Advertisement

பெண்ணியம் பேசாதடி – 16

மல்லி பூ தோட்டத்தில் ஒற்றை ரோஜாவின் வரவோ!

பெண்ணியம் பேச இன்னும் ஓர் பெண்ணோ!

மூன்று தேவதைகளின் காலடி கொலுசின்,

கீர்த்தனம் நிறைந்ததடி உள்ளம்.

“டேய் வளவா பாவம்டா அந்தப் பொண்ணு விடுடா”

“நீ பேசாம இருடா எப்படி அவ எங்க அம்மாவைப் பார்க்க முடியாதுனு சொல்லுவா”

“முட்டாப் பையலே அந்தப் பொண்ணுக்கு டூட்டி முடுஞ்சுப் போச்சுடா. அதான் என்னால முடியாதுனு சொல்லுது பாவம்டா படுத்தாத”

காஞ்சனைக்கு வலி வரும் ஒரு வாரத்துக்கு முன்பே மருத்துவமனை வந்து தனது அடையாளத்தின் மூலம் அனைத்தையும் அறிந்து நன்றாகத் தேர்ச்சி பெற்ற முன் அனுபவம் உள்ள செவிலி தான் வேண்டுமென்று அடம் பிடித்து, ஒரு நான்கு நபர்களைத் தேர்வு செய்தான். அதில் ஒன்று தான் அரிவை பெண்.

“அதெல்லாம் முடியாது ஓவர் டைம் பண்ணச் சொல்லு பணம் தரோம். இருக்கச் சொல்லு இந்தப் பொண்ணு கொஞ்சம் வலிக்காம ஊசி போடுமா நல்லா வேல பார்க்குமாம்.டீன் மேடம் சொன்னாங்க”

அரிவை பெண்ணின் முன்னாள் நிற்கும் பெண்ணிற்குக் கோவம் வந்து விட்டது “படிச்சவர் தானே அது என்ன டி மரியாதை கொடுத்து பேசுங்க சார். நாங்களும் நல்லாத்தான் வேல பார்ப்போம்.நாங்களும் படித்துத் தான் வந்தோம்”அந்த பெண் கோபமாகக் கத்த ரமேஷ் தான் அவளை அமைதிப் படுத்தினான்.

“மேடம்! மேடம்! அவன் கொஞ்சம் டென்ஷனா இருக்கான் மத்தபடி ரொம்பப் பொலைட் மேடம்.அவன் பேசுனத்துக்கு நான் மன்னிப்பு கேக்குறேன்” பயத்துடன் செவிலியின் பின் மறைந்திருக்கும் பெண்ணைப் பார்த்து “உங்களுக்கும் சாரி மேடம் பயப்படாதீங்க நீங்க கிளம்புங்க மேடம் நான் பார்த்துக்குறேன்”

“ஏய்! யாரைக் கேட்டு நீ கிளம்பச் சொல்லுற?” அவனோடு மல்லுக்கட்ட முடியாமல் அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு வாமனனை நோக்கிச் சென்றான் ரமேஷ்.

மகன் இங்கு வம்பு செய்யத் தகப்பன் அங்குக் காதல் செய்து கொண்டு இருந்தார்.அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து ஐயோ என்று வந்தது ரமேஷுக்கு.

‘அடப்பாவி மனுஷா அப்பனும் மவனும் நல்ல வருவீங்கடா. அங்க மவன் ஊர் வம்பு இழுத்துட்டு இருக்கான், அது தெரியாம ரொமான்ஸ். எனக்கெல்லாம் ஒரு பொண்ணு மாட்ட மாட்டேங்குது ஆனா இங்க நாற்பது வயசுல கல்யாணம் ஆகி குழந்தை வேற கலி காலம்டா சாமி’ மனதுக்குள் ஆசை தீர வாமனனை வறுத்தெடுத்து சற்று உரக்க,

“சார்!……..” மருத்துவமனை என்பதையும் மறந்து அலறினான். அவனது கத்தலில் காதல் தடைபட அவனை விட எரிச்சல் உற்றவர் “என்னடா” என்று கேட்க அவனும் அதே எரிச்சலுடன் “உங்க பையன் ஒரு அப்பாவி பொண்ணுகிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்கான் வந்து என்னனுக் கேளுங்க”

புருவம் சுருக்கி ரமேஷை பார்த்தவர் “அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டேனே”

“ஆமா! ஆமா! பண்ண மாட்டான் எதாவது சொல்லிட போறேன் சார் அந்த நர்ஸ் பொண்ண கட்டிக்கிட்டு வந்தவன் மாதிரி வாடி போடின்னு பேசிகிட்டு இருக்கான்” ரமேஷ் சொன்னதும் வாமனனும் காஞ்சனையும் பயந்து போனார்கள்.

“எழுத்தாளரே போய் அவனப் பாருங்க எனக்குப் பயமா இருக்கு”

“ஒன்னுமில்ல நீ ரெஸ்ட் எடு நான் பாக்குறேன்”

“ஏன்டா எரும மாடு மாதிரி இருக்க அவன சமாளிக்க முடியாதா” காஞ்சனை அந்த மயக்கத்திலும் ஓணக்கம் பேச பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது ரமேஷால்.

“நீ பேசாம கண்ண மூடி ரெஸ்ட் எடு நாங்க பத்துக்குறோம் வா ரமேஷ்” என்றவர் மகனிடம் விரைந்தார்.

அங்கு இன்னும் அந்த அரிவை பெண்ணைத் தாவித் தாவி பிடிக்க வருவது போலப் பேசி கொண்டு இருந்த வளவனை அவனை நோக்கி விரைந்து வந்தவர் “கண்ணா” என்று அழைத்து என்ன இது? கையைச் சுட்டி காட்டி கேட்க.

சிறு பிள்ளை போல் கைகளை நீட்டி நீட்டி புகார் வாசித்தான் மகன். அனைத்தையும் கேட்டவர் “அவுங்களுக்கும் ரெஸ்ட் வேணும் கண்ணா நைட் அந்தப் பொண்ணு திரும்ப டூட்டி பாக்கணுமே,அதுவும் இல்லாம காலையில கூட நம்பப் பார்த்துக்கலாம். நைட் தான் முக்கியமா அவுங்க உதவி வேணும்” ஒருவாறு பேசிப் பேசி அவனைச் சமாளித்து அழைத்துச் சென்றார்.

அப்போதுதான் மூச்சு விட்டால் அரிவை வேர்த்து வழிந்து பயந்து போய் இருந்த அந்தச் சின்னப் பெண்ணைப் பார்க்க ரமேஷுக்குப் பாவமாக இருந்தது மிஞ்சி மிஞ்சி போனால் பதின் வயது உள்ள பெண்ணாகத் தான் இருப்பாள்.

“நல்ல ஆளு மிஸ்டர் உங்க நண்பன் பாவம் சின்னப் பொண்ணு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என்ற செவிலி அரிவை பெண்ணை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“மகா! நீ இப்புடி இருந்தா ரொம்பக் கஷ்டம் நீ தப்பே பண்ணியிருந்தாலும் தைரியமா நிக்கணும்.இப்புடி பயந்தா இப்போ மாதிரி வாங்கிக் கட்டிக்க வேண்டியது தான் பாத்துக்கோ அப்…பா என்ன சண்டை புடிக்கிறான் பாவம் கட்டிக்கப் போறவ” தன் பங்குக்கு அந்தச் செவிலி திட்டிவிட்டுச் சென்றாள்.

காஞ்சனை பார்க்கும் வரை கோபமாக இருந்த வளவன் அவளைப் பார்த்தவுடன் கன்று குட்டியாகத் துள்ளி பசுவிடம் சென்றான் “ம்ம்மா வலிக்குதா” அவனது அன்பில் மீண்டும் கண்ணீர் வர இல்லையென்று தலை ஆட்டினாள்.

“அப்புறம் ஏன் அழகுற”

“ப்ச்… நல்ல இருக்கேன்டா பாப்பா பாரு” என்று தனது பக்கத்தில் இருக்கும் பூ செண்டை காட்ட அதுவரை இருந்த மனநிலை மாறி மகிழ்ச்சி பொங்க அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவன் லாவகமாகக் குழந்தையைக் கையில் ஏந்தி “அப்பா பாருங்கப்பா பாப்பா அழகா இருக்கா. அமுலு அண்ணா பாருங்க செல்லம் பட்டு” என்று தனி உலகத்துக்குச் சென்று விட்டான்.

நிம்மதியான மழலை சொர்க்கம் அல்லவா அது.சின்னச் சின்னக் கை கால்களை அசைத்துக் கண்ணை உருட்டி உதட்டைச் சப்பிக் கொண்டு இருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும்.

மகனின் குதூகலத்தை ரசித்தவாரே வாமனன் நின்றார் அவர் மனதில் அதிவேகத்தில் சிறு ஓவியம் தீட்டியது போல் அக்காட்சி. அது சரி இவர் ரசனைக்குப் பிறந்தவர் ஆயிற்றே.

அங்கு விடயத்தைக் கேள்வி பட்ட மருத்துவர் அரிவை பெண்ணை சமாதான படுத்தி மீண்டும் காஞ்சனை அறைக்கே அனுப்பி வைத்தார்.

இவர்களப் பார்த்து பயந்து கொண்டே வந்தால் பெண். சமாதானம் பேசி பெரிய மருத்துவர் அனுப்பி வைத்தார் போலும் அவன் மேலிடத்திற்குப் பேசி இவள் தான் வேண்டுமென்று அடம் செய்து காரியம் சாதித்து விட்டான்.எதிர்த்து பேசும் சூழ்நிலையில் அரிவை பெண் இல்லை என்பதால் அவளும் ஒத்துக்கொண்டாள்.உள்ளே வந்தவள் வளவனைப் பார்த்துப் பயந்து ஒடுங்க காஞ்சனை அவனை முறைத்தாள்.

“என்ன முறைக்குற என் தங்கச்சி கிட்ட சொல்லவா”

“அவ பெரிய ஆளு சரிதான் போடா”

“சொன்னாலும் சொல்லாட்டியும் பெரிய ஆளு தான் வாமனன் வீட்டு ஒரே பெண் வாரிசு”

“அடேயப்பா! வாமனன்னா பெரிய கொம்பா”

“அம்மா………..” வளவன் பல்லைக்கடிக்க “அடப்போடா” என்பது போல அலட்சியம் செய்தால் காஞ்சனை இவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக் கொண்டு இருந்தார் வாமனன்.ரமேஷ் இது வழமை தான் என்பது போல் இருக்க.

அரிவை பெண் தான் தலைச் சுத்தி போனாள். ஒருவாறு அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து இருந்தது வளவன் பண்ணிய அலும்பில்.

இருந்தாலும் இவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் பெண்ணுக்கு மண்டை காய்ந்தது ‘என்ன உறவு இவனுக்கு அம்மா என்றால் இந்த வயதில் குழந்தையா’ குழம்பி தவித்தாள் பெண்.

அந்த பெண்ணைப் பார்த்த ரமேஷ் பாவம் புதுசா பார்க்குதுல அதான் அதிர்ச்சி போகப் போகப் பழகிடும் என்பது போல் பார்த்து வைத்தான்.

அவர்கள் இருந்த மூன்று நாட்களும் அந்த மருத்துவமனையில் உள்ள ஆட்களைப் படுத்தி எடுத்துவிட்டு தான் வளவன் காஞ்சனையை வீட்டுக்கு கூட்டி வந்தான் இந்த மூன்று நாட்களும் அதிகம் வதை பட்டது அரிவை பெண் தான்.

‘அங்கே தொடாதே, இங்கே தொடாதே, குழந்தையை மெதுவாகத் தூக்குக் கை வலிக்கும்,பசிக்கு குழந்தை அழுதால் கூடக் காஞ்சனையை விட்டு அவளை எழுப்பிப் படுத்திவிட்டான்.

“டேய் எரும பாப்பாக்கு பசிக்குது அதான் அழகுறா இதுக்கு எதுக்குடா அந்தப் பொண்ண எழுப்பி விடுற கொஞ்சமாவது ரெஸ்ட் வேணாமா ரா பகலா அந்தப் பொண்ணு டூட்டி பார்க்குது கொன்னுடுவேன் பார்த்துக்கோ” காஞ்சனை மிரட்டிய பிறகு தான் அமைதியானான்.

இன்று அவளைப் பார்க்க தான் மருத்துவமனை வெளியில் காவலர் கோலம் கொண்டு நிற்கிறான் அவன் சரி, கொடுக்கும் அல்லவா நிற்கிறது.

எதற்காக? ஏன்? என்று தெரியாமலே அவனுடன் ரமேஷும் “என்னடா எதுவும் டௌட் கேட்கணுமா டாக்டர் கிட்ட ,அதுக்கு ஏன் வெளில நிக்குற வா “என்று அழைக்க

அதெல்லாம் இல்ல என்றவன் அரிவை பெண் வரவும் ரமேஷைத் தள்ளிவிட்டு அவளிடம் சென்று நின்றான். அவன் தள்ளிய வேகத்தில் ரமேஷ் தடுமாறி சுவற்றில் சாயந்து நின்றான்.அரிவை பெண்ணோ அதிர்ச்சியில் கையை நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.

“என்…. என்ன…..?” என்று பயத்தில் அரிவை பெண் திக்க

“நல்லாத்தானே பேசுவ இப்போ என்ன திக்குற” அதிமுக்கியமான கேள்வியைக் கேட்க கொலைவெறி ஆனான் நம் ரமேஷ்.அவளிடம் பதில் வராமல் போகவே

“சரி இந்தா இதைக் கொடுக்கத்தான் வந்தேன்” கையில் பரிசு பொருள் கொடுக்க இன்னும் பயந்து இரண்டடி பின்னேச் சென்றாள் பெண்.

“ஏய்! பயப்புடாத நீ நல்லா அம்மாவைப் பார்த்துகிட்டில அதுக்குக் கொலுசு வேற ஒண்ணுமில்ல” அடப்பாவி பையலே கொலுசா…… ரமேஷ் வாய்பிளக்க. கோபம் வந்து விட்டது அரிவை பெண்ணுக்கு இதுவரை பொறுத்தது சூழ்நிலைக்கு மட்டுமே இப்போது தனது தன்மானம் தலைத் தூக்க.

“சார் நான் என் வேலையத் தான் பார்த்தேன் அதுக்கு எனக்குச் சம்பளம் தராங்க இதெல்லாம் வேணாம்” என்றவள் அவனைத் தாண்டி செல்லப் பார்க்க.

அவளைக் கை நீட்டி தடுத்தவன் “இது நீ சிறப்பா வேல பார்த்ததுக்கு நான் குடுக்குறப் பரிசு வாங்கிக்கோ”

அவன் சொல்லவே கோபம் தலைக்கேற “எனக்கு வேணாம் சார் எனக்குக் கொலுசு வாங்கிக் கொடுக்க நீங்க யாரு”

“இப்போதைக்கு காதலன் வருங்காலத்துலப் புருஷன்” அதிரடியாகக் காதலைச் சொல்லி வாமனன் மகன் என்று நிரூபித்தான் வளவன்.

அவனது அடாவடியில் அரிவை பெண் அதிரிச்சி ஆனாலோ இல்லையோ நமது ரமேஷ் அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தான். போன ஜென்மத்து பாவமோ என்னமோ ரமேஷின் தலை விதி வாமனன் குடும்பப் பிடியில்.

Advertisement