Advertisement

பெண்ணியம் பேசாதடி –12

கனவு பலித்ததடி கண்ணம்மா!

களிப்பு பெருகுதடி கண்ணம்மா!

கள்ளம் ஓங்குதடி கண்ணம்மா!

உன் மேல் கள்வெறி கொள்ளுதடி கண்ணம்மா!

எழுத்தாளனின் களிப்பிற்குப் பேரிளம் பெண்ணின் மௌனமே பதில்.

ஒரு வரமாகக் கண்ணாமூச்சி விளையாட்டு தான் குடும்பத்தார் இடத்தில். இதோ வரேன் என்று வாண்டுடன் சென்றவள் பிறந்தகத்திலே டேரா போட்டு, இப்போ அப்போ என்று சாக்கு சொல்லி நாட்களைப் போக்கி இன்றோடு இருபது நாள் முழுதாக ஆகி விட்டது.

இதில் தன்னைப் பார்க்க வந்த கணவனையும் மகனையும் பார்க்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டுருந்தாள்.அவளது செயல் இயல்பென்று இருக்கத் தொடர்ந்து ஒரு வாரமும் இதே நிலை தான்.எழுத்தாளருக்கு எங்கோ இடித்தது.

வேலைப் பளுவின் காரணமாகச் சற்று விட்டுப் பிடிக்கப் அதுவே பேரிளம் பெண்ணுக்கு தோதாகிப் போனது. வளவனோ தனது தந்தை போல் விட்டுப் பிடிக்காமல் என்ன ஏதென்று மண்டையைக் குடைந்து,

இதற்கு இன்று ஒரு முடிவு வேண்டுமென்று தனது தாத்தா வீட்டின் தெருமுனையில் ரமேஷுடன் பதுங்கிவிட்டான். கையும் காலுமாகத் தனது தாயைப் பிடிக்க என்ன கொடுமை.

எட்டி எட்டி பார்த்து நிற்கும் வளவனது தோளைச் சுரண்டினான் தோழன் “என்னடா?” எரிச்சல் மிகுதியில் வளவன் கத்த

“எங்கம்மா நேத்து ஒன்னுக் கேட்டாங்கடா”

“என்ன”

“நீ அப்படி என்னத்தான் அங்க வேலப் பாக்குற உனக்குப் போஸ்டிங் என்னனு கேக்குறாங்கடா”திரும்பி நின்று ரமேஷை முறைத்தவன் “எப்போ எதுக்கு இந்த பேச்சு?”

“இல்ல  முக்காவாசி நேரம் உன் குடும்பத்தோட தான் கும்மியடிக்கிறேன், எனக்கே என்ன வேலைனுப் புரிய மாட்டேங்குது, அதான் எனக்கு என்ன போஸ்டிங் கொஞ்சம் சொன்னினா வெளில நானும் சொல்லுவேன்ல, எங்க அம்மா மாதிரி பல பேருக்குச் சந்தேகம் அதான் கேட்டேன்”.

சொன்ன ரமேஷை  எற இறங்கப் பார்த்தவன் “வாமனன் பேமிலி ‘பி.ஏ’ னு சொல்லு” என்றவனைப் பார்த்து

“அதாவது உங்க குடும்ப அடிமைனுச் சொல்லுற”

“அதே! அதே!”

“நீயெல்லாம் ஒரு நண்பனாடா”

“சரி அப்போ ஒன்னுச் செய் வேலைய விட்டுரு” அசால்ட்டாக வளவன் அடிமடியில் கை வைக்க அலறி விட்டான்.

‘யார் கொடுப்பா இம்புட்டு காசு’ இங்கு வாமனனைத் தவிர உடனே அந்தர் பல்டி அடித்து இனி உன் மகனுக்கு மகன் வரை நான் பிஏ என்று அடுத்தத் தலைமுறைக்கும் ஒப்பந்தம் வைத்தான் ரமேஷ்.அவன் சொல்லிய பாவனையில் அதுவரை இருந்த பதற்றம் மறைய தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான் வளவன்.

மனம் சற்று நிதானம் கொள்ள நண்பனிடம் “அம்மா ரொம்ப அலம்பல் பண்ணிட்டு இருக்காங்க,வீட்டுக்கு வந்து இருபது நாள் ஆகுது இரண்டு பேரும் பேசிக்குறது கூட இல்ல, இப்போதான் எல்லாம் முடுஞ்சு நானும் அப்பாவும் கொஞ்சம் சந்தோசமா இருந்தோம்.திரும்ப என்ன வந்துச்சுனு தெரியலடா வீட்டுக்கு போன ஒளிஞ்சுக்கிட்டு இல்லனு சொல்லி படுத்தி வைக்கிறாங்க”

அம்மா என்ற அழைப்பு வெகு இயல்பாகவும் வந்ததைக் குறித்துக் கொண்டான் ரமேஷ் “சரிடா என்னனுப் பார்ப்போம் வாண்டு கூடத் தானே வந்தாங்க அவ ஏக்கமா இருக்கும்”.

“நானும் அப்படி நெனச்சு தான் ஏமாந்தேன் வேற என்னவோ இருக்குடா, இன்னக்கி ஹாஸ்பிடல் போறேன்னு தாத்தா கிட்ட சொல்லி இருக்காங்க,அதான் வெயிட் பண்ணுறேன் வரட்டும்” கருவி கொண்டான்.

“ஹே!….. வாரங்கடா” காஞ்சனை தனது தெருவை கடந்து ஓர் ஆட்டோ பிடித்துப் போக.இவனும் தனது காரில் அவளைப் பின் தொடர்ந்தான் “ச்ச….. கடைசில சிபிஐ வேல பார்க்க வச்சுட்டாங்கடா” சலித்துக் கொண்டான் வளவன்.

“நல்ல குடும்ப அமைப்புட உனக்கு” நக்கல் அடித்த ரமேஷை

“சொல்லுவியா சொல்லுவியா” கொமட்டில் குத்தியவாறே வண்டியைச் செலுத்தினான்.

“கொலைகாரப் பாவி விடுடா எங்க அம்மாக்கு நான் ஒரே பையன்”.

“அப்போ வாய்யா மூடிக்கிட்டு வா” அதன் பின் ரமேஷும் தனது வாலை சுருட்டிக் கொண்டு வந்தான்.பேச்சில் ஆட்டோ நின்ற இடத்தைக் கவனியாமல் அவர்களும் அங்கே செல்ல அது ஓர் பெண்களை முதன்மையாகக் கொண்டு சிகிச்சை பார்க்கும் மருத்துவமனை.

வளவனுக்கு மனம் அடித்துக் கொண்டது தனது தாய் போல் எதுவுமோ என்று. கவலை பிறக்க நொடி பொழுதில் காஞ்சனையை  நெருங்கப் பார்க்க அவனைத் தடுத்து விட்டான் ரமேஷ்.

“டேய் விடுடா”

“டேய் லூசு கொஞ்சம் பொறுமையா இரு என்ன? ஏதுன்னு ? பார்த்துக்கலாம் ஒன்னும் பேசாத. நீ கேட்டாலும் அவுங்க உடனே சொல்லிட போறாங்க பாரு”.

“அதுவும் சரிதான் ஏட்டிக்கி போட்டியா தான் பேசுவாங்க” இருவரும் அமைதி காத்தனர் அவர் வரும்வரை. சுமார் ஒரு மணி நேரம் மேலும் இருபது நிமிடங்கள் கழித்துக் காஞ்சனை வெளியில் வர இருவரும் அவள் கருத்தை கவராமல் உள்ளே சென்றனர்.

தனது தொழில் மற்றும் தகப்பன் பெயர் சொல்லி காஞ்சனைப் பற்றி விவரம் கேட்க முதலில் தயங்கிய பெண் பின் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.அவருக்கு வாமனனை நன்கு தெரியும் வளவனைக் கையில் ஏந்தியது அவர் தான்.அவனுக்குத் தான் தெரியவில்லை

“வாங்க உட்காருங்க சொல்லுங்க வளவன் எப்புடி இருக்கீங்க” தனது பெயர் சொல்லி நலம் விசாரிக்கும் மருத்துவரை ஆச்சிரியமாகப் பார்க்க. அந்த ஐம்பது நடையிலும் கம்பீரமாக இருந்தவர் “நான் தான் உங்க அம்மாக்குப் பிரசவம் பார்த்தேன்” சில நொடிகள் சென்றே வளவனுக்குப் புரிய ஓர் சிலிர்ப்பு தன்னையும் அறியாமல்.

“என்ன விஷயம் சொல்லுங்க”

“இல்ல காஞ்சனை ஒரு பேஷண்ட் வந்தாங்கள அவுங்களுக்கு என்ன”

“ஏன் உன் சித்தி உங்ககிட்ட சொல்லலையா என்ன”.தலையை மட்டும் இல்லையென ஆட்டினான் அவனுக்குப் பேச்சு வரவில்லை பயம் காஞ்சனைக்கு என்னவோ என்று

“நல்ல விஷயம் தான் பிள்ளை உண்டாகி இருக்கு” அவர் குடும்ப விவரம் எதுவும் கேட்கவில்லை அவரது ரிப்போர்ட் பார்த்து அனுப்பி வைத்தார் அதில் கணவன் பெயர் வாமனன் என்று இருந்தது அதனால் தான் விடயத்தை வளவனிடன் சொன்னார்.

“என்ன பேச்ச காணோம் கஷ்டமா பீல் பண்ணுறீங்களா”

“ச்ச…. ச்ச….. ரொம்ப ஹாப்பி” என்றவன் சிரிக்க அவரும் மேற்கொண்டு அவர்களது குடும்ப விஷயத்தைக் கேட்காமல் சிரித்த முகமாக வழி அனுப்பி வைத்தார்.

வெளியில் வந்தவனுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. எதனால்? காஞ்சனையின் மீது உள்ள பாசத்தாலா, இல்லை தந்தை மீது உள்ள தீரா காதலால என்பது அவனே அறியான்.

அவனது கண்ணீரும் சிரித்த முகமும் அவனது நிலையைச் சொல்ல வழமை போல் சீண்டினான் ரமேஷ் “என்னடா பீலிங்கா, இல்ல பீலிங்கானு கேக்குறேன். எனக்குத் தான்டா பீலிங் பாவிங்கள அப்பா ஆகுற வயசுல அண்ணன் ஆகியிருக்க, நீ இதுல ஓவர் பீலிங் வேற. ஆனா ஒன்னுடா உங்க அப்பாக்கு எங்கோ மச்சம் இருக்கு மச்சான்” என்றவனைப் போலியாக முறைக்க

“சரி சரி உண்மைய பேசல போதுமா வா அந்த ரெமோவா பார்த்து நீங்க அப்பா ஆகப் போறிங்கனு சொல்லலாம்,பையன் ரொம்பச் சந்தோச படுவான்”.

அவன் சொன்ன தினுசில் லேசாகச் சிரிப்பு வர அதனை அடக்கியவன் “ நீ என்ன பண்ணுற ஆபீஸ் போய் வேலையப் பாரு,நாங்க பத்துக்குறோம்” என்றவன் நிற்காமல் அவனை விட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு பறந்தான் தனது தந்தையைப் பார்க்க.

ரமேஷ் “அடேய் கேடிங்கள உங்கள நம்பி வந்ததுக்கு நடு ரோட்ல விட்டுட்டுப் போறிங்களே டா. நீயெல்லாம் நல்லா வருவ டா” என்றவன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அலுவலகம் சென்றான். பாவம் யார் பெத்த பிள்ளையோ…..

*************

வளவனுக்கு அத்தனை உவகை மனதில், என்ன விதமான மனிதன் இவன் சாத்தியமா இக்காலத்தில் இப்படியொரு அன்பு ஹ்ம்ம்……….இதோ எடுத்துக்காட்டாக வளவன் மற்றும் வாமனன். வளவன் தனது தந்தைக்குச் செல்லில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே வீட்டை நோக்கி சென்றான்.

அங்கு வாமனன் கூட்டத்தில் கலந்துரையாடி கொண்டு இருக்க மெசேஜ் ஒலி கேட்டு மனிதர் போனை எதிர்ச்சியாகப் பார்க்க அது வளவன் என்றவுடன் அதனைப் படித்தார்.

பார்த்தவரின் கண்கள் அசைவின்றி இருக்க,பேச்சும் தடைபட்டது சிறுது நேரம் ஆழ்ந்த மௌனம்.கூடியிருந்த அனைவரும் அவரைப் பார்ப்பது கூட அறியாமல்.பின்பு தெளிந்து தன்னை மீட்டு கொண்டவர் அனைவருக்கும் பொதுவாக மன்னிப்பு வேண்டி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்.

கூட்டத்தை முடித்த அடுத்த நொடி வேகமாகக் காரில் ஏறி பறந்தார்.முகத்தில் அத்தனை கோபம் காஞ்சனையின் மேல் “இன்று இவளிடம் ஒரு முடிவு கேட்டு விட வேண்டும் நான் வேண்டுமா வேண்டாமா?” என்று

“ஹ்ம்ம் இல்ல இல்ல இப்புடீ கேட்டா ராட்சசி வேணாம் சொல்லிடுவா…”

‘ஐம்பதை நெருங்கும் வயதில் இதெல்லாம் தேவையா எழுத்தாளரே’ன்னு கேட்டு சாக அடிப்பா இவள………… பலவாறு யோசித்துக் கொண்டே வந்தார்.

எழுத்தாளராம்,தொழில் அதிபராம்,ஒரு பருவ ஆண் மகனுக்குத் தந்தையாம் இப்படிப் பல பொறுப்புகளைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றும் வாமனனைத் தலைகீழ் இருந்து தண்ணி குடிக்க வைத்தாள் நமது காஞ்சனை.

*************

விடாமல் தொடர்ந்து அடிக்கும் அழைப்பு மணியில் எரிச்சல் அடைந்த காஞ்சனை “எந்தப் பக்கி அது” என்றவாறே கதவை திறக்க,நொடி பொழுதில் காஞ்சனையைத் தூக்கி சுற்றினான் வளவன்.

“ஹே!….. நான் அண்ணன் ஆகிட்டேன்” அவனது பேச்சில் தூக்கம் கலைந்து திகைத்த காஞ்சனை பின்பு தெளிந்து

“டேய் எருமைமாடு மானத்தை வாங்காம கீழ இறக்கி விடுடா அப்பா தூங்குறாரு கத்தி கூப்பாடு போடாத”

எங்கே காஞ்சனை சொல்வது எதுவும் அவன் காதில் விழுந்தால் தானே ஒரே கூச்சல்.மூர்த்தி என்னவோ ஏதோவென்று பதறி வர காஞ்சனையை விட்டுவிட்டு இப்போது அவரை அள்ளிக் கொண்டான்.

“தாத்தா நீங்க மறுபடியும் தாத்தா ஆகப் போறீங்க எனக்குத் தங்கச்சி பாப்பா வர போகுது” அவருக்கும் ஒன்றும் தெளிவில்லை போலும் சில மணி நொடி சென்றே விடயம் பிடி பட்டது கண்ணில் நீர் பெறுக அவனை அணைத்துக் கொண்டார்.

சின்ன மகள் தனக்குப் பிறகு தனித்து விடுவாளோ என்ற ஐயம் அவருக்கு என்றுமே உண்டு.என்னதான் வளவன் அவளை விட மாட்டான் என்றாலும் அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டால்  என்ற கேள்வி தொக்கி நிற்க மனதுக்குள் உழன்று போனார் மனிதர்.

அவரது கலக்கத்தைப் போக்க வந்த ரட்சகனாக வாமனன்.ஒரே நொடியில் செழிக்கச் செய்து விட்டார் தேவனாக.தனது மருமகனை எண்ணி மாமனாருக்கு நன்றி பெறுக அவர் வருகைக்காகக் காத்திருந்தார்.

காஞ்சனை முகத்தை உர்ர் என்று வைத்திருக்கக் கோபமாக வந்தது வளவனுக்கு “இப்போ எதுக்கு முகத்தை இப்புடி வச்சு இருக்கச் சந்தோசமா இருக்கனும்மா சொல்லு உனக்கு என்ன வேணும்” என்றவரே அவளது கைகளைப் பற்ற கோபம் கொண்டு அதனைத் தள்ளி விட்டாள்.

“எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம்” எங்கோ பார்வை பதித்துச் சொல்ல வளவனும்,மூர்த்தியும் “ஏய்!…………………” என்று கோபமாக நெருங்க அவர்களை மீறிக் கொண்டு வந்தார் வாமனன்.

“இப்போ சொல்லு பார்ப்போம்………………….?” கண்ணில் கனல் பறக்க. அன்று இருந்தாரே தன்னைக் கண்டு கொண்ட போது அதே நிலையில்  இன்று எழுத்தாளர்.

Advertisement