Advertisement

பெண்ணியம் பேசாதடி –17

நிசப்தமான நள்ளிரவில் ஓர் கனவு,

தேவைதை என் கன்னம் தாங்கி,

நிறைவு கொண்ட மனிதன் நீ,

என்று சொல்ல.

ஏன்? என்றேன்

அன்பு,அறம்,ஒழுக்கம்,

காதல், காமம், இன்பம்,

துன்பம், துயரம், கோபம்,

அனைத்தையும் பெற்றவன் நீ என்பதால் என்றது பெண்.

தேவதைக்கு என் பதில்

உண்மைதான் ஆனால் முழுமை அடைய செய்தவள் பெண்ணியம் அல்லவா பேசுகிறாள் ராட்சசி.

வாமனன் முன் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் வளவன். அவன் வலப்புறம் மூர்த்தியும், இடப்புறம் ரமேஷும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிர்புறம் வாமனன்.

காஞ்சனை குழந்தையை ஏந்தியவாறே ரமேஷைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். இல்லை இல்லை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

அவனோ தனது வலக்கையில் உள்ள விரல்களை மடக்கி மடக்கி விரித்துக் கொண்டு தனக்குள் பேசிக் கொண்டு இருந்தான். அவனது செயலில் பொறுமை இழந்த காஞ்சனை

“டேய் காலம் போன கடைசில என்ன ஒன்னு இரண்டு படிச்சுக்கிட்டு இருக்கக் கேட்டதுக்குப் பதில் சொல்லுடா மடச் சாம்பிராணி” என்று எகிறினாள்

(அது ஒன்றுமில்லை மருத்துவமனையில் இருந்தது மூன்றே நாட்கள் தான். அதில் எப்படி அந்தப் பெண்ணிடம் காதல் வந்தது, என்ற வினாக்கு விடை தெரியாமல் மீண்டும் மீண்டும் அந்த மூன்று நாளை முண்ணூறு முறை எண்ணிப் பார்த்தான் ரமேஷ்)

காஞ்சனையை  எரிச்சலாக முறைத்து பார்த்தவன் “இங்க பாருங்க அந்தப் பொண்ணுகிட்ட வம்பு பண்ணது உங்க பையன்.. எங்கிட்ட வந்து சொல்லுச் சொல்லுனா என்னத்த சொல்ல என்னால உங்க குடும்பத்தோட குப்பக் கொட்ட முடியல எனக்கு டிவோர்ஸ் கொடுங்க நான் எங்கையாவது போயி மூட்டை தூக்கி பொழைச்சுகிறேன்”.

“என்னடா இப்படி சொல்லிட்ட” என்றவளது கவலை முகத்தைப் பார்த்து கவிழ்ந்த ரமேஷ்

“ஏன் சித்தி கவலை படுற நான் போகலை” என்று பாசமாகச் சொல்ல அவளோ

“நீ போனா எப்படி எங்களுக்கு டைம் பாஸ் ஆகும்” வெகு அலட்சியமாகக் காஞ்சனை வம்பு செய்ய.

“சித்தி!…………..” வாய் வலிக்க ரமேஷ் கத்த.

“என்னடா” என்றவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.என்ன பேசினாலும் தான் வம்பு செய்வாளே ராட்சசி.

“ப்ச்… கொஞ்சம் பேசாம இரு காஞ்சனை.தம்பி சொல்லு என்னாச்சு ஏன் அந்தப் பொண்ணுக் கிட்ட வம்பு பண்ணுன” பொறுமையாக மூர்த்திக் கேட்க.

“தாத்தா! வம்பு பண்ணல பார்த்த உடனே  எனக்கு ரொம்பப் புடிச்சு இருக்கு தாத்தா. குட்டி முகம் ரொம்ப கியூட் அதான் கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டேன்

 நான் தூரமா இருந்து பாக்குறேன் இனிமே டிஸ்டர்ப் பண்ணல, ஆனா சரியா அஞ்சு வருஷம் போனதும் பொண்ணுக் கேட்டு கட்டி வைங்க” என்றவனைப் பார்த்து அனைவரும் திருத் திருத்தனர்.

“என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க என்றவன் தனது தந்தையிடம் திரும்பி அப்பா நீங்க சொல்லுங்க என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?”.

“ஹ்ம்ம்…. இருக்கு கண்ணா ஆனா அவங்க சைடு நீ எதிர்பார்க்க முடியாது எதிர்ப்புகள் வர வாய்ப்பு இருக்கு . நான் விசாரிச்சா வரைக்கும் ரொம்பச் சாதாரணக் குடும்பம் யோசிப்பாங்க பேசிப் பார்க்கணும் ஒரு தடவைக்கு மூணு தடவ பேசிப் பார்க்கணும்”.

“புரியுதுப்பா” தந்தை சரியாகக் கணித்துக் கூறுவதை ஒத்துக்கொண்டான் வளவன்.

“இப்போ எதுவும் பேச வேணாம் கண்ணா.நீ சொல்லுற மாதிரி அஞ்சு வருஷம் போகட்டும் பார்க்கலாம்.அதுவரை பார்த்து நடந்துக்கோ” என்றவர் சிரித்தவரே வளவன் கன்னம் தட்டிச் சென்றார்.

வெகு சுலபமாக முடிந்தது கதை. பார்த்தான் வம்பு செய்தான் அடுத்த நாள் கொஞ்சி நின்றான் இப்போது திருமணத்திற்குக் கெஞ்சி நிற்கிறான் அதுவும் மூன்றே நாளில் காதல் டு கல்யாணம் பிளஸ் வாழ் நாள் யோசனைகள் முடிவுகள் என்னா வேகம்

பார்த்து இருந்த ரமேஷுக்கு தான் வயிறு காந்தியது.இதே வளவன் இடத்தில் தன்னையும் வாமனன் இடத்தில் தனது தந்தையையும் நிறுத்திப் பார்க்க தனது தந்தையின் முரட்டுக் கரம் தனது கன்னத்தைப் பளார் என்று பதம் பார்த்தது.

நேரில் அடித்தது போல் ஐயோ!…..என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டான். அவன் தந்தை கண்டிப்பு மிக்கவர் இது போல் செய்து வைத்தால் உடம்பில் உயிர் தங்காது என்பது நூறு சதவீதம் உறுதி.ஆனால் இங்கு ‘என்ன குடும்பம் டா சாமி’ என்று லட்சத்தி ஒரு முறையாக எண்ணி கொண்டான்.

வாமனன் சென்றதும் காஞ்சனை புறம் அமர்ந்து அவளது தோளில் சாய்ந்தவன் “உனக்குப் புடுச்சு இருக்கா?” என்றவனை அன்பு பொங்க பார்த்தவள்.

“உங்க அப்பா எப்பவும் சொல்லுவாங்க நீ நல்ல குழந்தைனு. நீ ரொம்ப நல்லவன் டா. உன் தேர்வு சரியாத்தான் இருக்கும்” என்றவள் கண்ணில் நீர் பெறுக “என் அம்மாடா நீ அது எப்புடிடா ஒன்னு ஒன்னும் பார்த்துப் பார்த்து செய்யுற ஒரு பையனா இருந்துட்டு” நெகழ்ந்து கூற.

“அம்மா அது என்ன பையனா இருந்துட்டு….. எல்லாம் ஒன்னு தான் ஏன்? பொண்ணுக தான் இதெல்லாம் செய்யணுமா என்ன” என்று எழுத்தாளன் மகன் என்பதை நிரூபித்தான் (பெண்ணியம் மட்டும் தான் பேசுமா என்ன ஆண்மையும் இங்குப் பேசும்)

“அப்படி என்னதான் செய்தான் வளவன்?”

கூகுள் கடவுள் உதவியுடன் ஒரு பெண் மகவு ஈன்றெடுத்தாள் என்ன தேவைகளோ அதை ஒன்று விடாமல் காஞ்சனைக்கு வாங்கிக் குவித்தான்.குழந்தைக்கும் அதன் தேவைகளை மூன்று மாதத்திற்குப் பட்டியலிட்டு வாங்கி இருந்தான்.

தாய் செய்யும் வேலையைத் தாயுமானவனாக நின்று மகன் செய்ததை எண்ணி கண்ணீர் பொங்க அதிர்ந்து அமர்ந்து விட்டாள். சாத்தியப்படுமா குடும்ப வாழ்க்கை என்ற ஐயம் போய் இதோ இன்று என் குடும்பம், என் கணவன், என் மகன், என் மகளென்று.

இப்போது அவளது தோள் சாய்ந்த வண்ணம் அவன்.இந்த காட்சியை நிறைவாகப் பார்த்தார் மூர்த்தி.ரமேஷும் நெகிழந்து தான் இருந்தான். அவனையும் கூட்டி கொண்டே தானே சுத்தினான் வளவன்.

சில பொருட்களை வாங்கும் போதுக் கூச்சம் கொண்டு தள்ளி நிற்கும் சூழ்நிலை வந்தது தான் இல்லை என்பதற்கில்லை அதனைத் தாய் அன்பால் கடந்து விட்டான் வளவன். அதனை எல்லாம் எண்ணிப் பெருமையும் கொண்டான்.

மகனை விடுத்து காஞ்சனையின் பார்வை மேலே செல்லும் வாமனனை தொடர்ந்தது.பிடிவாதமாக இந்த உறவை தந்த எழுத்தாளர் மீது எக்கு தப்பாகக் காதல் முளைத்தது பேரிளம் பெண்ணிற்கு.அவர் இல்லாவிட்டால் ஏது குடும்பம் அவளுக்கு?.

———————-

காதல் சம்மதம் பெற்ற களிப்பில் வளவன் இருக்க, அவன் காதல் சொன்ன கலக்கத்தில் அரிவை பெண்.

“என்ன டா இது எனக்கு வந்த சோதனை சினிமா பார்த்த மாதிரி இருக்கு. வந்தான் திட்டுனான் அப்புறம் ஒரு மாதிரி பேசி வச்சான் இப்போ கல்யாணம்னு நிக்குறான்,

ஐயோ! பயமா இருக்கே அப்பாக்கு தெரிஞ்சுது செத்தோம். அண்ணன் வேற எதாவது பண்ணிடும்” என்று கலங்கி நின்றாள்.

அரிவை பெண் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் மகாலக்ஷ்மி பெயருக்கு ஏற்றார் போல் அமைப்பான முகம் நிறம் சற்று கருமை.மாநிறத்துக்கு அடுத்து என்று வைத்துக கொள்ளலாம்.

தந்தை சாதாரணக் கிளெர்க்,அம்மா இல்லத்தரசி,ஒரு அண்ணன் வேலைக்கு முயன்று கொண்டு இருக்கிறான்.

அவளைப் பற்றித் தகவல் முழுவதும் வளவனின் மூளையில் பத்திரமாக பதிவு வைத்து.அவளை மட்டும் நெஞ்சில் வைத்து பூட்டி கொண்டான்.அது என்னவோ சிலருக்கு வாழ்கை துணை பார்த்த கணத்தில் முடிவாகிறது

மூன்று நாளில் ஈர்த்தது என்னவென்றால் அவளது பொறுமை மட்டுமே.அதுவே அவனைக் கவர்ந்து இழுக்க அவளைக் கவர முடிவு செய்து விட்டான்.

.

“மகா என்ன யோசனை வேலையைப் பாரு” தாய் உள்ளிருந்து எட்டிப் பார்த்து சத்தமிட அதிர்ந்து அவன் நினைவில் இருந்து வந்தவள் வேலையைத் தொடர்ந்தாள்.  இதுவும் சொன்னதைச் செய்யும் அழகு கிளி பிள்ளைதான் சமத்து.

கையில் கோப்பை ஏந்தி வேலையில் ஈடு பட்டுக் கொண்டு இருந்த வளவனைப் பார்த்து “ஏன்டா வளவா அது என்ன உன் கல்யாணத்துக்கு அஞ்சு வருஷம் கணக்கு சொல்லி இருக்க எனக்குப் புரியல”.

“அதுவா அவ பழகனும் டா உடனேனா எனக்கும் எதுவும் இல்லை, ஆனா அவ பயந்துக்குவா அதான். அது போக அவ என் முகம் பார்க்க ஒரு வருஷம், என்ன முழுசா பார்க்க இரண்டு வருஷம் ஆகும்”

“முழுசாவா!” வாய் பிளந்த ரமேஷை ஏய்!.. நன்றாக மொத்தி எடுத்தவன்.

“ஏய்! எரும விஷம்…… விஷம்….. போகுது பாருப் புத்தி நான் சொல்லுறதக் கேளுடா”

“நாங்க விஷம் தான் சாமி சரி சொல்லு”

“அவ ஸ்பீடுக்கு ஒவ்வொரு வருசமா தான் முன்னேற முடியும் எப்புடியும் அஞ்சு வருசத்துக்கு அப்புறம் தான் சரி வீட்டுல பேசுங்கன்னுச் சொல்லுவா அப்படியும் லவ் சொல்ல மாட்டா.அவளை நம்புனா எனக்கு அறுபதாம் கல்யாணம் தான் அதான் நானே கணக்கு போட்டு கணக்குப் பண்ணிட்டேன்”

அழகாகக் கண் அடித்தவனைப் பார்த்து நொடித்துக் கொண்டான் ரமேஷ் “அதெல்லாம் நல்லவே பண்ணுவீங்கடா அப்பாவும், பையனும்”

“ரொம்பப் பொறாமைப் படாதடா”

“ஆமா.. ஆமா……” ரமேஷ் முனக, அதன் பின் இருவரும் கல கலத்துக் கொண்டே வேலை செய்தனர்.

இன்னும் பேரிளம் பெண்ணிற்கும் எழுத்தாளருக்கும் தனிமை கிட்டவில்லை இருக்கும் நேரத்தை குட்டி தேவதை களவாடி சென்று விட்டாள். வாமனன் இருக்கும் நேரத்தில் தேவதையே கதி என்று இருக்க பேரிளம் பெண்ணிற்குக் கோபம் வேறு ‘இது ஏது?’

தனது மகளை அணைத்து உச்சி முகர்ந்து பால் மனம் பிடித்து,எச்சில் அமுதம் கொண்டு கன்னம் தேய்த்து,விரல் கொண்டு கை ,கால் வருடி கண்ணில் படம் பிடித்து நெஞ்சில் பதிய வைக்க உலகை வென்ற உவகை எழுத்தாளருக்கு.

அவர் மகளைச் சிலை வடிக்க, பேரிளம் பெண்ணுக்கு சொல்லவா வேண்டும் முகத்தை முந்நூறு முழத்திற்குத் தூக்கி வைத்து விடுவாள்.

இன்றும் அதே கதை தான் மகளைக் கொஞ்சுவதைக் குறு குறுவென்று பார்த்து வைத்தாள் பேரிளம் பெண்  அவளது பார்வை உணர்ந்து “என்னடி எப்போ பாரு பாப்பாவ கொஞ்சுனா அப்படி பாக்குற”

“ஒண்ணுமில்லன்னு பொய் சொல்ல முடியாது எழுத்தாளரே அது என்ன? வீட்டுக்கு வந்தா நேரா அவ கிட்ட வர்றது”

“இது என்னடி பேச்சு என் மகள்,குட்டி குழந்தை, புது வரவு அதுவும் ரொம்ப வருஷம் போயி மதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு வந்த தேவதை” அங்கணம் வாயில் சனி பகவான் சஞ்சரித்து விட்டார் போலும் எழுத்தாளருக்கு.

அவரைத் தொடர விடாமல் “என்ன சொன்னிங்க? என்ன சொன்னிங்க? அப்போ என்னை ப் பார்த்தா பொண்ணாத் தெரியல நான் தேவதை இல்ல அப்புடித்தானே”

மனதுக்குள் அதிர்ந்த வாமனன் வெளியில் “ஏய்! என்னடி இது இப்படி வம்பு பண்ணுற”.

“ஆமா நான் தான் எப்போதும் வம்பு பண்ணுறேன்.எங்க அக்கா மாதிரி நான் இல்ல….. நான் காஞ்சனை நான் இப்படித் தான்” என்று கத்தியவள் வெளியே சென்று விட்டாள்.

என்ன சொன்னேன் எதற்கு இந்தக் கோபம் என்று தெரியாமல் பேரிளம் பெண் பின்னே ஓடினார் எழுத்தாளர் முதல் ஊடல். அவருக்கு மதுவின் நினைவு தான் பெண் பிறந்த முதல் அதை இயல்பாக சொன்னார்.

ஆனால் அது வினையாகி போனது. காஞ்சனையின் எண்ணத்தை யார் சொல்லுவது. மது தமக்கை தான் என்றாலும் காஞ்சனையால் மனதளவில் இத்திருமணத்தை எதிர்க்கவே செய்தாள்.

 என்னதான் வாமனன் மீது காதல் இருந்தாலும் சுயம் தொலைத்தாலும் அவ்வப்போது வரும் வருத்தம் ஏன் நான் முதல் மனைவியாக இல்லாமல் போனேன்?

பருவத்தில் வாமனன் எழுத்தின் மீது பித்தாகி இருக்கும் சமயம். மது காஞ்சனையைக் கிண்டல் செய்வாள் .கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் தான் தமக்கையிடம் கூடப் பேசுவதை நிறுத்தி கொண்டாள்.ஏன் கோபம்? அன்று யோசிக்கக் கூடப் பிடிக்காத கேள்வி.

ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டிருக்கும் காஞ்சனையைப் பார்த்தவர் குழந்தையை யாரிடம் கொடுப்பது என்று தேட (தந்தையின் தேடலை கூடப் பொறுக்க முடியாதோ மகனுக்கு) அந்நேரம் சரியாக வளவன் வர குழந்தையை அவனிடம் கொடுத்தார்.

அதற்கு ஏன்? எங்க காஞ்சனை? என்ற கேள்விகள் இல்லாமல் அழகாகத் தோளில் தாங்கினான் தங்கையை.

விரைந்து சென்ற எழுத்தாளர் ஊஞ்சல் ஆடி கொண்டு இருந்தவளை நெருங்கி அமர எழுந்து செல்லப் பார்த்தாள் பேரிளம் பெண்.

அவளது கைகளைப் பற்றித் தன்னிடம் அமர வைக்கத் திமிரி கொண்டு இருந்தாள்.அவளது கையை வேகமாக முறுக்கி இழுத்துத் தன்னிடம் நெருங்க செய்தவர் குனிந்து காதில் மெதுவாக…..

“நீயே!……. நான்!……..” உனக்கு எனக்கும் ஏது பிரிவு உன்னில் நான் என்பதை இரு வார்த்தையில் எழுத்தாளர் காஞ்சனையின் இடத்தைச் சொல்ல நம்புவாளா ராட்சசி.

“போயா!…… கிழவா! …………..பிராடு!………… நம்ப மாட்டேன் எழுத்தாளருக்கு பொய் பேசச் சொல்லியா தரணும் சுயநலவாதீங்க” என்று எழுத்தாளரை வெள்ளாவி வைத்து விட்டால் பேரிளம் பெண். வாமனன் கொஞ்ச காஞ்சனை மிஞ்ச அழகான காதல் நாடகம் அங்கே.

இவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்த வளவன் தந்தை, தாயைப் போல் வாழ்க்கை அமைந்தால் ரசனை கூடிய கவிதை தான் வாழ்க்கை,ஆனால் தன்னவளோ ஒரு நிமிடம் யோசித்தவன் வேகமாகத் தலையை உலுக்கி கொண்டான் (கஷ்டம்…. கஷ்டம்….).அவனுக்குத் தான் தெரியுமே தன்னவளைப் பற்றி.

Advertisement