர் “மினி”.” என்று ருக்மிணியின் பெயரைச் சுருக்கினான் ஜெய்.  

அதைக் கேட்டவுடன் அந்த ஆல்ஃபட் குவியலிலிருந்து “M”,”N”,”E” என்ற எழுத்துக்களைப் பொறுக்கி, ‘MENE’என்று சாக்லெட் ஆல்ஃபெட்டால் ருக்மிணியின் பெயரை உருவாக்கினாள் நிவேதிதா.  

“நோ..” என்று ஜெய் சொன்னவுடன், “E” இருந்த இடங்களில் “I” யை வைத்து “MINI” கரெக்டா?” என்று கேட்டாள்.

“வண்டர்ஃபுல்”. என்று அவள் கையைக் குலுக்கினான் ஜெய்.

“எப்படி ஜெய் பெயர்லே “I” யை எடுத்திட்டு “Y” போட்டா? என் பெயர்லே “E” யை எடுத்திட்டு கரெக்டா “I” போட்டா?” என்று ருக்மிணி கேட்க,

“A, E, I , Y” இந்த நாலுக்கும் வர்ற எல்லா சவுண்டும் சொல்லிக் கொடுத்திட்டு வராங்க..எ, இ, ஐ  சவுண்ட் தான் முதல்லே குழந்தைகளுக்குக் சொல்லிக் கொடுக்கறோம் அதனாலே அந்த எழுத்தைதான் வார்த்தைகள்ளே முதல்லே யூஸ் செய்யணும்..அது தப்புன்னா அதே சவுண்டு கொடுக்கற அடுத்த வவ்வள் யூஸ் செய்யணும்னு பிராக்டீஸ் கொடுக்கறாங்க.” என்றார் மிஸஸ் ஸென்.

அதுவரை அமைதியாக இருந்த பினாக்கி,”வீட்லே, ப்ளே ஸ்கூல்லே, நர்ஸரிலே எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரியா A,B,C,Dநு தான் கத்துக் கொடுக்கறோம்..அதை வைச்சு சொற்கள் அமைக்கும் போது ஒரே எழுத்துக்கு வேற வேற சவுண்ட் வரும்போது குழந்தைங்களுக்குக் குழப்பம் ஆரம்பமாகுது..

ஒவ்வொரு வவ்வள்க்கும் இரண்டு, மூணு சவுண்ட் இருக்காலாம்..அதே சவுண்ட் ஸெமி வவ்வள்க்கும் இருக்கலாம்ன்னு புரிய வைக்கறத்துக்கு முதல்லே கிளாஸ்லே இருக்கற குழந்தைகளோட பெயரை வைச்சு ஆரம்பிச்சாங்க இந்த டீச்சர்..நாலு எழுத்து இருக்கற சின்ன பெயர்..அஜய், விஜய்..உங்க பெயரைப் போல..ஆனா ஒரு வித்தியாசம் இருந்திச்சு இரண்டு பெயர்லேயும்..

அஜய்  பெயர்லே கடைசிலே “ஐ” வந்திச்சு..விஜய்லே கடைசிலே “ஒய்” வந்திச்சு..அதை வைச்சுதான் “ஐ” சவுண்டுக்கு “y” யூஸ் செய்யலாம்னு சொல்லிக் கொடுத்தாங்க.. அதே போல ”ஐ” க்கு “இ” சவுண்ட்கூட வரலாம்ன்னு புரியறத்துக்கு குடும்பத்திலே யாருக்காவது அந்த மாதிரி பெயர் இருந்தா அதை எழுத குழந்தைக்கு கத்து கொடுக்கச் சொன்னாங்க..

இப்ப நிவின்னு அவ பெயரையும் என்னோட பெயரையும் தப்பு இல்லாம எழுதுவா.” என்று சொல்லி, நிவேதிதாவைப் பார்த்து,”அங்கிளுக்கு அப்பாவோட பெயரை ஆல்ஃபட்ஸ் வைச்சு பண்ணிக் காமிங்க.” என்றான்.

உடனே சாக்லெட் ஆல்ஃபட்ஸை வைத்து, “PINAKI” என்று அமைத்தாள் நிவேதிதா.  

“அமேஸிங்” என்று கை தட்டிய ஜெய்க்கு அந்த டீச்சரைப் பற்றி அறிய சின்னதாக ஆர்வம் ஏற்பட்டது.  

ஆனால் ஜெய் அறிந்திருக்கவில்லை அவனுடைய இன்ஸ்பிரேஷனின்  நினைவுளில் அவன் ஊழன்று கொண்டிருந்ததால்தான் உதாரணத்திற்கு கூட அவனது பெயரை உபயோகித்து, புது விதமாக குழந்தைகளுக்குப் பாடம் கற்று கொடுத்து கொண்டிருந்தாளென்று .

ஜெய்யின் பாராட்டைக் கண்டு கொள்ளாமல் மேஜையில் இருந்த அந்த சாக்லெட் ஆல்ஃபட்டுக்களைக் ருக்மிணி பாட்டிக்கு பேக் செய்யும்படி அவளுடைய அம்மாவிற்கு கட்டளையிட்டாள் நிவேதிதா. உடனே,

“பாட்டிக்கு நிறைய சாக்லெட் கொடுக்கணும்..வெறும் ஆல்ஃபெட்ஸ் சாக்லெட் மட்டும் தர்ற” என்று அவளைக் கோபித்துக் கொண்டாள் சுஷ்மிதா.

“இது மேம் என்னோட பர்த்டேக்கு கொடுத்தது..நிறைய தர மாட்டேன்.” என்று மறுத்தாள் நிவி.

“அப்படிச் சொல்லக்கூடாது..கேக், சாக்லெட் இரண்டும்  கொடுக்கணும்.” என்று சொல்லி பர்த்டே கேக், ஸ்னாக்ஸ் அதனோடு ஒரு பேக் நிறைய விதவிதமான வடிவங்களில் சாக்லெட்டுகளும் அவர்கள் பெயரை அமைக்க உபயோகித்த ஆல்ஃபட்ஸ் சாக்லெட்களையும் ருக்மிணியிடம் கொடுத்தாள் சுஷ்மிதா.

“இவளோட டீச்சர் செய்த சாக்லெட்டா இது?” என்று விசாரித்தார் ருக்மிணி.

“ஆமாம்..சுஷ்மிதாவுக்கு டயம் கிடையாது..எனக்கு கேக் செய்ய தெரியாது..அதனாலே அவங்க தான் கேக் பண்ணி கொடுத்தாங்க…ஸ்குவயர், ஸர்கில், டிரையங்கில் ஷேப்ஸ்லே.” என்றார்.

“என்கிட்டே நீங்க சொல்லியிருக்கலாம் நீங்க..நானும் கேக் பண்ணுவேன்.” என்றார் ருக்மிணி.

“நீங்க நவராத்திரின்னு பிஸியா இருக்கீங்க அதான் சொல்லலை.” என்றார் மிஸஸ் ஸென்.

அப்போது,”பாட்டி..உங்களுக்கு சாக்லெட்டும் செய்ய தெரியுமா?” என்று ருக்மிணியிடம் கேட்டாள் நிவேதிதா.

“இந்தப் பாட்டிக்கு கேக் மட்டும்தான் தெரியும்..சாக்லெட் பண்ண தெரியாது.” என்றார் ருக்மிணி

“இவ டீச்சர்கிட்டே கேக் மட்டும் தான் சொன்னேன்.. அவங்களோட பர்த்டே கிஃப்டா வைட் அண்ட் டார்க் சாக்லெட்ஸைக் கொடுத்துவிட்டு இருக்காங்க.” என்றார் மிஸஸ் ஸென்.

அப்போதுதான் அவர்கள் நிவேதிதாவிற்கு எந்த கிஃப்டும் கொடுக்கவில்லை என்று உணர்ந்த ருக்மிணி,”ஸாரி.. நிவி குட்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கறதுன்னு எனக்குத் தெரியலை.” என்று சொல்லி, 

“ஜெய்…குழந்தை கைலே பணம் கொடு டா.” என்றார்.  

அவனுடைய பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து நிவேதிதாவிடம் கொடுத்தான் ஜெய்.  

உடனே,”கிஃப்ட் எதுவும் வேணாம்..உங்களோட பிளெஸ்ஸிங்ஸ் போதும்..நீங்க பக்கத்துலே இருக்கறது எனக்கு ரொம்ப உதவியா இருக்கு..அன்னைக்கு ஜெய் பேட்டா தான் ஆஸ்பத்திரி அழைச்சுகிட்டு போனார்.”என்று அவருடைய மகனிடம் கூறினார் மிஸஸ் ஸென்.  அதற்கு,

“ரொம்ப தாங்க்ஸ்..நான் வீட்ல இருக்கற நேரம் கம்மி அதான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கலை..இன்னைக்குக்கூட நாலு மணிக்கு வர வேண்டியவன் ஏழு மணிக்கு மேலதான் வந்தேன் அதான் பார்ட்டி லேட்டாயிடுச்சு.” என்றான் பினாக்கி.

“நோ பிராப்ளம்..அன்னைக்கு ஐ வாஸ் ஃப்ரீ அதான் ஆஸ்பத்திரிக்குக் அழைச்சுகிட்டுப் போனேன்.” என்றான் ஜெய்.

“அம்மா சொன்னாங்க நீங்க அமெரிக்காலேர்ந்து வந்திருக்கீங்கன்னு..எத்தனை நாள் இங்கே இருப்பீங்க?” என்று விசாரித்தான்.

“ஐ யாம் ஆன் ஸபாட்டிக்கல். (I am on sabbatical)” என்றான் ஜெய்.

“நைஸ்.” என்றான் பதில் அளித்தான் பினாக்கி.

“இவளோட டீச்சர் வெளி நாட்டுலே வர்க பண்ணிட்டு இருந்தாங்களா?” என்று பஷனேட் டீச்சரைப் பற்றி அறியும் ஆவலில் பினாக்கியிடம் விவரம் கேட்டான் ஜெய்.

“இதுவரை அவங்களை ஒரேயொருமுறை தான் பேரண்ட்ஸ், டீச்சர்ஸ் மீட்டிங்கலே சந்திச்சிருக்கேன்..அவங்க இந்த வருஷம் தான் இவங்க ஸ்கூல்லே ஜாயின் பண்ணியிருக்காங்க..எக்ஸ்பிரியன்ஸ்ட் டீச்சர்தான்..வெளி நாடான்னு எனக்கு ஐடியா இல்லை.” என்றான் பினாக்கி.

ஜெய்யும் பினாக்கியும் உரையாடிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த ருக்மிணி,“அவ டீச்சர் வந்திருந்தாளா பர்த் டே பார்ட்டிக்கு? இல்லை அவா குழந்தையை மட்டும் அனுப்பி வைச்சாளா?” என்று கேட்டார்.

“அவளோட டீச்சர் ஸ்டுடண்ட் வீட்டுக்கு வர மாட்டாங்க..வரக் கூடாது..ஸ்கூல் ரூல்ஸ்..அவங்களுக்கு இன்னும் கல்யாணமாகலைன்னு நினைக்கறேன்.” என்றார் மிஸஸ் ஸென்.

அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு ஜெய்யும் ருக்மிணியும் வீடு திரும்பிய போது பாலகிருஷ்ணன் படுக்கைக்குத் தயாராகி கொண்டிருந்தார்.

“என்ன இத்தனை நாழி?”  என்று விசாரிக்க,

“நாங்க போன அப்புறம் தான் பர்த்டே கேக் கட் பண்ணினா..நாலு மணிக்கு வர வேண்டிய பினாக்கி ஏழு மணிக்கு மேலதான் வந்திருக்கான்..அதான் பார்ட்டியை லேட்டா ஆரம்பிச்சிருக்கா..கெஸ்ட் யாருமே அங்கே எதுவும் சாப்பிடலை..எல்லாருக்கும்  கேக், ஸ்னாக்ஸ் பேக் பண்ணி கொடுத்திட்டா மிஸஸ் ஸென்..நமக்கும் பேக் செய்து தந்திருக்கா..எதுலேயும் முட்டை இல்லை.”என்றார் ருக்மிணி.

“அப்ப ஃபிரிஜிலே எடுத்து வை…நாளைக்கு காலம்பற சாப்பிட்டுக்கலாம்..இப்ப படுக்கணும்..லேட்டாயிடுத்து..மாமி ஆத்து கொலுக்கு போனா எப்பவும் டிலே ஆயிடறது..இந்தத் தடவை ஜெய் கூட வந்ததுனாலே இன்னும் கொஞ்சம் லேட்டாயிடுத்து..நீயும் படுக்க போடா..இன்னைக்கு நீ தான் காரை டிராஃபிக்லே ஓட்டியிருக்க.” என்றார் பாலகிருஷ்ணன்.

“நேக்கு கொஞ்சம் வேலை இருக்கு ப்பா..அதை முடிச்சிட்டூ தான் படுக்க முடியும்..நீங்க படுத்துக்கோங்க.”என்று சொல்லி அவனறைக்குச் சென்றான் ஜெய்.

நிவேதிதா வீட்டில் கொடுத்த சகலத்தையும் ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டுப் படுக்க சென்றார் ருக்மிணி.  

அவனுடைய வேலையை முடித்துவிட்டு அர்த்த ராத்திரியில் தண்ணீர் பாட்டிலை எடுக்க ஃபிரிஜ்ஜை ஜெய் திறந்த போது, நிவேதிதா கொடுத்த ‘JAY’ சாக்லெட் எழுத்துகள் அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்த உடன்  A2I2 என்றது அவனது மனது.  

அந்த சாக்லெட் ஆல்ஃபட்ஸ் ஏற்படுத்திய ஆசையை அடக்கமுடியாமல் அதை அவன் படுக்கையறைக்கு எடுத்து சென்று, படுக்கையில் படுத்தபடி அந்த மூன்று எழுத்துகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிட்டான். 

ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சுவையை அளித்தது.  அந்த சாக்லெட்டுகளின் அலாதியான சுவையின் சுகத்தை இழக்க விரும்பாமல் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு படுத்தவன் சில நிமிடங்கள் கழித்து வேறு வழியின்றி  பாத்ரூமிற்கு சென்று பல் தேய்த்துவிட்டு வந்து மறுபடியும் படுத்துக் கொண்டான்.  

அவன் உறக்கத்தை தழுவுமுன் அவனது மனது நிவேதிதாவின் பஷனேட் டீச்சரைப் பற்றி அதுவரை மிஸஸ் ஸென் சொன்னதை அசைப் போட, அவள் பி.எட் டீச்சரா இல்லை ஃபுல்பிரைட் (fulbright) டீச்சரா என்ற கேள்வி எழுந்தது.

*******************

Fulbright scholarship programs are offered by the US to students, teachers and professionals from 100 plus countries around the world.

Its an exchange program too.